கண்ணுக்கு காந்தக் கண்ணாடி அழகு!





நிழற்படக் கருவி’ என்கிறார்கள் விஞ்ஞானிகள். ‘காதல் மொழி பரிமாறும் மீடியேட்டர்கள்’ என்கிறார்கள் கவிஞர்கள். மனிதன் உலகத்தைப் பார்க்கும் ஜன்னல்களாகச் செயல்படும் கண்களுக்கு இப்படி இன்னும் ஏகப்பட்ட பட்டங்கள். அழகு ததும்புகிற இந்த உலகை அப்படியே சிந்தாமல் சிதறாமல் நமக்கு ரசிக்கத் தருகிற கண்களிலும்தான் எத்தனை பிரச்னைகள்! தலைமுறையாகத் தொடர்ந்து வரும் பிரச்னையோ, இடையில் ஏற்படும் சத்துக் குறைபாடோ... அக்குபிரஷரால் கண் பிரச்னைகளை அணுகிப் பாருங்கள்... ‘தேங்க்ஸ் டு அக்குபிரஷர்’ எனச் சொல்வீர்கள்!

பீகாரில் ஒரு சிறுவன். கண்ணில் கருவிழி இல்லாமலே பிறந்து விட்டான். லட்சத்தில் ஒரு குழந்தை இப்படிப் பிறக்கலாம். பெற்ற அம்மாவுக்கு அவனை வளர்க்க விருப்பமில்லை. தொலைதூரக் கிராமம் ஒன்றில் அனாதையாகப் போட்டுவிட்டுப் போய் விட்டாள். எடுத்து வளர்த்த பெற்றோர் சிறுவனை இங்கு கூட்டி வந்தார்கள். ‘ஊசியில்லா எலக்ட்ரோ அக்கு சிகிச்சை’யை தொடர்ச்சியாகத் தந்ததில் இன்று அந்தச் சிறுவன் கொஞ்சம் கொஞ்சமாக கருவிழியையும், கூடவே பார்வையையும் மீட்டு வருகிறான். இப்போது சிறுவனின் உண்மையான தாய் வந்து மகனைக் கேட்க, உள்ளூர்ப் பஞ்சாயத்து வரை விஷயம் போயிருக்கிறது.

கண் பிரச்னைகளைப் பொறுத்தவரை நிறக்குருடு, பார்வைத்திறன் குறைபாடு உள்ளிட்ட சில பிரச்னைகள் பாரம்பரியமாக வருபவை. பிரச்னை வந்த பிறகு சிகிச்சைக்கு வழி காட்டுபவை மற்ற மருத்துவ முறைகள்; அக்கு மருத்துவம் அப்படி இல்லை. எந்த பிரச்னையும் வரும்முன் காப்பதற்கு இதில் ஏராளம் வழிகள் இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று, கெண்டைக்கால் சிகிச்சை!
தங்கள் குடும்பத்தில் மூதாதையர்கள் யாருக்காவது கண்களில் பிரச்னை இருந்தால், அந்தக் குடும்பத்தில் கர்ப்பம் தரிக்கும் பெண், 6 மற்றும் 8ம் மாத முதல் வாரத்தில் கண்டிப்பாக எடுக்க வேண்டிய சிகிச்சை இது. அந்த கர்ப்பிணியின் வலது மற்றும் இடது கெண்டைக்காலில் விரவியுள்ள அக்குப் புள்ளிகளைத் தூண்டிவிட்டு முழுமையாகச் செயல்படச் செய்வதே சிகிச்சை. தினமும் காலையிலும் மாலையிலும் 15 நிமிடங்கள் கெண்டைக்காலைச் சுற்றிலும் மிதமான அழுத்தம் தந்தால் போதும். பிறக்கிற குழந்தைக்கு கண்களில் எந்தத் தொந்தரவும் இருக்காது. இந்த சிம்பிளான சிகிச்சை முறை தெரியாமல்தான் பத்து வயதிலேயே கண்ணாடி மாட்டி விடுகிறோம் குழந்தைகளுக்கு.



கேட்ராக்ட் எனப்படும் கண் புரை நோய், குளோக்கோமா உட்பட சுமார் 12 வகை கண் பிரச்னைகளை அக்குபிரஷர் சிகிச்சை எளிதாகத் தடுக்கிறது; குணமும் தருகிறது. இதற்குச் செய்ய வேண்டியது என்ன தெரியுமா? வலது அல்லது இடது உள்ளங்கையில் ஆட்காட்டி விரலும் நடுவிரலும் இணையும் கீழ்ப் பகுதியை தினமும் பத்து நிமிடங்கள் நீவி அழுத்தி விட வேண்டியதுதான்!
இந்த இடத்தில் பலருக்கு சந்தேகம் எழும். ‘உள்ளங்கையில் அழுத்தினால் கண்ணுக்கு எப்படி நிவாரணம் கிடைக்கும்? ஒரு உறுப்பு சம்பந்தப்பட்ட எல்லா பிரச்னைக்கும் ஒரே இடத்தில் அழுத்தினால் போதுமா?’ என்றெல்லாம் கேள்விகள் அணிவகுக்கும். உடலின் ஒரு உறுப்புடன் தொடர்புடைய அக்கு புள்ளிகள் குறிப்பிட்ட இடங்களில் மொத்தமாகக் குவிந்திருக்கின்றன. அவற்றைத் தூண்டினால் போதும்... அந்த உறுப்புக்கு ஏற்படும் எந்தவொரு பிரச்னையையும் விரட்ட அவை ஆயத்தமாகி விடுகின்றன.

சமீப காலமாக கண் எரிச்சல் மற்றும் தூக்கமின்மை பிரச்னைகளுக்காகவே அதிகம் பேர் மருத்துவமனைகளை நாடுகிறார்கள். போதுமான தூக்கம் இல்லாததாலும் அதிக நேரம் கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்திருக்கிற வேலைச்சூழலாலும் இந்தத் தொந்தரவுகள் இவர்களைத் தாக்குகின்றன. அக்கு மருத்துவம் இவர்களுக்காகவே ஐ மசாஜர் மற்றும் காந்தக் கண்ணாடிகளை பிரத்யேகமாக வடிவைத்துத் தந்திருக்கிறது.

காந்த சக்தி மூலம் கண்களைச் சுற்றியுள்ள அக்கு புள்ளிகளைத் தூண்டிவிட்டு, சோர்வு, எரிச்சலைப் போக்குகிறது ஐ மசாஜர். காந்தக் கண்ணாடியில் உள்ள காந்தங்களோ புரையைத் தடுக்கவும், பார்வை நரம்பைத் தூண்டவும் செய்கின்றன. குறைந்த விலையிலேயே கிடைக்கும் இவற்றை வாங்கி குறிப்பிட்ட காலத்துக்கு அணிந்து கொள்ளலாம். எந்நேரமும் அணிந்து கொண்டிருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. சிகிச்சை போலவே காலையிலும் மாலையிலும் இவற்றை பத்து நிமிடங்கள் அணிவதே போதுமானது.


கண் மருத்துவம் இன்று எவ்வளவோ நவீனமாகிவிட்டதாகச் சொல்கிறார்கள். ஆனால் இன்றும் முழுமையாகத் தீர்வு காண முடியாத கண் பிரச்னைகளும் இருக்கத்தான் செய்கின்றன. அக்கு மருத்துவத்திலும் கண் பாதுகாப்பு தொடர்பான ஆய்வுகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
(தொடர்வோம்)
தொகுப்பு: அய்யனார் ராஜன்
படங்கள்: புதூர் சரவணன்


ஈசி எக்ஸ்ட்ரா டிப்ஸ்

*  முகம் கழுவும்போது கண்களுக்குக் கூடுதல் கவனம் எடுக்க வேண்டும். சுத்தமான நீர்... முடிந்தால் இளநீர்கூட பயன்படுத்தி கண்களைக் கழுவலாம்.

*  கேரட், பாதாம் பருப்பு, மீன், முட்டை, நெய்... கீரைகளில் அகத்தி, பொன்னாங்கண்ணி, மணத்தக்காளி போன்றவற்றில் கண்களுக்கு சக்தியளிக்கும் சத்துகள் நிறைந்துள்ளன. உணவில் இந்த அயிட்டங்களை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

*  நெடுநேரம் தொடர்ந்தாற்போல் டி.வி முன் அமர்ந்திருப்பது, செல்லில் சேட்டிங் பண்ணுவது போன்றவை கண்களுக்குக் கேடு விளைவிக்கும் என்பதால் முடிந்தவரை அவற்றைத் தவிர்ப்பது சிறந்தது. கம்ப்யூட்டரில் வேலை பார்ப்பவர்கள், இடையில் சில நிமிடங்கள் கண்களுக்கு ஓய்வு தர வேண்டும்!

*  மூளையில் ஏற்படும் அழுத்தம் கண்களை பாதிக்கிறது. எனவே, எண்ணெய்க் குளியல், தலைக்கு எண்ணெய் தேய்த்தல் போன்றவற்றை மறக்கக் கூடாது.

*  கல்லீரல், பித்தப்பையின் சக்தி கண்ணிலிருந்தே ஆரம்பிக்கிறது. எனவே, இவ்வுறுப்புகளின் குறைபாடு கண்களைப் பாதிக்குமென்பதால் இவற்றின் மீது அக்கறை அவசியம்.