மேஷ லக்னத்துக்கு செவ்வாயும் புதனும் தரும் யோகங்கள்!



கிரகங்கள் தரும் யோகங்கள் 6

நாம் மேஷ லக்னத்தின் அதிபதியான செவ்வாயோடு ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு ராசியில் சேர்க்கை பெறும்போது என்னென்ன மாற்றங்கள் நிகழ்கின்றன என்று பார்த்துக்கொண்டே வருகின்றோம். பொதுவாக மேஷ லக்னத்திற்கு பிரச்னைகளைத் தரக்கூடியவர்களே புதனும் சனியும்தான்.

லக்னாதிபதியான செவ்வாயோடு மூன்று மற்றும் ஆறாம் அதிபதியான புதன் சேர்க்கை பெறும்போது தோற்றப் பொலிவு குறையும். பொதுவாகவே இந்தச் சேர்க்கை ஒரு ஜாதகத்தில் இல்லாமல் இருப்பது நல்லது. அப்படி இருந்தால் எதிர்மறை எண்ணங்கள் இருந்து கொண்டேயிருக்கும். எந்த வேலையையும் ஒழுங்காகச் செய்ய முடியாது.

தொடக்கச் சிரமம் இருந்து கொண்டே இருக்கும். நெருப்பான செவ்வாயும் காற்றான புதனும் சேரும்போது ஒன்று, ஊதிப் பெரிதாக்கும். இல்லையெனில் ஒரேயடியாக அணைத்துவிடும். நண்பர்களுக்கு உரிய கிரகமான புதனானவர் எதிரி ஸ்தானத்திற்குரிய ஆறாம் இடத்தில் இருப்பதால் எல்லோரையும் நம்பி நம்பி ஏமாந்து கொண்டே இருப்பார்கள். யாரையும் நம்பியிராமல் முக்கியமான முடிவுகளை தானே எடுக்க வேண்டும். எல்லோருமே சுயநலவாதியாக இருப்பதுபோல் உணர்வீர்கள்.

இந்த சேர்க்கையானது மேஷ ராசியில் அமைந்திருந்தால், வாகனங்களில் செல்லும்போது பாதுகாப்புக் கவசம் அணிந்து செல்ல வேண்டும். எல்லா விஷயத்திலேயும் இவர்கள் அவசரக்குடுக்கையாக இருப்பார்கள். சொல்ல வந்த விஷயத்தையே திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருப்பார்கள். தான்தான் எல்லாம் என்கிற அகந்தை இருக்கும். இந்த கிரகச் சேர்க்கை கொண்ட பலர் அணுமின் நிலையத்தில் பணிபுரிபவர்களாக இருப்பார்கள்.

ரிஷபத்தில் - அதாவது லக்னத்திற்கு இரண்டாவது இடத்தில் - செவ்வாயும் புதனும் அமைந்திருந்தால் இதுவும் கொஞ்சம் சிக்கலான அமைப்புதான். மாறு கண், தெற்றுவாய் என்று சில உடல்ரீதியான பிரச்னைகள் இருக்கும். ஆனால், படிப்பில் பெரிய அளவில் சாதிப்பார்கள். இயற்பியல் துறையில் சாதிப்பார்கள். பரதநாட்டியம் கற்றுக்கொடுத்த மாஸ்டர் வேறொரு ஊருக்குச் சென்றுவிட்டார் என்று கற்றுக் கொண்ட வித்தையை பாதியில் கைவிட வேண்டியிருக்கும். இது சுக்கிரனின் வீடு. மேலும் செவ்வாய் உக்கிரம் கொள்ளும் வீடும் கூட. இவர்கள் கொஞ்சம் செலவாளியாக இருப்பார்கள்.

பிரச்னைகளோடு சேர்ந்து பிரபலமும் அடைவீர்கள். நீங்கள் எந்த விஷயம் பேசினாலும் அது முரண்பாடாகவே சமூகத்தில் எதிரொலிக்கும். எதிர்ப்பான கருத்துக்களையே முன்வைப்பீர்கள். தொடர்ந்து எதிர்ப்பை சம்பாதித்துக் கொண்டே இருப்பீர்கள். வீட்டில் ஏதாவது நல்லதைப் பேச ஆரம்பித்தால் அது சண்டையில் சென்று முடிவதாக இருக்கும். ஆனாலும், ஆளுமை மிக்கவராகவே வலம் வருவீர்கள்.

அடுத்ததாக மிதுனத்தில் புதன் சொந்த வீட்டில் அமர்ந்திருக்கிறார். இங்கு செவ்வாயை விட புதனின் கையே ஓங்கியிருக்கும். ஆனாலும் இங்கும் லக்னாதிபதி செவ்வாய் தன் வேலையைக் காட்டவே செய்வார். செவ்வாயின் வேகத்தை புதன் ஒருபக்கம் குறைத்தபடியே இருக்கும். இதனால் சோம்பேறித்தனம், மசமசவென்று ஒரு காரியத்தைச் செய்தல், எதையும் தள்ளிப்போட்டுக் கொண்டே வருதல், எதற்கெடுத்தாலும் ஒரு வியாக்கியானம் சொல்லுதல், தன்னுடைய இயலாமைக்கு ஏதேனும் காரணத்தைக் கூறி தப்பித்தல் என்று பாதித்தபடி இருக்கும்.

முடிவுகள் எடுப்பதில் தாமதமும் தடுமாற்றமும் ஏற்படும். இந்த அமைப்பு உள்ளவர்களின் இளைய சகோதரர்களுக்கு உடல்ரீதியான ஏதேனும் குறை இருக்கும் வாய்ப்புண்டு. அதேபோல இயற்கைக்கு மாறான தாம்பத்ய உறவுகளில் ஈடுபடுவதில் ஆர்வம் காட்டுவார்கள். காவல்துறை, ராணுவம், ஆட்சியாளர்கள் செய்யும் தவறுகளைச் சுட்டிக்  காட்டுவார்கள்; விமர்சிப்பார்கள். பொதுநல வழக்குகளைப் போட்டபடி இருப்பார்கள்.

கடக ராசியில் செவ்வாய் நீசகதியை அடைகிறார். லக்னாதிபதி முழுக்க முழுக்க பலவீனமாகி விடுகிறார். முழுக்க முழுக்க பலவீனமான லக்னாதி பதியான செவ்வாயோடு புதன் சேருகிறார். அதாவது ஆறுக்குரிய புதன் சுகஸ்தானத்தில் சேர்க்கை பெறுவதால் நீடித்த ஆரோக்கியக் குறைவு இருந்துகொண்டே இருக்கும். சரும நோய்களான வெண்குஷ்டம், வெண்புள்ளிகள் போன்றவை வந்து நீங்கும். உயர் ரத்த அழுத்தத்தால் அவதிப்படுவார்கள். சிறு வயதிலேயே தாயை விட்டுப் பிரிந்து வாழுதல் அல்லது உறவினர்களின் வீட்டில் வளர்தல் என்றெல்லாம் வாழ்க்கை சோதனையாக இருக்கும். இந்த அமைப்பில் பிறந்தவர்கள் கெமிக்கல் துறையில் நன்கு வருவார்கள். கார் பேட்டரி மற்றும் அமிலம் சம்பந்தப்பட்ட ஆராய்ச்சியில் நன்கு முன்னேறுவார்கள்.

சிம்ம ராசியில் லக்னாதிபதியான செவ்வாயின் கை ஓங்கியிருக்கும். அது புதனுக்கு சமமான வீடு என்பதால் புரட்சிகரமான சிந்தனைகள் உள்ளவர்களாக இருப்பார்கள். சோஷலிச சிந்தனைகள் மிகுந்திருக்கும். மரபணு தொடர்பான குறைபாடு ஏதேனும் இருந்து, அது கண்டுபிடிக்கப்பட்டு மருத்துவம் மேற்கொள்வார்கள். உறவினர்களால் எப்போதும் ஏமாற்றப்பட்டுக் கொண்டே இருப்பார்கள். இவர்கள் நகரத்து நெரிசல் மிகுந்த குடித்தனங்களில் இருக்க முடியாமல் வெளியே தள்ளித் தள்ளி இருப்பார்கள். ஏனெனில், அக்கம்பக்கத்து வீடுகளால் ஏதேனும் பிரச்னைகள் வந்தபடியே இருக்கும்.

இவர்கள் கஷ்டப்பட்டு பாதுகாத்து வைத்திருக்கும் சொத்தினை பிள்ளைகள் அழிப்பார்கள். இல்லையெனில் விற்றுவிட்டு வேறு ஊருக்குப் போவார்கள். ஆன்மிகத்தில் மிகுந்த ஞானம் உள்ளவர்களாகத் திகழ்வார்கள். ஸ்கேன் சென்டர், இதயம் சம்பந்தமான துறைகளைத் தேர்ந்தெடுத்துப் படித்து நல்ல வேலையில் அமர்வார்கள்.
கன்னி ராசி என்பது மேஷ லக்னத்திற்கு ஆறாம் வீடாகும். இங்கு செவ்வாயும் புதனும் அமரும்போது செவ்வாய் பலவீனமாகிறது.

ஆனாலும், புதன் இங்கு ஆறுக்குரியவராக இருப்பதால் எதிர்மறையான பலன்களையே தரும். முன்கோபம், விதண்டாவாதமெல்லாம் எப்போதும் இருக்கும். முன் கழுத்து, பின் கழுத்து தொடர்பான பிரச்னைகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எப்போதுமே நிலம் சம்பந்தமாக ஏதேனும் கோர்ட் வழக்குகளைச் சந்தித்துக் கொண்டே இருப்பார்கள். இந்த சேர்க்கை பெற்றிருப்பவர்கள் சகோதரர்களோடு விட்டுக் கொடுத்துப்போனால் மட்டுமே நிம்மதியாக வாழ முடியும்.

 யாருக்கும் ஜாமீன் கையெழுத்துப் போடாமல் இருப்பதே நல்லது. இவர்கள் எப்போதுமே தொப்புள் பகுதியை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். சூணாம் வயிறு என்று கிராமத்தில் சொல்வார்கள். திடீரென்று வயிறு உப்பி வீங்கிவிடும். நாயிடம் பழகும்போது ரொம்பவும் நெருங்கி விளையாடக் கூடாது. அந்நிய தேசத்தில் புகழ் பெறுவார்கள். கிரிமினல் வழக்கறிஞராகவும் மிகச் சிறந்த அறுவை சிகிச்சை நிபுணராகவும் வருவார்கள்.

துலாம் ராசி மேஷ லக்னத்திற்கு ஏழாம் வீடாக வருகிறது. இது செவ்வாய்க்கு நட்பு வீடாகும். ஆனாலும், செவ்வாயை விட புதனுக்குத்தான் அதிகமாக ஒத்துழைப்பு கொடுக்கும் வீடு. மேலும் இது திருமணத்தை நிச்சயிக்கும் களத்திர ஸ்தானத்திற்கு உரியதாகும். நெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்துகொள்ளக் கூடாது. சேர்ந்து வாழ்வது மிகவும் கஷ்டமாகும். மண வாழ்க்கை பாதித்து பின்னரே சரியாகும். மனைவியின் பிரசவத்தின்போது ஜன்னி மற்றும் தொற்றுநோயால் பாதிப்புகள் வந்து நெடுநாட்கள் கழித்து அந்த அவஸ்தையிலிருந்து வெளியே வருவார்கள். எனவே, நல்ல மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்.

கூட்டுத் தொழிலை பெரும்பாலும் தவிர்க்க வேண்டும். மிருதங்கம், டிரம்ஸ் போன்றவற்றில் வித்வத்துவம் ஏற்படும். செவ்வாய் விசாகத்திலும் புதன் சுவாதியிலும் இருந்தால் புல்லாங்குழலில் விற்பன்னராக வருவார்கள். இவர்கள் பழைய வாகனத்தை விற்கும்போது பெயரை மாற்றியே கொடுக்க வேண்டும். இல்லையெனில், அதனால் பிரச்னைகள் வருவதற்குரிய வாய்ப்புகள் உண்டு.

எட்டாம் இடமான விருச்சிகத்தில் செவ்வாயும் புதனும் அமரும்போது வித்தியாசமான பலன்கள் ஏற்படக்கூடும். ஏனெனில், ஆறுக்குரிய புதன் எட்டாம் இடத்தில் செவ்வாயோடு சேர்ந்து அமர்ந்தால் அது விபரீத ராஜயோகத்தைத் தரும். ஷேர் மூலமாக உச்சத்தில் சென்று அமர்வார்கள். எப்போதோ வாங்கிப்போட்ட இடங்களெல்லாம் தற்போது நல்ல விலைக்கு வந்து விற்பார்கள். வழக்கால் செல்வம் ஈட்டுவார்கள். ஆனால், திடீரென்று கூடாப் பழக்கவழக்கங்கள் வந்து செல்வத்தை இழக்க நேரிடும். எனவே, எச்சரிக்கையோடு இருத்தல் நலம். ஆண்களாக இருந்தால் பிறப்புறுப்புகளில் ஏதேனும் நோய் வந்து நீங்கும். பெண்களாக இருப்பின் வெள்ளைப்படுதல் பிரச்னை இருக்கும். 

தனுசு ராசியில் இருவரும் அமரும்போது புதன் தன் வீட்டை தானே ஏழாம் பார்வையாகப் பார்க்கிறார். அப்படி பார்ப்பதால் திடீர் ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. இளைய சகோதரரால் நன்மை உண்டு. ஏதேனும் ஒருவிதத்தில் வாழ்க்கை முழுவதும் உதவி செய்தபடி இருப்பார். அதேசமயத்தில் முதுகுத் தண்டுவடத்தில் சிறிய வலி வந்தால்கூட உடனே பார்த்துவிடுவது நல்லது. மூட்டுவலி, குடலேற்றம் போன்ற தொந்தரவுகள் வந்துபோகும். எப்போதுமே அதிகமாக கரன்சியை கையில் வைத்துக்கொள்ளாமல் இருப்பது நல்லது. உங்களின் வாழ்க்கை துரியோதனின் கைகளில் கர்ணனைப் போல இருக்கும். எனவே, ‘சேரிடம் அறிந்து சேர்’ என்கிற முதுமொழியை நினைவில் கொள்வது நல்லது.

மகரம் சனி பகவானின் வீடாகும். அதில் போய் செவ்வாயும் புதனும் சேருதல் ஒருவகையில் நல்லதேயாகும். ஊர் விஷயங்களைப் பார்ப்பார்களே தவிர சொந்த விஷயங்களைக் கோட்டை விடுவார்கள். மருத்துவ உதவிகளை யாரேனும் ஒருவருக்கு செய்துகொண்டே இருப்பார்கள். ஜீவகாருண்ய குணம் மேலோங்கியிருக்கும். தடயவியல் நிபுணராக வருவார்கள். மோப்ப நாய் பயிற்சியாளர், குற்றவாளிகளை இனங்கண்டறிதல் என்று பல்வேறு திறமைகள் பெற்றிருப்பார்கள்.

அடுத்ததாக வரும் கும்பத்தில் செவ்வாயும் புதனும் சேர்க்கை பெறுவது என்பது அவ்வளவு நல்லதல்ல. தவறான வழியில் பணம் சம்பாதிப்பார்கள். ஆசை பேராசையாக மாறி பிடிபடுவார்கள். எனவே குறுக்கு வழியில் சென்று இந்த சேர்க்கையுள்ளவர்கள் பணத்தை சம்பாதிக்கக் கூடாது. மூத்த அதிகாரிகளை விட நேர் மூத்த அதிகாரிகளோடு ஒத்துப்போக மாட்டார்கள்.

மீன ராசியில் புதன் நீசமாகிறார். மேலும் ஆறுக்குரியவர் மறைந்து போகிறார். தன் வீட்டை ஏழாம் பார்வையாக தானே பார்க்கிறார். வெளிநாடு
களிலுள்ள சிறிய தீவுகளில் சென்று செட்டில் ஆவார்கள். சொந்த தேசத்தைவிட அந்நிய தேசத்தில் புகழ்பெற்று விளங்குவார்கள். தூக்கம் குறையும். தொண்டை புகைச்சல், பித்த வெடிப்பு, கால் வலி, இடுப்பில் சுளுக்கு என்று அவ்வப்போது அவஸ்தை வந்துபோகும்.

செவ்வாயும், புதனும் சேர்க்கை பெற்றுள்ள இந்த பலவீனமான அமைப்பை பெற்றவர்கள் தரிசிக்க வேண்டிய தலமே மதுரைக்கு அருகே அழகர்கோவி லில் உள்ள கள்ளழகர் ஆலயமாகும். மேலும், மிக முக்கியமாக இங்குள்ள காவல் தெய்வமான பதினெட்டாம்படி கருப்பண்ணசாமியை நிச்சயம் தரிசிக்க வேண்டும். இத்தலத்திலுள்ள மூலவரை பரமஸ்வாமி என்றும் உற்சவரை சுந்தர்ராஜப் பெருமாள், கல்யாண சுந்தரவல்லி என்றும் அழைப்பார்கள். இத்தலம் செவ்வாய் மற்றும் புதனின் இணைப்பின் எதிர்மறை வீர்யத்தைக் குறைத்து சமநிலையில் வைக்கும்.  

(கிரகங்கள் சுழலும்...)

ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்
ஓவியம்: மணியம் செல்வன்