பானை மனிதன்!



அலாக் நடராஜன் என்பவரைப் பற்றி ‘மஹிந்திரா குரூப்’பின் நிறுவனரான ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த டுவிட்தான் செம வைரல். யார் இந்த அலாக் நடராஜன்? முப்பது வருடங்களுக்கு மேலாக இங்கிலாந்தில் தொழில் அதிபராக இருந்தவர் அலாக்.
புற்றுநோயிலிருந்து மீண்ட அவர், மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இந்தியா திரும்பியிருக்கிறார். அவர் வசித்து வரும் தெற்கு தில்லியில் ஏழை மக்கள் நல்ல குடிநீருக்கு அவதிப்படுவதைக் கண்டிருக்கிறார்.

உடனே தனது வீட்டுக்கு வெளியில் ஒரு பானை நிறைய தண்ணீர் வைத்தார். அதுவும் இலவசமாக. அதற்கு நல்ல வரவேற்பு கிடைக்க, 15 இடங்களில் தண்ணீர் பானையை வைத்துள்ளார். தண்ணீர் தீர்ந்துவிட்டால் தகவல் தெரிவிக்க தனது அலைபேசி எண்ணை பானை மேல் பதிந்துள்ளார்.

இதுபோக தினமும் 150 கட்டடத் தொழிலாளிகளைத் தேடிச் சென்று இலவசமாக சத்தான சாலட்டை வழங்குகிறார். பானைகளில் தண்ணீர் நிரப்புவதற்காக ‘மஹிந்திரா’ நிறுவனத்தின் வாகனத்தை அலாக் பயன்படுத்துவதால் அவரைப் பற்றி டுவிட்டியிருக்கிறார் ஆனந்த் மஹிந்திரா. தில்லிவாசிகள் அலாக்கை ‘பானை மனிதன்’ என்று அன்புடன் அழைக்கின்றனர்.

த.சக்திவேல்