நாளெல்லாம் நலம் அருளும் நடராஜ பதது
அபூர்வ ஸ்லோகம்
சிதம்பரம் நடராஜர் கோயில், இன்றைய அறிவியலுடன் மட்டுமல்ல, மனிதர்களின் உடற்கூறுடன் பொருந்துவதும் அதிசயமே. ஆகவேதான், நம்மை, அங்கு சென்று வழிபட வைத்து, உலகத்தின் காந்த சக்திக்கு கட்டுப்படுத்தி, நோயின்றி வாழ, நம் முன்னோர் வழிகாட்டியுள்ளனர். இக்கோயிலின் அற்புதங்களும், ரகசியங்களும், ஆச்சரியங்களும் ஏராளம். இன்னும், மனித ஆற்றலினால் கண்டுபிடிக்க இயலாத, பேருண்மைகள் இக்கோயிலில் புதைந்துள்ளன!
சர்வதேச ஆன்மிக அமைப்புகள், கடந்த எட்டு ஆண்டுகளாக, பல கோடி டாலர்கள் செலவு செய்து, தீவிர ஆராய்ச்சி நடத்தி, சிதம்பரம் நடராஜர் கால் பெருவிரலில்தான், ஒட்டுமொத்த பூமியின் காந்த மையப்புள்ளி இருப்பதாக கண்டுபிடித்துள்ளன. இதை, பல நூற்றாண்டுகளுக்கு முன் அறிந்து, இக்கோயிலை, நம் முன்னோர் கட்டினர்! நவீன ஆய்வகங்கள், விலை உயர்ந்த நவீன கருவிகள் ஏதும் இல்லாத அக்காலத்தில், நம் முன்னோர் கண்டறிந்துள்ளனர் என்பது நம்மை வியப்பின் உச்சத்திற்கு அழைத்துச் செல்கிறது!
அணுத் துகள்கள் அசைந்தபடியே இருக்கும் என்ற உண்மையை, ஆடும் நடராஜர் வாயிலாக உணர்த்தும் சிலையை அமைத்து, அதை பூமியின் மையப்புள்ளியில் அமர்த்தியது பெரிய சாதனைதான்!கோயிலில் பொதிந்திருக்கும் அறிவியல், பொறியியல், புவியியல், கணிதவியல், மருத்துவவியல் குறித்த விவரங்கள் அளவிட இயலாதவை.
மனித உடலை அடிப்படையாக வைத்து அமைக்கப்பட்டுள்ள, சிதம்பரம் கோயிலில், ஒன்பது நுழை வாயில்களும், மனித உடலில் இருக்கும், ஒன்பது வாயில்களை குறிக்கின்றன. கோயில் விமானத்தின் மேலே உள்ள பொற்கூரையில், 21,600 தங்கத் தகடுகள் வேயப்பட்டுள்ளன; இது, ஒரு மனிதனின் தினசரி சராசரி சுவாச எண்ணிக்கையைக் குறிக்கிறது. இந்த தங்கத் தகடுகளை பொருத்த, 72 ஆயிரம் தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன; இந்த எண்ணிக்கை, மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளையும் குறிக்கின்றன.
இதில் பல, கண்ணுக்குத் தெரியாத, உடலின் பல பாகங்களுக்கு சக்தியை சேர்ப்பவையும் அடங்கும். திருமூலர், திருமந்திரத்தில், ‘மானுடராக்கை வடிவு சிவலிங்கம், மானுடராக்கை வடிவு சிதம்பரம், மானுடராக்கை வடிவு சதாசிவம், மானுடராக்கை வடிவு திருக்கூத்தே’ என்று கூறுகிறார். அதாவது, ‘மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம்’ என்று பொருள்.
பொன்னம்பலம், சற்று இடதுபுறமாக அமைக்கப்பட்டுள்ளது; இது, நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும். இந்த இடத்தை அடைய, ஐந்து படிகளை ஏற வேண்டும். இந்த படிகள், பஞ்சாட்சர படிகள் என அழைக்கப்படுகின்றன. அதாவது, ‘சி, வா, ய, ந, ம’ என்ற ஐந்து எழுத்துகள். கனகசபை, பிற கோயில்களில் இருப்பதை போன்று, நேரான வழியாக இல்லாமல், பக்கவாட்டில் வருகிறது.
இந்த கனகசபையை நான்கு தூண்கள் தாங்குகின்றன. இவை, நான்கு வேதங்களைக் குறிக்கின்றன. பொன்னம்பலத்திலுள்ள 28 தூண்கள், 28 ஆகமங்களையும் சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன. இந்தத் தூண்கள் 64 + 64 மேற்பலகைகளை (பீம்) கொண்டவை; இது, 64 கலைகளை குறிக்கின்றன. இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள், மனித உடலில் ஓடும் பல ரத்த நாளங்களை குறிக்கின்றன. பொற்கூரையின் மேல் இருக்கும் ஒன்பது கலசங்கள், ஒன்பது வகையான சக்தியை குறிக்கின்றன. அர்த்த மண்டபத்தில் உள்ள ஆறு தூண்கள், ஆறு சாஸ்திரங்களையும்; அர்த்த மண்டபம் அருகில் இருக்கும் மண்டபத்தில் உள்ள, 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கின்றன.
சிதம்பரம் நடராஜரின், ஆனந்த தாண்டவம் என்ற கோலம், ‘காஸ்மிக் டான்ஸ்’ என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கப்படுகிறது. இந்து மத சாஸ்திர, சம்பிரதாயங்கள் அறிவியல் ரீதியானவை. அவை, மனிதனை மேம்படுத்த, உயர்ந்த தத்துவங்களை உள்ளடக்கி உருவாக்கப்பட்டவை. சிற்சபையில், சபாநாயகரின் வலது பக்கத்தில் உள்ளது, ஒரு சிறு வாயில்.
இதன் திரை அகற்றப்படும்போது, கற்பூர ஆரத்தி காட்டப்படும். இதனுள்ளே திருவுருவம் ஏதும் இல்லை. தங்கத்தினாலான, வில்வ தள மாலை ஒன்று சுவரில் தொங்கவிடப்பட்டுக் காட்சி அளிக்கும். மூர்த்தி ஏதும் இல்லாமலேயே, வில்வ தள மாலை தொங்கும். இதன் ரகசியம், இங்கு இறைவன் ஆகாய உருவில் இருக்கிறார் என்பதே! அகண்ட பெருவெளியில் நிறைந்திருக்கும் இறைவனை, வெறும் வெளியையே காட்டி, இங்கு வழிபட வகை செய்யப்பட்டுள்ளது. இது தான், ‘சிதம்பர ரகசியம்’ எனப்படுகிறது.
இந்தத் தில்லை அம்பல நடராஜனைப் பலவாறு வர்ணித்து, விவரித்து, விளக்கி முனிஸ்வாமி முதலியார் இயற்றிய நடராஜ பத்து ஸ்லோகங்களை இங்கே தருகிறோம். ஆனித் திருமஞ்சன சமயத்தில் இந்தப் பதிகங்களைப் பாடி குறையொன்றுமில்லாமல் வாழ்வோம்.
நடராஜ பத்து மண்ணாதி பூதமொடுவிண்ணாதி அண்டம் நீ மறை நான்கின் அடிமுடியும் நீ மதியும் நீ ரவியும் நீ புனலும் நீ அனலும் நீ மண்டல மிரண்டேழும் நீ.
பெண்ணம் நீ ஆணும் நீ பல்லுயிர்க்குயிரும் நீ பிறவும் நீ ஒருவன் நீயே பேதாதி பேதம் நீ பாதாதி கேசம் நீ பெற்ற தாய் தந்தை நீயே. பொன்னும் நீ பொருளும் நீ இருளும் நீ ஒளியும் நீ
போதிக்கவந்த குரு நீ புகழொணாக் கிரகங்க ளொன்பதும் நீ யிந்தப் புவனங்கள் பெற்றவனும் நீ எண்ணரிய ஜீவகோ டிகளீன்ற அப்பனே என் குறைக ளார்க் குரைப்பேன். ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.
மானாட மழுவாட மதியாடப் புனலாட மங்கை சிவகாமியாட மாலாட நூலாட மறையாடத் திரையாட மறைதந்த பிரம்மனாட கோனாட வானுலகு கூட்டமெல்லாமாட குஞ்சர முகத்தனாடக்
குண்டல மிரண்டாடத் தண்டைபுலியுடையாடக் குழந்தை முருகேசனாட ஞானசம் பந்தரொடு யிந்திரர்பதினெட்டு முனியாட பாலகருமாட நரைதும்பை யறுகாட நந்தி வாகனமாட நாட்டிப் பெண்களாட வினையோட உனைப்பாட யெனைநாடி யிதுவேளை
விருதோடு ஆடிவருவாய் ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற தில்லைவாழ் நடராஜனே கடலென்ற புவிமீதில் அலையென்ற வுருக்கொண்டு
கனவென்ற வாழ்வை நம்பி காற்றென்ற மூவாசை மாருதச் சுழலிலே கண்டுண்டு நித்த நித்தம் உடலென்ற கும்பிக்கு உணவென்ற யிரை தேடி ஓயாம லிரவு பகலும்
உண்டுண் டுறங்குவதைக் கண்டதேயல்லாது ஒருபய னடைந்தி லேனே தடமென்ற மிடிகரையில் பந்தபா சங்களெனும் தாபரம் பின்னலிட்டுத் தாயென்று சேயென்று நீயென்று நானென்று தமியேனை யிவ் வண்ணமாய்
இடையென்று கடைநின்று யேனென்று கேளா திருப்பதுன் னழகாகுமோ ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற தில்லைவாழ் நடராஜனே பம்புசூ னியமல்ல வைப்பல்ல மாரணந் தம்பனம் வசியமல்ல பாதாள வஞ்சனம் பரகாய ப்ரவேச மதுவல்ல சாலமல்ல
அம்புகுண் டுகள் விலக மொழியுமந்திரமல்ல ஆகாய குளிகையல்ல அன்போடு செய்கின்ற வாதமோடிகளல்ல அரியமோ கனமுமல்ல கும்பமுனி மச்சமுனி சட்டமுனி பிரம் மரிஷி கொங்கணர் புலிப்பாணியும்
கோரக்கர் வள்ளுவர் போமுனி யிவரெலாங் கூறிடும் வைத்யமல்ல என்மனதுன் னடிவிட்டு நீங்காது நிலைநிற்க யேதுளவு புகல வருவாய் ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற தில்லைவாழ் நடராஜனே
நொந்துவந் தேனென்று ஆயிரஞ்சொல்லியும் செவியென்ன மந்தமுண்டோ நுட்பநெறி யறியாத பிள்ளையைப் பெற்றபின் நோக்காத தந்தையுண்டோ சந்ததமுந் தஞ்சமென் றடியைப் பிடித்த பின் தளராத நெஞ்சமுண்டோ.
தந்திமுகன் அறுமுகன் இருபிள்ளை யில்லையோ தந்தை நீ மலடுதானோ விந்தையும் ஜாலமும் உன்னிட மிருக்குதே வினையொன்று மறிகிலேனே வேதமும் சாஸ்த்ரமும் உன்னையே புகழுதே வேடிக்கை யிது வல்லவோ
இந்தவுல கீரேழு மேனளித்தாய் சொல்லு யினியுன்னை விடுவதில்லை ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற தில்லைவாழ் நடராஜனே வழிகண்டு உன்னடியைத் துதியாதபோதிலும் வாஞ்சையில் லாத போதிலும் வாலாய மாய்க்கோயில் சுற்றாத போதிலும்
வஞ்சமே செய்த போதும் மொழியெதுகை மோனை யிலாமலே பாடினும் மூர்க்கனே முகடாகினும், மோசமே செய்யினும் தேசமே கவரினும் முழு காமி யேயாகினும் பழியெனக் கல்லவே தாய் தந்தைக் கல்லவோ பார்த்தவர்கள் ஏசார்களோ
பாரறிய மனைவிக்குப் பாதியுட லீந்தநீ பாலகனைக் காக்கொணாதோ? எழில் பெரிய அண்டங்க ளடுக்கா யமைத்த நீ யென் குறைகள் தீர்த்தல் பெரிதோ ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற
தில்லைவாழ் நடராஜனே அன்னைதந் தைகளெனை யீன்றதற்கழுவனோ அறிவிலா ததற் கழுவனோ அல்லாமல் நான்முகம் தன்னையே நோவனோ ஆசைமூன் றுக்கழுவனோ முன்பிறப் பென்னவினை செய்தனென்றழுவனோ மூடவறிவுக் கழுவனோ முன்னிலென் வினைவந்து மூளுமென்றழுவனோ முந்திவருமென் றுணர்வனோ தன்னை நொந் தழுவனோ உன்னை நொந் தழுவனோ
தவமென்ன வென்றழுவனோ தையலர்க் கழுவனோ மெய்வளர்க் கழுவனோ தரித்திர திசைக் கழுவனோ இன்னயென் னப்பிறவி வருமோ வென்ற ழுவனோ யெல்லா முரைக்க வருவாய் ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற தில்லைவாழ் நடராஜனே
காயா முன் மரமீது பூ பிஞ் சறுத்தனோ கன்னியர்கள் பழி கொண்டனோ கடனென்று பொருள்பறித் தேவயி றெரித்தனோ கிளை வழியில் முள்ளிட்டனோ தாயா ருடன் பிறவிக் கென்னவினை செய்தனோ தந்த பொரு ளிலை யென்றனோ
தானென்று கெர்வித்துக் கொலைகளவு செய்தனோ தவசிகளை யேசினேனோ வாயாரப் பொய்சொல்லி வீண்பொருள் பறித்தனோ
வானவரைப் பழித்திட்டேனோ வடவைபோல் பிறரைச் சேர்க்கா தடித்தனோ வந்தபின் என் செய்தனோ ஈயாத லோபி யென்றே பெயரெடுத்தனோ யெல்லாம் பொறுத் தருளுவாய் ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற தில்லைவாழ் நடராஜனே தாயாரிருந்தென்ன தந்தையு மிருந்தென்ன தன்பிறவி யுறவுகோடி
தனமலை குவித்தென்ன கனபெய ரெடுத் தென்ன தரணியை யாண்டுமென்ன சேயர் களிருந்தென்ன குருவா யிருந்தென்ன சீடர் களிருந்து மென்ன சித்துபல கற்றென்ன நித்தமும் விரதங்கள் செய்தென்ன நதிக ளெல்லாம் ஓயாது மூழ்கிலும் என்ன பலன் எமனோலை ஒன்றைக் கண்டு தடுக்க உதவுமோ யிதுவெல்லாம் சந்தையுற வென்றுதான் உன்னிரு பதம் பிடித்தேன்.
யார் மீது உன்மன மிருந்தாலு முன்கடைக் கண்பார்வை யது போதுமே ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற தில்லைவாழ் நடராஜனே இன்னமுஞ் சொல்லவோ உன் மனங் கல்லோ இரும்போ பெரும் பாறையோ இருசெவியு மந்தமோ கேளாது அந்தமோ இதுவுனக் கழகுதானோ
என்னென்ன மோகமோ இதுவென்ன கோபமோ யிதுவுமுன் செய்கைதானோ இருபிள்ளை தாபமோ யார்மீது கோபமோ ஆனாலும் நான் விடுவேனோ உன்னை விட்டெங்கு சென்றாலும் விழலாவனோ உனை யடுத்துங் கெடுவனோ ஓகோவிது உன்குற்ற மென்குற்ற மொன்று மிலை யுற்றுப்பார் பெற்றவையா! என் குற்றமாயினும் உன் குற்றமாயினும் இனியரு ளளிக்க வருவாய் ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற தில்லைவாழ் நடராஜனே சனிராகு கேதுபுதன் சுக்கிரன் செவ்வாய் குரு சந்திரன் சூரிய னிவரை சற்றெனக் குள்ளாக்கி ராசி பன்னிரண்டையும் சமமாய் நிறுத்தி யுடனே பனியொத்த நட்சத் திரங்களிரு பத்தேழும் பக்குவப் படுத்திப் பின்னால் பகர்கின்ற கரணங்கள் பதினொன்றையும் வெட்டிப் பலரையும் அதட்டி யென்முன் கனிபோலவே பேசி கெடுநினைவு நினைக்கின்ற கசடர்களையும் கசக்கி கர்த்தனின் தொண்டராம் தொண்டர்க்குத் தொண்டரின் தொண்டர்கள் தொழும்ப னாக்கி இனியவள மருவு சிறு மணவைமுனி சாமியெனை யாள்வதினி யுன்கடன் காண் ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.
|