உலகக் கோப்பை கிரிக்கெட்ல ஜெயிச்ச அணிகிட்ட இருந்து கோப்பையை திருட முயற்சிக்கும் கூட்டம் இது!



‘‘நீங்க நிறைய படங்கள் பார்த்திருக்கலாம். அதுல வர்ற காதல், எமோஷனல் காட்சிகளை கவனிச்சிருந்தீங்கனா.. உங்களுக்கு ஒரு விஷயம் புரியும். அந்தப் படங்கள்ல வந்த லவ் சீன்களும், சென்டிமென்ட்ஸும் ஒரே மாதிரிதான் இருந்திருக்கும். ஆனா, அதுல நடிக்கற ஆட்கள் வேற வேற. ஸோ, ஒரு ஃப்ரெஷ்னெஸ் இருந்திருக்காது.

எங்க படத்துல அப்படி இருக்கவே இருக்காது. ஏன்னா, இதோட கான்சப்ட்டே புதுசு. ஒவ்வொரு சீனும் ட்விஸ்ட்டும் நீங்க கொஞ்சமும் எதிர்பார்க்காதது...’’ ஏகப்பட்ட பில்டப்களுடன் பேசுகிறார் சுதர். ‘கயல்’ சந்திரன், பார்த்திபன் நடிக்கும் ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ படத்தின் அறிமுக இயக்குநர். குறும்பட இயக்குநர் வரிசையில் இருந்து கோலிவுட்டிற்கு வந்திருப்பவர்.

‘‘பில்டப் பண்ணலை. இந்தக் கதை மேல பெரிய நம்பிக்கை இருக்கு. 2016ல ஷூட் போய் 37 நாட்கள்ல முடிச்சுட்டோம். சில காரணங்களால இதோட ரிலீஸ் தள்ளிப் போச்சு. ஆனாலும் இந்தப் படம் எப்ப ரிலீஸ் ஆனாலும் மக்கள் கொண்டாடுவாங்கனு நம்பிக்கை எனக்கு மட்டுமல்ல எங்க மொத்த டீமுக்கே இருந்தது.

2011ல உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்தது. அந்த வெற்றிக் கோப்பையை ஒரு டீம் திருட முயற்சிக்கறாங்க. அதான் படத்தோட ஒன்லைன். இப்படி புது களமும், சீன்களுமா படத்தை ஃப்ரெஷ்ஷாவே பண்ணியிருக்கேன்...’’ உற்சாகமாகப்பேசுகிறார் சுதர்.

அதென்ன சுதர்னு ஒரு பெயர்?

என்னோட முழுப்பெயர் சாய்சுதர்சன். வீட்ல என்னை செல்லமா சுதர்னு கூப்பிடுவாங்க. அதையே ஸ்கிரீன் நேமா வச்சிட்டேன். நான் ஒரு சாஃப்ட்வேர் என்ஜினியர். பூர்வீகம் மதுரை. ஆனா, நாங்க சென்னை வந்து செட்டில் ஆகி பத்து வருஷங்கள் ஆகிடுச்சு. ஐடி வேலையில் இருக்கும் போதே குறும்படங்கள் இயக்க ஆரம்பிச்சேன். ‘நாளைய இயக்குநர்’லபங்கேற்று, நல்ல பெயரும் வாங்கியிருக்கேன். ‘கனியும் நானும்’, ‘வினையது வலியது’, ‘ஆசை யாரை விட்டுச்சு’னு நிறைய ஷார்ட் ஃபிலிம்ஸ் இயக்கியிருக்கேன்.

சினிமாவுக்கு முயற்சி பண்ணும் போது முதல்ல ஒரு சீரியஸான சப்ஜெக்ட்தான் பண்ணியிருந்தேன். ‘கயல்’ சந்திரன் அண்ணன்கிட்ட இந்தக் கதையைச்
சொல்லும் போதுதான் ஹீரோவா சந்திரன் நடிக்கப் போற விஷயமே தெரிஞ்சது. அப்புறம், அவருக்கான கதையா இதை ரெடி பண்ணினேன். இந்த ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ திருட்டை ஊக்குவிக்கிற படம் கிடையாது. டைட்டில் கார்டுலேயே அதை தெளிவுபடுத்தியிருக்கோம். சந்திரன், பார்த்திபன் தவிர சாதனா டைட்டஸ், சாம்ஸ், டேனியல்னு பலரும் நடிச்சிருக்காங்க.

இந்த டீம்ல பார்த்திபன் எப்படி?

இந்த கேங்ஸ்டர் டீமோட காட்ஃபாதரே அவர்தான். நக்கல், நையாண்டியான ஒரு கேரக்டர்னு யோசிச்சாலே, அவர்தான் மைண்ட்ல ஃபர்ஸ்ட் வந்தார். உடனே அவர்கிட்ட கதையைச் சொன்னேன். நடிக்க சம்மதிச்சார்.  ஸ்பாட்டுல அவர் இருந்தா அந்த இடமே கலகலனு இருக்கும். அவர் இப்ப படமும் பார்த்துட்டார். ‘ஷூட் டைம்ல கூட இவ்ளோ அழகா வரும்னு எதிர்பார்க்கல. பின்னிட்டீங்க சுதர்’னு சந்தோஷமா பாராட்டினார்.

படப்பிடிப்புல அவர் எந்த தலையீடும் பண்ணல. ஒரு நடிகரா, அவரோட பங்கை சிறப்பா பண்ணிக் கொடுத்திருக்கார். அதைப்போல, ‘கயல்’ சந்திரன் டெடிகேஷனும் பிரமாதம். ஒரு ஃபைட் சீனுக்கு ரெஸ்ட் ரூம் செட் போட்டிருந்தோம். கல் ஒண்ணு பெயர்ந்து சந்திரன் கண்ணுக்கு பக்கத்துல போய் விழற ஷாட் வச்சிருந்தோம்.

அந்த சீன்ல ஃபைட் ஆட்கள வச்சு டூப் போட்டு எடுத்துக்கலாம்னு நினைச்சேன். ஆனா, ‘நானே பண்றேன்’னுசொல்லி சந்திரன் ரிஸ்க் எடுத்து நடிச்சார். அதை யூனிட்டே கைதட்டி பாராட்டினாங்க.டெக்னிக்கல் டீமும் உங்க ஷார்ட் ஃபிலிம் டீம்தானா?அப்படிச் சொல்லிட முடியாது. ஒளிப்பதிவை மார்ட்டின் ஜோ பண்ணியிருக்கார்.

இதுக்கு முன்னாடி ‘வில் அம்பு’, ‘விதி மதி உல்டா’னு படங்கள் பண்ணியிருக்கார். இந்தப் படத்தை ஒரு பெரிய பட்ஜெட் படம் மாதிரி விஷுவல்ல கொண்டு வந்திருக்கார். ரெமியனின் ஆர்ட் டைரக்‌ஷனும் பேசப்படும். வெங்கட் ரமணன் எடிட் பண்ணியிருக்கார். இதை விறுவிறுப்பான படமா ஆக்கினவர் அவர்தான்.

படத்தோட இசையமைப்பாளர் அஷ்வத், என் நண்பர். என்னோட குறும்படங்களுக்கு அவர் இசையமைச்சிருந்தார். இந்தப் படத்துக்கு அவரோட பின்னணி இசை பேசப்படும். ஏன்னா, செகண்ட் ஆஃப்ல டயலாக்குகள் குறைவு. விஷுவல்தான் பரபரக்கும். அதை உயிரோட்டமாக்கியிருக்கு அஷ்வத்தின் பின்னணி இசை.

உங்க முதல் பட ரிலீஸ் தாமதமானதை எப்படி பார்க்கறீங்க..?

பாசிட்டிவ்வா! ஒரு படம் முடிச்சிட்டோமேனு ரிலீஸ் பத்தி கவலைப்படாமல், நான் ரெண்டாவது படம் இயக்கப் போயிருந்தாலும் கூட என்னை முதல் பட இயக்குநர் மாதிரிதான் ட்ரீட் பண்ணியிருப்பாங்க. இது அப்பவே பரபரன்னு ரிலீஸ் ஆகியிருந்தால், அவசர அவசரமா பண்ணிட்டோமோனு கூட ஒரு ஃபீல் இருந்திருக்கும்.

இப்ப கொஞ்சம் லேட்டா ரிலீஸ் ஆனாலும் லேட்டஸ்ட்டா வந்திருக்கு. இடையே நிறைய டைம் கிடைச்சதால படத்தை செதுக்கியிருக்கோம். நிறைய தடவ நானே படத்தை பார்த்தாலும்  ஒருமுறை கூட எனக்கு போர் அடிக்கல. அதுவே பெரிய வெற்றிதான். இந்த இடைவெளியில் நிறைய ஸ்கிரிப்ட்ஸ் ரெடி பண்ணி வச்சிருக்கேன்!                

மை.பாரதிராஜா