இனி எல்லாம் இன்பமே



தினம் தினம் நடக்கும் வழக்கமான நிகழ்வுதான் அது.அன்றைக்கும் எனக்கு அது நடந்தது.அந்த நிகழ்வு நடந்தது எனது வீட்டுக்குள்தான் என்பதால் மெல்ல நகர்ந்து ஒவ்வொரு சுவிட்ச் போர்டாக சென்று பார்த்தேன். புரிந்திருக்குமே... என் ஃபோனில் சார்ஜ் போடத்தான் இப்படி அலைந்து கொண்டிருக்கிறேன்.

அனைத்து  சுவிட்ச் போர்டுகளும் பிஸியாகவே இருந்தன. குழந்தைப்பேறு இல்லாதவர்கள், கோயிலிலிருக்கும் ஆலமர விழுதுகளில் கட்டித் தொங்கவிடும் பொம்மைத்தொட்டில் நினைவுக்கு வந்தது. ஒவ்வொரு சுவிட்ச் போர்டிலும் ஒவ்வொன்று தொங்கிக்கொண்டிருந்தது!சுவிட்ச் போர்டு ஒன்றின் ப்ளக்கில் மகனின் ஹெட் செட் தொங்கிக் கொண்டிருந்தது.

அதைப் பார்த்ததும், என் மனைவி என்னிடம் ரெண்டு நாட்களுக்கு முன்பு சொன்னது என் காதுகளில் அப்போது ஒலித்தது. ‘‘என்னங்க உங்க பையன் எதையுமே காதுல போட்டுக்கமாட்டேங்கிறான். என்னான்னு கொஞ்சம் கேளுங்க...’’

மனைவியின் கம்ப்ளைண்டை மகனிடம் விசாரிக்கலாம் என்றால், நான் சொன்னதையும் அவன் காதில் போட்டுக்கொள்ளவே இல்லை.
காரணம் 24 மணி நேரமும் தன் காதுகளில் ஹெட் செட்டை போட்டபடி ஒரு குரூப்பை சேர்த்துக் கொண்டு பப்ஜி விளையாடிக் கொண்டிருப்பதையே முழுநேர தொழிலாகக் கொண்டிருந்தான் என்பதுதான். பார்ட் டைமாக காலேஜுக்கு போய் வந்தான்.

‘‘நீ அவன் காதுல ஹெட் செட் இல்லாத நேரமா பார்த்து சொல்லு. அப்ப அவன் கட்டாயமா காதில் போட்டுப்பான்... இல்லாட்டி...’’
எதோ செம்ம ஐடியா சொல்லி அசத்தப்போறார் ஆத்துக்காரர் என்றெண்ணியபடி மிகவும் ஆர்வமாக என்னிடம் கேட்டாள் என் மனைவி. ‘‘இல்லாட்டி?’’‘‘நீ இன்னொரு புது ஹெட் செட் வாங்கிக் கொடு! அவன் நிச்சயமா காதுல போட்டுப்பான்!’’உடனே, ‘கடுப்பேத்தறார் மை லார்ட்’ என்னும் மீம்ஸை நினைவுபடுத்துவதாக மாறிப்போனது அவளின் முகம்.

இன்னொரு சுவிட்ச் போர்டின் ப்ளக்கில் தொங்கிக்கொண்டிருந்ததும் சாட்சாத் என் மகனின் செல்போனும் பின்னே அதோட சார்ஜரும்தான்.
கிச்சனில் இருந்த சுவிட்ச் போர்ட் நோக்கி நகர்ந்தேன்.டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எனும் சத்தத்தோடு ஓடிக்கொண்டிருந்தது மிக்ஸி. நார்மலான மிக்ஸி கொடுக்கும் சத்தமில்லை. அதுக்கும் மேல.

இதை கண்டும் காணாமலும் இருப்பதே சாலச்சிறந்தது. இல்லாவிட்டால் புது மிக்ஸி வாங்க வினவப்படும்! எனவே மிக்ஸியின் சத்தத்தை நான் காதில் போட்டுக்கொள்ளவே இல்லை, என் மகன் போலவே.சில நேரங்களில் நாம் நம் பிள்ளைகளிடமிருந்தும் பாடம் கற்கிறோம்!
‘‘வாங்க வாங்க... அப்படியே ரெண்டு நிமிஷம் இந்த சட்னிய அரைச்சிக் கொடுங்க. அதுக்குள்ள நான் இட்லியை ஊத்தி வச்சிச்சிட்டு வந்துடறேன்!’’ என்றாள் மனைவி.மாட்டிக்கொண்டேன்.

சுவிட்ச் போர்டும் பிஸி. நானும் பிஸி. கூடவே பசி. எனவே சட்னி அரைக்கச்சொன்னதும் ஒப்புக்கொண்டேன்.
சட்னி அரைத்ததும் ஸ்விட்ச் போர்ட் ப்ளக் காலியாகிவிடும் என நிம்மதிப் பெருமூச்சு விட்ட எனக்கு ஆப்பு வைத்தாள் மனைவி.
‘‘என்னங்க... சட்னி அரைச்சதும் கொஞ்சம் கஷாயத்துக்கு ரெடி பண்ணி வச்சிருக்கிற தானியங்களை அரைச்சி கொடுத்துடுங்க ப்ளீஸ்...’’
‘ப்ளீஸ்’ என்ற சொல் ஒரு மந்திரச் சொல். உருகிப் போவேன்!

சட்னியை மட்டும் அரைத்து விட்டு, ‘‘ஒரு நிமிஷம் பொறு...’’ என்றபடி ஹாலில் இருந்த சுவிட்ச் போர்டை நோக்கிச் சென்றேன்.
அதில் தொங்கிக்கொண்டிருந்தது கொசு பேட்.என் மனைவி உண்மையில் கிரிக்கெட் ப்ளேயர் ஆகியிருந்தால் பல சாதனைகளைச் செய்திருப்பார். ஏனெனில் சார்ஜில் தொங்கிக்கொண்டிருக்கும் கொசு பேட்டை லாவகமாகப்பிடித்து எங்கள் உடலின் மீது அமர்ந்து ரத்தம் உறிஞ்ச முற்படும் கொசுவை லாவகமாக அடிப்பாள் பாருங்கள்... களத்திலிருக்கும் பேட்ஸ்மேனுக்கு பாலும் பேட்டும் சரியாக கனெக்ட் ஆகி சிக்ஸ் ஆகும் தருணம் போலிருக்கும் அவளின் அடியில் கொசு சாகும் தருணம்.

கொசு அடிப்பதையே தொழிலாக வைத்திருக்கும் அவளுக்கு கொசு பேட் எப்போதும் சார்ஜிலே இருக்க வேண்டும்.
நான் அந்த கொசு பேட்டை எடுத்து விட்டு, என் ஃபோனை சார்ஜில் போட்டது தெரிய வந்தால் என்னையே பந்தாக்கி விடுவாள்!
எதற்கு வம்பு என மறுபடி கிச்சனில் நுழைந்து எனது தொப்பை குறைய தினமும் அதிகாலை அவள் எனக்கு செய்து கொடுக்கும் கஷாயத்துக்கான கருஞ்சீரகக் கூட்டணிப் பொருட்களை அரைத்துக்கொடுக்க ஆயத்தமானேன்.

சரியாக பத்து நிமிடங்கள். அரைத்ததை எடுத்து மனைவியிடம் கொடுத்தேன்.நீண்ட நேரமாக கால் கடுக்க நின்றபடி பேருந்துக்குள் பயணம் செய்தவனுக்கு, நிற்கும் தன் அருகிலேயே உட்கார ஒரு சீட் கிடைத்தால் எத்தனை மகிழ்வானோ அவ்வளவு மகிழ்வானேன்.

அவசர அவசரமாக மிக்ஸியின் ப்ளக்கை வெளியே எடுத்து விட்டு என் ஃபோன் சார்ஜரை செருகிவிட்டு ஹாலில் வந்தமர்ந்தேன்.
ஓடிக்கொண்டிருந்த டிவியில் பழைய பாடல் ஓடும் சேனலைச்தேடியபடி ரிமோட்டில் சேனல் டூ சேனல் தாவிக்கொண்டிருந்தார் என் அப்பா.
கிச்சன் வேலையை முடித்த என் மனைவி அடுத்த வேலைக்கு ஆயத்தமானாள்.

வீட்டைப்பெருக்குகிற வேலை, துணி துவைக்கிற வேலை, சாப்பாடு போடுகிற வேலை... என்றெல்லாம் நினைத்தால் தப்பு. அவளது அடுத்த வேலை கொசு அடிப்பதுதான்! கொசு பேட்டை ப்ளக்கிலிருந்து விடுவித்து சுதந்திரம் கொடுத்தாள். பேட்டும் அகோர கொசுப் பசியில் இருப்பதாகத்
தோன்றியது. எனது ஃபோனில் சார்ஜ் போவதற்கு முன்பு முகநூலில் நான் போட்ட கவிதைக்கு இதுவரை எத்தனை லைக்குகள் வந்திருக்கும்...

எத்தனை பேர் அதை சிலாகித்து கமெண்ட் போட்டிருப்பார்கள்... எத்தனை பேர் அதை மொக்கை என்று முடி சூட்டி இருப்பார்கள்... என்றறிய மனம் துடித்தது. அடக்கியபடி அரைமணி நேரம் அப்பா ரசித்த சேனலையே வேறு வழியின்றி பார்த்துக் கொண்டிருந்தேன்.இடையிடையே கமலின், ‘விக்ரம்’ படத்தில் எலிக்கோயிலில் வரும் சத்தம் போல கிறீச் கிறீச் என்று வந்தது.வேறொன்றுமில்லை. மனைவி, கொசு அடித்துக் கொண்டிருந்தாள். அரைமணி நேரத்தில் எப்படியும் 40 % சார்ஜ் ஏறி இருக்குமென்ற என் அனுமானத்தை உறுதி செய்ய மிக்ஸியின் ப்ளக் பாயிண்ட் நோக்கிச் சென்றேன்.

அதிர்ச்சி. ஃபோனை ப்ளக்கில் செருகிவிட்டு, சுவிட்சை ஆன் செய்ய மறந்திருக்கிறேன்! நொந்தபடி, ஃபோன் சார்ஜரின் சுவிட்சை ஆன் செய்தேன்.அவ்வளவுதான். கரண்ட் கட்!புலம்பியபடியே திரும்ப ஹாலில் வந்தமர்ந்தேன்.கரண்ட் எப்போது வேண்டுமானாலும் வந்துவிடும் என்ற நம்பிக்கையில் தொலைக்காட்சியின் முன் நகராமல் அப்பா உட்கார்ந்திருந்தார் மின்சாரம் வந்ததும் டிவியின் வசம் என்னை ஒப்படைக்க மனம் விரும்பவில்லை.

ஏதேனும் ஒன்றில் என்னை மூழ்கடிக்க முடிவு செய்தேன். அந்த ஏதேனும் ஒன்று எது என கண்முன்னால் தோன்றியது.மெல்ல புத்தக அலமாரியின் அருகில் சென்று ஒரு புத்தகத்தை எடுத்தேன். பிடித்தமான எழுத்தாளர்தான். பக்கங்களைப் புரட்டினேன். மூழ்கி காணாமல் போனேன்!மறுநாள். மீண்டும் அதே நிகழ்வு. எனது ஃபோன் சார்ஜ் இழந்து போனது.அன்றைக்கு செம அதிர்ஷடம். அனைத்து ப்ளக் பாயிண்ட்களும் காலியாகவே இருந்தன.

ஹாலிலிருந்த ப்ளக்கில் எனது ஃபோனை செருகிவிட்டு வேறொரு புத்தகத்தை படிக்கத் தொடங்கினேன்.என் மனைவியின் கொசு பேட்டிலிருந்து எப்படியாவது ஒரு கொசுவாவது தப்பித்து வந்து சார்ஜ் போட்டிருக்கும் என் போனில் அமரத்தான் போகிறது. அமர்ந்து சார்ஜர் சுவிட்சை ஆன் செய்யாமல் நான் வந்து விட்டதை கிண்டல் அடிக்கத்தான் போகிறது.ஆனால், அந்தக் கொசுவுக்குத் தெரியாது.... வேண்டுமென்றே சுவிட்சை நான் ஆன் செய்யவில்லை என்று! சற்றே திரும்பிப் பார்த்தேன்.அலமாரியில் அடுக்கப்பட்டிருந்த அத்தனை புத்தகங்களும் என்னை நோக்கி புன்னகைத்தன!

ஜோடிப் புறாக்கள்

இன்னமும் ஹனிமூன் கொண்டாட்டமாகவே ஜொலிக்கிறது சமந்தா - சைதன்யா ஜோடி. சமீபத்தில் ரிலாக்ஸ் ட்ரிப்பாக ஸ்பெயினின் ஐபிசா தீவுகளுக்கு இந்த க்யூட் கபுள்ஸ் சென்று வந்திருக்கிறார்கள். ஐபிசாவின் அழகில் சொக்கிப்போய்.. ‘thank you for the most incredible memories’ என சிலிர்க்கிறார் சமந்தா. வாழ்க வளமுடன்!

தம்ஸ் குஷி!

‘பேட்ட’ நவாசுதீன் சித்திக்கின் ஜோடியாக இப்போது ‘போலே சுடியான்’ இந்தி படத்தில் நடிப்பதால் குஷியில் குதூகலிக்கிறார் தமன்னா. ஆனால், தம்ஸின் குஷிக்கு அதுமட்டுமே காரணமல்ல. அதன் படப்பிடிப்புக்காக சென்ற இடத்தில் பாலிவுட் பழைய ஹீரோயின் மாதுரி தீக்‌ஷித்தை சந்தித்து மகிழ்ந்ததுதான் மகிழ்ச்சி பூரணமடையக் காரணமாம்!

புதுவண்டி ரவீந்திரன்