கிராமத்தை மாற்றிய பல் டாக்டர்!



- ச.அன்பரசு

நம் ஊரில் டாக்டர், என்ஜினியர் என உயர்கல்வி கற்றவர்கள் அடுத்து என்ன செய்வார்கள்? அமெரிக்கா, இங்கிலாந்து என ஏதேனும் ஒரு வெளிநாட்டுத் தூதரக வாசலில் தேவுடு காத்திருந்து விசா வாங்கி விண்ணைத் தாண்டி பறந்துவிடுவார்கள். ஆனால், மகாராஷ்டிராவில் உள்ள ஒரு பல் டாக்டர் பற்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமூகத்துக்கும் வைத்தியம் பார்த்துக் கொண்டிருக்கிறார்! இவரின் கிளினிக்தான் இந்த சமூக சேவையின் செயலகம். இங்கு மக்களோடு மக்களாக இணைந்து 70 கிராமங்களுக்கு மேல் சுகாதாரம், குடிநீர் வசதி ஆகியவற்றைப் பெற்றுத் தந்துள்ளார் இந்த புன்னகை அரசர்.

இவரது பெயர் அவினாஷ் பொல். மகாராஷ்ட்ராவின் தாரா நகரில்தான் நடந்துகொண்டிருக்கிறது இந்த உதாரண சமூக சேவை. அப்போது புனேவில் பாரதீய வித்யா பவன் பல் மருத்துவக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தார் அவினாஷ். இலவச சிகிச்சைக்காகக் கிராமங்களிலிருந்து அதிகாலையே வந்து காத்திருந்த மக்களின் நிலை அவரை யோசிக்க வைத்தது. ‘‘என்னிடம் பேசிய விதவைப் பாட்டிக்கு ஈறுகள் பெரிதாக வீங்கியிருந்தன. இலவச சிகிச்சைக்காக மருத்துவமனை வரவே தன் வீட்டில் உள்ள பாத்திரங்களை அடகுவைத்துவிட்டுத்தான் வந்திருந்தார்.

இதைக் கேள்விப்பட்டபோது அதிர்ந்து போனேன். அரசு எவ்வளவோ நலத்திட்டங்களை அறிவித்துள்ளது. ஆனால், இது எல்லாம் நிராதரவான, கல்வியறிவு வாய்க்காத ஏழைகளுக்குத் தெரிவதே இல்லை என்பதைப் புரிந்துகொண்டேன். விதவைப் பெண்களுக்கு உதவும் சஞ்சய்காந்தி நிராதர் யோஜனா திட்டம் பற்றி அவருக்கு விளக்கினேன். தொடர்ந்து கிராமத்திலிருந்து வரும் மற்றவர்களுக்கு சுகாதாரமான கழிப்பறை அமைப்பது எப்படி என்பது உட்பட என்னால் இயன்ற விஷயங்களைச் சொல்லித்தந்தேன்...’’ என்று கல்லூரி நாட்களை நினைவுகூர்கிறார்.

பல் மருத்துவப் படிப்பை சிரத்தையாக நிறைவு செய்த அவினாஷ், சதாரா நகரில் கிளினிக் அமைத்து மருத்துவம் செய்துவந்தாலும், அவரின் எண்ணம் முழுக்க கிராமத்தில் அடிப்படை வசதிகள் இன்றித் தவிக்கும் ஏழை மக்களைச் சுற்றியே சுழன்றது. அப்போது பெபில்வாடி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் அருணைச் சந்தித்தார். தன் கிராமத்தில் சுகாதார வசதிகளைப் பற்றிய விழிப்புணர்வை உருவாக்கும் லட்சியத்துடன் இருந்தார் அருண். அவருடன் இணைந்து 1997ம் ஆண்டு பெபில்வாடி சென்றார் டாக்டர் அவினாஷ். பெபில்வாடியின் கிராம சபையைக் கூட்டி அரசின் சுகாதாரத் திட்டங்களை எடுத்துக் கூறினார். ஆனால், என்னதான் தொண்டை வறண்டு பேசினாலும் மக்கள் அந்த விவகாரத்தில் இம்மியளவும் ஆர்வம் காட்டவே யில்லை.

இவரது செயல்பாட்டுக்கு பரிசாக ஏளனமும் பரிகாசமும்தான் கிடைத்தன. அவ்வளவையும் புன்முறுவலுடன் ஏற்றுக்கொண்ட டாக்டர் அவினாஷ், தன் நண்பர் அருணோடு இணைந்து ஊரில் ஒரு பொதுக் கழிவறையைக் கட்டினார். கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் அதைப் பயன்படுத்தத் தொடங்கினர். ஒருகட்டத்தில் தங்கள் வீடுகளிலும் கழிவறையை அமைக்க அவினாஷிடம் உதவி கேட்கும் அளவுக்கு நெருங்கினர். இப்போது மிகச் சில ஆண்டு களிலேயே திறந்தவெளி கழிப்பறையற்ற கிராமம் (ODF) என்ற பெயருடன் கம்பீரமாக தலைநிமிர்ந்து நிற்கிறது அக்கிராமம்.

கிராமங்களின் முக்கிய, அவசியத் தேவை என்னென்ன என்று ஆய்வு செய்வது, பிறகு இதற்கான திட்டமதிப்பீட்டை உருவாக்கி அதன் குறைந்தபட்ச தொகையை முதலில் மக்களிடம் இருந்தே நிதியாகத் திரட்டுவது, அதன் பின்னரே அரசை அணுகி உதவி கேட்பது... இதுதான் அவினாஷின் விக்டரி பிளான். ‘‘மக்களிடம் நிதி பெறுவது அந்தத் திட்டத்தின் மீது அவர்களுக்குக் கவனமும் பொறுப்பும் வரவேண்டும் என்பதற்காக மட்டுமே. அரசு திட்டங்கள் பலவும் எடுபடாமல் போனதற்கு முக்கியக் காரணம், அவை மக்களின் பங்களிப்புடன் நிறைவேறவில்லை என்பதுதான்...’’ என லாஜிக் பிடித்துப் பேசுகிறார் அவினாஷ்.

தன் கிளினிக்குக்கு வரும் நோயாளிகளிடம் கழிவறை இல்லாத வீடுகளைப் பற்றி அறிந்துகொண்டு அந்தக் கிராமத்துக்குச் சென்று அவர்களின் இடத்திற்கு ஏற்ப கழிவறையை காம்பேக்ட்டாக அமைத்துக் கொடுப்பதுதான் டாக்டர் அவினாஷின் ஸ்டைல். கழிவறை கிடைத்தால் போதுமா? அதை சுத்தமாக பராமரிக்க நீர் வசதி வேண்டாமா? இந்த கிராமத்துக்கு தண்ணீர் வசதி கிடைப்பதற்காக டாக்டர் அவினாஷ் மேற்கொண்ட முயற்சிதான் இவரை ‘பாணியாச்சா டாக்டர்’ என்று மக்கள் செல்ல மாக அழைக்கக் காரணம். சதாரா நகரில் 10 கோடி லிட்டர் நீர் சேமிக்கப்படும் அளவுக்கு பெரிய நீர்த்தேக்கத்தை உருவாக்கியிருக்கிறார் டாக்டர் அவினாஷ்.

பைசுகாலே, கிர்கசல், பன்வான், ஜாகன்காவோன், வேலு, ஜல்னாவிலுள்ள அகோலதேவ், கானேவாடி, அவுரங்காபாத்தின் கிங்காவோன் ஆகிய நீர்த்தேக்கங்களையும் புனரமைத்து மழைநீரைச் சேமிக்கும்படி மாற்றியிருக்கிறார். இப்போது 15 கிணறுகளையும் இரண்டு ஆழ்துளைக் கிணறுகளையும் இணைக்கும் பணியில் துடிப்பாகச் செயல்பட்டு வருகிறார். கடந்த 19 ஆண்டுகளில் 70 கிராமங்களின் நீர்ப்பஞ்சத்தைப் போக்கியுள்ளார் இந்த லட்சிய டாக்டர். ‘‘மருத்துவப் பணியின்போது கிராமத்திலிருந்து அழைப்புகள் வரும். மருத்துவப் பணியை முடித்தபிறகு கிராமத்துக்குச் சென்று பிரச்னைகளைத் தீர்க்க முயற்சிக்கிறேன்.

கல்வி கற்ற இளைஞர்கள் கிராமத்தின் பிரச்னைகளை ஆராய்ந்து தீர்க்கலாம். நம் பிரச்னைகளை நம் கரங்கள் தீர்க்க முடிவதைப் பார்க்கும் மேஜிக் தருணம் அது...’’ உற்சாகமாகப் பேசும் அவினாஷ், இப்போது இந்தி திரைப்பட நடிகர் நாணா படேகர், ஆமிர்கான் ஆகியோரின் என்ஜிஓக்களுக்கு ஆலோசகராகச் செயல்பட்டுவருகிறார். ‘‘புகழ்பெற்ற நடிகர்கள் கிராமப்புற மனிதர்களின் முன்னேற்றத்தில் கொண்டுள்ள ஆர்வம், பிற துறையைச் சேர்ந்த மனிதர்களையும் சமூகப் பணிக்கு அழைத்து வரச் செய்ய உதவியாக இருக்கும்...’’ என நெகிழும் அவினாஷ், ராஜஸ்தானின் நீர்ப் பஞ்சத்தைப் போக்குவதற்கான திட்டங்களை உருவாக்கிவருகிறார்.

சுகாதார இந்தியா!
திறந்தவெளி கழிப்பறை ஒழிப்பு :  2 லட்சம் கிராமங்கள், 147 மாவட்டங்கள்.
2017ம் ஆண்டில் திறந்தவெளி கழிவறை ஒழிப்பு :  1,13,000 கிராமங்கள்.
தூய்மை மாநிலங்கள் : அரியானா, உத்தரகாண்ட், சிக்கிம், இமாச்சலப் பிரதேசம், கேரளா.

(Ministry of Drinking Water and Sanitation (MDWS) 2017 தகவல்படி)

வஞ்சம் தீர்க்கும் பஞ்சம்!
மழைப்பொழிவு இழப்பு : 59% (முந்தைய ஆண்டுகளைவிட).
உள்நாட்டு உற்பத்தி : 7.9% (2014), 5.7% (2017).
உணவு உற்பத்தியில் முன்னணி : அரியானா, பஞ்சாப், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம்.
முன்னணி மாநிலங்களின் மழை இழப்பு : 6% (ஜூன் - செப்).    

(India Meteorological Department (IMD) 2017 தகவல்படி)