கன்னி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு புதனும் சூரியனும் தரும் யோகங்கள்



கிரகங்கள் தரும் யோகங்கள்

ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்

‘கருவிலே திருவுடையார்’ என்று சொல்வார்களே... அது கன்னி லக்னத்தில் பிறந்து, புதன் - சூரியன் சேர்க்கை பெற்றவர்களுக்குத்தான் பொருந்தும். இவர்கள் மிக இளம் வயதிலேயே மாபெரும் கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்குவார்கள். அரசாங்கத்தில் உயர் பதவி, கலைத்துறையில் சாதனை என்று தன்னுடைய முத்திரையைப் பதிப்பார்கள். நிர்வாகத் திறனும், கூர்மையான அறிவும் பெற்றுத் திகழ்வார்கள்.

புதன், சூரியன் சேர்க்கை என்பது நிபுணத்துவ யோகத்தோடு சேர்த்து தலைமைப் பொறுப்பையும் ஒருசேர அளிக்கும் அமைப்பாகும். இவர்களுக்கு நாடாளும் யோகமும் உண்டு. புதிது புதிதாக ஏதேனும் கண்டுபிடித்தபடி இருப்பார்கள். எப்போதும் தனித்துவத்தோடு செயல்படுவார்கள். எதில் ஈடுபட்டாலும் மிகத் தீவிரமாக இருப்பார்கள். எதையுமே உலகளாவிய அளவில் யோசிப்பார்கள்.

அன்றன்றைய அரசியல் நிலவரங்களைக் கொண்டு ‘எதிர்கால அரசியலில் இப்படித்தான் இருக்கும்’ என்று கணிப்பார்கள். இவர்களுக்கென்று தனித்த கனவுச் சமூகம் இருக்கும். ‘இப்படித்தான் எல்லோரின் வாழ்வும் அமைய வேண்டும். சமூகத்தில் சில விஷயங்கள் களையப்பட வேண்டும்’ என்றெல்லாம் யோசிப்பார்கள்.

இவை கன்னி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு புதனும் சூரியனும் இணையும்போது கிடைக்கும் பொதுவான யோகங்கள். இனி ராசியில் எந்தெந்த இடங்களில் இந்த சேர்க்கை இருந்தால், என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்...  லக்னத்திலேயே - அதாவது கன்னியில் புதனோடு சூரியன் இணையும்போது அது ‘புதாத்திய யோகம்’ என்று அழைக்கப்படுகிறது. அதாவது புதனும் ஆதித்தனான சூரியனும் இணைவது. அதீத நுண்ணறிவுத் திறனும், சிறந்த நிர்வாகத் திறமையும் ஒருமித்த ஒரு அம்சத்தை இந்த இணைப்பு தருகிறது. எதிலுமே கூர்நோக்கு உடையவர்களாக இருப்பார்கள்.

தனக்கென்று தனி வாழ்வும் சிந்தனையும் கொண்டவர்கள். இவர்கள் ஒட்டுமொத்த சமூகமும் எப்படி அமைய வேண்டும் என்கிற சிந்தனையை முன்னெடுப்பவர்களாக இருப்பார்கள். இவர்களே விதி சமைப்பவர்கள். லக்னத்திற்கு இரண்டாம் இடமான துலாம் ராசியில் புதனோடு சூரியன் அமர்ந்திருக்கிறார். இங்கு சூரியன் நீசமாகிறார். எனவே, ஆரம்ப காலக் கல்வியில் தடை இருக்கும். கண்களில் ஏதேனும் பிரச்னை எனில் உடனே கவனிப்பது நல்லது.

அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டிய வரிகளை உடனுக்குடன் செலுத்தி விடுதல் நல்லது. இல்லையெனில் வீண்பழி வந்தபடி இருக்கும். கொஞ்சம் திக்குவாய் பிரச்னை இருந்து, காலப்போக்கில் சரியாகும். இவர்கள் பெரும்பாலும் கூட்டுத் தொழிலைத் தவிர்ப்பது நல்லது. பற்களையும் இவர்கள் பாதுகாப்பது நல்லது. கண்டபடி பணத்தை வாரி இறைத்து செலவு செய்துவிட்டு பின்னர் வருத்தப்படுவார்கள். யாரிடம் என்ன பேச வேண்டும் என்பதையும் இவர்கள் அறிய வேண்டும்.

மூன்றாம் இடமான விருச்சிகத்தில் சூரியனும் புதனும் அமர்கிறார்கள். இந்த அமைப்பு வசதி வாய்ப்புகளை அதிகரிக்கச் செய்யும். அடிப்படை விஷயங்களான வீடு, மனை போன்றவை அமைந்து விடும். அரசாங்கத்தில் நல்ல உயர் பதவிகளில் அமர்வார்கள். நன்கு ஆலோசனைகள் சொல்லி வழிகாட்டுவார்கள். அதேசமயம் தொடக்கத்தில் சிரமங்கள் வந்து பிறகு நீங்கும். மிகப் பெரும்பாலோர் சுயதொழி லில் ஈடுபடவே விரும்புவார்கள். பொதுவாக பொதுமக்களிடையே செல்வாக்கு பெறவே முயற்சிப்பார்கள். போக விஷயங்களில் மிகவும் ஈடுபாடு காட்டுவார்கள். 

நான்காம் இடமான தனுசு ராசியில் புதன் அமர்வதென்பது கேந்திராதிபதி தோஷத்தைக் காட்டுகிறது. நான்காம் இடமென்பது தாயார் ஸ்தானத்தை குறிக்கும். அங்கு சூரியனோடு புதன் அமர்வதால் தந்தையாரோடு ஏதேனும் ஒரு வழியில் பிரச்னைகள் வந்தபடி இருக்கும். வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. இரவு நேரங்களில் எங்காவது இவர்கள் பயணம் செல்லும்போது உடைமைகளை ஜாக்கிரதையாக பார்த்துக்கொள்ள வேண்டும். தாயார் ஜீனியஸாக இருந்து இவர்களை வழிநடத்துவார்கள். புத்தகங்கள் எழுதுவதில் மிகுந்த ஆவலோடு ஈடுபடுவார்கள்.

நிலம், வீடு, மனை என வாங்கும்போது பத்திரங்களை இவர்கள் மிகக் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும். ஐந்தாம் இடமான மகரம், பூர்வ புண்ணிய ஸ்தானமாகும். இங்கு சூரியனும் புதனும் அமர்ந்திருந்தால் கொஞ்சம் பதற்றமாகவே இருப்பார்கள். அவ்வளவு எளிதில் எந்த விஷயத்திலும் திருப்தியுற மாட்டார்கள். குழந்தை பாக்கியம் கொஞ்சம் காலதாமதமாகக் கிட்டும். ஆனால், அழகும், விவேகமும், புத்திசாலித்தனமும் நிறைந்த குழந்தைகள் அமைவார்கள். கனவுத் தொல்லைகளால் அவதிப்படுவார்கள். உறக்கமின்மை பிரச்னையும் இருக்கும். அதனால் இவர்கள் உடல்நிலையின் பொருட்டு நன்கு தூங்குவது நல்லது.

ஏனெனில், பன்னிரெண்டாம் அதிபதியான சயனத்திற்குரியவன் ஐந்தில் அமர்வதால் பிள்ளைகள் குறித்து வீண் கவலைகளால் தூங்காமல் இருப்பார்கள். ஆறாம் இடமான கும்பத்தில் சூரியனோடு புதன் அமர்வதால் எதற்கெடுத்தாலும் அவசரப்படுவார்கள். ஆனால், நிறைந்த செல்வம் பெற்று வாழ்வார்கள். அரசியல்வாதிகளோடு நெருக்கமாக இருப்பார்கள். அவசரப்பட்டு வாக்கு கொடுத்துவிட்டு மாட்டிக் கொள்வார்கள். தந்தையை எப்போதும் எதிரியாகவே பாவிப்பார்கள்.

‘நான் இப்படி இருப்பதற்குக் காரணம் தந்தைதான்’ என்று கூறும் மனோபாவம் இருக்கும். இவர்கள் கடன் வாங்கவே கூடாது. பூர்வீகச் சொத்துகளால் தொந்தரவு வந்து நீங்கும். இவர்கள் அதை ஒரு அளவுக்கு மேல் எதிர்பார்க்க வேண்டாம். சைனஸ், எலும்புத் தேய்வு, அடிக்கடி ஏற்படும் தலைவலி என்று அவஸ்தைப்படுவார்கள். ஏழாம் இடமான மீனத்தில் புதன் நீசமடைகிறது. மேலும், கேந்திராதிபதி தோஷமாகவும் இருக்கிறது. இதோடு சூரியனும் சேருவதால் வாழ்க்கைத்துணையோடு ஈகோ பிரச்னை வந்தபடி இருக்கும். வாழ்க்கைத்துணையின் கண்களில் ஏதேனும் பிரச்னை வந்து நீங்கும். ஆனால், மிகுந்த அறிவுத் திறனோடு துணைவர் அமைவார்.

நன்கு செல்வ வளத்தோடு திகழ்வார். இவர்கள் கூட்டு வியாபாரத்தைத் தவிர்ப்பது நல்லது. எட்டாம் இடமான மேஷத்தில் புதனும் சூரியனும் மறைகிறார்கள். இங்கு சூரியன் உச்சமாகிறார். எனவே, வாழ்வின் அடிப்படை வசதிகள் இயல்பாகவே அமைந்துவிடும். சவால்களான வேலைகளை தானாக எடுத்துச் செய்வார்கள். ஆனால், எந்த வேலையை எடுத்தாலும் தள்ளிப் போட்டுக்கொண்டே இருப்பார்கள். அரசாங்கத்திலுள்ள பெரிய அதிகாரிகளோடு கூட சர்வ சாதாரணமாக மோதுவார்கள்.

திடீர் பயணங்கள் வந்தபடி இருக்கும். பெரும்பாலும் இவர்கள் பயணப்படுவதையே விரும்புவார்கள். எல்லா விஷயங்களைக் குறித்த அறிவும் இருக்கும். ஆனால், எதையும் பணமாக உபயோகமாகும் விதத்தில் மாற்றத் தெரியாது. ஒன்பதாம் இடமான ரிஷபத்தில் புதனும் சூரியனும் அமர்வதென்பது விசேஷம்தான். இவர்கள் தந்தையை எப்போதும் போட்டியாகக் கருதுவார்கள். ஆனாலும், உள்ளுக்குள் தந்தையின் ஆசையை நிறைவேற்றவே துடிப்பார்கள். இவர்கள் சேமிப்பது எப்படி என்பதைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

பத்தாம் இடமான மிதுனத்தில் புதனும் சூரியனும் அமர்ந்தால் அரசாங்க கருவூலம், அது சார்ந்த அக்கவுண்ட்ஸ். அமைச்சர்களின் ஆலோசகர், வங்கியில் பணி, கன்சல்டிங், பத்திர எழுத்தாளர், பத்திரிகைத் துறை, ஆயுள் காப்பீட்டுத் துறை, மருத்துவத்தில் நரம்பியல் நிபுணர் என வாழ்க்கை அமையும். இவர்கள் எப்போதுமே தந்திரசாலியாக இருப்பார்கள். சிலர் ஐ.ஏ.எஸ், ஐ,பி.எஸ். என்று உச்சத்துக்குச் செல்வார்கள். பதினோராம் இடமான கடகத்தில் சூரியனும் புதனும் அமர்ந்தால் மூத்த சகோதர, சகோதரிகள் மிகுந்த அன்போடு இருப்பார்கள்.

எப்படியாவது முன்னேற வேண்டுமென்கிற வெறி இருக்கும். இது பாதக ஸ்தானமாக இருப்பதால் தந்தையார் எல்லா விஷயத்திற்கும் தடையை ஏற்படுத்திக் கொண்டிருப்பார். இதனால் இருவருக்கும் சரியாக வராது. பன்னிரண்டாம் இடமான சிம்மத்தில் சூரியன் ஆட்சியாகி, கூடவே புதனும் அமர்ந்து, இருவரும் மறைகிறார்கள். இவர்கள் தீவிர ஆன்மிகத்தில் ஈடுபடுவார்கள். நிறைய வெளிநாடுகளுக்குப் பயணம் செய்தபடி இருப்பார்கள். சித்தர்களின் ஜீவ சமாதிகளுக்கு அடிக்கடி சென்று வருவார்கள்.

கனவைப் பற்றி தீவிரமாக ஆராய்வார்கள். ஆத்மகாரகனான சூரியனோடு புதனும் சேர்ந்தால் எங்கேனும் தீர்த்த யாத்திரை மேற்கொண்டு சென்றபடி இருப்பார்கள். நிறைய ஆன்மிகப் புத்தகங்களை எழுதிக் குவிப்பார்கள். பொதுவாகப் பார்த்தால் இதுவொரு நல்ல அமைப்புதான். ஆனால், கிரகங்கள் நீசமோ அல்லது பகையோ பெறும்போது பாதிப்புகள் ஏற்படலாம். அதை நேர்மறையாக மாற்ற கோயில்களுக்குச் செல்லலாம். இந்த அமைப்பு புலமையைத் தருவதாகும்.

எனவே, பெரும் புலமைபெற்ற ஒருவரின் ஜீவசமாதிக்குச் செல்வது என்பது மிக நல்ல பயனைத் தரும். அப்படிப்பட்ட ஒரு சன்னதியே ஒட்டக்கூத்தர் ஜீவசமாதியாகும். கம்பனின் காலத்திலேயே வாழ்ந்த இணையற்ற புலவர். அவரின் ஜீவசமாதியானது கும்பகோணத்திற்கு அருகேயுள்ள தாராசுரத்தில் ஐராவதேஸ்வரர் கோயிலுக்கு அருகேயே அமைந்துள்ளது. தரிசித்து மேன்மை பெறுங்கள்.

(கிரகங்கள் சுழலும்...)

ஓவியம்: மணியம் செல்வன்