சகல நலன்களும் அருளும் சப்த மாதர்கள்



மணக்கால்

சப்த கன்னியர் பக்தி ஸ்பெஷல்


செட்டியப்பர், மலையாள தேசத்து மந்திரவாதி. ஆனாலும், இவர் தனது மந்திரத்தை யாருக்கு எதிராகவும் பிரயோகித்தது கிடையாது. மஞ்சள்  வியாபாரத்தையே பிரதான தொழிலாகச் செய்து வந்தவர் அவர். ஒருமுறை வியாபார விஷயமாக அவர் மணக்கால் கிராமத்திற்கு வந்தார். வழியில் ஓர்  ஆலயம் இருப்பதையும், அந்த ஆலயத்தின் எதிரில் உள்ள திருக்குளத்தில் ப்ராம்மி, வைஷ்ணவி, மாகேஸ்வரி, கவுமாரி, சாமுண்டி, ஐந்த்ரீ, வராகி  ஆகிய சப்தமாதர்கள் ஆனந்தமாக நீராடிக்கொண்டு இருப்பதையும் பார்த்தார்.

தெய்வீக அழகு நிரம்பிய அவர்களின் அருகில் சென்ற செட்டியப்பர், ‘உங்களுக்கு மஞ்சள் வேண்டுமா?’ என்று கேட்டார். விளையாடியபடியே  நீராடிக்கொண்டு இருந்த கன்னியர்கள், செட்டியப்பரிடம் தங்களுக்கு மஞ்சள் வேண்டாம் என்று கூறினார்கள். அதைக் கேட்டதும் அவருக்கு,  தேவகன்னியர்கள்போல் தோற்றமளித்த அவர்களிடம் தனது வியாபாரம் நடக்கவில்லையே என்ற வருத்தம் மேலோங்கியது. அந்தப் பெண்களை  மிரட்டியாவது தன்னிடம் உள்ள மஞ்சளில் சிறிதளவேனும் வாங்க வைக்க வேண்டும் என்று அவர் எண்ணினார்.

இதனையடுத்து அவர் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டார். நீராடிக்கொண்டு இருந்த சப்த கன்னியர்கள் தாங்கள் அணிந்து வந்து இருந்த ஆடைகளை  திருக்குள கரையில் வைத்திருந்தனர். அந்த ஆடைகள் அனைத்தையும் செட்டியப்பர் எடுக்க ஆரம்பித்தார். முருகனின் சக்தியான கவுமாரி அதை  பார்த்து விட்டாள். உடனே செட்டியப்பரை அழைத்தாள். எனக்கு ‘கொஞ்சம் மஞ்சள் வேண்டும்’ என்றாள். அதைக்கேட்டதும் மனம் மகிழ்ந்த செட்டியப்பர்  ‘எவ்வளவு மஞ்சள் வேண்டும்? என்று கேட்டார். அவர் அவ்வாறு கேட்டதும் கவுமாரி, ‘இதோ, இதன் எடைக்கு எடை மஞ்சள் கொடுத்து விட்டு  பணத்தை வாங்கிக்கொண்டு போ’ என்று கூறியதோடு, தனது தலையில் இருந்த ஒரு மலரை தூக்கி அந்த வியாபாரியை நோக்கி வீசினாள்.

உடனே வியாபாரி அலட்சியமாக அந்த மலரை எடுத்து தன்னிடம் இருந்த தராசுத் தட்டின் ஒரு பகுதியில் வைத்தார். அதன் எடைக்கு சரியாக  மஞ்சளைப் போட்டார். பூ இருந்த தராசு தட்டு கீழே இறங்கியது. இதையடுத்து வியாபாரி மேலும் மஞ்சளைப் போட்டார். தட்டு மேலும் கீழே  இறங்கியது. ‘என்ன இது, ஆச்சரியமாக உள்ளதே!’ என்று வியந்த செட்டியப்பர் தான் மூட்டையில் கொண்டுவந்திருந்த மொத்த மஞ்சளையும் தராசுத்  தட்டில் வைத்தபோதும், பூ இருந்த தட்டு தாழ்ந்தே இருந்தது. சிறிதுகூட மேலே வரவேயில்லை. ‘மந்திரவாதியான தன்னிடமே இந்த கன்னியர்கள்  மாயவித்தை செய்கிறார்களோ’ என்று யோசித்தார். அப்போதுதான் அவருக்கு உண்மை தெரிந்தது.

அந்த பெண்கள் அனைவரும் சாதாரண பெண்கள் அல்ல, தெய்வீகப் பெண்கள் என்பதை உணர்ந்தார். உடனே அவர்களின் காலில் விழுந்து மன்னிப்பு  கேட்டார். அங்கேயே சிறியதொரு ஆலயம் அமைத்து சப்தமாதர்களை வழிபட்டார். திருச்சி மாவட்டம் லால்குடிக்கருகே உள்ள மணக்கால் கிராமத்தில்  அமைந்துள்ளது செட்டியப்பர் எழுப்பிய கவுமாரி மற்றும் சப்தமார்கள் ஆலயம். இந்த ஆலயத்திற்கு நங்கையாரம்மன் என்ற புராணப் பெயரும் உண்டு.  ஆலயத்திற்குள் நுழைந்ததும் இடதுபுறம் மதுரைவீரன் சந்நதி உள்ளது. அதை அடுத்துள்ள மகாமண்டபத்தில் வலதுபுறம் செட்டியப்பரின் வடிவம்  உள்ளது. அர்த்த மண்டப நுழைவாயிலின் இரண்டு புறங்களிலும் திருமேனிகள் அமைந்துள்ளன.

கருவறையில் சப்தமார்கள் அழகுற அமைந்து பக்தர்களுக்கு ஆசியளிக்கின்றனர். இங்குள்ள சப்தமாதர்களை வணங்கினால் மாங்கல்ய பலம் அளித்து  மஞ்சள், குங்குமம் நிலைக்கச் செய்வார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பிராகாரத்தில் யானை சிலையும், குதிரை சிலையும் சுதை வடிவில் காட்சி  தருகின்றன. யானையின் மேல் ஐயனாரும், குதிரையின் மேல் கருப்பண்ணசாமியும் அமர்ந்திருக்கின்றனர். சாமிக்கும், அவர் சவாரி செய்யும்  குதிரைக்கும் மாலை போட்டு பிரார்த்தனை செய்தால் கடன் தொகை வசூலாகும், திருமணம் இனிதே நடை பெறும் என்று சொல்லப்படுவதால்  ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து கருப்பண்ண சாமியை வழிபட்டுச் செல்கிறார்கள்.

இந்தக் கோயிலின் தல விருட்சமான நருவளி மரம் தெற்குப் பிராகாரத்தில் பிரமாண்டமாக பரந்து விரிந்து காணப்படுகிறது. இந்த மரத்தை வலம் வந்து  பிரார்த்தனை செய்து வழிபடுபவர்களுக்கு குழந்தை பாக்கியம் நிச்சயம் கிடைக்கும் என்பது பல பெண்களின் அனுபவ நம்பிக்கை. மேற்குப் பிராகாரத்தில்  ஐயனார் சந்நதியும், எதிரில் யானை சிலையும் உள்ளன. மிகவும் பழமை வாய்ந்த இந்த ஆலயம் பல நூற்றுக்கணக்கான குடும்பங்களின்  குலதெய்வமாக திகழ்கிறது. இத்தலத்தில் ஆட்சிசெய்யும் கவுமாரி மற்றும் சப்தமாதர்கள் தன்னை வேண்டி வரும் பக்தர்களை தனது குழந்தைகளாக  நினைத்து அருள்புரிந்து வருகிறார்கள்.

குழந்தை வரம், கடன் வசூலாகுதல், வியாபார விருத்தி ஆகிய கோரிக்கைகளுக்காக வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து  வருகிறது. பிரசித்தி பெற்ற இந்த ஆலயம், காலை 6 முதல் 10 மணிவரையும், மாலை 5 முதல் இரவு 8 மணிவரையும் திறந்திருக்கும்.மாசி மாத  அமாவாசையை தொடர்ந்து நடைபெறும் கரக திருவிழா இங்கு வெகு சிறப்பானது. பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த திருவிழாவில்  கலந்துகொண்டு சப்த மாதர்களை வழிபடுகிறார்கள். இந்த ஐந்து நாள் திருவிழாவில் குட்டி குடித்தல் என்ற நிகழ்ச்சியும் நடைபெறும். ஆயிரக்கணக்கான  மக்கள் இந்தத் திருவிழாவில் கலந்து கொண்டு மகிழ்கின்றனர்.

நவராத்திரி விழா 10 நாட்களும் இறைவிக்கு லட்சார்ச்சனை நடைபெறுகிறது. பத்தாம் நாள் நடைபெறும் தயிர் பாவாடை எனும் வழிபாடு  வித்தியாசமானது. அர்த்த மண்டபம் முழுவதும் சாதத்தில் தயிரைக் கலந்து தயிர்சாதமாகக் கொட்டி வைத்து நிரவி விடுவார்கள். பார்க்கும்போது அர்த்த  மண்டபம் வெள்ளை வெளேர் என மல்லிகை மலர்களால் நிறைக்கப்பட்டதுபோல் இருக்கும். பின்னர் அந்த தயிர் சாதத்தை பக்தர்களுக்குப் பிரசாதமாக  வழங்குவார்கள். ஆடி, தை, மாத வெள்ளிக்கிழமைகளில் மாவிளக்கு பூஜை கோலாகலமாக இங்கு நடைபெறுகிறது. சித்திரை மாதப் பிறப்பு, விஜயதசமி  நாட்களில் அம்மன் சிம்ம வாகனத்தில் வீதியுலா வருவாள்.

இந்த ஆலயத்தில் ஒருகால பூஜை மட்டுமே நடந்தாலும் ஆலயம் பகல் நேரம் முழுவதும் திறந்திருப்பதை பக்தர்கள் அனைவரும் பாராட்டி  மகிழ்கிறார்கள். அகந்தையுடன் வந்த செட்டியப்பரின் கொட்டத்தை அடக்கிய கௌமாரியும், பிற மாதர்களும் தம்மை வணங்கும் பக்தர்களின்  அகந்தையை, அவர்களுடைய எதிரிகளை அழித்து, பக்தர்களை மகிழ்வோடு வாழ வைப்பது சத்தியமான நிஜம். பொதுவாக அனைத்து ஆலயங்களிலும்  சப்த கன்னிமார்களின் சந்நதி வடக்கு நோக்கியே அமைந்திருக்கும். ஆனால் இங்கு கிழக்கு திசை நோக்கி அமைந்து இருப்பதும் தனிச்சிறப்பாகும்.  திருச்சி - அன்பில் பேருந்து சாலையில் லால்குடியில் இருந்து ஒரு கி.மீ. தொலைவில் உள்ளது மணக்கால்.