பழி : பம்மல் நாகராஜன்





மனைவி வேலம்மாவோடு பேருந்தில் சென்று கொண்டிருந்தான் சேகர். முன் சீட்டில் உட்கார்ந்திருந்த பெண்ணின் தோளில் சாய்ந்திருந்த குழந்தை, கையை ஆட்டி ஆட்டி அவனை விளையாட்டுக்கு இழுத்தது. அதன் இளம் கன்னத்தில் லேசாகத் தட்டினான் அவன்.

வேலம்மாவுக்குச் சுரீரென்றது. முன் சீட் பக்கம் தலையை நீட்டி, ‘‘இந்தாம்மா... புள்ளையை எடுத்து மடியில வை! பஸ் போகிற வேகத்தில, சீட் கம்பியில வாய் இடிச்சு ரத்தம் வரப் போகுது’’ என்று குழந்தையின் தாயை எச்சரித்தாள். குழந்தை தன் தாயின் மடிக்குச் செல்வதற்குள், சுரீரெனத் தன் கையை இழுத்துக் கொண்டான் சேகர்.

ஊர் வந்ததும் இறங்கி நடக்கிறபோது கண் கலங்க அவனிடம் சொன்னாள்  வேலம்மா... ‘‘என்னை மன்னிச்சுடுய்யா! கழுத்தில தங்கச் செயின் போட்டிருந்த குழந்தையின் கன்னத்தை நீ தொட்டதும் எனக்குக் கை, காலெல்லாம் உதற ஆரம்பிச்சிட்டுது. ஏன்னா, செயினைப் பிடித்து இழுத்த கேஸ்ல உள்ளே போயிட்டுச் சமீபத்திலதான் நீ வெளிய வந்திருக்கே. விதி இன்னொரு பழிக்கு உன்னை ஆளாக்கிடக் கூடாது பாரு!’’
‘‘உன் அச்சம் நியாயம்தான்...’’ என்றபடியே அவளோடு நடந்தான் அவன்.