கவிதைக்காரர்கள் வீதி



மணலின் கதை

இது
ஒரு மணலின் கதை.
வெறும்
மணலோடு முடிந்துவிடுவதில்லை
எந்தவொரு மலையின்
கதையும்.
தன்னுடைய
கம்பீரத்தை வெளியேற்றிவிட்டு
கருணையை உள்ளிழுத்துக்கொண்டதுதான்
மலையின் முதல் முயற்சி.
தன்மேல் விழுந்த
மழைத்துளிகளைக்
கண்ணீர்த் துளிகளாக்காததுதான்
மலையின் கடைசி பயிற்சி.
பயிற்சி முடித்த மலை
மாறிவிட்டிருந்தது

மணலாக.
இனி
பயிற்சி எடுக்க வேண்டியது
மணல்.
புழுதியென எழுந்து
தானும் ஒருநாள்
காற்றில் அலைய நேரிடும்
என்பதை அறியாதவரை
மகிழ்ச்சியுடன்தான் இருக்கும்
எப்படிப்பட்ட மலையும்.
இது
தன்னை மலையாக வைத்திருந்த
ஒரு மணலின் கதை.
இது
தன்னையே துகளாக்கிக்கொண்ட
ஒரு மலையின் கதையும்கூட.

-மணி சண்முகம்