சகுனியின் தாயம்



கே.என்.சிவராமன்


‘‘என்ன நடக்குது இங்க?’’ அதிர்ச்சியுடன் கேட்டாள் தேன்மொழி. பதில் சொல்லும் நிலையில் ரங்கராஜன் இல்லை. அவன் முகத்திலும் பதற்றம் தெரிந்தது. தேன்மொழி பார்த்த திசையில்தான் அவன் பார்வையும் நிலைகுத்தி நின்றது. அது சிறிய கிராமம். அதிகம் போனால் நான்கு தெருக்கள் இருக்கும். இருபக்கங்களிலும் வீடுகள் நெருக்கமாக இருந்தன. சுண்ணாம்பு பூசப்பட்ட சிமென்ட்டால் ஆன சுவர்கள் ஒவ்வொரு வீட்டிலும் புதிதாகப் பூத்திருந்தன. ஓடுகளால் ஆன கூரை.

தென்னங்கீற்று அல்லது வைக்கோலால் வேயப்பட்ட வீடுகளை அரிதாகவே பார்க்க முடிந்தது. பெரும்பாலும் அனைவரது வீட்டு முன்னாலும் இரு சக்கர வாகனம் ஒன்று நின்று கொண்டிருந்தது. சாலையின் இரு புறமும் கழிவுநீர் ஓடிக் கொண்டிருக்க, புதிதாக போடப்பட்ட சிமென்ட் சாலை அந்த கிராமத்தையே மாற்றியிருந்தது. இளைஞர்கள் ஜீன்ஸ் பேன்ட்டி ஷர்ட்டிலும், முதியவர்கள் வெள்ளை வேட்டி வெள்ளை சட்டையிலும் காணப்பட்டார்கள். இளம் பெண்கள் சுரிதாரும், பெண்மணிகள் புடவையும் அணிந்திருந்தார்கள்.

மகிழ்ச்சியைத் தர வேண்டிய இந்தக் காட்சி அச்சத்தையே ஏற்படுத்தியது. காரணம், இருந்த நான்கு தெருக்களில் இருந்தும் ஒலித்த மரண ஓலம்தான்.  ‘‘ஏதாவது பிரச்னையா?’’ தங்களை அழைத்துச் செல்ல வந்த இளைஞனிடம் ரங்கராஜன் கேட்டான். ‘‘ஆமா தோழர். ஒரே நேரத்துல நாலு கொழந்தைங்க இறந்துட்டாங்க...’’ துக்கம் தொண்டையை அடைக்க அந்த இளைஞன் பதிலளித்தான். ‘‘என்ன வயசிருக்கும்?’’ ‘‘யாருக்குமே இன்னும் ஒரு வயசு கூட ஆகலை...’’‘‘எப்படி இது நடந்தது?’’ புருவம் உயர தேன்மொழி கேட்டாள்.‘‘சரியா தெரியல தோழர். நேத்து தடுப்பூசி போடற நாள். கொழந்தையை தூக்கிட்டுப் போயிருக்காங்க.

ஊசி போட்டதுலேந்து ஒரே அழுகை. சரியா எதுவும் சாப்பிடலை. வாந்தியும், பேதியுமா நைட்டு பூரா அவஸ்தைப்பட்டிருக்குங்க. விடிஞ்சதும் பார்த்தா இப்படி...’’
பதில் சொன்ன இளைஞன் தன்னை வார்த்தைக்கு வார்த்தை ‘தோழர்’ என்று அழைத்தது தேன்மொழிக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. கிழக்கு பார்த்த தெருவில் நுழைந்து ஏழாவது வீட்டின் முன் நின்றார்கள்.

‘‘உள்ள வாங்க...’’ அழைத்த படி அந்த இளைஞன் நுழைந்தான். இருவரும் அவனைப் பின்தொடர்ந்தார்கள். சின்னதாக ஒரு ஹால். வலப்பக்க அறை மூடியிருந்தது. ஹாலை ஒட்டினாற்போல் அந்தப் பக்கம் சமையலறை. அதைத் தாண்டி கொல்லைப்புறம். இருந்த இரு பிளாஸ்டிக் நாற்காலிகளில் இருவரையும் அமர வைத்துவிட்டு அந்த இளைஞன் பின்பக்கம் சென்றான். கண்களால் ஹாலை அளந்தாள் தேன்மொழி. சுவரோடு ஒட்டியிருந்த ஷெல்ஃபில் சிவப்பு நிற புத்தகங்கள் அடுக்கப்பட்டிருந்தன. எல்லாமே மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின் எழுதியவை. தங்களை ‘தோழர்’ என அந்த இளைஞன் ஏன் அழைத்தான் என்பது புரிந்தது.

‘‘இவரு கம்யூனிஸ்ட்டா?’’ ரங்கராஜனிடம் கிசுகிசுத்தாள். புன்னகையை மட்டும் பதிலாக கொடுத்த ரங்கராஜன் வேறு எதுவும் பேசவில்லை. எவர்சில்வர் சொம்பு நிறைய தண்ணீருடன் அந்த இளைஞன் வந்தான். இருவரும் அதை வாங்கி குடித்தார்கள். ‘‘ஒரு எட்டு அந்த இறந்த குழந்தைகளை பார்த்துட்டு வந்துடலாம்...’’ என்றபடி ரங்கராஜன் எழுந்தான்.
‘‘அதுல ஒரு சிக்கல் இருக்கு தோழர்...’’ மேற்கொண்டு பேச அந்த இளைஞன் தயங்கினான். ‘‘என்ன விஷயம் கதிர்?’’

நிமிர்ந்து ரங்கராஜனை பார்த்த கதிர், ஷெல்ஃபுக்கு பக்கத்தில் சென்றான். பிட் நோட்டீஸ் ஒன்றை எடுத்து வந்து கொடுத்தான். ரங்கராஜனும் தேன்மொழியும் அதைப் படித்தார்கள். குறிப்பிட்ட புரட்சிகர அமைப்பின் தலைமையில் இருப்பவர்கள் மேல் சாதியைச் சார்ந்தவர்கள் என்றும், அவர்களிடமிருந்து தலித்துகள் விலகி இருக்க வேண்டும் என்றும் அதில் அச்சாகியிருந்தன.

‘‘பழைய விஷயம்தானே கதிர்?’’ ரங்கராஜனின் குரல் இயல்பாக ஒலித்தது.‘‘இப்ப புதுசா தூசு தட்டப்பட்டிருக்கு. தீவிரமா இதை விநியோகிச்சு பிரசாரம் பண்ணறாங்க...’’
‘‘ம்...’’‘‘இறந்த நான்கு கொழந்தைகளோட குடும்பத்தைச் சேர்ந்தவங்களும் தலித் அமைப்பை சேர்ந்தவங்க. சொல்லப் போனா அவங்கதான் இதை இந்த கிராமத்துக்கே கொண்டு வந்தாங்க...’’ ‘‘பரவாயில்ல, அவங்களை போய்ப் பார்ப்போம்...’’ ‘‘ஒரு நிமிஷம்...’’ தேன்மொழி தடுத்தாள். ‘‘நீங்க ரெண்டு பேரும் இதுல இருக்கிற அமைப்பைச் சேர்ந்தவங்களா?’’

தேன்மொழியின் கேள்வி கதிரை ஆச்சரியப்படுத்தியது. ரங்கராஜனை உற்றுப் பார்த்தபடி ‘‘இவங்களும் நம்ம அமைப்பை சேர்ந்தவங்கதானே தோழர்?’’ என்று கேட்டான்.
‘‘வந்து இதைப் பத்தி பொறுமையா பேசலாம். இப்ப முதல் வேலையா அந்த நாலு பேர் வீட்டுக்கும் நாம போயிட்டு வந்துடலாம்...’’ வெளியில் வந்து செருப்பை மாட்டினான். ‘‘அது என்ன தடுப்பூசின்னு தெரியுமா?’’

‘‘விசாரிக்க நம்ம விவசாய அமைப்பைச் சேர்ந்த தோழரை அனுப்பியிருக்கோம்...’’ கதிர் சொல்லி முடிப்பதற்குள் தேன்மொழி இடையில் புகுந்தாள்.
‘‘தப்பான தடுப்பூசியா இருக்கும்னு சந்தேகப்படறீங்களா?’’ ‘‘ஆமா...’’ தீவிரத்துடன் ரங்கராஜன் பதிலளித்தான்.

‘‘வாய்ப்பே இல்லை. அரசாங்கம் அதை நல்லா ஆராய்ந்து பார்த்துட்டுத்தான் புழக்கத்துக்கே விட்டிருக்கு...’’ எதையோ சொல்ல முற்பட்ட கதிரின் கைகளை பிடித்து தடுத்து நிறுத்திய ரங்கராஜன், பார்வையால் ஏதோ சொன்னான். புரிந்து கொண்டதற்கு அறிகுறியாக தலையை அசைத்த கதிர், ‘‘ஒரு விஷயம் மட்டும் தொண்டைல சிக்கின முள்ளு மாதிரி உறுத்திக்கிட்டே இருக்கு தோழர்’’ என்றான்.
‘‘என்ன?’’

‘‘இறந்து போன நாலு கொழந்தைகளோட அம்மாவும் வேற சாதியைச் சேர்ந்தவங்க. காதலிச்சு வீட்டை எதிர்த்து திருமணம் செஞ்சுக்கிட்டவங்க...’’
ரங்கராஜன் சட்டென்று நின்றான். ‘‘இந்த கலப்பு மணத்துக்கும் கொழந்தைகளோட சாவுக்கும் தொடர்பு இருக்குன்னு சொல்ல வர்றீங்களா?’’ என்று கேட்டு முடித்த அதே நேரம்
இளவரசனுக்கு கை கொடுத்தான் ஸ்காட் வில்லியம்ஸ். ‘‘ஓ... திவ்யாவை லவ் பண்ணி கல்யாணம் செஞ்சுக்கிட்டீங்களா? கங்கிராட்ஸ்...’’
வெட்கத்துடன் இளவரசன் சிரித்தான்.

அவர்கள் பயணம் செய்த கார் திருப்பதி மலை மீது ஏறிக் கொண்டிருந்தது. அப்போது தான் அந்தக் கேள்வியை ஸ்காட் வில்லியம்ஸ் கேட்டான்.
‘‘உங்க கொழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டாச்சா?’’
‘‘மாமா... நான் செய்வது அதர்மம் என்று நினைக்கிறீர்களா?’’
கேட்ட துரியோதனனை நிமிர்ந்து பார்த்தார் சகுனி. ‘‘அப்படி என்று யார் சொன்னது?’’
‘‘உலகம்...’’

‘‘யாருடைய உலகம்?’’
‘‘இதென்ன கேள்வி மாமா... உலகம் ஒன்றுதானே?’’
‘‘இல்லை துரியோதனா?’’
‘‘என்ன சொல்கிறீர்கள் மாமா?’’

‘‘உண்மையைச் சொல்கிறேன்...’’ சொன்ன சகுனி பொன்னிற ஆசனத்தில் சாய்ந்து அமர்ந்தார். ‘‘பொருளாதார அடிப்படையைச் சார்ந்து ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு உலகம் இருக்கின்றன. அதற்கு ஏற்ற தர்மங்களும், நியதிகளும், அதர்மங்களும் புழக்கத்தில் உள்ளன. அதனால்தான் யாருடைய
உலகம் என்று கேட்கிறேன்...’’

‘‘சற்று விளக்கமாகச் சொல்லுங்கள் மாமா...’’ என்றபடி அவருக்கு அருகில் அதே ஆசனத்தில் அமர்ந்தான். ‘‘இங்கே பார் துரியோதனா. ஆள்பவர்களுக்கு என்று ஓர் உலகம் இருக்கிறது. அவர்களுக்கான சட்ட திட்டம் வேறு. அதே போல் போர் வீரர்களுக்கு என்று ஓர் உலகம் உண்டு. அங்கு எதிரி நாட்டு வீரர்களைக் கொல்வது அதர்மம் ஆகாது. ஆனால், இந்த உரிமை மக்களுக்குக் கிடையாது. அதாவது கொலை செய்யும் உரிமை.

அவ்வளவு ஏன்... வணிகர்களையே எடுத்துக் கொள். அவர்களைப் பொறுத்தவரை ஒரு பொருளை அதிக விலைக்கு விற்பது என்பது தர்மம். அதாவது லாபம் அவர்களது பிறப்புரிமை. வட்டிக்கு பணம் விடுவது அவர்கள் தொழில். அவர்களுக்கான உலகில் இந்தச் செய்கை பஞ்சமா பாதகத்தில் அடங்காது. இப்படி ஒவ்வொருவரும் அவரவருக்கான நியாயங்களுடன் வாழ்கிறார்கள். அந்த வகையில்தான் நீ செய்வதும். எனவே உனது செய்கைகள் எதுவும் அதர்மம் ஆகாது...’’

‘‘மிக்க நன்றி மாமா...’’ சொன்ன துரியோதனன் அப்படியே அவர் மடியில் தலை சாய்த்தான். ‘‘வலிக்கிறதா மாமா?’’
‘‘ஏன் கேட்கிறாய்?’’
‘‘வந்து... உங்கள் கால்...’’

‘‘ஊனம்தான் துரியோதனா. விந்தி விந்தித்தான் நடக்கிறேன். அதற்காக என் அக்கா மகனை மடியில் படுக்க வைத்து தாலாட்டுப் பாடவே முடியாது என்று அர்த்தமல்ல. என் மனதில் இருக்கும் கனத்தை விட உன் எடை குறைவானதுதான். வாழ்நாள் முழுக்க அந்தக் கனத்தை சுமப்பவனால் உனது எடையை சில நாழிகைகள் தாங்க முடியாதா என்ன..?’’ சொன்னபடியே அவன் சிகையை வருட ஆரம்பித்தார்.

‘‘இந்த ஊனம் எப்படி ஏற்பட்டது மாமா?’’‘‘சின்ன விபத்து. அவ்வளவு தான்...’’ முணுமுணுத்த சகுனி மவுனமானார். அவர் மடியில் படுத்திருந்த துரியோதனன் மேற்கொண்டு எதுவும் கேட்கவில்லை. ஒருவேளை கேட்டிருந்தால் உண்மை வெளிப்பட்டிருக்கலாம். ஏனெனில் கொந்தளிப்பின் உச்சியில் இருந்தார் சகுனி. யாரிடமாவது அனைத்தையும் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்று அவர் உள்ளம் துடித்துக் கொண்டிருந்தது. வார்த்தைகளும், வாக்கியங்களும் அவர் தொண்டையைத் தாண்டி வர முட்டி மோதிக் கொண்டிருந்தன...

பிறக்கும்போது நன்றாகத்தான் இருந்தார். அக்கா காந்தாரியின் கைகளைப் பிடித்தபடி ஓடியாடி விளையாடினார்.ஆனால் எந்த அப்பா அவரை தூக்கிக் கொஞ்சினாரோ... எந்தத் தந்தை அவர் வேகமாக ஓடுவதைப் பார்த்து அகமகிழ்ந்தாரோ அதே தந்தை, காந்தார தேசத்தின் அரசர், அவரது காலை வேண்டுமென்றே ஊனமாக்குவார் என்று யார்தான் நினைத்தார்கள்?
நினைக்க நினைக்க சகுனிக்கு கோபம் வந்தது. அந்த ஆத்திரம் அவர் கால்களை ஒடித்த அவரது தந்தை சுவலன் மீது அல்ல. பதிலாக, பீஷ்மர் மீது.

அந்தக் கிழவனால்தானே இது அத்தனையும் நிகழ்ந்தது... விட மாட்டேன். கௌரவர்களையும், பாண்டவர்களையும் ஒரு சேர அழிக்காமல் ஓய மாட்டேன். பீஷ்மா... உன் வம்சம் துளிர்க்க முடியாதபடி பொசுங்கப் போகிறது... பற்களை கடித்தபடி தன் மனதில் ஆறாத வடுவாகப் பதிந்துவிட்ட பழைய நிகழ்ச்சிகளை நினைத்துப் பார்க்க ஆரம்பித்தார். அவரையும் அறியாமல் அவர் கைகளில் இருந்த தாயம் உருளத் தொடங்கியது...

அப்போதுதான் அந்த உண்மை ஸ்பைடர் மேனுக்கும் ஹாரி பார்ட்டருக்கும் உரைத்தது. எந்த நேரத்தில் அவர்கள் மீது இரு பட்டாம் பூச்சிகள் அமர்ந்தனவோ அப்போது முதல் அவர்கள் உடல் கற்சிலையாக மாறுவது நின்று விட்டிருந்தது. வியப்புடன் ஒருவரையொருவர் ஓரப் பார்வையால் பார்த்துக் கொண்டார்கள்.

 ‘‘மாயக் கண்ணாடி சொன்னதைக் கேட்டீங்க இல்லையா?’’ சூனியக்கார பாட்டி சட்டென்று அவர்கள் பக்கம் திரும்பினாள். ‘‘நான் கடலுக்குள்ள போய் அந்த ஏழு விழுதையும் வெட்டிட்டு வரேன்...’’ சொன்னபடியே புல்லட்டை கிளப்பினாள். வந்த வழியே பறந்தாள். அவர்கள் பார்வையை விட்டு அவள் மறைந்ததும் அந்த அதிசயம் நடந்தது.

அவர்கள் தலைமீது அமர்ந்திருந்த இரு பட்டாம்பூச்சிகளும் சிறகடித்தபடி பறக்க ஆரம்பித்தன.ஆச்சர்யம் இதுவல்ல.கூடவே பதுமையாக மாறியிருந்த அவர்கள் இருவரும் பறந்ததுதான் அதிசயம். ஆம், ஒவ்வொரு பட்டர்ஃபிளையும் ஒவ்வொருவரை சுமந்து கொண்டு பறந்தன. இப்படியே எத்தனை நிமிடங்கள் கரைந்ததோ... இரு பட்டாம்பூச்சிகளும் குகைக்குள் இருந்த ஓர் ஏரிக்கரையில் இறங்கின. பார்வையால் அந்த ஏரியை அளவிட்ட ஸ்பைடர் மேனும் ஹாரி பார்ட்டரும் அதிர்ந்து போனார்கள்.

காரணம், அந்த ஏரியில் நிரம்பியிருந்தது தண்ணீர் அல்ல. சொர்ணம்.‘‘டேய்... இது தங்க நீர்டா...’’ பார்வையாலேயே ஹாரி பார்ட்டரிடம் தன் வியப்பை ஸ்பைடர் மேன் தெரியப்படுத்தினான். ‘‘இது கோல்டன் வாட்டர் இல்ல...’’ ‘‘பிறகு வேற என்ன..?’’ ‘‘நீயே பாரு...’’

பார்த்தார்கள். கண்களை அகல விரித்தார்கள். ஏனெனில் அந்த சொர்ண நீர் மடமடவென்று ஒன்றுசேர்ந்து அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய ஆசனமாக மாறியது.
‘‘என்னன்னு தெரியுதா?’’ பார்வையால் கேட்டான் ஹாரி பார்ட்டர்.
‘‘நோ ஐடியா...’’

‘‘இடியட். இதுதான் சூனியக்கார பாட்டி தேடிட்டு இருக்கிற விக்கிரமாதித்த மகாராஜாவோட சிம்மாசனம்..!’’யவன ராணி தன் உதட்டைக் குவித்து விநோதமான ஒலியை எழுப்பிய அதே கணம் ‘‘நாம் ஏமாற்றப்படுகிறோமோ என்று சந்தேகப்படுகிறேன்...’’ என்ற குரல் சோழ மன்னருக்கு பின்புறமிருந்து ஒலித்தது. ‘‘எதை வைத்து அப்படிச் சொல்கிறீர்கள் சேர மன்னரே?’’ திரும்பிப் பார்க்காமல் பெருநற்கிள்ளி கேட்டார்.

‘‘தப்பிச் செல்ல வாய்ப்பிருந்தும் ஏன் இளமாறன் புகாருக்குள்ளேயே சுற்றிச் சுற்றி வருகிறான்..?’’
‘‘இதுதான் உங்கள் ஐயமா?’’
‘‘இது மட்டுமல்ல...’’

‘‘வேறென்ன?’’
‘‘யவன ராணி ஏன் அவனை விட்டு நீங்காமல் இருக்கிறாள்?’’
சேர மன்னர் யானைக் கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை கேட்ட கேள்வி சோழ மன்னர் பெருநற்கிள்ளியின் தலையில் இடியாக இறங்கியது.

‘‘என்னய்யா... அந்தக் குழந்தை என்மேல பால் டப்பாவை வீசுது?’’
‘‘அதுக்கு நீங்க வச்ச பெயர்
பிடிக்கலையாம் தலைவரே,
அதான்!’’

‘‘தலைவரை வாழ்த்திப் பேசினவங்களுக்கு பிரியாணி
கிடைக்கலையாம்...’’
‘‘பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காதுங்கறது
இதுதானா..?’’

‘‘எதுக்கு இவ்வளவு பேர் கூட்டமா
வந்து திருடறீங்க..?’’
‘‘எல்லாம் என்கிட்ட தொழில் கத்துக்கற சிஷ்யனுங்க சாமி...
பிராக்டிகலுக்கு கூட்டி வந்தேன்!’’
 பெ.பாண்டியன்,
கீழசிவல்பட்டி.

(தொடரும்)