கவிதைக்காரர்கள் வீதி
 வாய் திறந்தால் மெட்டுக் கட்டிப் பாடி விடுகிறது கூடு கட்டத் தெரியாத குயில்! - பாலாமிர்தன், சென்னை-77.
மனம் போல் கிளை விரித்திருக்கிறது மரம் இலை போல் ஆங்காங்கே அமர்ந்திருக்கின்றன பறவைகள் பறவை போல் தரையிறங்குகிறது பழுத்த இலை மரம் போல் நின்று ரசிக்கிறேன் நான் - தளபதி கோபால்,மோகனூர்.
பறவையொன்றின் புறப்பாட்டில் குலுங்கி நிற்கிறது மரக்கிளை - கீரன் செல்லதுரை,புதுக்கோட்டை.
நான் கிறுக்கிய சுவற்றில் அப்பா எழுதி வைத்திருக்கிறார் எந்தெந்த வேளைகளில் எத்தனை எத்தனை மாத்திரையென்று. - கவி கண்மணி, கட்டுமாவடி.
தேரோட்டம் முடிந்து எல்லாம் விற்றுத் தீர்ந்த பின்னே தொடங்குகிறது பலூன்காரர் வீட்டில் திருவிழா. - தாயுமானவன் மதிக்குமார், சிங்கப்பூர்.
எந்த பவுடர் பூசினாலும் மணக்கிறது குழந்தையின் வாசனையில்... - க.விக்னேஷ், காரைக்குடி.
|