ஒன் டூ த்ரி



காதல் தோல்வியினால் வாழ்க்கையில் வெறுப்புற்ற கதிர்வேல், தற்கொலை முடிவோடு ஊருக்கு வெளியேயுள்ள மலை முகட்டிற்கு வந்தான். அங்கே ஓர் அழகான இளம் பெண்... முகமெல்லாம் அழுது வீங்கியிருந்தது அவளுக்கு.‘‘யார் நீங்க... இங்கே என்ன பண்றீங்க?’’  கதிர்வேல் கேட்டான்.

‘‘என்னைக் காதலிச்சவன் பணத்துக்கு ஆசைப்பட்டு என்னை ஏமாத்திட்டான். இப்ப வேற பொண்ணையும் கல்யாணம் பண்ணிக்கிட்டான். அதான் நான் தற்கொலை பண்ணிக்கணும்ங்கற வெறியோட வந்தேன். ஆனா, கீழ அதலபாதாளத்தைப் பார்த்ததும் தலை சுத்திடுச்சு. பயமா இருக்கு!’’

‘‘அட, நீயும் நம்ம கேஸ்தானா? பயப்படாதே! நாம ரெண்டு பேரும் சேர்ந்தே ‘ஒன்... டூ... த்ரி’ சொல்லி குதிக்கலாம்.’’  கதிர்வேல் சொன்ன ஐடியா அவளுக்கும் சரியாகப் பட்டது. கண்களை மூடிக்கொண்டு கதிர்வேலனைக் கட்டிப் பிடித்தபடி, ‘‘நீங்களே ஒன் டூ த்ரி சொல்லுங்க!’’ என்றாள்.கதிர்வேலனிடம் சத்தமில்லை.‘‘ம்... சொல்லுங்க. ஒன் டூ த்ரி மூணு வார்த்தைதானே! ஏன் யோசிக்கிறீங்க? சொல்லுங்க!’’ என்றாள் அவள். அவளது ஸ்பரிசத்தினால் தடுமாறிய கதிர்வேலின் உதடுகள் அந்த மூன்று வார்த்தையை உச்சரித்தன...
‘‘ஐ... லவ்... யூ...!’’

ராஜா