மெட்டி அணிந்து மங்களம் அருளும் மீனாட்சி



திருச்சி - நன்னிமங்கலம்

நன்னிமங்கலம் கிராமத்தில் மீனாட்சி-சுந்தரேஸ்வரர் அருளும் திருக்கோயில் எழிலார்ந்து நிற்கிறது. சுற்றிலும் தோப்புகளும் வயல் வெளிகளும் சூழ்ந்துள்ளன. 1200 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயத்தில் உயரமான திருமதிற்சுவர்கள் அமைந்துள்ளன. கருவறையில் இறைவன் சுந்தரேஸ்வரர் லிங்கத்திருமேனியில் மேற்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார்.

ஐந்தடி உயரத்தில், கரும்பச்சை நிறத்தில் மரகத மேனியராய் இவர் ஜொலிக்கிறார். மகாமண்டபத்தின் இடதுபுறம் இறைவி மீனாட்சியின் சந்நதி உள்ளது.  முன்கை அபய முத்திரை காட்ட, மறு கையில் மலர் ஏந்தியிருக்கிறாள். கால்கட்டை விரல்களில் மெட்டி அணிந்திருப்பது அபூர்வமான காட்சி. அந்த மெட்டி தரிசனம் காணும் திருமணத்துக்காகக் காத்திருக்கும் இளைஞர்கள், வெகுவிரைவில் அந்த பாக்கியம் அருளப் பெறுகிறார்கள்.

பொன்னாலாகிய மூன்று தளத் தொகுதியுடைய பொன் வில்வ சாரம், யோக தவ ஜப சக்திகளைப் பெற்றிருப்பவர்களைத் தவிர வேறு எவர் கண்களுக்கும் தென்படாது. மகிமைமிக்க பொன்வில்வ சாரத்தை சிவபெருமான் குபேரனிடம் அளித்தார். குபேரன் இதை தன் குமாரர்களான மணிக்ரீவன், நளகூபன் இருவரிடமும் அளித்து பூலோகத்தில் உள்ள சுயம்பு லிங்க மூர்த்திகளில் வைத்து வழிபட்டு அதன் மகிமையை அறிந்துவரும்படி கட்டளையிட்டார்.

அவ்வாறே அவர்கள் வழிபட, அந்த பொன்வில்வசாரம் பல இடங்களில் பசுமையாக சாதாரண வில்வ தளம் போல்  காட்சி தர, சில இடங்களில் மறைந்து விட்டது! பிரபஞ்சத்தின் தெய்வீக மையமாகத் திகழும் திருவண்ணாமலை வந்தடைந்தனர். பௌர்ணமி அன்று கிரிவலம் வந்து பொன்வில்வ சாரத்தை அண்ணாமலை ஆண்டவன் பாதங்களில் வைத்து ‘ஓம் நமசிவாய’ மந்திரத்தை ஓதினர்.

அண்ணாமலையாரிடம் வில்வதளம் சுவர்ணமாகப் பிரகாசித்தது.  சென்னிவளநாடு செல்லும்படி அவர்களுக்கு அண்ணாமலையார் அசரீரியாய் அருள் வழிகாட்டினார். அதன்படி இருவரும் திருத்தவத்துறை என்ற தற்போதைய லால்குடியில் உள்ள சப்தரீஷிஸ்வரர் ஆலயத்திற்கு வந்தனர். அங்கிருந்த சிவகங்கை தீர்த்தத்தில் மூழ்கி நீராடிய அவர்கள் அருகில் வேறொரு ஆலயம் இருப்பதைக் கண்டனர்.

அதேசமயம் தங்கள் கரத்திலிருந்த பொன்வில்வசாரம் மறைந்தது கண்டு பதறினர். உடனே அந்த ஆலய கருவறை நோக்கிச் சென்றனர். அங்கே கரும்பச்சை வண்ணத்தில் மரகதமாய் ஜொலிக்கும் சுயம்பு லிங்கத்திருமேனியில் தாங்கள் கொண்டு வந்த பொன்வில்வசாரம், பன்மடங்காகப் பெருகி மணம் வீசக்கண்டனர்.

அவை ஸ்வர்ணவில்வ தளங்களாக மஞ்சள் நிறத்தில் ஜொலித்தன. இருவரும் மெய் சிலிர்த்து ‘ஓம் நமசிவாய’ என ஓதி அர்ச்சிக்க அது மேலும் பொங்கிப் பெருகியது. இருவரும் மன பூரிப்போடு தேவலோகம் சென்றனர். தன் புதல்வர்கள் பொன்வில்வ சாரத்தின் மகிமையையும் தேவரகசியத்தையும் உணர்ந்ததை அறிந்த குபேரன் மனம் மகிழ்ந்தார். சென்னி வளநாட்டிற்கு வந்து மீனாட்சி சுந்தரேஸ்வரரை வழிபட்டார்.

இந்த ஆலயத்தை பக்தர்கள் சென்னி வாய்க்கால் கோயில் என்றே அழைக்கின்றனர். பிரம்மா இங்கு சிவனை தன் தலைகளால் (சென்னி) வணங்கி வரம் பெற்றதால் இத்தல இறைவன் சென்னி சிவம் என்றே அழைக்கப்பட்டார். பிற்காலத்தில் இதுவே சென்னி வளநாடு எனப் பெயர்கொண்டு, தற்போது சென்னிவாய்க்கால் கோயில் என்றானது.

இறைவனின் தேவக்கோட்டத்தில் துர்க்கா தேவியும் தட்சிணாமூர்த்தியும் அருள்பாலிக்கின்றனர். பிராகாரத்தில் மேற்கில் பெருமாள் ஆலயம் உள்ளது. லட்சுமி நாராயணப் பெருமாளும், ஸ்ரீதேவி-பூதேவி சமேத வரதராஜப்பெருமாளும் தனித்தனி சந்நதிகளில் அருள்பாலிக்கின்றனர். ஆலய தலவிருட்சம் பொன்வில்வ மரம்.  இதன் இதழ்கள் மூன்று தளங்களைக் கொண்டதாக அதிசய காட்சி நல்குகிறது.

திருச்சியிலிருந்து 23 கி.மீ. தொலைவில் உள்ளது நன்னிமங்கலம். பௌர்ணமி அன்று தலவிருட்சமான பொன்வில்வ மரத்திற்கு அரைத்த சந்தனம் மஞ்சள் குங்குமம் சாத்தி, அடிப்பிரதட்சனம் செய்து இறைவன் இறைவியை வழிபட்டால் குபேரன் மற்றும் லட்சுமி தேவியின் அருளைப் பெறலாம் என பக்தர்கள் நம்புகின்றனர்.

- ஜெயவண்ணன்