கவிதைக்காரர்கள் வீதி





வெற்றுமரத்தின் கிளைகள்
‘‘என்னங்க சாப்பிட்டீங்களா?’’
‘‘நேரத்துக்குத் தூங்குறீங்களா?’’
‘‘மாத்திரையெல்லாம் போடுறீங்களா?’’
‘‘ஏங்க... தனியா கஷ்டமா இருக்கா?’’
கேள்விகளை அடுக்கிக் கொண்டே போவாள்.
எனக்கு அவள் உடனில்லாததை விட
பசியோ, உறங்கா விழிகளோ
மாத்திரைகளின்றி உள்ளிறங்கும் மரணமோ
தொண்டைக்குழி அடைப்பதில்லை.
மாத்திரைகளை விழுங்க மறந்து
அவளை நினைத்துக் கொள்கையில்
குணமாகிப் போகிறது மனசும் உடம்பும்.
பூக்கும் பூக்களும் துளிர்க்கும் இலையும்
வருடந்தோறும் உதிர்ந்துபோகையில்
தனித்து விடப்பட்ட
வெற்று மரத்தின் கிளைகளாக
வலி சுமக்கும் வெறுமை.
கைநழுவி உடைந்துவிட்ட
கண்ணாடிக் குவளைபோல்
எங்களுக்கில்லாத இந்த ஒரு மாதம்
வருடத்தின் விளிம்பிலிருந்து விழும்
இத் தனித்த நாட்களின் அவஸ்தையில்
வருடமெல்லாம் பிரிந்தேயிருந்து
மாதத்தில் மட்டும் வாழ்ந்துகொள்ளும்
வெளிநாட்டினரை நினைக்கையில்
மனசெல்லாம் தீப்பற்றி
அவர்களுக்காய் எரிகிறது.
பசியோ பஞ்சமோ
மழையோ காற்றோ
மரணமோ வாழ்வோ
குடும்பத்தோடு வரக் கேட்கும் மனசுதானே
பிரிந்து சுமக்கிறது எல்லோரின் கனத்தையும்?
தொலைபேசி விசும்பலும்
மின்னஞ்சலில் புதைக்கும் இதயமும்
மடல்களாக நீளும் காத்திருப்பும்
நாள்காட்டியோடு கிழியும் ஆசைகளும்
அதே சிவப்பு ரத்தம் ஓடும்
மனித தசைக்குள்தானே
ஊமையாகிக் குவிகிறது.
காத்திருப்பில் கடக்கும் வருடங்களும்
அவளுக்காகவென சேமிக்கும் பணமும்
அப்பாவிற்கென்று படிக்கும் படிப்பும்
பிள்ளைகளுக்கென்று சிந்தும் வியர்வையும்
சாபமுடிச்சுகளால் முடியப்பட்டவை
என்று சொல்ல
அவளில்லாத இந்த ஒரு மாதத்தின் நாட்கள்
சாட்சியாகி நகர்கின்றன.
அவளுக்கான புன்னகை
அவளுக்குப் பிடித்த
சட்டையின் அலங்காரம்
அவளின் தொடுகையில்
உணர்வுப் பூச்சொரியும் மனசு
அவள் விரும்பிப் பார்க்கும் கண்களென
அவளுக்கான அத்தனையையும் பத்திரப்படுத்தி
வீடெல்லாம் நிறைக்கிறேன்
வீடும் என்னோடு சேர்ந்து
அவளுக்காகக் காத்துக் கிடக்கிறது!
வித்யாசாகர்