கடகத்தில் பிறந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு தரும் இறைவன்





பல்லாயிரக்கணக்கான நட்சத்திரக் கூட்டத்தில் வானவெளியில் நண்டு போலக் காணப்படும் நட்சத்திரத் தொகுதியையே கடகம் என்கிறோம். பன்னிரெண்டு ராசிகளில் அதீத ஈர்ப்பு சக்தியையும், வசீகரத்தையும் தன்னிடத்தே கொண்டது இதுதான். சந்திரன்தான் கடகத்தை ஆட்சி செய்கிறார். புனர்பூச நட்சத்திரத்தின் நான்காம் பாதமும், பூசமும் ஆயில்யமும் இதற்குள் அடங்கும்.

‘நண்டு கொழுத்தால் வளையில் தங்காது’ என்பார்கள். அதனால் கொஞ்சம் திறமை இருப்பதுபோல நினைத்தாலே போதும்; இரண்டு வருடங்கள் ஒரு கம்பெனியில் வேலை பார்த்தாலே போதும்; அந்த அனுபவத்தை வைத்து சொந்தமாக ஏதேனும் செய்யலாமா என்று சிந்தனை ஓடும். வேலைக்கு சேர்ந்த சில நாட்களிலேயே அலுவலகத்தை ஆளுமை செய்ய நினைப்பீர்கள்.  

உங்களின் வேலை ஸ்தானத்தை மேஷச் செவ்வாய் தீர்மானிக்கிறார். மேஷத்திற்கும், விருச்சிகத்திற்கும் அதிபதி செவ்வாய்தான். ஆனால், மேஷச் செவ்வாய் என்பது நாசூக்காக இருக்கும். எனவே, அலுவலகத்தில் எத்தனைதான் எல்லோரும் வேலை செய்தாலும் அதிகமாக பாராட்டி கெடுத்து விடக் கூடாது என்று நினைப்பீர்கள். அவ்வப்போது, ‘‘நாம ஊழியர்களுக்கு பண்ணித் தருகிற வசதிக்கு அவங்க கொடுக்கற லாபம் கம்மிதான்’’ என்றெல்லாம் பேசுவீர்கள். கடிந்து கொள்ள மாட்டீர்கள். உள்ளுக்குள் அன்பு வைத்திருந்து சரியான சமயத்தில் உதவிக் கரம் நீட்டுவீர்கள். அதை விடுத்து வெளியில் பெருமை பேசுவது வேண்டாம் என்பீர்கள். அதேபோல, ‘‘எத்தனை சம்பாதித்தாலும் கையில் காசு தங்க மாட்டேங்குது’’ என்பீர்கள். சொந்தத் தொழில் செய்யும்போது, அதில் லாபத்தில் ஒரு பகுதியை பொதுக் காரியங்களுக்கும் ஏழை எளியோருக்கும் என்று எடுத்து வைப்பீர்கள். அல்லது அறக்கட்டளை தொடங்கி உதவுவீர்கள். இப்படி செலவு செய்வதே உங்களுக்கு பரிகாரமாக மாறும். இல்லையெனில் உடல் ஆரோக்கியக் குறைவை ஏற்படுத்தும்.  

சந்திரன் கிட்டத்தட்ட இரண்டே கால் நாட்களில் ஒரு ராசியைக் கடந்து விடுவார். அதுபோலவே உங்களையும் செயல்படுத்துவார். பேச்சிலும் செயலிலும் துரிதத்தைக் கூட்டியபடி இருப்பார். ‘நண்டானுக்கு இடம் கொடேல்’ என்றொரு ஜோதிட மொழி உண்டு. ஏனெனில், எதில் நுழைந்தாலும் உங்கள் அதிகாரத்தையும், ஆளுமையையும் நிலை நிறுத்துவதிலேயே குறியாக இருப்பீர்கள். அதீத அதிகாரத்தில் உள்ளவர்களை வலுவிழக்கச் செய்வீர்கள். பத்தாம் இடத்திற்குரிய ஜீவன ஸ்தானத்திற்கு அதிபதியாக மேஷ செவ்வாய் வருகிறது. உங்களின் பிரபல யோகாதிபதியாகவும் செவ்வாய் இருக்கிறது. எனவே, கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறுவதெல்லாம் உங்களுக்குப் பிடிக்காது. ஒன்று, பெரிய பதவி அல்லது சொந்த வியாபாரத்தில் பெரிய வெற்றி என்றுதான் போவீர்கள்.



எங்கு வேலைக்குச் சேர்ந்தாலும், சேர்ந்தவுடனேயே அலுவலகத்தில் சீர்திருத்தங்களைத் தொடங்கி விடுவீர்கள். எடுத்த எடுப்பிலேயே எதிர்ப்புகளை சந்திக்க வேண்டியிருக்கும். ஆரம்பத்தில் சிலரால் நீங்கள் ஓரங்கட்டப்பட்டாலும், போகப்போக உங்களின் தொலைநோக்கு சிந்தனையை வரவேற்பார்கள். மேஷச் செவ்வாயால் ஆணவமில்லாத அதிகாரம் உங்களிடம் எப்போதும் இருக்கும். நேரம், காலம் பார்க்காமல் சம்பிரதாயம் சடங்கு என்று சாக்குபோக்கு சொல்லாமல் வேலையை முடிப்பதில் தீவிரமாக இருப்பீர்கள். சில நேரங்களில் உங்களின் நேரடி அதிகாரிக்கும் உங்களுக்கு ஈகோ பிரச்னையால் மோதல் வரும். நீங்கள் புதிதாக ஏதேனும் கொண்டு வர நினைத்தால் அதை உடனே உங்களின் நேரடி மேலதிகாரி ஒப்புக் கொள்ள மாட்டார். ஆனால், எல்லோருக்கும் மூத்த அதிகாரி அதை வரவேற்பார். அதனால் சக ஊழியர்களுக்கு மத்தியில் எப்போதும் செல்வாக்கு இருந்து கொண்டேயிருக்கும்.

வேலையில் ஸ்திரத்தன்மை என்பது கேள்விக்குறிதான். காரணம், உங்கள் வேகத்திற்கு சக ஊழியர்கள் ஈடுகொடுக்க மாட்டார்கள். அதனால், ‘‘நமக்கு சரிப்பட்டு வரும் இடத்துக்குப் போகவேண்டியதுதான்’’ என்று சென்று விடுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் சுதந்திரத்தை எதிர்பார்ப்பீர்கள். சுதந்திரம் சுரண்டப்படும்போது சுளீரென்று கோபப்படுவீர்கள். வெளியே வந்து விடுவீர்கள். உங்களில் பலர் நாற்பது வயது வரையிலும் சாதாரணமாகத்தான் இருக்க வேண்டிய சூழலில் சிக்குவீர்கள். ஆனால், அதற்குப் பிறகு பிரமாண்ட விஸ்வரூபம் எடுப்பீர்கள்.

இனி ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் எப்படி என்று பார்ப்போம்...  
புனர்பூசம் நான்காம் பாதத்தைச் சேர்ந்த நீங்கள், முடிந்த வரை போராடுவீர்கள். தோல்வியைக் கண்டு பயப்பட மாட்டீர்கள். தோற்றுவிட்டால் கூட, ‘‘இன்னும் கொஞ்சம் புத்திசாலித்தனமா நடந்துக்கிட்டிருக்கணும்’’ என்பீர்கள். எப்போதுமே அறிவுப்பூர்வமான காரண, காரியங்களை ஆராய்ந்து பார்ப்பீர்கள். அலுவலகத்தின் வேண்டாதவர்களின் மனோபலத்தை வீழ்த்துவதிலேயே குறியாக இருப்பீர்கள். எங்கு பிரச்னை ஏற்படுகிறதோ, அந்த இடத்திற்குச் சென்று தங்கி விவகாரங்களைத் தீர்ப்பீர்கள். நீங்கள் வேலை செய்யும் அலுவலகத்தில் எந்த டிபார்ட்மென்ட் சரியில்லையோ, அங்குதான் உங்களை நியமிப்பார்கள். இதனால் பல நேரங்களில் அனுபவமில்லாத இடத்திற்கெல்லாம் சென்று வெற்றிக் கொடி பதிப்பீர்கள். உங்களால் உட்கார்ந்த இடத்திலும் வேலை பார்க்க முடியும்; ஓடிக் கொண்டேயும் செய்ய முடியும் என்று நிரூபிப்பீர்கள். யதார்த்தமாக யூகித்து, நடைமுறைக்கு சாத்தியமான தீர்வைக் கண்டுபிடிப்பீர்கள். வங்கி, பத்திரிகைத் துறை, சிட் பண்டு, அடகுத் தொழில், குடிநீர் வியாபாரம், ஐஸ்க்ரீம் கடை, இனிப்புக் கடை போன்றவற்றில் இறங்கினால் வெற்றி பெறலாம். இதுதவிர தந்தையார், பாட்டனார் என்று பரம்பரையாக நடத்தி வந்த நெல், அரிசி மண்டி வியாபாரத்திலும் சிறப்பாக செயல்படுவீர்கள்.

பூச நட்சத்திரத்தைச் சேர்ந்த நீங்கள் ஆரம்பத்திலிருந்தே சரியாக திட்டமிட வேண்டும். வியூகத்தை அமைத்துக் கொண்டு சொந்தத் தொழில், வியாபாரம், அலுவலகப் பணி என்று இறங்க வேண்டும். குருட்டுத் தைரியமாக இருக்கக் கூடாது. இதனால் உங்களின் எதிரிதான் சிரமமில்லாது வளருவார். கடக ராசியின் அதிபதியான சந்திரனும், சனியும் சேர்ந்து ஆளுவதால் சந்திரனுடைய கலா தத்துவமும் கற்பனையும், சனியின் கடின உழைப்பும் அசட்டு தைரியமும் ஒரு சேர சங்கமிக்கும். எப்போதும் அலுவலகத்தில் நண்பர்கள் உங்களைச் சூழ்ந்தபடி இருப்பார்கள். வியாபாரத்தில் தொழிலாளிக்கும் லாபத்தைப் பிரித்துக் கொடுக்கும் ஈகையாளராக விளங்குவீர்கள். எத்தனை வசதி வந்தாலும் செய்த தொழிலை விட்டு விலகமாட்டீர்கள். கம்பீரமும், தன்னடக்கமும் இருந்து கொண்டே இருக்கும்.


பூசத்தின் முதல் பாதத்தைச் சேர்ந்தவர்கள் ஹோட்டல், பல்பொருள் அங்காடி, கெமிக்கல் அண்ட் மெக்கானிக்கல் எஞ்சினியர், மெரைன் எஞ்சினியர், பல் மருத்துவர், பருப்பு மண்டி, வக்கீல், பிளம்பர், டர்னர் என்று எதிர்காலத்தைத் தீர்மானிக்கலாம். இரண்டாம் பாதத்தினர் பத்திரிகைத் துறையில் நுழைந்தால் உயரப் பறக்கலாம். மேலும், ஆசிரியர், யோகா மாஸ்டர், ஜிம் நிர்வாகம், நிலத்தடி சுரங்கம், அறிவியல் ஆராய்ச்சி என்று பல துறைகளில் வளைய வருவார்கள். மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள் கேமராமேன், டைரக்டர், டிராவல்ஸ், ஆட்டோமொபைல் எஞ்சினியரிங், நகைக் கடை, உள்ளாடைகளுக்கான டெக்ஸ்டைல்ஸ், சுகாதார ஆய்வாளர், பல்பொருள் அங்காடி, குளிர்பானக் கடை என்று துறைகளில் துணிவோடு இறங்கலாம். ஏனெனில், சனியும் சுக்கிரனும் அதற்கான பலத்தைக் கொடுப்பார்கள். நான்காம் பாதத்தில் பிறந்தவர்களில் கூட கலைத்துறையைச் சார்ந்தவர்கள்தான் அதிகம் உண்டு. உளவுத்துறை, சி.பி.ஐ., தோல் சம்பந்தப்பட்ட தொழிற்சாலை, பிளாஸ்டிக், சிமென்ட், செங்கல், ஜல்லி, கிரானைட் தொழிலகங்கள், இதய சிகிச்சை, நுரையீரல் அறுவை சிகிச்சை மருத்துவர், நீதிபதி என்று சில முக்கிய துறையில் கோலோச்சுவீர்கள். அதிகாரம் இருக்குமிடத்தில் நீங்களும் இருப்பீர்கள்.

கடக ராசியிலேயே ஆயில்ய நட்சத்திரக்காரர்கள் உடல் வலிமையும், மனவலிமையும் அதீதமாகப் பெற்றவர்கள். எப்போதுமே வித்தியாசமாக யோசிப்பார்கள். சிந்தனையும் நவீனத்துவமாக இருக்கும். அலுவலகத்தைக்கூட இயற்கைச் சூழலுக்கு ஏற்ப மாற்ற வேண்டும் என்பீர்கள். எவ்வளவு நெருக்கடியான நேரத்திலும் பொறுமையாக எல்லோருக்கும் பதில் சொல்லிக் கொண்டிருப்பீர்கள். சிடுசிடுவென்று முகத்தை வைத்துக் கொண்டிருப்பது உங்களுக்கு பிடிக்காது. உங்களின் வேகத்திற்கு மற்றவர்களையும் கொண்டு செல்லும் திறமையும் இருக்கும்.



முதல் பாதத்தில் புதனும் குருவும் இணைந்து செயல்படுவதால் பேச்சாளர், தாவர வியல் துறை ஆராய்ச்சி, தமிழ் ஆசிரியர், வக்கீல், காசநோய் மருத்துவர், இசைக்கலைஞர், பள்ளி கல்லூரி நிர்வாகம், கம்ப்யூட்டர் எஞ்சினியர், இன்சூரன்ஸ் துறை, பஸ் கண்டக்டர் என்று எதிர்காலம் அமையும். சாதனையும் நிகழ்த்துவீர்கள். இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்கள் கல்வெட்டு ஆய்வாளர், மண்பாண்ட சிற்பக்கலைஞர், டிராவல்ஸ், ஃபாஸ்ட் ஃபுட், ஓவியர், நூலகர், மீன் பண்ணை, ஆயுர்வேத மசாஜ், சிறைத்துறை அதிகாரி, வனத்துறை அதிகாரி என்று பல துறைகளில் வேலை பார்ப்பீர்கள். சிலர் தொழில் செய்து மேன்மையும் பெறுவீர்கள். மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள் மருத்துவமனை உபகரணங்கள், பெட்ரோல் பங்க், கார் வாங்கி விற்றல், இரு சக்கர வாகனம் சர்வீஸ் சென்டர், லாட்ஜ், ஹோட்டல், பைனான்ஸ், பீங்கான் பொருட்கள் தயாரித்தல், மசாலா தூள் தயாரிப்பு, வாசனை திரவிய தயாரிப்பு, சுரங்கப் பணி, நகைக்கடை என்று குறிப்பிட்ட துறைகளில் கால் பதித்தால் நல்ல நிலைக்கு வந்து விடலாம். நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள் ஆசிரியர், பத்திர எழுத்தாளர், வேத பாடசாலை, கோயில் அதிகாரி, நடிகர், வசனகர்த்தா, நகைச்சுவை பேச்சாளர், மிமிக்ரி செய்தல் என்று பல விதத்திலும் திறமையோடு இருப்பீர்கள். இதற்கு புதனும், மீன குருவும் உங்களுக்கு உதவுவார்கள்.

கடக ராசியின் வேலை ஸ்தானத்தை பத்தாம் இடத்திற்கு அதிபதியாக வரும் மேஷச் செவ்வாய் தீர்மானிக்கிறது. எனவே, கொஞ்சம் உக்கிரமுள்ள முருகப் பெருமானும், சித்தர் பீடமும் இணைந்த தலத்தை தரிசிக்கும்போது பத்தாம் இடம் பலம் பெறுகிறது. இறைவனே உக்கிரமாக அரக்கனோடு போர் நடத்திய தலமான திருப்போரூரில் அருளும் முருகப் பெருமானையும், சித்தர் சிதம்பர ஸ்வாமிகளின் ஜீவ சமாதியையும் தரிசித்து வாருங்கள். இத்தலம் மகாபலிபுரத்திற்கும் சென்னைக்கும் இடையே உள்ளது.
(தீர்வுகளைத் தேடுவோம்...)