ஜாகிங்! : ராம்ப்ரசாத்





மெரினா பீச்சில் அன்றைய ஓட்டத்தை முடித்துவிட்டு, பைக்கில் வீடு திரும்பிய ராகவனுக்கு யோசனையாக இருந்தது. திருமணத்தின்போது சிக்கென்று இருந்த அவன் மனைவி வசந்தி, இப்போது அநியாயத்துக்கு ஊதி விட்டாள். மீண்டும் உடம்பைக் குறைக்கும் எண்ணமே அவளுக்கில்லை. என்ன செய்யலாம் என சிந்தித்தவனுக்கு, சட்டென மூளைக்குள் ஒரு பல்பு எரிந்தது.

அன்றிரவு படுக்கையில்...
‘‘வசந்தி, நாளைக்கு காலையில நீயும் பீச்சுக்கு வாயேன். ஜாகிங் போகலாம்’’ என்றான் ராகவன்.
‘‘அடடா, எத்தனை தடவைதான் கேப்பீங்களோ! வேணாங்க... நீங்க போறது போதாதா?’’ - சலித்துக் கொண்டாள் வசந்தி.
‘‘சரி விடு... ஆனா, எத்தனை பொண்ணுங்க காலையில ஜாகிங் வராங்க தெரியுமா? அதிலும் நான் போற நேரத்துக்கு ஒரு பொண்ணு வர்றா பாரு... அடடா! என்னா அழகு தெரியுமா? ஹும்... எவனுக்குக் குடுத்து வச்சிருக்கோ? எனிவே... குட் நைட்!’’ எனப் புரண்டு படுத்து தூங்கிப் போனான் ராகவன்.
மறுநாள் காலை, ராகவன் ஜாகிங் போகும்போது, ‘‘ஏங்க... ஜாகிங் போக இந்த பேன்ட் போதும்ல?’’ என்றவாறே கிளம்பி நின்றாள் வசந்தி!
ராகவன் உள்ளுக்குள் சிரித்துக்கொண்டான்.