2,500 குழந்தைகள் இவரால் கல்வி கற்கின்றனர்!



ஒன்றோ… இரண்ேடா அல்ல… சுமார் இரண்டாயிரத்து ஐநூறு குழந்தைகள் இன்று வானதியால் பயன் பெற்றுள்ளனர். இதில் சுமார் நானூறு குழந்தைகளுக்கு அவர் நேரடியாகவே நிதியுதவி செய்துள்ளார்.

நமக்கெல்லாம் பள்ளி நாட்களில் டாக்டராகவோ, எஞ்சினியராகவோ, கலெக்டராகவோ, போலீஸாகவோ ஆகவேண்டுமென்ற கனவுதான் மேலோங்கி இருக்கும். ஆனால், வானதியின் கனவு அப்படிப்பட்டதல்ல. படிக்க வசதியற்ற குழந்தைகளின் கல்விக்கு உதவ வேண்டும் என்பதையே குறிக்கோளாகக் கொண்டு படித்தவர். ‘‘இது எட்டாவது படிக்கும்போது ஏற்பட்ட மனஉறுதி. இப்ப நிறைய குழந்தைகள் படிக்க என்னால முடிஞ்சளவு உதவிட்டு இருக்கேன். இன்னும் போகவேண்டிய தூரம் நிறைய இருக்கு...’’ புன்முறுவல் பூக்கும் வானதி, இதற்காக Thats my child என்ற டிரஸ்ட்டை தொடங்கி சத்தமில்லாமல் செயல்பட்டு வருகிறார்.

‘‘சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை. பொறந்து வளர்ந்து படிச்சதெல்லாம் கோயமுத்தூர்ல. நான் வீட்டுக்கு ஒரே பொண்ணு. அடுத்து, ரெண்டு தம்பிங்க. அப்பா ராமானுஜம். அம்மா சத்தியவதி. அப்பா காய்கறி கமிஷன் கடை நடத்தி எங்கள படிக்க வச்சார்.

ஸ்கூல்ல படிக்கும்போதே, ‘படிப்பு முடிஞ்சதும் கல்யாணம் பண்ணி வச்சிடு’னு உறவினர்கள் சொல்லிட்டே இருந்தாங்க. எனக்கு நிறைய படிக்கணும்னு ஆசை. பள்ளிப் படிப்போடு நிறுத்திடுவாங்களோனு பயந்தேன்.

ஆனா, அப்பா நிறைய சப்போர்ட் பண்ணினார். அப்பதான் என்னை மாதிரி எவ்வளவோ பேர் இருப்பாங்களேனு யோசிச்சேன். அப்புறம், வேறு வேறு காரணங்களால படிக்க முடியாம பாதில நிக்கிறவங்களும் உண்டு. அவங்களுக்கெல்லாம் ஏதாவது செய்யணும்னு வைராக்கியம் ஏற்பட்டுச்சு.

அதனால, படிக்க வசதியில்லாதவங்களுக்கு உதவணும்னு குறிக்கோளை செட் பண்ணி படிக்க ஆரம்பிச்சேன்...’’ என்கிறவர், உற்சாகமாகத் ெதாடர்ந்தார்:
‘‘பி.இ முடிச்சிட்டு, எம்.ெடக் படிச்சேன். பிறகு, ஒரு கல்லூரில பேராசிரியரானேன். அப்புறம், ஐடிக்கு மாறினேன். நினைச்சா மாதிரியே கைநிறைய சம்பாதிச்சேன். தம்பிங்களுக்கும், அப்பா, அம்மாவுக்கும் வேண்டியதை திருப்தியா செய்தேன்.

திருமணமாச்சு. கணவர் பாலசுப்ரமணியனும் சாஃப்ட்வேர் எஞ்சினியர். ரெண்டு குழந்தைங்க பொறந்தாங்க. இருந்தும், என்னோட கனவுல இருந்து நான் விலகல. பிறகு, SAP GTSனு சொல்லப்படுற குளோபல் டிரேட் சர்வீஸ்ல ஆலோசகர் பணி கிடைச்சது. அதிலிருந்து பின்லாந்து, ஜெர்மனி, ஸ்வீடன்னு நிறைய வெளிநாடுகளுக்குப் போகிற வாய்ப்பு அமைஞ்சது.

ஸ்வீடன்ல பணி செய்யறப்ப நண்பர் கிருஷ்ணாவின் அறிமுகம் கிடைச்சது. கல்விக்காக ஏதாவது பண்ணணும்னு அவரும் நினைச்சிட்டே இருந்தார். எங்க ரெண்டு பேரின் எண்ணமும் ஒண்ணாச்சு. பிறகு, நான் இந்தியா வந்ததும் வேலையை ராஜினாமா செய்தேன். என் கணவரும் உற்சாகப்படுத்த, 2015 ஜனவரில அது என்னுடைய குழந்தை என்கிற அர்த்தத்துல ‘Thats my child’ டிரஸ்ட்டை தொடங்கினேன்...’’ என்கிற வானதி தனது கனவுத் திட்டத்தைக் கண்கள் விரிய விவரித்தார்:

‘‘அறக்கட்டளை ஆரம்பிச்சதும் முதல்ல அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மட்டும் உதவணும்னு முடிவெடுத்தோம். குறிப்பா, ஒன்பது முதல் 12ம் வகுப்பு வரை படிக்கிற குழந்தைகளுக்கு. அடுத்து, இதுல யாருக்கு முன்னுரிமைங்கிற கேள்வி வந்துச்சு. அப்புறம், அதை நான்கு பிரிவுகளா பிரிச்சோம். முதல்ல, அனாதைக் குழந்தைகள். அப்புறம், சிங்கிள் பேரண்ட்ஸ் அரவணைப்பில் வளர்ற குழந்தைகள். பிறகு பெண் குழந்தைகள், கடைசியா ஆண் குழந்தைகள்னு வச்சோம்.

அடுத்து, பள்ளிகளை எப்படி அணுகுறதுனு தெரியல. அதனால, நண்பர்கள் வழியா முன்னாள் மாணவர்கள் என்ற வகையில் சில பள்ளிகள்ல பேசினோம். முதல் வருஷம் வெறும் ஐந்து குழந்தைகளுக்கு மட்டுமே எங்களால உதவ முடிஞ்சது. அப்ப நிறைய நண்பர்கள் நிதி கொடுத்து உதவினாங்க.
இதுக்கு ‘கனவைத் தொடு’னு பெயர் வச்சோம். இந்தத் திட்டத்தின் வழியா கடந்த ஐந்து வருஷத்துல சுமார் நானூறு குழந்தைகளுக்கு பண உதவி செய்திருக்கோம்.

இதுல மதுரை, திருச்சி பகுதி இலங்கை அகதி முகாம் குழந்தைகளும் இருக்காங்க. அவங்க படிப்பை பாதில நிறுத்தியிருந்தாங்க. பிறகு, பேசி பள்ளிகள்ல படிக்க வச்சோம். இதுக்குப் பிறகு வெறும் நிதியுதவி மட்டும் போதாதுனு தோணுச்சு. சில குழந்தைகளுக்கு சில பாடங்கள் எளிதில் புரியாது. சிலருக்கு கம்யூனிகேஷன் பிரச்னைகள் இருக்கும். இதை சரிபண்ணணும்னு நினைச்சோம்.  

முதல்ல, அறிவியல் கற்றுத் தர முடிவு பண்ணினோம். மாதம் ரெண்டு முறை, எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்த பள்ளிகளுக்குப் போய் ஆய்வகப் பயிற்சி மூலம் அறிவியல் சொல்லிக் கொடுத்தோம். அடுத்து கணக்கு மற்றும் ஆங்கிலப் பாடங்கள் எடுத்தோம். அப்புறம், அரசின் ஸ்காலர்ஷிப்பைப் பெற தேசிய, மாநில அளவில் தேர்வுகள் இருக்கு. அதுக்கான பயிற்சி வகுப்புகளும் எடுத்தோம்.

இதுக்கிடையில ‘ஸோகோ’ ஐடி நிறுவனத் தேர்வுக்கு பசங்களை தயார்படுத்தினோம். அந்நிறுவனம் பிளஸ் டூ முடிச்ச பசங்கள நேரடியா தேர்வு வச்சு வேலைக்கு எடுத்துப்பாங்க. எங்க பணியைப் பார்த்திட்டு இப்ப அந்நிறுவனமே சேர்ந்து பணியாற்ற விருப்பம் தெரிவிச்சிருக்காங்க. ெதாடர்ந்து கம்யூனிகேஷன் ஸ்கில்லை வளர்க்க வகுப்புகள் எடுக்கிறோம். இதுக்கு ‘விண்ணைத் தொடு’னு பெயர்.

அடுத்து, ‘வெளிச்சத்தை நோக்கி’னு ஒரு திட்டத்தை தயார் பண்ணி பசங்களின் எதிர்காலத்தைப் பற்றிப் பேசினோம். அதாவது, என்ன படிக்கலாம்... குடும்ப நிலைக்கேற்ப எந்த கல்லூரியைத் தேர்ந்தெடுக்குறதுனு நிறைய விஷயங்கள் இதுல அடங்கும்.இந்நேரம் சில பள்ளிகள்ல காலையிலிருந்து இரவு வரை இருந்து படிக்கிற குழந்தைகளுக்கு ஏதாவது ஸ்நாக்ஸ் கொடுத்தா நல்லாயிருக்கும்னு கோரிக்கை வந்துச்சு. உடனே, அதுக்கும் பண உதவி செய்தோம்.

அப்புறம், ‘சிறகுகள் இன்றி பறக்கலாம்’னு ஒரு திட்டம் ரெடி பண்ணி பசங்க ஆர்வத்தைக் கேட்டு ஓவியம் வரையறது, பாடுறதுனு கற்றுக் கொடுத்தோம்.
இப்படியே நிறைய திட்டங்கள் அவங்களுக்காக செய்திட்டு வர்றோம். தவிர, பள்ளி முடிச்சதும் அடுத்து கல்லூரிப் படிப்புக்கு உதவுகிற அறக்கட்டளைகள் பற்றியும் அவங்களுக்கு தெரியப்படுத்துறோம்.

இப்படி பசங்களுக்காக எங்களாலான உதவிகளைச் செய்றோம். இதுக்காக தன்னார்வலர்களாக இருநூறு பேர் வரை இருக்காங்க...’’ பெருமையோடு குறிப்பிட்டவர், தன்னுடைய இலக்கை பகிர்ந்தார்:‘‘இப்ப திருநெல்வேலி, மதுரை, திருச்சி, கோவை, சென்னை, பொள்ளாச்சினு ஒருசில ஊர்கள்ல மட்டும் எங்க கனவு விரிஞ்சிருக்கு. இதை இன்னும் விரிவுபடுத்த வேண்டியிருக்கு. அடுத்த வருஷம் பல பள்ளிகளுக்கு எங்க கனவு போய்ச் சேரணும்.

என் நீண்டகால ஆசை, இப்படி உதவுவதற்காக ஒரு உறைவிட வீட்டை உருவாக்கணும். அதாவது விடுதி மாதிரி தொடங்கி, படிக்க வசதியற்ற பசங்கள அங்கே  தங்கவச்சு உணவுல இருந்து எல்லாமே இலவசமா கொடுத்து சந்தோஷமா படிக்க வைக்கணும்.... இதுவும் நிறைவேறும்னு நம்புறேன்...’’ நம்பிக்கையுடன் சொல்கிறார் வானதி. கனவு மெய்ப்படட்டும்!  

பேராச்சி கண்ணன்