ஊஞ்சல் தேநீர்



யுகபாரதி - 54

வரலாற்றுத் தரவுகளில் இருந்து வாழ்வை புரிந்துகொள்ளவும் அப்புரிதலில் இருந்து இலக்கியம் செய்யவும் தஞ்சை ப்ரகாஷ் அளவுக்கு எனக்குக் கற்றுக்கொடுத்தவர் எவருமில்லை. அவரை யாரென்று அறிந்துகொள்வதற்கு, என்னுடைய இரண்டாவது கவிதை நூலான ‘பஞ்சாரத்’திற்கு அவர் எழுதிக்கொடுத்த ‘நிசம்பசூதனி’ குறித்த ஆய்வுரை ஒன்றுபோதும். இரண்டாம் மாறவர்மன் தஞ்சையை அழிக்க படையெடுத்து வந்தபோது, அதை தடுத்து நிறுத்திய காளியைப் பற்றிய ஆய்வுரையே அது. நோயுற்று சென்னை ரெட்டி மருத்துவமனையில் இருந்தபோது, அந்தஆய்வுரையை அவர் சொல்லச் சொல்ல பிரதியெடுத்தவர், கவிஞர் இளம்பிறை.

உடல் சுகமில்லாமல் மருத்துவமனையில் இருந்தபோதும், என்னுடைய விருப்பத்தை நிறைவேற்றியதை அவ்வளவு எளிதாக என்னால் மறந்துவிடமுடியாது. தஞ்சையைக் காப்பாற்றிய காளியால் தஞ்சை ப்ரகாஷைக் காப்பாற்ற முடியாது போனது துர்லபமே. தனக்குக் கிடைத்த ஆசானிடமிருந்து அறிவைப் பெறுவது இயற்கை. அன்பைப் பெறுவதுதான் பாக்கியம். அறிவுக்கு அப்பால் எவ்வளவோ இருப்பதாக அவர் சொல்லுவார். மனிதர்கள் அறிவைக் காட்டிலும் நம்பிக்கைகளின் வழியேதான் வாழ்வை நடத்துவதாக எண்ணியுமிருக்கிறார். காளி காட்சியளித்து, தஞ்சாவூரைக் காப்பாற்றியதாக அவர் சொல்லியதை நான் ஏற்கவில்லை.

“அது எப்படி அறிவுக்குப் பொருத்தமில்லாமல் வரலாற்றை வடிவமைக்க முடியும்?” என்றிருக்கிறேன். “அறிவால் எல்லாவற்றையும் அறிய முடியுமென்றால் மெய்ஞானத்தை என்னவென்பீர்கள்?” என்று எதிர்க்கேள்வி கேட்டிருக்கிறார். விவாதங்களை அவர் நடத்திக்கொண்டு போகும்விதம் அலாதியாயிருக்கும். எதிர்த்தரப்பினர் என்ன வாதம் வைத்தாலும், அதை மறுத்தே தீருவதென்னும் முனைப்பு அவரிடம் இருந்ததில்லை. அறிவைவிடவும் நம்பிக்கைகள் மீதுதான் அவருக்குப் பற்று இருந்தது. கார்டன் மார்க்ஸ் லயனல் ப்ரகாஷ் என்னும் இயற்பெயருடைய அவர், ஒருமுறைகூட தன்னை கிறிஸ்தவராக வெளிப்படுத்தியதில்லை.

மாறாக ‘அங்கிள்’ எனும் சிறுகதை மூலம் கிறிஸ்தவ மதகுருமார்களின் கண்டனத்திற்கு ஆளானார். ‘பற்றி எரிந்த தென்னை மரம்’, ‘கடைசிக்கட்டி மாம்பழம்’, ‘மேபல்’, ‘பொறா ஷோக்கு’ போன்ற கதைகளின் வழியே தஞ்சை மாவட்டத்து வாழ்வியலை மிக அழகாக சித்திரித்திருக்கிறார். அசலான தஞ்சை மண்ணை அதன் இயல்பான தன்மையுடன் எழுதிக்காட்டியவர் அவர். மராட்டியரின் வருகைக்குப்பின் தஞ்சை நகரில் ஏற்பட்ட சம்பிரதாய மாற்றங்களை அவர் படைப்புகளில் மட்டுமே காண முடியும். அக்ரஹார வாடையில்லாத அவருடைய தமிழில் காவிரி ஓடிய தஞ்சையை அறியலாம். பெரும் உணர்ச்சிப் பிரவாகத்தில் எழுதிச்சொல்லும் அவருடைய எழுத்துமுறை, ஏனைய தஞ்சை எழுத்தாளர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டது.

தஞ்சை ப்ரகாஷின் முப்பத்தொரு சிறுகதைகள் அடங்கிய தொகுப்பை பொன்.வாசுதேவன் கொண்டுவந்திருக்கிறார். அத்தொகுப்பிலுள்ள கதைகளை இப்போது வாசித்தாலும் ஆரம்பகாலங்களில் என்னுள் ஏற்படுத்திய அதே அதிர்வையும் ஆச்சயர்த்தையும் ஏற்படுத்துகின்றன. என்றாலும், தஞ்சை ப்ரகாஷின் எழுத்துகள், ஒருபோதும் கதையைச் சொல்வதற்காக எழுதப்பட்டதல்ல. எழுத்தின் வழியே வாழ்வைச் சொல்வதற்காக எழுதப்பட்டவை. தொன்மைமிக்க தஞ்சை நகரின் சிதிலமடைந்த இன்றைய நிலையை விவரிப்பவை. தஞ்சை சமஸ்தானத்தையும் மராட்டிய மன்னர்களின் வருகையையும் அவர் எழுத்துகளின் வழியே கண்டறியலாம். மரபு மீறலையும் ஒழுக்க நெறிகளையும் கேள்விக்குட்படுத்தவே அவர் எழுதினார்.

தன்மீது ஒட்டியுள்ள அழுக்கை மறைக்கவும் அதை துடைத்தெறியவும் ஒரு சமூகம் எவ்வளவு பாடுபடுகிறது என்பதையே அக்கதைகளில் அவர் பிரதானப் படுத்தியிருக்கிறார். அவருடைய ‘கரமுண்டார் வூடு’, ‘மீனின் சிறகுகள்’, ‘கள்ளம்’ ஆகிய நாவல்களை வாசித்தவர்கள் என் கூற்றிலுள்ள உண்மையை உணர்வார்கள். மனிதர்களில் யாருமே ஒழுங்கில்லை என்பதுபோல அவருடைய நாவல்கள் பின்னப்பட்டிருந்தாலும், எளிய மனிதர்களின் எதிர்பார்ப்புகளை அக்கதாபாத்திரங்கள் துல்லியமாக விளக்கிவிடும். தான் பிறந்த கள்ளர் சமூகத்தை கசடு நிரம்பிய சமூகமாக சித்திரிப்பதிலிருந்தே அவர் சொந்த சாதி அபிமானத்தைத் துறந்தவர் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

திருக்காட்டுப்பள்ளியை அடுத்த உஞ்ஜினி கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்ட அவர், இந்திய கிராமங்கள் முழுவதையும் அறிந்து வைத்திருந்தார். தமிழ் இலக்கியத்திற்கு அவருடைய பங்களிப்புகளாகச் சொல்ல நிறைய உண்டு. குறிப்பாக, அவர் ஏற்படுத்திய ‘கதைசொல்லிகள்’ அமைப்பு. முழுக்க முழுக்க கதைகளைச் சொல்வதற்காகவே அவர் ஓர் அமைப்பை உருவாக்கினார். அவ்வமைப்புமூலம் ஆயிரக்கணக்கான கதைகளை அவரும் பிறரும் சொல்லக் கேட்டிருக்கிறேன். பெரியகோயில் வாசலிலோ ராஜராஜசோழன் சிலைக்கு அடியிலோ அமர்ந்து அக்கதைகளைக் கேட்டுச் சிலிர்த்திருக்கிறேன். மனித மேன்மைகளையும் விகாரங்களையும் அக்கதைகளே எனக்குத் தெரியப்படுத்தின. அவ்வமைப்பை அவர் காரணமில்லாமல் தொடங்கவில்லை.

ஆதியிலிருந்தே கதை சொல்லும் மரபு நம்முடையதென்று நிறுவும் ஆசை அவருக்கிருந்தது. கதைகளை எழுதிப் பழகாமல் சொல்லிப் பழகவேண்டுமென அவர் விரும்பினார். கதைகளைச் சொல்லும்பொழுதுதான் கற்பனைகள் விஸ்தரிக்கின்றன. எழுதும்போது அப்படியல்ல. எழுத்தில் ஏதோ ஒரு தடையிருக்கிறது. கேட்பவரின் முகக்குறிப்பை அறிந்து கதைகளைச் சொல்கையில், அக்கதையின் லட்சணம் தெரிந்துவிடும். எழுதப்படும் கதைகளுக்கான எதிர்வினைகள் முழுமையாகக் கிட்டுவதில்லை என்பது அவர் வாதம். தவிர எழுதுபவன் தன்னை நிறுவவே எழுதுவதாகவும் அவர் எண்ணினார்.

தஞ்சை ப்ரகாஷும் தஞ்சாவூர்க் கவிராயரும் இணைந்து தொடங்கிய ‘கதைசொல்லிகள்’ அமைப்பு வெகுகாலம் உயிர்ப்போடு இருந்தது. தமிழில் எழுதிவந்த பல முக்கியமான எழுத்தாளர்கள் அவ்வமைப்பில் கலந்துகொண்டு தங்கள் கதைகளைச் சொல்லியிருக்கிறார்கள். தங்களால் எழுதப்பட்ட கதைகளே ஆனாலும், ஒருசிலர் தொடர்ச்சியாக கதையைச் சொல்ல முடியாமல் போன சம்பவங்களும் உண்டுதான். பெரும்பாலும் தஞ்சை ப்ரகாஷ் எழுதப்பட்ட கதைகளைச் சொல்லியதில்லை. அங்கேயே அப்போதே யோசித்துதான் சொல்லுவார். அதிசயத்தை நிகழ்த்துவதுபோல அவரே அவர் கதையில் கரைந்தும் போய்விடுவார். அவ்வமைப்பில் யார் வேண்டுமானாலும் கதைகளைச் சொல்லலாம்.

ஒருவரே இரண்டு மூன்று கதைகளைச் சொல்லவும் அனுமதியுண்டு. வெகு விமரிசையாக நடந்துவந்த அவ்வமைப்பை கேள்விப்பட்ட புராதன செவ்விந்தியரான எரிக் மில்லர் ‘உலகத்தின் இரண்டாவது கதைசொல்லிகள்’ என்று அவ்வமைப்பை பாராட்டியிருக்கிறார். நம்முடைய கர்ணபரம்பரைக் கதைகளையும், நாடோடிக் கதைகளையும் தஞ்சை ப்ரகாஷ் சொல்லக் கேட்பது தனி அனுபவம். வயதுக்கு வராதவர்கள் கேட்கக்கூடாத கதைகளும் அவர் சேகரிப்பில் இருந்தன. அதையெல்லாம் அவர் எழுதாமல் போய்விட்டாரே எனும் வருத்தம் எனக்குண்டு. எழுதாமல் இருக்கவே அமைப்பு தொடங்கிய அவரிடம் எழுத வேண்டுமென யாராவது கோர முடியுமா?

தஞ்சாவூர்க் கவிராயர் சொல்வதுபோல, எழுத்துக்கு விரோதியாகவே அவர் இருந்தார். “சொல்லும்போது கிடைக்கும் சுகம் எழுதும்போது வருவதில்லை” என்பது அவர் ஒப்புக்கு சொல்லியதில்லை. உணர்ந்து சொல்லியது. எழுத்துக்கு எதிர்த் திசையில் ஓர் எழுத்தாளர் என்னும் அடைமொழி தஞ்சை ப்ரகாஷுக்குப் பொருந்தும். உண்மையில், வடிவ நேர்த்திக்குள் வசப்பட்டுவிடும் கதைகளில் எதார்த்தமும் சத்தியமும் இடம்பெறுவதில்லை. அதன் காரணமாகவே தஞ்சை ப்ரகாஷின் கதைகள் சுதந்திரமான எழுத்துமுறையைக் கொண்டிருந்தன. எதற்குள்ளும் அடங்கிவிடாத அவருடைய சுதந்திர மனநிலைதான், ‘சும்மா இலக்கிய கும்பல்’ எனும் அமைப்பையும் உருவாக்கியது.

எழுதுவதெல்லாம் எழுத்தாவதில்லை. யாரோ ஒருவர் எழுதிய அல்லது சொல்லிய கதையைத் திரும்பச் சொல்லும்போது அக்கதையில் வரும் பாத்திரங்கள் புது உரு கொள்கிறது. அப்படி காலந்தோறும் உருவாக்கப்பட்ட கதைகளே நம்மையும் நம்முடைய வாழ்வையும் நடத்துவதாக அவர் நம்பினார். “பதிவு செய்து வைக்கலாமே” என்றால், “தேவையானதை காலமே பதிவு செய்துகொள்ளுமே” என்பார். காகிதங்களில் எழுதப்பட்டதைவிட காற்றில் கரைத்துவிட்ட கதைகள்தான் நிலைக்கின்றன என்பது அவருடைய நம்பிக்கை.

அவர் எழுத்தை புறக்கணிக்க இன்னுமொரு காரணம் இருந்தது. அக்காரணத்தை அவரே கட்டுரையாகவும் எழுதியிருக்கிறார். ‘எழுதுகிற பிழைப்பு’ என்னும் கட்டுரையில், இன்றைய பத்திரிகைகள் எழுத்தாளனுக்கு தரும் ஊதியத்தைப் பற்றியும் கெளரவத்தைப் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார். எழுதிப் பிழைக்கும் பிழைப்பு, ஈனப் பிழைப்பு. ஒருவர் தன் வாழ்நாள் முழுக்க எழுதிப் பிழைக்கலாம் என எடுக்கும் முடிவு அபாயகரமானதே எனவும் வருந்தியிருக்கிறார். ‘காதுகள்’ நாவல் மூலம் சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் எம்.வி.வெங்கட்ராம், எழுதி ஈட்டிய தொகையில் தன்னையும் தன் மகள்களையும் கரையேற்ற பட்டபாடுகளை அருகிருந்து பார்த்தவர்களில் அவரும் ஒருவர்.

சுட்டுவிரலிலும் நடுவிரலிலும் இரத்தம் சொட்டச்சொட்ட எம்.வி.வெங்கட்ராம் எழுதிக்கொடுத்த ‘காதுகள்’ நாவலைப் பிரதியெடுத்து, அச்சுக்கு அனுப்பியவர் தஞ்சை ப்ரகாஷ்தான். நெசவுத் தொழிலிலும் ஜரிகை வணிகத்திலும் ஈடுபட்டுவந்த எழுத்தாளர் எம்.வி.வெங்கட்ராம் ஒருகட்டத்தில்  எழுத்தை முழுநேரத் தொழிலாகக் கைக்கொண்டபோது அடைந்த ஏமாற்றங்களை அவரால் தாங்கிக்கொள்ள முடிந்ததில்லை. அதனாலோ என்னவோ அவர் இறுதிவரை எழுத்துக்கு எதிராகவே செயல்பட்டுவந்தார். ஒப்பீட்டளவில் குறைவாக எழுதியுள்ள தஞ்சை ப்ரகாஷ், எழுத்தைவிட அதிகமாக இலக்கியப் பேச்சில்தான் ஈடுபட்டார். சதா இலக்கிய உரையாடல்தான். நண்பர்களை வட்டமாக அமர்த்திக்கொண்டு அவர் அடிக்கும் இலக்கிய அரட்டைக்கு ஈடு இணை எதுவுமில்லை. நேரம் போவதே தெரியாமல் தனக்குத் தெரிந்ததையெல்லாம் எதிரே இருப்பவரிடம் கொட்டிவிடுவார்.

(பேசலாம்...)

ஓவியங்கள்: மனோகர்