கவிதைக்காரர்கள் வீதி



*அந்த
அகன்ற சாலையின்
முடிவில்
எனக்கு முன்பாக
ஊர் போய்க்கொண்டிருந்தது
தொடுவானம்!
- சங்கீதா, மோகனூர்.

* எவையேனும் நான்கினுக்கு
விடையளி
என்ற வினாத்தாளை
பார்க்கும்போதெல்லாம்
உன் மௌனம்
நினைவில் வருவது
எனக்கு மட்டுமா...
உனக்கும்தானா?
- வினையன், சென்னை-40.

* கொக்கொன்று
ஒற்றைக் காலில்
தவமிருந்தது
ஓடாத நதியில்
மீனுமில்லை...
நீருமில்லை...
காலூன்ற
மணலுமில்லை!
- செ.ச.பிரபு. நெல்லை.

*தலையாட்டி வாழ்க்கை
வெறும் வாழ்க்கை
தன்மான வாழ்க்கை
அரும் வாழ்க்கை
தலையாட்டி வாழ்க்கைக்கு
தலை மட்டும் போதும்
தன்மான வாழ்க்கைக்கு
தலைக்குள்ளும் வேண்டும்
வேண்டுதல் வேண்டாமை
அவரவர் தலைவிதி
- நாகேந்திர பாரதி, சென்னை-24.

*ரப்பரும்
பிளாஸ்டிக்குமாய்
சந்தையிலிருக்கும்
பொம்மைகள்
ரத்தமும்
சதையுமாய்
ஆகிவிடுகின்றன
குழந்தைகளை வந்தடைந்ததும்.
- மகா, திருப்பூர்.