சிறப்பான வாழ்க்கை நிச்சயம்!



என்ன சொல்கிறது, என் ஜாதகம்?

* எனது மகனுக்கும், எனது மச்சினன் மகளுக்கும் திருமணம் செய்து வைத்தோம். திருமணமான சில மாதங்களில் அவள் தாய்வீடு சென்று விட்டாள். அடுத்த சில மாதங்களில் குழந்தையும் பிறந்தது. மீண்டும் பெரியவர்கள் பேசி இருவரையும் சேர்த்து வைத்தோம். பின்னர், சில மாதங்கள் கழித்து என் மகனை பிடிக்கவில்லை, சேர்ந்து வாழ முடியாது என்று கூறி பிரிந்து சென்று விட்டாள். என் மகன் குறைந்த சம்பளத்தில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறான். அவன் வேலை மற்றும் எதிர்காலம் எப்படி இருக்கும்?
 - முனிராஜா, திருப்பூர் மாவட்டம்.

தங்கள் மகன் ஜாதகப்படி 4ல் செவ்வாய் இருக்கிறது. இது தோஷமாகும். குருவுடன் சேர்ந்து இருப்பது தோஷ நிவர்த்தி என்று சிலர் கூறுவதுண்டு. இருந்தாலும் தோஷத்தின் வீர்யம் குறையாது. அதே போல் சனி 2ல் பலம் பெற்றிருப்பதும், தங்கள் மகனின் திருமண வாழ்வில் ஏற்படும் தேவையற்ற சலனங்களை காட்டுகிறது. தங்கள் மருமகளின் ஜாதகம் இணைக்கப்படவில்லை. அதனால் தோஷ நிவர்த்தியை தங்கள் மகனின் ஜாதகத்தை மட்டும் கொண்டே சொல்கிறோம்.

தங்கள் மகனின் நடவடிக்கைகளில் கண்டிப்பாக மாற்றம் தேவை. ஸ்ரீலட்சுமி நரசிம்மருக்கு 18 வாரம் வியாழக்கிழமைகளில் சுத்தமான நெய்தீபம் ஏற்றி வரவேண்டும். தவறான நட்புகளை அவர் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். காலம் சாதகமாக உள்ளது. பயன்படுத்திக் கொண்டால் 2018 மே மாதத்திற்குள் குடும்பம் மற்றும் உத்யோகத்தில் சிறப்பான பலனை அடையலாம். கீழ்க்காணும் ஸ்ரீநரசிம்ம ப்ரபந்தி ஸ்லோகத்தை தினமும் பாராயணம் செய்து வர சிறப்பான வாழ்க்கை நிச்சயம்.

மாதா ந்ருஸிம்ஹ: பிதா ந்ருஸிம்ஹ:
ப்ராதா ந்ருஸிம்ஹ: ஸகா ந்ருஸிம்ஹ:
வித்யா ந்ருஸிம்ஹ: தர்விணம் ந்ருஸிம்ஹ:
ஸ்வாமி ந்ருஸிம்ஹ: ஸகலம் ந்ருஸிம்ஹ:
இதோ ந்ருஸிம்ஹ: பரதோ ந்ருஸிம்ஹ:
யதோ யதோ யாஹி: ததோ ந்ருஸிம்ஹ:
ந்ருஸிம்ஹ தேவாத் பரோ நகஸ்சித்
தஸ்மான் ந்ருஸிம்ஹ சரணம் ப்ரபத்யே!

* எனது இளைய மகனுக்கு எப்பொழுது திருமணம் நடைபெறும்? திருமணஞ்சேரி, காளஹஸ்தி, திருபாம்புரம், திருநள்ளாறு, வைதீஸ்வரன் கோயில் முதலான இடங்களுக்குச் சென்று வந்தோம். வேறு ஏதேனும் பரிகாரம் இருந்தால் சொல்லவும்.
- நாகராஜன், பர்கூர்.

தங்கள் மகனின் ஜாதகப்படி களத்திர ஸ்தானாதிபதி சனி 4ல் பகை, களத்திரகாரகன் 2ல் சுக்கிரன் நீசம், செவ்வாய் 2ல் பகை. களத்திர தோஷத்தால் பாதிக்கப்பட்டுள்ள இந்த ஜாதகருக்கு 31 வயதிற்குப் பிறகு திருமணம் செய்வதே நல்லது. அதற்குமுன் செய்வது பிரிவிற்கு வழி வகுக்கக்கூடும். ஒரு சில ஜோதிட நூல்களில் இது போன்ற தோஷத்திற்கு நதிக்கரையோரமுள்ள ஆலயங்களில் வாழைமரத்திற்கு திருமாங்கல்யம் சாத்தி வழிபடுவது நல்ல பலனைத் தரும் என்று சொல்லப்பட்டுள்ளது.

கடுமையான தோஷம் இருப்பதால் திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள திருபைஞ்ஞீலி திருத்தலத்தில் தங்கள் மகனுக்கு தோஷ நிவர்த்தி செய்து கொள்ளுங்கள். தினமும் குலதெய்வத்தை வேண்டிக்கொண்டு வீட்டிலேயே ஒரு அகல் தீபம் காலை 6.30 மணிக்குள் ஏற்றி வரச் சொல்லுங்கள். ஞாயிறு மாலை ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவதும் நல்லது.

கீழேயுள்ள ஸ்வயம்வர பார்வதி மந்திரத்தை தினசரி 21 முறை பாராயணம் செய்து வரவும். அல்லது தங்கள் மகனின் பூராட நட்சத்திரத்தன்று தகுந்த வேத விற்பன்னர்களை கொண்டு ஸ்ரீஸ்வயம்வர பார்வதி ஹோமத்தை தங்கள் இல்லத்தில் நடத்த, விரைவில் நற்பலன் கிடைக்கும்.

அஸ்யஸ்ரீ ஸ்வயம்வர பார்வதீமம்த்ரஸ்ய
அகஸ்த்யருஷி ஸவர்யமம்கலா
தேவதா விவாஹாதி ஶுப ப்ராப்த்யர்தே
ஜபே விநியோக
தேவேந்த்ராணீ நமஸ்துப்யம் தேவேந்த்ரப்
ரியபாமிநி
விவாஹபாக்யமாரோக்யம் பத்ருலாபம்ச
தேஹிமே
ஓம் ஹ்ரீம்க்லீம் யோகிநீ யோகீஶ்வரீ
யோகபயங்கரீ ஸகலஸ்தாவரஜங்க
மஸ்யமுக
ஹ்ருதயம் மம வஶம் ஆகர்ஷய ஆகர்ஷய
நமஃ
அநேந ஸ்வயம்வர பார்வதீமந்த்ரஜபேந
ஸ்ரீஜகதாம்பாம்தர்கத பாரதீரமண
முக்யப்ராணாம்தர்கத ஸ்ரீ ஜயாபதி ஸம்
கர்ஷண ப்ரீயதாம்
ஸுப்ரீயதோவரதோ பவது.

* நான் சுயதொழில் செய்து வருகிறேன். என் எதிர்காலம் எப்படி இருக்கும்? என் தொழில் முன்ேனற்றத்திற்கு என்ன செய்ய வேண்டும்? தொழிலை விஸ்தரிக்கலாமா? குலதெய்வ வழிபாட்டை விடாமல் செய்து வருகிறேன்.
- நாராயணன், கோவை.

தங்கள் ஜாதகப்படி லக்னாதிபதி 9ல் நட்பு, பாக்யஸ்தானாதிபதி செவ்வாய் 9-ல் ஆட்சி. தங்கள் ஜாதகப்படி தாங்கள் செய்து வரும் தொழில் நல்ல பலனை தரும். நடக்கும் தசையும் தங்களுக்கு சாதகமாகவே இருக்கிறது. கவலை வேண்டாம். தங்கள் 36 வயதிற்குள் சமூகத்தில் ஒரு சிறந்த இடத்தை அடைவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

வருகின்ற 2018 பிப்ரவரிக்குப் பிறகு தங்கள் தொழில் விரிவாக்கம் செய்தல் நல்ல பலனை தரும். மிகச்சரியான பாதையில் சென்று கொண்டிருக்கும் தாங்கள், இயன்ற அளவு ஏழைகளுக்கு உதவி வர நிச்சயம் உங்கள் வாழ்வு மேலும் வசந்தமாகும். பரிகாரம் எதுவும் தேவையில்லை.

* என் மகன் மற்றும் மருமகளின் ஜாதகத்தை இணைத்துள்ளேன். திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகிறது. இன்னும் குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை. இவர்களுக்குக் குழந்தை எப்பொழுது அமையும்? ஏதேனும் தோஷம் உள்ளதா? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
 - சுந்தரேசன், திருப்பத்தூர்.

தங்கள் மகன் மற்றும் மகள் ஜாதகத்தை ஆராய்ந்து பார்த்ததில் சில தோஷங்கள் புத்திர பாக்கியத்திற்குத் தடையாக இருப்பது தெரிகிறது. தங்கள் மகனின் ஜாதகத்தில் 5ல் ராகு மற்றும் அசுப கிரக பார்வையும், குருவின் பகை வீட்டு சஞ்சாரமும், லக்னாதிபதி 6ல் மறைந்ததும் தோஷத்திற்குக் காரணமாக உள்ளன. தங்கள் மருமகளின் ஜாதகப்படி 5 மற்றும் 10ம் இடங்கள் சுத்தமாக இருப்பதால் புத்திர பாக்கியத்திற்கான வாய்ப்பு உள்ளது.

இருவரின் ஜாதகத்தையும் சேர்த்து பார்த்ததில் அடுத்து சொல்லப்படும் பரிகாரங்களை மேற்கொள்ளுங்கள். குலதெய்வ வழிப்பாட்டை கண்டிப்பாக கடைபிடியுங்கள். குழந்தை பிறந்ததும் ஏதேனும் ஒரு கோயில் அல்லது வேத பாடசாலைக்கு நல்ல பசு மாடும், கன்றும் தானம் தருவதாய் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். ஞாயிறுதோறும் மாலை ராகு காலத்தில் துர்க்கைக்கு இரண்டு தீபம் ஏற்றி வரச் சொல்லுங்கள். கீழேயுள்ள சம்மோஹன கிருஷ்ணன் ஸ்லோகத்தை இருவரையும் தினசரி 21 முறை பாராயணம் செய்து வரச் சொல்லுங்கள்.

ஸ்ரீ க்ருஷ்ணம் கமலபத்ராட்சம் திவ்ய
ஆபரண பூஷிதம்
த்ரிபங்கி லலிதாகாரம் அதிசுந்தர மோகனம்
பாகம் தட்சிணம் புருஷம் அந்ய ஸ்திரீரூ
பிணம் ததா
சங்கம் சக்ரம் சாங்கு சஞ்ச புஷ்ப பாணம்
ச பங்கஜம்
இட்சீ சாபம் வேணு வாத்யம்ச தாரயந்தம்
புஜாஷ்டகை
ஸ்வேத கந்தானு லிப்தாங்கம் புஷ்ப வஸ்த்ர
த்ரகுஜ்வலம்
ஸர்வ காமார்த்த சித்யார்த்தம் மோஹனம்
ஸ்ரீ க்ருஷ்ண மாஸ்ரயே.

* எனது கணவரின் ஜாதகத்தை இணைத்துள்ளேன். நல்ல படிப்பு உள்ளது. ஆனாலும், நிலையான வேலையில்லை. தொழில் ஆரம்பித்தார், அதில் நஷ்டம் ஏற்பட்டு முடங்கியுள்ளது. கடன் சுமையும் அதிகரித்து வருகிறது. தயவுசெய்து என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்று கூறவும். தொழில் அமையுமா? அல்லது மீண்டும் வேலைக்கு செல்வதே நல்லதா?
- ஒரு வாசகி, சென்னை.

தங்கள் கணவரின் ஜாதகப்படி தொழிலில் அவருக்கு நிலையான வருமானத்தைப் பெறுவதில் தடங்கல்கள் உள்ளன. தற்சமயம் தொழிலைவிட வேலையே அவருக்கு ஏற்றது. கேது தசை நடந்து வருகிறது. லக்னாதிபதியான சுக்கிரனின் தசை இன்னும் இரண்டு வருடங்களில் ஆரம்பமாகிறது. 2019 மார்ச் முதல் லக்னாதிபதியான சுக்கிர தசையின் ஆதிக்கம் இருப்பதால் மிகச்சிறந்த முன்னேற்றங்களை காணமுடியும்.

அதுவரை மிகவும் பொறுமையாக இருக்கவேண்டியது அவசியம். வியாழக்கிழமைகளில் அருகிலுள்ள விநாயகர் ஆலயத்தில் தீபமேற்றி வரவும். சனிக்கிழமை தோறும் பைரவருக்கும் தீபமேற்றி வழிபடுங்கள். இது இரண்டுமே மிகவும் பலன் தரும் பரிகாரங்களாகும். மாதம் ஒருமுறை ஒரு வியாழக்கிழமையன்று சிங்கப்பெருமாள் கோயிலுக்குச் சென்று ஸ்ரீலட்சுமி நரசிம்மரை தரிசனம் செய்துவர கடன் பிரச்னைகளிலிருந்து முழு விடுதலை கிடைக்கும்.

கீழேயுள்ள லட்சுமி நரசிம்மரின் காயத்ரி மந்திரத்தை தினசரி காலை, மாலை என இரு வேளையும் விளக்கேற்றி வைத்து நீங்களோ உங்கள் கணவரோ 12 முறை படித்து வர, சகல தடைகளும் விலகும்.

‘‘ஓம் வ்ஜர நாகாய வித்மஹே
தீஷ்ண தம்ஷ்ட்ரீயே தீமஹி
தந்நோ நரசிம்ம ஹ ப்ரசோதயாத்’’
கூடவே ஸ்ரீலட்சுமி நரசிம்மரின் ருண விமோசன ஸ்தோத்திரத்தையும் பாராயணம் செய்து வருவது மிகவும் நல்லது.

* எனது மகளின் ஜாதகத்தை இணைத்துள்ளேன். இந்த வருடம் 10ம் வகுப்பு எழுதியுள்ளார். மேற்கொண்டு என்ன படிக்க வைக்கலாம்? மருத்துவம் அல்லது இன்ஜினியரிங் சரியாக வருமா? அல்லது காமர்ஸ் படிக்க வைக்கலாமா? 11ம் வகுப்பிற்கு இந்த மதிப்பெண்ணை வைத்தே எந்த குரூப் என்று செலக்ட் செய்ய வேண்டும்?

தங்கள் மகளின் ஜாதகப்படி லக்னாதிபதியாக செவ்வாய், 9ல் குரு சொந்த வீட்டில் இருப்பதாலும், சூரியன் மற்றும் ராகுவின் சஞ்சாரம் திருப்திகரமாக இருப்பதாலும் மருத்துவப் படிப்பு கண்டிப்பாக அமைய வாய்ப்பு உள்ளது. அதனால் மருத்துவ படிப்பிற்கு ஏற்றவாறு 11ம் வகுப்பில் முதல் குரூப்பிலேயே சேர்க்கலாம்.

* எனது மகனின் ஜாதகத்தை இணைத்துள்ளேன். 1975ல் பிறந்த அவருக்கு இன்னும் திருமணம் தள்ளிக்கொண்டே போகிறது. திருமணஞ்சேரி, திருப்பாம்புரம், திருநள்ளாறு போன்ற இடங்களில் பரிகாரம் செய்து விட்டோம். மேலும், ஏதாவது பரிகாரம் செய்ய வேண்டுமா?
- வி. மாரியப்பன், சேதுநாராயணபுரம், விருதுநகர் மாவட்டம்.

தங்கள் மகனின் ஜாதகப்படி லக்னாதிபதி குரு சொந்த வீட்டில் செவ்வாயுடன் களத்திர ஸ்தானாதிபதி 3ல் சூரியன் மற்றும் கேதுவுடன், களத்திரகாரகன் சுக்கிரன் 5ல் பகை. இவ்வகையான ஜாதக அமைப்பு திருமண வாழ்க்கையில் சில தடைகளையும் தாமதமான திருமண வாழ்க்கையையும் அல்லது இருதார வாழ்வையும் கொடுக்கக் கூடும்.

தினமும் அருகிலுள்ள சிவன் கோயிலுக்குச் சென்று தீபமேற்றி வரச் சொல்லவும். வெள்ளிக்கிழமை மாலை 5-6 மணிக்குள் குரு ஹோரையில் அல்லது 8-9 சுக்கிர ஹோரையில் அருகிலுள்ள பெருமாள் கோயிலில் தனிச் சந்நதியில் வீற்றிருக்கும் லட்சுமி தேவிக்கு தாமரை மலரைச் சாத்தி தீபமேற்றி வரச் சொல்லுங்கள்.

குலதெய்வ வழிபாட்டை தடையின்றி நடத்தி வாருங்கள். நிச்சயம் ஆறு மாதத்திற்குள் நல்ல பலன் கிடைக்கும். நம்பிக்கையுடன் செய்து வாருங்கள். கீழ்க்காணும் அபிராமி அந்தாதி பதிகத்தை தினசரி 16 முறை பாராயணம் செய்துவர விரைவில் நல்ல மனைவி அமைவாள்.

திங்கட் பகவின் மணம் நாறும் சீறடி சென்னி
வைக்க
எங்கட்கு ஒரு தவம் எய்தியவா, எண் இறந்த
விண்ணோர்
தங்கட்கும் இந்தத் தவம் எய்துமோ? தரங்கக்
கடலுள்
வெங் கண் பணி அணைமேல் துயில் கூரும்
விழுப்பொருளே.

* என்னுடைய ஜாதகத்தையும், கணவரின் ஜாதகத்தையும் இணைத்துள்ளேன். கடந்த வருடம் வீடு கட்ட ஆரம்பித்தோம். இன்னும் முடிவடையாமல் இருக்கிறது. இடம் எனது பெயரில் உள்ளது. ஏதேனும், தோஷம் உள்ளதா? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

தங்கள் ஜாதகப்படி சனி தசையில் புதன் புக்தியில் வீடு கட்ட ஆரம்பித்துள்ளீர்கள். தங்கள் ஜாதகப்படி சனி பகவான் பகை, புதன் நீசம். இந்த சமயத்தில் ஆரம்பிக்கப்படும் வேலை பல்வேறு தடைகளுடனேயே நடைபெறும். தங்கள் ஜாதகப்படி வருகின்ற ஜூன் 3ம் தேதி முதல் நல்ல நேரம் ஆரம்பிக்கிறது. அதன்பிறகு வீட்டு வேலை வேகம் பிடிக்கும்.

ஆவணிக்குள் கிரகப் பிரவேசம் செய்வதற்கும் வாய்ப்புகள் உள்ளன. ஜூன் முதல் வாரத்திலிருந்து தங்கள் கணவரின் ஜாதகப்படி பூமிகாரகனான செவ்வாய் புக்தி ஆரம்பிப்பதால் கண்டிப்பாக முடிந்து விடும். அருகிலுள்ள பழமையான முருகன் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்து விட்டு ஒன்பது தீபம் ஏற்றி விட்டு வர, தடங்கல்கள் விலகும்.

ஆனா அமுதே அயில்வே லரசே
ஞானா கரனே நவிலத் தகுமோ
யானாகிய என்னை விழுங்கி வெறுந்
தானாய் நிலை நின்றது தற்பரமே
- என்ற கந்தர் அனுபூதிப் பாடலை தினசரி பாராயணம் செய்து வாருங்கள்.

ஸ்ரீவாராஹி உபாசகர் ஜோதிடர் தி.ஸ்ரீனிவாசராமன்

தம் பிரச்னைகளுக்குத் தீர்வு காண விரும்பும் வாசகர்கள் தங்களுடைய ஜாதக நகலுடன் தங்கள் பிரச்னையைத் தெளிவாக எழுதி அனுப்பலாம். கீழ்க்காணும் முகவரிக்கு அவ்வாறு அனுப்பி வைக்கும் உங்களுக்கு இப்போதே, வண்ணமயமான, வளமான வாழ்க்கைக்கு வாழ்த்து தெரிவிக்கிறோம்.

என்ன சொல்கிறது, என் ஜாதகம்?
ஆன்மிகம், தபால் பை எண். 2908,
மயிலாப்பூர், சென்னை - 600 004