குரு பெயர்ச்சி



(5-7-2015) பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

ராசி பலன்கள்


நிகழும் மங்களகரமான ஸ்வஸ்தி மன்மத வருஷம் உத்தராயணம் க்ரீஷ்ம ருது ஆனி மாதம் 20ம் தேதி (5-7-2015) ஞாயிற்றுக்கிழமையும் கிருஷ்ண சதுர்த்தியும் அவிட்ட நக்ஷத்ரமும் ப்ரீதி நாமயோகமும் பாலவ கரணமும் சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 42:39க்கு (இரவு மணி 11:02க்கு) கன்னியா லக்னத்தில்  கடக ராசியிலிருந்து சிம்ம ராசிக்குள் செல்கிறார்.

நவகிரகங்களில் சுபக்கிரகங்களாக வர்ணிக்கப்படுபவை குரு, சுக்கிரன், சந்திரன், புதன் ஆகிய நான்கு மட்டுமே! இதிலும் வளர்பிறைச் சந்திரன் சுபராகவும்,
தேய்பிறைச் சந்திரன் அசுபராகவும் எடுத்துக்கொள்ளப்படுவர். அதேபோல புதனும் சுபக்கிரகத்தோடு சேருகிற போது சுபத்தன்மை உடையவராகவும், அசுபரோடு சேருகிறபோது பாபத்தன்மை உடையவராகவும் கருதப்படுவார். ஆகவே முழு சுபகிரகங்களாகச் செயல்படுவது குருவும் சுக்கிரனும் மட்டும்தான். மற்ற ஐந்து கிரகங்களும்- சூரியன், செவ்வாய், சனி, ராகு- கேது முழு பாப கிரகங்களாக ஜோதிட சாஸ்திரம் நிர்ணயித்திருக்கிறது.

மேற்கண்ட இரண்டு முழு சுபகிரகங்களிலும் குருவை தேவகுரு என்றும், சுக்கிரனை அசுரகுரு என்றும் புராணங்கள் வர்ணிப்பதால், குரு ஒருவரையே முழு
சுபகிரகம் எனவும், நல்லதைச் செய்ய வல்லவர் எனவும் பாராட்டலாம். அப்படிப்பட்ட குரு, வருடம் ஒருமுறை ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு மாறுவார். “தை பிறந்தால் வழி பிறக்கும்’’ என்று பொதுவாகச் சொல்லுவதுபோல, குருபெயர்ச்சியினால் விமோசனம் ஏற்படும் என்றும், குரு பார்வையால் நன்மைகள் நடக்கும் என்றும் எதிர்பார்க்கலாம்.

குரு மாங்கல்ய காரகன் (பர்த்தாகாரகன்- கணவன்காரகன்) என்றும், சுக்கிரன் களஸ்திரகாரகன் (மனைவிகாரகன்) என்றும் சொல்லப்பட்டாலும், திருமணம் ஆகாத ஆண்- பெண் இருபாலருக்கும் திருமண யோகத்தைத் தருகிற கிரகம் குருபகவான்தான். அதனால்தான் வியாழ நோக்கம் இருக்கிறதா; குருபலம் வந்துவிட்டதா என்று ஜோதிடம் கேட்பார்கள்.

அதேபோல குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியத்தைக் கொடுக்கும் கிரகமும் குருதான்! இவர் புத்திர காரகன் என்பதோடு காசு பணம், செல்வத்தைக் கொடுக்கும் தனகாரகனும் குருதான்! வித்தை, ஞானம், புகழ், கீர்த்தி, பெருமை, செல்வாக்கு, பாண்டித்யம், மேன்மை, மேதாவிலாசம் இவற்றை யெல்லாம் தருகிற கிரகமும் குருதான்.

அவருக்கு குரு, தேவகுரு, வியாழன், பிரகஸ்பதி, பொன்னன் உள்பட பல பெயர்கள் உண்டு.குருவுக்கு உரிய ஸ்தலமாக திருச்செந்தூரும், கும்பகோணம் அருகில் உள்ள ஆலங்குடியும் சிறப்பாகக் கூறப்படுகின்றன. மேலும் செங்கோட்டை அருகிலுள்ள புளியறையிலும், காரைக்குடி, திருப்பத்தூர் அருகிலுள்ள பட்டமங்கலத்திலும் தட்சிணாமூர்த்தியை வலம் வரும் அளவு தனிச்சந்நதிகள் உள்ளன.

இவைதவிர மயிலாடுதுறையில் (சிதம்பரம் போகும் வழியில்) வள்ளலார் கோயில் சிவாலயத்தில் மேதா தட்சிணாமூர்த்தியும், தஞ்சாவூர் அருகில் தென்குடித்திட்டையில் தனி குருவும், திருச்சி அருகில் பழூர் சிவாலயத்தில் நவகிரக தம்பதிகள் சகிதம் காட்சியளிக்க, குருவும் தமது பத்தினி தாராவுடன் அருள்புரிகிறார். கும்பகோணம் ஆடுதுறை அருகில் சூரியனார் கோயிலில் சூரியனுக்கு எதிரில் குரு எழுந்தருளியுள்ளார்.

மேற்கண்ட தலங்களிலும், சென்னைக்கு அருகில் திருவலிதாயம் (தற்போது பாடி என்று பெயர்), மயிலாடுதுறை பூந்தோட்டம் அருகில் திருவீழிமிழலை, சென்னை-வேலூர் சாலையில் வாலாஜா பேட்டையிலிருந்து சோளிங்கர் போகும் சாலையில் தன்வந்திரி ஆரோக்கிய பீடம், புதுக்கோட்டையிலிருந்து அறந்தாங்கி பாதையில் ஆலங்குடி உள்ளிட்ட தலங்களிலும் தட்சிணாமூர்த்திக்கு குருபெயர்ச்சி சிறப்பு அபிஷேகம், பூஜை நடத்தப்படுகிறது. மதுரை அருகில் குருவித் துறையிலும் (குரு வீற்றிருந்த துறை- வைகைக் கரையில்) ஹோமம், பூஜை, அபிஷேகம் செய்யப்படுகிறது.

குரு அவரவர் ராசிக்கு 2, 5, 7, 9, 11 ஆகிய இடங்களில் வரும்போது நற்பலனும், 3, 6, 8, 12 ஆகிய இடங்களில் வரும்போது துர்ப்பலனும்; ஜென்மம், 4, 10 இடங்களில் வரும்போது சமபலனும் நடக்கும். இது பொதுவிதிதான். மாறியும் பலன் செய்யலாம். சந்திரன் ராசிக்கு கூறப்படுவதுபோல குருபெயர்ச்சிப் பலன் அவரவர் லக்னத்துக்கும் பொருந்தும். அதேபோல பிறக்கும் காலத்தில் ஜனன ஜாதகத்தில் குரு இருந்த ராசிக்கு 2, 5, 7, 9, 11ல் வரும்போது நற்பலனும்; 3, 6, 8, 12ல் வரும்போது துர்ப்பலனும் நடக்கும்.

பொதுப் பலன்கள்

கன்னியா லக்னம், கும்ப ராசி அவிட்ட நக்ஷத்ரத்தில் குரு மாறுகிறார். லக்னாதிபதி புதன் தொழில் ஸ்தானத்தில் ஆட்சியாக இருக்கிறார். சிம்ம ராசி என்பது குருவிற்கு நட்பு வீடு. மஹாமகம் நடக்கும் வருடம் இது. உச்ச வீடான கடகத்திற்கு குரு எப்படியோ அப்படியே தான் சிம்மத்திற்கும் முக்கியமானவர். கிரகங்களின் ராஜா
சூரியன் வீடான சிம்மத்திற்கு பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு குரு அமர்கிறார். முழு சுப கிரகமான குரு பகவான் வலிமையான சிம்மத்தில் அமர்வதால் இந்தியாவின் அடிப்படை கட்டமைப்புகள் நவீனமாகும். வளர்ந்த நாடுகளுக்கு இணையாக பல வசதி, வாய்ப்புகள் கிராமம் முதல் நகரம் வரை உள்ள அனைத்து மக்களுக்கும் கிட்டும்.

வருமான வரி சம்பந்தமாக புது சலுகைகள் கிடைக்கும். நாடெங்கும் மின் உற்பத்தி பெருகும். நதிகளை இணைக்க பேச்சு வார்த்தை தொடங்கும். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்கும். வேலை வாய்ப்பு பெருகும். விலைவாசி குறையும். குரு மாறும் சிம்ம ராசியிலேயே சுக்கிரன் இருக்கிறார். எனவே இருவருக்கும் சம்பந்தம் ஏற்படுவதால் உணவு கலப்படத்தை தடுக்க கடுமையான சட்டம் வரும்.

கன்னியா லக்னத்தில் குரு மாறும்போது ராசிநாதன் புதன் ஆட்சியாக இருக்கிறார், எனவே கல்வித் துறை நவீனமாகும். தங்கம், வெள்ளி விலை கட்டுப்பாட்டிற்குள் வரும். அண்டை நாடுகளின் அத்துமீறல்கள் ஒடுக்கப்படும். சிம்மத்தில் வீற்றிருக்க வரும் குருவால் அரசியல் குழப்பம் சீரடையும். அதிக அளவில் இருந்த விரயங்கள் குறையும். தனிநபர் மற்றும் அரசாங்கத்தின் பொருளாதார நிலைமை கொஞ்ச கொஞ்சமாக உயரும்.  விரலுக்கேற்ற வீக்கம் என்பது போல அவரவர் தகுதிக்கேற்ற மாதிரி கடன் உருவாகும். இடி, மின்னல், சூறாவளி காற்றுடன் அதிக மழை ஏற்படும்.

இயற்கையின் சீற்றத்தால் சேதங்கள் அதிகரிக்கும். தனியார் உடைமைகளுக்கும் சேதம் ஏற்படலாம். அதற்கு நிதியுதவி செய்யும் வகையில் பெருமளவில் மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் செலவுகள் ஏற்படலாம். உலக வங்கி மற்றும் வெளிநாடுகள் மூலம் மத்திய அரசு கடன்கள் வாங்குவது அதிகரிக்கும். புராதன ஆலயங்களுக்கு அரசாங்கம் கும்பாபிஷேகம் செய்து வைத்தலும் நடைபெறும். மடாதிபதிகள் மற்றும் சந்நியாசிகளுக்கு புதிய விதிமுறைகளை அரசாங்கம் உருவாக்கும். பல முக்கிய வழக்குகளுக்கு எதிர்பார்த்த தீர்ப்பு நல்ல முறையில் வரும். விமான போக்குவரத்தில் பாதிப்புகள் ஏற்படலாம்.

குரு காயத்ரீ மந்திரம்
ஓம் பிரஹஸ்பதீச வித்மஹே சுக்ராசார்யாய
தீமஹி தந்நோ குரு ப்ரசோதயாத்.
ஓம் வ்ருஷபத்வஜாய வித்மஹே க்ருணீ ஹஸ்தாய தீமஹி தந்நோ குரு ப்ரசோதயாத்.

தட்சிணாமூர்த்தி ஸ்லோகம்
குருர் ப்ரம்மா குரு விஷ்ணு குரு தேவோ
மஹேஸ்வரஹ
குரு சாட்சாத் பரப்ரம்மா தஸ்மை  குரவே
நமஹ
குரவே ஸர்வ லோகாநாம் பிஷஜே பவ
ரோகிணாம்
நிதயே ஸர்வ வித்யாநாம் தட்சிணா
மூர்த்தயே நமஹ
அப்ர மேயத்வயாதீத நிர்மல ஞான
மூர்த்தயே
மநோ கிராம் விதூராய தட்சிணாமூர்த்தயே

நமஹ
தட்சிணாமூர்த்தி துதிப்பாடல்
கல்லாலின் புடை அமர்ந்து நான் மறை
ஆறு அங்கம் முதல் கற்ற கேள்வி
வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த
பூரணமாய் மறைக்கப் பாலாய்
எல்லாமாய் அல்லதுமாய் இருந்ததனை
இருந்தபடி இருந்து காட்டிச்
சொல்லாமல் சொன்னவரை நினையாமல்

நினைந்து பவத் தொடக்கை வெல்வாம்.
தந்தை தாயாவானும் சார்கதியிங்காவனும்
அந்தமிலா இன்ப நமக்காவானும் -
எந்தமுயிர் தானாகுவானும் சரணாகுவானும்
அருட் கோனாகுவானும் குரு.