ஜகா வாங்கிட்டீங்களே!




‘பிச்சை புகினும் கற்கை நன்றே...’ என்பதற்கு ஏற்ப பிச்சை எடுத்து ஏழைப் பிள்ளைகளின் கல்விக்கு உதவும் செல்வராஜ், ஒரு மாமனிதர்.
- அ.இராஜப்பன், கருத்தம்பட்டி.

‘சொல்றேண்ணே... சொல்றேன்’ கலாட்டா தொடரில், இமான் அண்ணாச்சி சிரிக்க மட்டுமல்ல; சிந்திக்கவும் வைக்கிறார். சின்னக் குழந்தைகளிடம் பெரிய பெரிய விவகாரங்கள் இருப்பது அவரால்தான் தெரிகிறது!
- ஏ.கோவிந்தன், சேலம்.

விஜய்சேதுபதி நடிகைகளை சிபாரிசு செய்கிறாரோ இல்லையோ... சும்மா சிபாரிசு செய்யிங்க பாஸ் என நீங்களே தூண்டி விடுவீங்க போலிருக்கே! அந்தக் கேள்வியிலதான் என்னா குறுகுறுப்பு!
- ராஜா கண்ணன், மதுரை.

‘மஞ்சள் பல்தான் ஆரோக்கியம்’ என மருத்துவர்கள் வழியாகத் தெரிவித்து மஞ்சள் முகமே வருக எனப் பாட வைத்துவிட்டீர்கள். கூடவே, பற்கள் பளிச் என்று சுத்தமாக இருக்க இயற்கை டிப்ஸ் தந்துள்ளதற்கு சபாஷ்!
- வெ.லட்சுமிநாராயணன், வடலூர்.

‘ஹன்சிகாவின் உயிர் கிருஷ்ணன்தான்’ எனத் திரி கிள்ளிப் போட்டு... பின்பு, ‘கடவுள் கிருஷ்ணன்’ என்று ஜகா வாங்கிவிட்டீர். அந்த முதல் வரியில் சிம்பு மனது என்ன பாடுபட்டிருக்கும்! இரக்கமில்லையா உமக்கு?
- எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.

மாற்றுப் பாலினத்தவர்களின் சோகங்கள் குறித்த மனுஷ்ய புத்திரனின் வருத்தங்கள் நியாயமானவை. ஆனால், அவர்களில் பலரும் தவறான பாதையை விட்டு விலகாத நிலையில் எப்படி அங்கீகாரம் கிடைக்கும்?
- எஸ்.புவனா, சென்னை-94.

ஏற்கனவே நம்மூரில் போலி டாக்டர்கள் அதிகம். இதில், எம்.பி.பி.எஸ் தேர்வில் மாணவர்கள் ஹைடெக்காக காப்பி அடிக்கும் செய்தியைப் படித்து, தலையே சுற்றியது. ஒழுங்காய் பரீட்சை எழுதி பாஸான டாக்டரிடம் தலைசுற்றலுக்கு சிகிச்சை பெறலாம் என்றிருக்கிறேன்.
- எஸ்.சுகுணா ராஜன், தேனி.

விண்ணை முட்டும் வெங்காய விலை உயர்வுக்கு மத்திய அரசின் ஏற்றுமதிக் கொள்கையும் காரணம் என்பதைப் படித்து மனம் வேதனையடைந்தது. வெங்காயம்... அதன் விலையால் மக்களுக்கு மனக்காயம்!
- வி.சரஸ்வதி ஏழுமலை, புதுச்சேரி.

‘சிக்கலில் தவிக்கும் படமாச்சே’ என்ற சென்டிமென்ட் இல்லாமல், ‘தலைவா’ படத்துக்கு நடுநிலை விமர்சனத்தைத் தந்துவிட்டீர்கள். பல தமிழ்ப் படங்களின்
கலவைதான் ‘தலைவா’ என்றது, நறுக் பன்ச்!
- இரா.கல்யாண சுந்தரம், மதுரை.

காதில் பூ சுற்றும் நம் ஆட்கள் மத்தியில், உலகத்திற்கே பூ விற்கும் நம்பிக்கைத் தமிழர், முகமது எஹியாவின் தன்னம்பிக்கை அசரடித்தது. அவர் முயற்சி மேலும் சிறக்க
ஆசிகள்!
- மா.மாரிமுத்து, ஈரோடு.