இளைப்பது சுலபம்
வெஜ் பேலியோவில் எடை குறைப்பது எப்படி?
அனுபவத் தொடர் - 24
உங்களுக்கு இதன் அடிப்படை இப்போது புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். உணவில் நம்மை அறிந்தும் அறியாமலும் உள்ளே போகிற கார்போஹைடிரேட் என்னும் மாவுச் சத்துதான் உடல் பெருப்பதற்குக் காரணம். இதனால்தான் உடல் இளைப்பதில் ஆர்வம் கொண்டு பேலியோவுக்கு வருகிறவர்களை ஒரு நாள் உணவை அதிகபட்சம் நாற்பது கிராம் கார்போஹைடிரேடுக்குள் அடக்கிக்கொள்ளும்படி சொல்லப்படுகிறது. உடல் பருமனுக்கு மட்டுமல்ல. நீரிழிவுக்கும் இந்த மாவுச்சத்துதான் காரணம். கார்போஹைடிரேட்டைக் குறைக்காமல், நீரிழிவு நோய் வந்துவிட்டது என்று சொல்லி மாத்திரைகளாக வாங்கிச் சாப்பிட ஆரம்பித்தால் வாழ்நாள் முழுதும் மாத்திரை தின்றுகொண்டே இருக்க வேண்டியதுதான்.
 ஒரு கட்டத்தில் மாத்திரையும் பலன் தராமல் போய் இன்சுலின் ஊசி போட வேண்டி வரும். பிறகு அதுவே ஒரு ஊசி இரண்டாகும். இரண்டு மூன்றாகும். அளவு அதிகமாகும். என்றும் பிரச்னை தொடரும். ஆனால், சர்க்கரை நோய் என்று ரத்தப் பரிசோதனையில் தெரிந்த பின்பு டாக்டர்கள் ஏன் மாவுச் சத்து மிக்க உணவு வகைகளை நிறுத்தச் சொல்வதில்லை? பொதுவாக சர்க்கரை நோயாளிகளை அரிசி குறைவாக, காய்கறிகள் அதிகமாக உண்ணச் சொல்லி சொல்லுவார்கள். நீங்கள் ‘இட்லி சாப்பிடலாமா டாக்டர்?’ என்று கேட்டால் ‘இரண்டு இட்லி சாப்பிடுங்கள்’ என்பார். ‘பொங்கல் சாப்பிடலாமா டாக்டர்’ என்று கேட்டால் ‘ஒரு கப் சாப்பிடுங்கள்’ என்பார். இனிப்புப் பொருள்கள் மட்டும் கூடவே கூடாது என்று சொல்லுவார்.
அப்படியானால் இனிப்பில் மட்டும்தான் கார்ப் உண்டு; இட்லி,தோசையில் இல்லை என்று அர்த்தமா? அதுவல்ல விஷயம். கார்பைத் தொடவே தொடாதே என்றால் நாம் நிச்சயம் கேட்கப் போவதில்லை. எதற்கு வார்த்தை விரயம்? குறைவாகச் சாப்பிடு என்று சொல்லி விடுவார்கள். மிச்சத்துக்கு இருக்கவே இருக்கிறது மாத்திரை ஆயுள் சந்தா. ஒரு மாறுதலுக்கு அரிசியைக் குறைத்து சப்பாத்தி சாப்பிடச் சொல்லி வலியுறுத்துவார்கள். அப்படியானால் கோதுமை நல்லதா? உண்மையில் சொல்வதென்றால் அரிசியைவிட மோசமான தானியம் கோதுமை (அனைத்தைவிடவும் மோசமானது மைதா). எவ்வளவுக்கு எவ்வளவு நாம் அதிலிருந்து விலகி நிற்கிறோமோ, அவ்வளவும் நமக்கு நல்லது.
சர்க்கரை நோயாளிகளை மருத்துவர்கள் ரொட்டி சாப்பிடச் சொல்லும் காரணம், அது நமது உணவல்ல என்பதுதான். நமக்கு அதிகம் பழகாத உணவை உட்கொள்ளும்போது நாம் அளவு குறைவாக உண்போம். அளவைக் குறைப்பதன் மூலமாகவேனும் ரத்த சர்க்கரை அளவைக் குறைத்து வைக்க முடியாதா என்று பார்க்கத்தான் அப்படிச் சொல்கிறார்கள். ஆனால், நாம் என்ன செய்கிறோம்? டாக்டர் சொல்லிவிட்டார் என்று நாலு சப்பாத்தி, ஆறு பூரி கிழங்கு என்று வளைத்துக்கட்டி விடுகிறோம். இதற்கு நான்கு இட்லி சாப்பிட்டுவிட்டுப் போவதே சாலச் சிறந்தது. நிற்க. நாம் எடைக்குறைப்பைக் குறித்துப் பேசிக்கொண்டிருக்கிறோம். சத்தமில்லாமல் சங்கதி, சர்க்கரை நோயை நோக்கி நகர்ந்துவிடுகிறது பார்த்தீர்களா?
இரண்டும் ஒன்றோடொன்று தொடர்புடையது என்பது மட்டுமல்ல காரணம், சர்க்கரை ஒரு பெருங்கடல். உட்கார்ந்து கடைய ஆரம்பித்தால் இப்போதைக்குத் தீராது. எனவே அதைச் சற்று ஒதுக்கிவிட்டு மீண்டும் எடைக்குறைப்பு விவகாரத்துக்கு வருவோம். நான் பேலியோ தொடங்கியபோதே என் மனைவியும் அதைக் கடைப்பிடிக்க ஆரம்பித்தார் என்று முன்னர் சொன்னது நினைவிருக்கும். ஆனால், எனக்கு எடை குறைந்த வேகம் வேறு, அவருக்குக் குறைந்த வேகம் வேறு. ஆரம்பித்த முதல் ஆறு மாதங்களுக்குள் எனக்கு சரசரவென்று பதினைந்து கிலோக்களுக்குமேல் குறைந்துவிட்டது. ஆனால், என்னுடன் ஆரம்பித்து, என்னைவிட உணவு ஒழுக்கம் கடைப்பிடித்துக் கொண்டிருந்த என் மனைவிக்கு மூன்று கிலோ மட்டுமே அப்போது எடை குறைந்தது. அதுவும் பிற்பாடு நின்றுவிட்டது.
மூன்று வேளையும் அவர் பேலியோ உணவுதான் உட்கொண்டார். ஒழுங்காக நடைப்பயிற்சி செய்தார். அந்தக் காலத்து ஆசார மாமி கணக்காக பேலியோ ஆசாரம் கடைப்பிடித்தும் எடை இறங்குவேனா என்று ஆட்டம் காட்டியது. இது எனக்கு முதலில் புரியவேயில்லை. இருவரும் ஒரே நாள் ஒரே மாதிரியான டயட்டைத்தான் தொடங்கினோம். இருவர் உண்டதும் ஒரே விதமான பாதாம், பன்னீர், காய்கறிகள், சீஸ், வெண்ணெய் வகையறாக்கள்தாம். இருவருமே நடைப் பயிற்சி செய்தோம். இருந்தாலும் என் மனைவிக்கு ஏன் எடை குறையவில்லை?
 என் மனைவி மட்டுமல்ல, எடைக்குறைப்பில் ஈடுபட நினைக்கும் பெண்கள் அனைவருக்குமே இது பொதுவான பிரச்னை என்று பின்னால் தெரிந்தது. இதுவே அசைவ பேலியோ கடைப்பிடிக்கும் பெண்கள் என்றால் (குறைந்தபட்சம் முட்டை உண்பவர்கள் என்றால்கூடப் போதும்) இவ்வளவு மோசமாக இருக்காது. ஒரு ஏழெட்டுக் கிலோ உத்தரவாதமாகக் குறைந்துவிடும். சைவத்தில்தான் சங்கடங்கள். என்ன காரணம்? விளக்குகிறேன். பொதுவாகவே நமது தசை அணுக்களுக்கிடையே சென்று தங்கும் கொழுப்பை எரிப்பதன் மூலம்தான் எடைக்குறைப்பு என்பது நிகழ்கிறது. இதில் ஆண் பெண் பேதம் கிடையாது. எல்லோருக்கும் இப்படித்தான்.
ஆனால், ஒப்பீட்டளவில் பெண்களுக்கு ஆண்களைக் காட்டிலும் தசை குறைவு. எனவே அவர்களுக்குக் கொழுப்பு அங்கு சென்று படிவதில்லை. தசை அணுக்களுக்கிடையே கொழுப்புப் படிவங்கள் இல்லாதபடியால் என்ன டயட் இருந்தாலும் எடைக்குறைப்பு அவர்களுக்கு அதிரடி வேகம் கொள்ள மறுக்கிறது. இது முதல் காரணம். இரண்டாவது காரணம், க்ரேவிங். பிறந்ததில் இருந்து நாம் மாவுச்சத்து மிக்க உணவுப் பொருள்களையே உண்டு வளர்ந்திருக்கிறோம். இப்போது சட்டென்று அதை முற்றிலும் விட்டொழித்து கொழுப்புக்கு மாறுகிறோம். ஆனால், நமது நினைவில் அது அழியாமல் அப்படியே இருக்கும். ஆஹா, இந்த மழைக்கு சூடாக ஒரு மசால்வடை சாப்பிட்டால் எப்படி இருக்கும்!
இந்த ஞாயிற்றுக்கிழமை வெஜிடபிள் பிரியாணி சாப்பிட்டால் எப்படி இருக்கும்! ஒட்டிக்க ஒட்டிக்க ஒரு வத்தக்குழம்பு வைத்துச் சாப்பிட்டால் பிரமாதமாக இருக்குமே என்று புத்தியானது பழைய உணவையே திரும்பத் திரும்பச் சுற்றி வந்துகொண்டிருக்கும். மனக்கட்டுப்பாட்டோடு பெண்கள் இதைக் கடக்கக்கூடியவர்கள்தாம். அதில் சந்தேகமில்லை. ஆனால், அவர்கள் பிள்ளைகளுக்கு ரெகுலர் உணவு சமைத்துக்கொடுத்து அனுப்ப வேண்டியிருக்கிறது. கணவருக்கு லஞ்ச் கொடுக்க வேண்டியிருக்கிறது. உப்பு சரியாக இருக்கிறதா என்று பார்ப்பதற்காவது ஒருவாய் அள்ளி வாயில் போடவேண்டியிருக்கிறது.
இந்த ஒருவாய் விவகாரம் ஒருநாள் ஒருநாளாக, ஒவ்வொரு நாளும் தொடரும்போது உள்ளே போகும் கார்ப் அளவு நான் சொன்ன நாற்பது கிராமைத் தாண்டிப் போய்விடுகிறது (ஏனெனில் பேலியோ உணவிலேயே நாம் எடுக்கும் காய்கறிகளில் கார்ப் உண்டு. தயிர், பால் வகையறாக்களில் உண்டு என்பதை நினைவில் கொள்ள வேண்டும்). இப்படி அளவு தாண்டும் விவகாரம் தினசரி நடப்பதால் - ருசி பார்ப்பது ஒரு ஸ்பூன், இரண்டு ஸ்பூனே ஆனாலும் எடைக் குறைப்பு நிச்சயமாக நிகழாது. இன்னொரு முக்கியமான சங்கதி உண்டு. முன்பே சொன்னது போல், நமது உடல் எரிக்கும் சக்தியானது ஒன்று சர்க்கரையில் இருந்து வரவேண்டும். அல்லது கொழுப்பில் இருந்து வரவேண்டும். நாம் கொழுப்புஉணவுக்கு மாறும்போது உடல் எரிக்கத் தொடங்கும் முதல் உணவு கொழுப்புணவாக மட்டுமே இருக்க வேண்டும்.
ஆனால், இங்கே என்ன நிகழ்கிறது? காலை ஏழரை மணிக்குப் பிள்ளைகளுக்கு சாப்பாடு கட்டிக் கொடுக்கும்போது ஒரு கை அள்ளி வாயில் போட்டு ருசி பார்க்கும் சாம்பார் சாதம், ஒரு கார்ப் புதையல். அது முதலில் உள்ளே போய்விட்டால் உடல் இயந்திரம், ‘சரி இன்று வழக்கமான கார்ப் உணவுதான்; நாம் சர்க்கரையை எரித்தே சக்தி தயாரிப்போம்’ என்று முடிவு செய்துவிடும். அதன்பின் நீங்கள் என்ன உண்டாலுமே அதிலுள்ள கார்ப் மட்டுமே கணக்கில் ஏறுமே தவிர கொழுப்பெல்லாம் சேமிப்புக்குத்தான் போய்ச் சேரும். சரி, என்ன செய்யலாம்?
(தொடரும்)
- பா.ராகவன்
|