ஃப்ரீஸ் ராய்!



விவேக், அர்ஜுன் எனப் பல வெற்றிக் கலைஞர்களின் அச்சாணியாய்த் திகழ்ந்த ராம.நாராயணனின் மறைவு, உண்மையில் ஈடு செய்ய
முடியாத இழப்பே!
 எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.

நேரமறிந்து எழுதப்பட்ட ‘தனித்திருக்கும் முதியவர்கள்’ கட்டுரை நன்று. நம் முதியவர்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும் ஏங்குகிறார்கள்! அவர்களின் பாதுகாப்பாவது உறுதி செய்யப்பட வேண்டும்!
 எம்.பர்வீன் பாத்திமா, சென்னை91.

அஞ்சலிக்கு தடை போட்டால் தமிழ்ப்பட உலகில் அழகுக்கே அஞ்சலி செலுத்தியது மாதிரி. ப்ளீஸ்... அவங்களை நடிக்க விடுங்க. எங்களைப் போன்ற அஞ்சலிதாசன்களின் சாபத்துக்கு ஆளாகாதீங்க!
 எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.

பாடலும் பாடலும் ஒன்று சேரும்பொழுது இனிமைக்குப் பஞ்சமிருக்காது. கவிஞர் முத்து விஜயன்தேன்மொழி ஜோடி ‘கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா’ பாடலுக்குப் பொருத்தமாக வாழ்ந்து காட்ட வாழ்த்துகிறேன்!
 முத்தையா தம்பி, மஞ்சக்குப்பம்.

15 கிலோ எடை குறைத்துள்ள லட்சுமி ராய்... ஸாரி, ‘ராய் லட்சுமி’, தனது காதலர் ஒரு பத்திரிகையாளராய் கூட இருக்கலாம் என்று ஒரே போடாய் போட்டுவிட்டாரே. உண்மையைச் சொல்லும்... நீர் ஃப்ரீஸ் ஆகி எத்தனை நிமிடம் அங்கேயே நின்றீர்?
 மயிலை கோபி, சென்னை83.

‘பெண்களின் கூந்தலில் மணம் இருக்கா’ன்னு ஆராய்ச்சி பண்ணினவங்களே பரவாயில்ல. நீங்க அதுல ஹார்மோன் எவ்வளவு இருக்குன்னு அளந்து காட்டுற அளவுக்குப் போயிட்டீங்க. இதெல்லாம் ஒரு பொழப்பு!
 எச்.சூரஜ்குமார், நாகை.

‘மனக்குறை நீக்கும் மகான்கள்’ பகுதியில் பாம்பன் சுவாமிகள் அருளிய ‘பகை கடிதல்’ அற்புதம். நம் எதிரிகளை அது தொலைத்துவிடும் என்றில்லாமல், நம் மனதையே மென்மையாக்கி பகை இல்லாமல் பண்ணி விடும் என்ற விளக்கம் கோடிப் பொன் பெறும்!
 எஸ்.மாலதி கண்ணன், தூத்துக்குடி.

‘வன்முறை பூமிகளில் விட்டில் பூச்சிகள்’ கட்டுரை மனதை பதை
பதைக்க வைத்துவிட்டது. ‘‘இங்கு கந்துவட்டிக்காரர்களிடம் மாட்டி இறப்பதை விட, அங்கே தீவிரவாதிகளின் பிடியில் சாகலாம்’’ என்று அவர்கள் கதறுவது எங்கள் காதிலும் ஒலிக்கிறது.
 ஏ.விஷால், புதுச்சேரி.

கறுப்புப் பணம் பற்றிய கட்டுரை, சமூகத்தின் பல கறுப்புப் பக்கங்களை வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது. அதை மீட்பது சிரமம் என்றாலும், பதுக்கியவர்களுக்கு கடும் தண்டனை வழங்கி, எதிர்கால பதுக்கலை அரசு தடுக்க வேண்டும்!
 மா.மாரிமுத்து, ஈரோடு1.