புது மனைவி : ஜி.ஆரோக்கியதாஸ்





இரண்டு கவர்களில் தனித்தனியே மல்லிப்பூ வாங்கிக்கொண்டு வீட்டுக்கு விரைந்தான் சிவராமன். அவனுக்கு இது இரண்டாவது திருமணம்.

முதல் மனைவி விபத்து ஒன்றில் இறந்துவிட்டாள். முதல் மனைவி மீதிருந்த காதலால், இரண்டாம் திருமணம் வேண்டவே வேண்டாம் என்றுதான் இருந்தான். பல நாள் சிந்தித்த பின்தான் விதவைப் பெண்ணான சியாமளாவை கைப்பிடித்தான். எனவேதான் தினசரி முதல் மனைவியின் படத்துக்கும் இரண்டாம் மனைவிக்குமாக தனித்தனியே பூ!
உற்சாகமாக வீட்டிற்குள் நுழைந்த சிவராமனை பேரதிர்ச்சி தாக்கியது. ஹாலில் மாட்டியிருந்த அவனது முதல் மனைவியின் படத்துக்குப் பக்கத்திலேயே வேறொரு ஆண்... பூவோடும் பொட்டோடும் போட்டோவில் சிரித்துக் கொண்டிருந்தான்.

கிச்சனிலிருந்து வெளிப்பட்ட சியாமளா, ‘‘என்ன அப்படிப் பாக்கறீங்க... அது என்னோட முதல் கணவர் போட்டோங்க. உங்க முதல் மனைவியை நீங்க நன்றியோட நினைச்சுப் பார்க்குற மாதிரி நானும் என் முதல் கணவரை நினைக்கணும் இல்லையா?’’ என்றாள் எவ்வித சலனமுமின்றி.

சிவராமனுக்கு சுருக்கென்று குத்தியது. உடனடியாக இரண்டு போட்டோக்களையும் கழற்றி, பரணில் எறிந்தான். ‘‘இனிமே ரெண்டு பேருக்குமே பழசு வேண்டாம்’’ என்றான்.

தன் திட்டம் வெற்றி பெற்றதில் பிரகாசமாய் புன்னகைத்தாள் சியாமளா.