வண்டுகளின் படபட ரீங்காரம்



செல்ஃபி வித் சயின்ஸ் 35

கிளி பேசும், காகம் கரையும், மயில் அகவும், வண்டு முரலும் என்பது தமிழ் இலக்கிய மரபு. குயில் கூவுவது என்பது இறைவன் நமக்கு கொடுத்த இனிய இசைவரம். ‘கத்தும் குயிலோசை சற்றே வந்து என் காதில் விழ வேண்டும்’ என்று பாரதியார் பராசக்தியிடம் வேண்டுகிறார்.

‘எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா..!’ என்று பாரதியார் கேட்கும் அதே கேள்வியை நாமும் பலமுறை இறைவனிடம் கேட்டிருப்போம். ஏனெனில் இயற்கையில் அத்தனை இன்பம்.

இயற்கையின் ஒவ்வொரு அசைவுமே நமக்கு இன்பம்தான். இயற்கையின் படைப்பில் ஒளிந்திருக்கும் ஒரு அறிவியல் அதிசயம்தான் இந்த வார செல்ஃபி. இயற்கையின் படைப்பில் எல்லாவற்றையும் நாம் ரசிக்கிறோம். அலையடிக்கும் கடல், மேகம் திரண்ட வானம், குளிரடிக்கும் சாரல் எல்லாம் சுகமானவை. அந்த வரிசையில்... அழகிய சோலைகளில் நின்றுகொண்டோ, அமர்ந்து கொண்டோ, வண்டுகளின் ரீங்காரத்தை நீங்கள் கேட்டிருக்கிறீர்களா?

பூக்களைச் சுற்றும் வண்டுகளிடமிருந்து வெளிப்படும் ரீங்காரம் எத்தனை இனிமை! கேள்வி இதுதான்... வண்டுகள் முரலும் என்று இலக்கியம் சொல்கிறது. தேனீக்கள் ரீங்காரமிடுகின்றன என்று படிக்கிறோம். தேனீக்கள் எவ்வாறு ரீங்காரம் இடுகின்றன? மயில்போல அலகுகளால் அகவுகின்றனவா? குயில் போல வாயால் கூவுகின்றனவா?

எதுவுமே இல்லை! வண்டுகளிடம் இதற்கென சிறப்பு உறுப்புகள் எதுவும் தகவமைக்கப்படவில்லை. வண்டுகள் முரல்வது, தேனீக்கள் ரீங்காரம் செய்வது இரண்டுமே அவற்றின் இறகுப் படபடப்புதான். ஒரு வினாடிக்கு நூற்றுக்கணக்கான தடவைகள் துடித்து அசையும் இறகுகளினால்தான் இந்த ரீங்காரம் உருவாகிறது.

இந்த இறகுகள் அமைக்கப்பட்டிருக்கும் விதமும் அந்த ரீங்காரத்திற்கு ஒரு காரணம். துடித்து அசையும் தகட்டைப் போல உள்ளவை இந்தச் சிறகுகள். போதிய அளவு விசையுடன் நொடிக்கு குறைந்தபட்சம் 20 தடவைக்கு மேல் படபடத்து அசையும் எந்த ஒரு தகடும் குறிப்பிட்ட அளவு ஸ்வரத்தை உண்டாக்கும்.

ஒரு சிறிய பூச்சி கூட, பறக்கும்போது ஒரு வினாடிக்கு குறைந்தபட்சம் 100 தடவைக்கு மேல் தனது இறகை அசைக்கிறது. இப்படி ஒரு பூச்சி ஏற்படுத்தும் ஸ்வரத்தை வைத்துத்தான், அது வினாடிக்கு எத்தனை தடவை துடிக்கிறது என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கிறார்கள். ஒவ்வொரு விதமான ஸ்வரத்திற்கும் அதனோடு தொடர்புடைய ஒரு அதிர்வு எண் உண்டு.

தேனீக்களிலும், சில்வண்டுகளிலும் அசைவுகள் ஒரே சீராகவே இருக்கும். எனவே, அது ஒரு சீரான இசையைத் தோற்றுவிக்கிறது. கேமராவை வைத்துக்கொண்டு ஒரு வண்டின் இயக்கத்தை நீண்ட நேரம் படம் பிடித்து அதனை ஆய்வு செய்தார்கள்.

எல்லா சந்தர்ப்பங்களிலும் ஒரே மாதிரியாகவே அது தன் இறகை அசைக்கிறது. பறப்பதைக் கட்டுப்படுத்துவதற்கு தனது சிறகு இயக்கத்தின் வீச்சையும், இறகு சாய்ந்திருக்கும் கோணத்தையும் மட்டுமே அது மாற்றிக் கொள்கிறது. அதனால் ரீங்காரத்தின் அளவு எப்போதுமே ஒரே சீராகவே இருக்கிறது.

ஒரு சின்ன புள்ளிவிவரத்தைப் பார்த்துவிடுவோம். நம் வீட்டில் இருக்கும் ஒரு சாதாரண ஈ ஒரு நொடியில் தனது இறகுகளை 350 தடவைக்கு மேல் அசைக்கிறது. ராணித் தேனீ 220 தடவைகள் தனது இறகை அடித்துக் கொள்கிறது.

வேலைக்காரத் தேனீக்கள் தேன் சுமந்திருக்கும்போது 300 தடவைக்கு மேலும், தேன் இல்லாதபோது 400 தடவைக்கு மேலும் தம் இறகுகளை அசைக்கின்றன.காதைச் சுற்றி ‘கொய்ங்ங்ங்...’ என்று சுற்றிவரும் கொசுக்கள் செய்வதுதான் கொடூரம். நொடிக்கு 600 தடவை தமது இறகுகளை அடித்துக்கொள்கின்றன.

(அடுத்தது என்ன?)

டாக்டர் ஆதலையூர் சூரியகுமார்