சாமை



புஞ்சை என்றழைக்கப்படும் புன்செய் நிலத்தில் பயிரிடப்படும் ‘சாமை’ எனும் சிறுதானியம் மிகவும் மதிப்புக்குரியது. மற்ற சிறுதானியங்களைப் போலவே இதற்கும் தண்ணீர் அதிகம் தேவையில்லை. அதிக வெப்பத்திலும் மழை கிட்டாத போதும், வருடம் முழுவதும் விளையும். பயிரிட்ட 65 நாட்களிலேயே அறுவடை செய்ய இயலும் என்பது இன்னும் ஒரு சிறப்பு. சிறுதானியங்களை அதிகம் உண்ண ஆரம்பித்தால் விவசாயிகள் அதிகம் பயிரிடுவர்.

விவசாயிகளுக்கும் குறைந்த வேலையில் நல்ல மகசூல் கிடைக்கும். மேல் தோல் கடினமாக இருப்பதாலும் அரிசியைப் போல உமி நீக்கி பாலீஷ் செய்யாமல் இருப்பதாலும் காலப்போக்கில் இதன் பயன்பாடு குறைந்துவிட்டது. சாமையை ஆங்கிலத்தில் ‘லிட்டில் மில்லெட்’ (Little millet) என்று கூறுவர். ஹிந்தியில் ‘குட்கி’ என்று அழைக்கப்படுகிறது. தெலுங்கு, கன்னடத்தில் ‘சாம’, ‘சாமெ’ என்று சற்றே மருவி அழைக்கப்படுகிறது.

சாமையை குத்தி தோல் நீக்கித்தான் சமைக்க வேண்டுமா? இப்போது கடினமான மேல் தோல் நீக்கிய சாமை கிடைக்கிறது. இதை உபயோகிக்கும்போது தோல் நீக்க வேண்டிய
அவசியம் இல்லை. அரிசியைப் போலவே பல உணவுகளை சமைக்க சுலபமாக பயன்படுத்த முடியும். வாங்கும்போது பார்த்தாலே இது புரியும். கம்பைப் போல குத்தி, தோல் நீக்க இயலுமென்றாலும் வேலையை கருதி பலரும் உபயோகிக்காமல் இருந்தனர்.

சிறு குழந்தைகளுக்கு சத்துமாவைப் போல செய்து தரலாமா? எந்த வயதில் இருந்து தரலாம்? தோல் நீக்கிய சாமையை மிதமான தணலில் லேசாக மணம் வரும்படி வறுத்து சத்து மாவு தயாரிக்கலாம். 3 பங்கு சாமைக்கு 1 பங்கு பொட்டுக்கடலை சேர்த்து மாவாக்கி, சலித்து சத்து மாவு போல கஞ்சி காய்ச்சித் தரலாம்.

7வது மாதத்தில் இருந்தே குழந்தைகளுக்கு தரலாம். 1 டேபிள்ஸ்பூன் மாவை, 1 டம்ளர் தண்ணீரில் கலந்து காய்ச்சித் தரலாம். குழந்தை சிறிது வளர்ந்தபின் கூழ்போல காய்ச்சித் தரலாம். சிறிது உப்பு போட்டும் தரலாம். பால் சேர்த்து தருவதானால் தண்ணீரைக் குறைத்து பால் சேர்க்கலாம் (9 மாதத்துக்குப் பின்).

சாமை சுலபமாக ஜீரணமாகுமா?


சாமையில் செய்த உணவுகள் எல்லா வயதினருக்கும் ஏற்றவை. மிகச் சுலபமாக ஜீரணமாகும். எந்த விதப் பக்க விளைவுகளும் வராது. மலச்சிக்கலைப் போக்கும் தன்மை உடையது.
சிறுதானியங்கள் விலை அதிகமா? எல்லோராலும் உண்ண இயலுமா?அரிசியை விட சிறிது விலை அதிகமானாலும் சத்துகள் மிகுந்தது.

சிறிதே உண்டாலும் வயிறு நிறையும். இணை உணவு கள் இல்லாமலே தேவையான சத்துகள் கிடைக்கும். அதிக நேரம் பசிக்காது. சீக்கிரமாக சமைக்க இயலும். இந்த குணங்களை பார்க்கும்போது கொடுத்த விலைக்கு பயன் அதிகம்.

சாமை உணவை சமைக்க அதிக நேரமாகுமா? அரிசி சாதத்தைப்போல சாப்பிட முடியுமா?அரிசி சாதத்தைப் போல சமைத்து சாப்பிடலாம். பிரஷர் குக்கர் தேவையில்லை. ஒரு பங்கு சாமைக்கு 2 பங்கு தண்ணீர் போதும். சில வேளை இரண்டரை கூட பிடிக்கும். ஊற வைக்க வேண்டிய அவசியமில்லை.

தண்ணீரை கனமான பாத்திரத்தில் சூடாக்கி, கொதி வரும்போது கழுவிய சாமையை சேர்த்து, கொதி வந்ததும் லேசாக ஒரு தடவை கலந்துவிட்டு, மூடி வைத்து மிதமான தணலில் ஈரம் வற்றும் வரை வைத்தால் நன்றாக வரும். ஒன்றுடன் ஒன்று ஒட்டாது. மத்தியில் அடிக்கடி கிளற வேண்டாம். நீங்கள் அரிசி சாதம் சாப்பிடும் அளவில் மூன்றில் 1 பங்கு உண்டாலே போதும்... வயிறு நிறைந்துவிடும். குழம்பு, பொரியல், தயிர் சேர்த்து எப்படி வேண்டுமானாலும் சாப்பிடலாம்.

என்னென்ன உணவுகளை சாமை அரிசியில் தயாரிக்கலாம்?

பொங்கல், உப்புமா, இட்லி, தோசை, பணியாரம், பிரியாணி, புட்டு, முறுக்கு, அல்வா, லட்டு, கேசரி, அதிரசம், ரொட்டி போன்ற பல உணவுகளை சுவைபட
தயாரிக்கலாம்.சாமை அரிசியில் என்னென்ன சத்துகள் இருக்கின்றன?

*100 கிராம் சாமையில் 7.7 கிராம் புரதச்சத்து உள்ளது. இந்த புரதம் உடல் வளர்ச்சிக்கு, எலும்புகளின் வலுவுக்கு, தசைகள், சதைகள் வலுவுடன் இருப்பதற்கு உதவுகின்றன. அதோடு, மூளைக்குச் செல்லும் செல்களுக்கு நல்ல சக்தியை தரும். மனச் சோர்வைப் போக்கும். நல்ல உறக்கம் பெறலாம்.

*இதில் 7.6 கிராம் நார்ச்சத்து உள்ளது. மலச்சிக்கல் வராமலிருக்க உதவி புரியும். எடை அதிகரிக்காது. ரத்தத்தில் மெதுவாக குளுக்கோஸை வெளிவிடுவதால் நீரிழிவுக்காரர்களுக்கு உகந்தது.
கொலஸ்ட்ராலை குறைக்கும்.

*மாவுச்சத்து 67 கிராம் அளவு உள்ளது. இந்த மாவுச் சத்தில் எடையை அதிக மாக்கும் பசைத் தன்மை உடைய ‘க்ளூட்டன்’ அறவே இல்லை. அதனால் முழு நன்மையைத் தரும். சக்தியை அளவிடும் கலோரிகள் 100 கிராமுக்கு 341 இருக்கும்.

*இரும்புச்சத்து 9.3 மில்லிகிராம் அளவு உள்ளது. நமது ஒரு நாளையத் தேவையில் மூன்றில் ஒரு பங்கு 100 கிராம் அளவிலேயே கிடைத்துவிடும். கர்ப்பிணிகளுக்கு மட்டுமின்றி, பாலூட்டும் தாய்மார்களுக்கும் தரலாம். ரத்தசோகை ஏற்படா மல் இருக்க சிறு வயது முதல் சாப்பிடலாம். எல்லா வயதினருக்கும் ஏற்றது. கம்பில் இருக்கும் இரும்புச்சத்தைவிட இதில் அதிகம் உள்ளது. கேழ்வரகில் இருப்பதைவிட இரண்டரை மடங்கு அதிகம்.

*கால்சியம் சத்து (சுண்ணாம்புச் சத்து) கம்பைவிட குறைவு என்றாலும், உறிஞ்சப்படும் நிலையில் இருக்கும். (7 மில்லி கிராம் அளவு உள்ளது.) கம்பில் உள்ளதைவிட மூன்றில் ஒரு பங்கே.

*தாது உப்புகள்: மக்னீஷியம், சோடியம், பொட்டாசியம், காப்பர், மாங்கனீசு, துத்தநாகம் போன்ற பல முக்கிய தாதுகளையும் சாமையில் இருந்து பெறலாம்.

*வைட்டமின் சத்துகள் என்று பார்த்தால் முக்கிய பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்களான தயாமின், ரிபோஃப்ளோவின், நயாசின், ஃபோலிக் அமிலம் எல்லாமும் கிடைக்கும். கர்ப்பிணிகளுக்கு எந்த வகையில் உதவி புரியும்?

*இதில் உள்ள ஃபோலிக் அமிலம், மூளை வளர்ச்சிக் குன்றிய குழந்தைகள் உருவாகாமல் தடுக்கும்.

*மலச்சிக்கல் ஏற்படாது.

*இரும்புச்சத்து அதிகமுள்ளதால் ரத்தசோகை வராமல் தடுக்கும்... ஆரோக்கிய மான செல்கள் உற்பத்திக்கும் உதவி புரியும். ஆரோக்கியமாக குழந்தைகள் பிறக்கத் தேவையான பல முக்கிய உயிர்ச்சத்துகள் உள்ளன. புரதச்சத்து எனும்போது அதில் உள்ள முக்கிய அமினோ அமிலங்கள் எல்லாமும் இந்த ஒரு சிறுதானியத்திலேயே கிடைக்கும். உடல் வளர்ச்சி, மன வளர்ச்சி எல்லாவற்றுக்கும் உதவும் இந்த புரதம்.

சைவ உணவை மட்டுமே சாப்பிடும் விளையாட்டு வீரர்களுக்கு இது பயன் தருமா?


இதில் உள்ள புரதச்சத்து மற்ற தானியங்களைவிட அதிகம். விளையாட்டு வீரர்களுக்கு நல்ல உடல் வலிமையை தரும். முட்டை  சாப்பிடாதவர்களுக்கும் இந்த புரதம் பலனளிக்க வல்லது. சீக்கிரம் பசிக்காது.தாதுப்பொருட்களை உடலில் அதிகரித்து உயிரணுக்களின் எண்ணிக்கையை உயர்த்துவதில் இதன் பங்கு குறிப்பிடத்தக்கது. ஆண் மலட்டுத்தன்மை வராமலிருக்க, இதில் உள்ள சத்துகள் உதவும். நீரிழிவு மற்றும் இதய நோயாளிகள் பலருக்கும் ஏற்ற உணவு.

சிறுதானிய ரெசிபி

கீரை சேர்த்தசாமைப் பொங்கல்என்னென்ன தேவை?


சாமை அரிசி  முக்கால் ஆழாக்கு, முளைவிட்ட பச்சைப் பயறு  கால் ஆழாக்கு, வறுத்த நரிப் பயறு  கால் ஆழாக்கு,  பருப்புக் கீரை  1 கட்டு பொடியாக அரிந்தது, தண்ணீர்  நான்கரை டம்ளர், கரகரப்பாக பொடித்த மிளகு, சீரகம்  ருசிக்கேற்ப, உப்பு, எண்ணெய், நெய்  தேவைக்கேற்ப (வறுத்த முந்திரி  விருப்பப்படி).

எப்படிச் செய்வது?

முதலில் தண்ணீரை அளந்து ஊற்றி வறுத்த நரிப் பயறு சேர்த்து மலரும் வரை வெந்த பிறகு முளைப் பயறு, சாமை அரிசியை சேர்த்து மூடி வைக்கவும். தணலைக் குறைத்து வேக விடவும். அவ்வப்போது கலந்துவிட்டு, நன்கு வெந்ததும் சிறிதே  எண்ணெயில் வதக்கிய கீரை, உப்பு, மிளகு  சீரகத்தூள் சேர்த்து கலக்கவும். நன்கு வெந்து பொங்கல் பதமானதும் விருப்பப்படி நெய்யில் முந்திரி வறுத்து சேர்த்து பரிமாறவும்.

மிக ருசியாக இருக்கும். (நரிப் பயறை ஆங்கிலத்தில் ‘மோத் பீன்ஸ்’ (Moth  beans)  என்று கூறுவர். பச்சைப் பயறைப் போலவே சிறிது அடர்ந்த நிறத்தில் இருக்கும். தோல் நீக்கிய பருப்பாகவும் கிடைக்கிறது. இரும்புச்சத்து மிகுந்தது.)

குறிப்பு: சாமையோடு பச்சைப் பயறு, நரிப்பயறு, பருப்புக்கீரை எல்லாம் சேரும்போது இரும்புச்சத்து அதிகமாகக் கிடைக்கும். நெய் அதிகம் விட வேண்டிய அவசியம் இல்லை.
கர்ப்பிணிகள் சாமைசாப்பிட்டால் இதில் உள்ள ஃபோலிக் அமிலம் மூளைவளர்ச்சிக் குன்றிய குழந்தைகள்உருவாகாமல் தடுக்கும்.

(சத்துகள் பெறுவோம்!)

மல்லிகா பத்ரிநாத்