நீ ஒரு குளிர்கால நதி!



குளிர்காலத்தின் நதியாக
மெல்ல நடை போடுகிறாய்
அவ்வேளை மரங்கள்
காற்றில் உதிர்க்கும் மலர்களில்
மென்மை இருந்தது
நீரோடும் பாதைகளைப் போன்றே
குளிர்வாய் இருப்பவளை
கதகதப்பான உடலால்

அணைத்த காலம் இப்போது கனவுதான்
எங்கிருந்தாலும் நீயற்றிருக்க முடியாமல்
சொற்கள் தரும் பிம்பங்களில்
உன்னைக் காண்பதில் சுகமடைகிறேன்
இவ்வேளைகூட நீ ஒரு குளிர்கால நதி
என்னை அதில் தோய்த்து எடுத்து
உன்னைத் தீண்டியதாய் பரவசமடைகிறேன்
எந்தவொரு நாளிலும்
நீயில்லாத நினைவென்பது இல்லை

மறந்திருந்தாலும் இரவு வரும்வேளை
வானின் சுடர்கள் தரும் ஒளி இன்பத்தில்
நீ தந்த இரவின் சுகங்கள்
மனதில் ஒளிர்ந்துவிடுகின்றன
இந்த ஜென்மம் என்பது
உன்னைச் சந்தித்த பின்தான்
அர்த்தத்தைப் பெற்றுவிட்டது
எப்படியாவது கடந்து சென்று

வெகுதூரம் வாழும்
உன்னிடம் திரும்பவும் வருவேனா
என்பது
கற்பனையானதெனினும்
இதுபோல் ஒரு குளிர்கால நதியாக
உன்னை மீட்டெடுக்கும் இரவாகக்
கண்டு வாழ்ந்துகொண்டிருப்பேன்

அய்யப்பமாதவன்