நியூஸ் வே





ஹன்சிகாவின் பாட்டி இறந்துவிட்டார். கண்கள் சிவக்கக் கிளம்பிப் போனவர், அடுத்த நாளே ஷூட்டிங்கிற்கு ஆஜர் ஆகிவிட்டார். நேரம் தவறாமையில் அவருக்கு இருக்கிற சின்சியாரிட்டியைப் பார்த்து ‘மான் கராத்தே’ பட யூனிட் மிரண்டு விட்டது. சிம்பு போகலையா?

விஜய்சேதுபதி நடிக்கிற எல்லாப் படங்களும் பிளாக் காமெடிதான். வித்தி யாசமாக ஒரு காதல் படம் கிடைக்காதா என ஏங்குகிறார் நடிகர். இளம் இயக்குநர்கள் நல்ல காதல் கதையாக பிடிச்சிட்டுப் போனால் 2015ல் நிச்சயம் பண்ணலாம்.

‘வேல்முருகன் போர்வெல்ஸ்’ படத்தைத் தயாரித்து நடித்துவரும் கஞ்சா கருப்பு, சிவகங்கை அருகே உள்ள பார்வையற்றோர் இல்லத்துக்கும், பையூரில் இருக்கும் நரிக்குறவர் காலனிக்கும் இலவசமாக போர்வெல் போட்டுக் கொடுத்திருக்கிறார்.

இப்போதைக்கு நாசர்தான் படுபிஸி கேரக்டர் ஆக்டர். காரைக்குடிக்கும், காக்கிநாடாவிற்கும், தேனிக்கும், மும்பைக்கும் ஷிப்ட் போட்டு பறந்து போய் நடிக்கிறார். வசந்தபாலனின் ‘காவியத்தலைவனி’ல் அவருக்கு மிக முக்கியமான கேரக்டர்.



அஜித்தும், சூர்யாவும் புது பைக் வாங்கியிருக்கிறார்கள். சூர்யா அதை பெசன்ட் நகரைச் சுற்றி ஹெல்மெட் போட்டுக்கொண்டு ஓட்டுகிறார். அஜித் அட்டகாசமாக பெங்களூரு, சென்னை சிட்டி முழுவதும் ரவுண்ட் அடிக்கிறார். சிக்னலில் உங்கள் பக்கத்தில் நிற்பது அஜித் அல்லது சூர்யாவாகக்கூட இருக்கலாம்.

விஜய்க்காக பரிந்துகொண்டு தனுஷ்தான் முதன்முதலில் ட்வீட்டினார். ஆனால் கிடைத்த ‘ரீயாக்ஷன்’ பார்த்துவிட்டு, ‘‘நான் அந்த மாதிரி சொல்லவில்லை’’ என பொழிப்புரை எழுதினார். தைரியமாக ட்வீட் செய்த சினிமாக்காரர்கள் இரண்டே பேர்தான். (1) சித்தார்த் (2) பிரகாஷ் ராஜ்.

விக்ரமும், கௌதம் மேனனும் இணையும் புதுப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்க முயற்சி நடக்கிறது. அனேகமாக இரண்டு பேரும் பாஸிட்டிவ் மூடில் இருப்பதால் மறு இணைப்பு நடைபெறுவது உறுதி என்கிறார்கள்.

‘ஜில்லா’ படத்துக்காக அப்பா ஆர்.பி.சௌத்ரி சார்பில் ஸ்பெஷல் வேண்டுதலுக்கு பழநி போயிருந்தார் ஜீவா. ‘என்றென்றும் புன்னகை’, ‘யான்’ படங்களின் பிஸி ஷெட்யூலுக்குப் பிறகு கொடைக்கானலில் ஓய்வெடுத்துவிட்டு மனைவி சுப்ரியா, மகன் ஸ்பெர்ஸ் சகிதம் பழநி முருகன் கோயிலுக்கு வந்து பக்தியோடு வலம் வந்தவரிடம் ஆட்டோகிராப் வாங்க ஏராளமான ரசிகைகள் கூட்டம்!



டைரக்டர் விஜய் மாதிரி கெட்டிக்காரரைப் பார்க்க முடியாது. அஜித் படம் செய்யும்போதே விக்ரமை கைக்குள் போட்டுக் கொண்டு விடுவார். விக்ரம் படம் பண்ணும்போது விஜய்க்கு கதை சொல்லி வளைத்து விட்டார். இப்போது சூர்யாவையும் கதை சொல்லி கரெக்ட்  பண்ணிவிட்டார். இந்த அழகு யாருக்காவது வருமா!

சென்னை பக்கமே எட்டிப் பார்க்காத அசின், பாலிவுட்டில் சம்பாதித்த பணத்தில், கிழக்குக் கடற்கரை சாலையில் சொத்தாக வாங்கிக் குவிக்கிறார்.

நஸ்ரியாவுக்கு நல்லாவே இருக்கிறது ‘நேரம்’. சிவகார்த்திகேயன், ஜெய், தனுஷைத் தொடர்ந்து ஜீவா ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரிக்கிறது.

தனிக்குடித்தனமாக இருந்தாலும், பிரசன்னாவும், சினேகாவும் இரவு உணவிற்கு மாமியார் வீட்டிற்குப் போய்விடுகிறார்கள். ஒரு நாள் பிரசன்னா வீடு; மறுநாள் சினேகா வீடு. இன்னும் சினேகாவிற்கு சமையல் பெரிதாக ஒர்க்அவுட் ஆகாத காரணத்தால் இந்தப் பயணம்.

‘ஜெய்ஹிந்த் 2’வுக்காக ஐதராபாத் சென்றிருக்கிறார் அர்ஜுன். இங்கு தொடர்ச்சியாக ஒருமாதம் ஷூட் முடிந்ததும் பாடல் காட்சிக்காக ஆஸ்திரேலியா செல்ல திட்டமாம்.



‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்திற்குப் பிறகு ஷாரூக் கானும் சத்யராஜும் நெருங்கிவிட்டார்கள். படம் நன்றாகப் போன பிறகு கூப்பிட்டு சத்யராஜுக்கு நன்றி சொல்லியிருக்கிறார் ஷாரூக். ‘‘நீங்க மட்டும் இங்கே வந்திட்டால் நிறைய கேரக்டர் ரோல் காத்திருக்கு’’ என்றாராம். ‘‘சார், இது உங்களுக்காக நடிச்சது. எனக்கு சுட்டுப் போட்டாலும் சரளமாக இந்தி பேச வராது’’ என்று சொல்லியிருக்கிறார் சத்யராஜ்.

ஒளிப்பதிவாளர் மனுஷ்நந்தனுக்கு அடுத்த மாதம் காதல் திருமணம். ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரனின் உதவி ஒளிப்பதிவாளர் கௌரிதான் மணப்பெண். திருமணத்திற்கு ஷாரூக், கமல் இருவரும் சிறப்பு விருந்தினர்கள்.

‘விஸ்வரூபம் 2’வின் கடைசி கட்ட ஷூட்டிங் கொடைக்கானலில் விறுவிறுப்பாக நடக்கிறது. கமல், பூஜா குமார், ஆண்ட்ரியா, சேகர் கபூர் என எல்லோரும் பங்குபெறும் முக்கியமான காட்சிகள் படமாகின்றன. இதற்கடுத்து தமிழில் நிறைய வாய்ப்புகள் குவியும் என்ற நம்பிக்கையில், அமெரிக்கா திரும்புவதை தள்ளிப் போட்டிருக்கிறார் பூஜா குமார்.

எந்தப் பிரச்னையும் வராமல் தடுக்க, ஸ்கிரிப்ட்டில் வசனங்களைப் பார்த்துப் பார்த்து திருத்தம் செய்துவிட தீர்மானித்து இருக்கிறார்கள் ‘ஜில்லா’காரர்கள். பில்ட் அப் சம்பந்தமாக பிரச்னை வந்துவிடக் கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருக்கிறார்கள் இயக்குனரும் தயாரிப்பாளரும். இன்னும் மூணு வருஷத்திற்கு அரசியல் வசனமே விஜய் படத்தில் இருக்காதாம்.

சைலன்ஸ்

டிவியிலிருந்து வந்த ஹீரோவிற்கும், மன்னர் பெயர் கொண்ட நடிகருக்கும் இப்போது ஏகப்பட்ட போட்டியாம். இரண்டு பேரும் என்ன படம் செய்கிறார்கள், எவ்வளவு தூரம் படம் வளர்ந்துவிட்டது, கதை என்ன என்று விசாரித்து அறிகிறார்களாம். இப்போதே ரஜினி, கமல் ரேஞ்சுக்கு வந்து விசாரிக்கிறார்களே என சினிமாத்துறையில் கிசுகிசுக்கிறார்கள்.

விரல் நடிகரின் காதலுக்கு எங்கே பார்த்தாலும் நெருக்கடி, எப்படியாவது இரண்டு பேரையும் பிரித்துவிட வேண்டும் என சக நடிகர், நடிகைகளே முயற்சி செய்கிறார்களாம். நடிகர் எச்சரிக்கையாக இருந்து தினமும் பேசி கவனித்துக் கொள்கிறாராம்.