பயோடேட்டா -செல்போன்



பெயர் : செல்போன், செல்லுலார் போன், மொபைல் போன், பாக்கெட் போன், ஹேண்ட் போன், ஸ்மார்ட் போன். சுருக்கமாக செல், மொபைல். தமிழில் அலைபேசி, கைப்பேசி.

கண்டுபிடிப்பு: மனித கண்டுபிடிப்புகளில் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது மொபைல் போன். உலகம் முழுவதும் பரவலாக விற்பனையாகி, அதிக மக்களால் பயன்படுத்தப்படும் மனிதக் கண்டுபிடிப்பும் இதுவே. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே செல்போனுக்கான விதை தூவப்பட்டது.

இருந்தாலும் ‘மோட்டோரோலா’ நிறுவனத்தில் எஞ்சினியராகப் பணியாற்றி வந்த மார்ட்டின் கூப்பர் என்பவர் 1973ல் செல்போனுக்கு உருவமும், செயல் வடிவமும் கொடுத்தார். இவர்தான் ‘செல்போனின் தந்தை’ என்று அழைக்கப்படுகிறார்.
ஏப்ரல் 3, 1973ம் தேதியன்று, தான் வடிவமைத்த போனிலிருந்து அழைப்பு விடுத்து ‘செல்போனில் பேசிய முதல் நபர்’ என்று வரலாற்றிலும் இடம் பிடித்துவிட்டார் மார்ட்டின் கூப்பர்.

மோட்டோ ரோலா நிறுவனத்தில் எஞ்சினியராகப் பணியாற்றி வந்த மார்ட்டின் கூப்பர் என்பவர் 1973ல் செல்போனுக்கு உருவமும், செயல்வடிவமும் கொடுத்தார்.

முதல் விற்பனை: 1973ல் செல்போன் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும், 1983ல்தான் ‘மோட்டோரோலா’ நிறுவனத்தின் ‘DynaTAC 8000X’ என்ற மாடல் முதன்முதலாக விற்பனைக்கு வந்தது. இந்த போனில் இருந்த பேட்டரி முழுவதும் சார்ஜாக பத்து மணி நேரம் எடுத்துக்கொண்டது. இதன் விலை 3995 டாலர்கள். அப்போதைய 3995 டாலர்கள் என்பது இன்றைய 10500 டாலர்களுக்குச் சமம். அதாவது 8.68 லட்ச ரூபாய்.

எடை : செல்போன் கண்டுபிடிக்கப்பட்டபோது  அதன்எடை 2  கிலோவாக இருந்தது. இன்று நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்களின் சராசரி எடை 140 - 200 கிராம் மட்டுமே.

சுகாதாரம் : கழிப்பறையைவிட அதிக கிருமிகள் மொபைலில் இருப்பதாகச் சொல்கிறது ஓர் ஆய்வு. கழிப்பறை, திரையரங்கம், மருத்துவமனை... என நாம் செல்கின்ற இடங்களுக்கு எல்லாம் மொபைல் போனையும் எடுத்துச் செல்கிறோம். அந்த இடங்களில் இருக்கும் கிருமிகள் மொபைலில் தங்கிவிடும். நீங்கள் காலையில் வெளியில் சென்றுவிட்டு, மாலையில் வீடு திரும்பும்போது 18 வகையான பாக்டீரியாக்களை மொபைல் போன் உள்வாங்கிக் கொள்கிறது. அதனால்  மொபைலை தினமும் சுத்தம் செய்வது அவசியம் என்கிறது அந்த ஆய்வு.

திறன் : முதன் முதலாக மனிதனை நிலவுக்கு ஏற்றிச் சென்ற ‘அப்பல்லோ 11’ விண்கலத்துக்காக பயன்படுத்தப்பட்ட கம்ப்யூட்டர்களின் திறனை விட, சாதாரண மாடல் செல்போனின் கம்ப்யூட்டர் திறன் அதிகம்.

சிறுநீர் :  இங்கிலாந்தில் உள்ள பிரிஸ்டல் ரோபோடிக்ஸ் லேபரட்டரியில் பணியாற்றும் விஞ்ஞானிகள் சிறுநீரிலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்து, செல்போன் பேட்டரியை சார்ஜ் செய்துள்ளனர். இரண்டு லிட்டர் சிறுநீரிலிருந்து 30 முதல் 40 மில்லிவாட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். ஸ்மார்ட் போனை சார்ஜ் செய்ய இந்த மின்சாரமே போதுமானது. எதிர்காலத்தில் ஸ்மார்ட் டாய்லெட்டுகளில் சிறுநீரிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான வசதிகள் செய்யப்படலாம்.

திருட்டு : வேலை செய்யும் இடங்களில்தான் 11 சதவீத  ஸ்மார்ட்போன்கள் திருட்டுபோகின்றன. மதியத்திலிருந்து மாலை 5 மணிக்குள் தான் இந்த போன் திருட்டு அதிகமாக நடக்கிறது.

நோமோஃபோபியா :  மொபைல் போனுக்கு அடிமையாக இருப்பதை, மொபைல் போன் கையில் இல்லாமல் போனால் உண்டாகும் பயத்தை நோமோஃபோபியா என்று அழைக்கின்றனர்.
அதுமட்டுமல்ல; உலகளவில் செல்போனை பயன்படுத்துபவர்கள், அழைப்பு வருகிறதோ இல்லையோ தினமும் சராசரியாக 150 முறை தங்கள் போனை எடுத்து நோட்டமிடுகின்றனர். 91 சதவீத இளம்பருவத்தினர் தங்களது கைக்கு எட்டும் தூரத்திலேயே ஸ்மார்ட்போனை வைத்துக்கொள்கின்றனர்.

எண்ணிக்கை : உலக மக்கள் தொகை 800 கோடியை நெருங்கிக்கொண்டிருக்கிறது. ஆனால், செல்போனின் எண்ணிக்கையோ 1100 கோடியை எட்டிவிட்டது. 2025ல் உலகம் முழுவதும் 1800 கோடி செல்போன்கள் பயன்பாட்டில் இருக்கும் என்று ஒரு புள்ளி விவரம் சொல்கிறது.

ஐபோன் :  ஸ்மார்ட்போன் துறையில் ராஜாவாகத் திகழ்கிறது ‘ஆப்பிள்’ நிறுவனத்தின் ஐபோன். 2007ம் வருடம் முதல் தலைமுறை ஐபோன் அறிமுகமானது. வருடந்தோறும் புது மாடல்களை அறிமுகம் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளது ‘ஆப்பிள்’. இதுவரை 220 கோடிக்கும் அதிகமான ஐபிஒக்கள் விற்பனையாகியுள்ளன.

அதிக விற்பனை : நோக்கியாவின் ‘1100’ என்ற மாடல்தான் உலகளவில் அதிகமாக விற்பனையான செல்போன். 25 கோடி போன்கள் விற்பனையாகியிருக்கின்றன. உலகளவில் அதிகமாக விற்பனையான எலெக்ட்ரானிக் சாதனமும் இதுவே.

மொபைல் நெட்வொர்க்: ஜப்பானைச் சேர்ந்த ‘நிப்பான் டெலிகிராப் அண்ட் டெலிபோன்’ நிறுவனம் 1979ல் உலகின் முதல் மொபைல் நெட்வொர்க்கை அறிமுகம் செய்தது. இன்று இருநூறுக்கும் மேலான  நிறுவனங்கள் மொபைல் நெட்வொர்க்கில் இயங்கி வருகின்றன.

உற்பத்தி : உலகளவில் உற்பத்தியாகும் போன்களில் சாம்சங் நிறுவனத்தின் உற்பத்தி மட்டுமே 21 சதவீதம். ஆப்பிள் 16 சதவீதமும், ஷியோமி 13 சதவீதமும், ஓப்போ 10 சதவீதமும், விவோ 9 சதவீதமும், மற்ற நிறுவனங்கள் 31 சதவீதமும் உற்பத்தி செய்கின்றன.

சந்தை :  செல்போன் அறிமுகமான நாட்களில் ‘மோட்டோரோலா’ நிறுவனத்தின் கைகளில் மொபைல் சந்தை இருந்தது. 1983 முதல் 1998 வரை மொபைல் சந்தையின் ராஜா, மோட்டோரோலாதான். ‘நோக்கியா’வின் வருகையால் மோட்டோரோலா பின்வாங்கியது. 1998லிருந்து நோக்கியாவின் வசமானது மொபைல் சந்தை. 2012ம் வருடம் வரை யாராலும் நோக்கியாவின் பக்கம் நெருங்க முடியவில்லை. ஸ்மார்ட்போனின் வருகை நோக்கியாவின் தலையெழுத்தை மாற்றி எழுதியது. சாம்சங் நிறுவனம் மொபைல் சந்தையைப் பிடித்தது.

சாம்சங்குடன் போட்டிபோட்டு தனக்கென ஓர் இடத்தைப் பிடித்து அந்தஸ்தின் அடையாளமாகப் பரிணமித்தது ஐபோன். இன்று ஸ்மார்ட்போன் சந்தை சாம்சங் மற்றும் ஆப்பிளின் வசமாகிவிட்டது.

முதல் கேமரா போன் : ஜப்பானில் மே மாதம் 1999ம் வருடம் ‘Kyocera Visual Phone VP-210’ என்ற கேமரா போன் அறிமுகப்படுத்தப்பட்டது. இதுதான் உலகின் முதல் கேமரா போன். இதனை மொபைல் வீடியோ போன் என்று அழைத்தனர்.

முதல் ஸ்மார்ட்போன் : காலண்டர் ஆப், அட்ரஸ் புக், கால்குலேட்டர், உலக கடிகாரம், இ-மெயில் வசதி, கேம்ஸ், நோட்பேடுடன் ‘சைமன்’ என்ற போன் 1994ல் வெளியானது. ஐபிஎம் நிறுவனத்தின் தயாரிப்பு இது. இந்த போன் வெளிவந்த போது ஸ்மார்ட்போன் என்ற சொல்லே பயன்பாட்டில் இல்லை. இதுதான் உலகின் முதல் ஸ்மார்ட்போன் என்கின்றனர் நிபுணர்கள்.

த.சக்திவேல்