தோஷங்கள் நீக்கி சந்தோஷம் அருளும் பெருமாள்
திருவோங்கும் செந்தமிழ் நாட்டில், பகவான் நாராயணன் எழுந்தருளியுள்ள தலங்கள் பலவாகும். உலகினைக் காக்கவும், உயிர்களுக்குத் திருவருள் செய்திடவும் திருவவதாரங்கள் பல எடுத்து, எண்ணிறந்த தலங்களில் அப்பெருமான் கோயில் கொண்டுள்ளார். எம்பெருமான் நாராயணன் எடுத்த அவதாரங்களுள் சிறப்பானது நரசிம்மாவதாரமாகும்.
இத்திருவவதாரம் நிகழ்ந்தது ஆந்திர மாநிலத்திலுள்ள அகோலத்தில். அப்பெருமாள் தேவர்களுக்காகவும், பிருகு முனிவருக்காகவும், லட்சுமி நரசிம்மராகத் திருக்காட்சி நல்கித் திருவருள் செய்த இடம் தமிழகத்தில் உள்ள தட்சண அகோபிலம் என்றழைக்கப்படும் ஆவணியாபுரம். தட்சண சிம்மாசனம் என்றும்,தட்சண சிம்மகிரி என்றும், பஞ்ச திருப்பதித்தலம் என்றும் சிறப்பிக்கப்படும் ஆவணியாபுரம், திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசி-ஆரணி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.
ஆவணி என்றால் சிங்கம் என்று பொருள். இத்தலத்தில் திருமால், லட்சுமி, நரசிம்மராகக் காட்சியளித்தமையாலும், திருமகளும், கருடனும் மற்றும் அப்பெருமான் எழுந்தருளியுள்ள மலையுங்கூட சிங்கமுகக் கோலம் கொண்டிருப்பதாலும், இத்தலத்திற்கு ஆவணி நாராயணபுரம் என்று திருப்பெயர் வழங்கப்பட்டு தற்போது ஆவணியாபுரம் என்று மருவிவிட்டது.
இத்திருக்கோயிலின் தலவிருட்சம் வெட்பாலை மரம். லட்சுமி நரசிம்மரின் திருவருள் வேண்டித் தேவர்கள், இம்மலையின்மீது வெட்பாலை மரங்களாகத் தோன்றினர். இம்மரங்கள் மிகுந்த குளிர்ச்சி பொருந்தியவை என்பதால், பௌர்ணமி நாளில் இம்மலையைச் சுற்றிக் கிரிவலம் வருவது மனம் மற்றும் உடல் நலத்துக்கு மிகவும் உகந்ததாகும்.
நரசிம்ம அவதாரம் எடுத்து பகவான் அரக்கன் இரண்யனை வதம் செய்தார். அப்போது நரசிம்ம சுவாமியின் திருவுருவத்தையும், கோபத்தையும் கண்டு அனை வரும் நடுங்கினர். பிரகலாதன் இருகரங்கூப்பி வணங்கினான். ‘‘ஐயனே அமைதி கொண்டருளுங்கள்! எங்கள் மீது கருணை செய்யுங்கள்! தேவரீர், லட்சுமி தேவியோடு எழுந்தருள வேண்டும்’’ என்று மண்டியிட்டு வேண்டினான்.பிரகலாதனின் பக்திக்கு மெச்சிய நரசிம்மர், திருமகளைத் தனது இடப்பாகத்தில் அமர்த்திக்கொண்டு, சாந்தரூபமாய்த் திருக்காட்சி நல்கினார்.
பிரகலாதனுக்குத் திருவருள் செய்த நரசிம்மரைக் கண்டு, தேவர்களும், பிருகு முனிவர் முதலானோரும் போற்றி வணங்கினர். ‘‘தரனே! தேவரீரின் இத்திருக்கோலத்தை ஈரேழு உலகத்து உயிர்களுக்கும் காட்டியருளி, உலகங்களைத் காத்தருள வேண்டும்’’ என்று வேண்டினர்.அவர்களின் வேண்டுதலுக்கு மகிழ்ந்து நரசிம்மர், ‘‘தேவர்களே! நீங்கள் உத்தமமான ஒரு இடத்தில் தண்மை தரும் வெட்பாலை மரங்களாய் நின்று அருந்தவஞ்செய்து வாருங்கள். உங்களது வேண்டுதலுக்கு விரைவில் அருளுவோம்’’ என்று திருவாய் மலர்ந்தருளினார்.
பின்னர் பிருகு முனிவரிடம், ‘‘முனிவ, தேவர்கள் வெட்பாலை மரங்களாய் நிற்கும் புண்ணிய இடத்தில் உமக்குப் பஞ்சத்திருத்தல மூர்த்தியாக திருக்காட்சி அருளுவோம்’’ என்றார்.அதனால் மகிழ்ந்த பிருகு முனிவரும், இந்திராதி தேவர்களும் அப்பெருமானை வணங்கிப் பலவாறு போற்றினர்.
பின்னர் பூலோகம் நோக்கி வந்தனர். பூவுலகில் எழில்மிகு சோலைகள் சூழ்ந்த ஒரு சிறு குன்றின்மீது வெட்பாலை மரங்களாய்த் தேவர்கள் நின்றனர். அவர்களுடன் வந்த பிருகு முனிவர், அம்மரங்களின் கீழமர்ந்து, நரசிம்ம சுவாமியை மனத்திலிருத்தித் தவஞ்செய்யலாயினர்.
ஒரு சுபநாளன்று, பிருகு முனிவரின் முன்பாக ஓராயிரம் சூரியப் பிரகாசமொன்று தோன்றிற்று. அதிலிருந்து லட்சுமி நரசிம்மர் எழுந்தருளினார். பிருகு முனிவர் இருகரங்கூப்பி வணங்கி, பெருமாளின் திருவடியில் விழுந்தார். ‘‘எம்பெருமானே, இவ்விடத்து நித்தியமாய் எழுந்தருள வேண்டும்; தங்களது கிடந்த, நின்ற கோலங்களையும் அடியேனுக்குக் காட்டியருள வேண்டும்’’ என்றிறைஞ்சினர்.
அதனால் மகிழ்ந்த பெருமாள், அக்குன்றின் உச்சியில் வேங்கடேசராக (திருப்பதி) எழுந்தருளினார். பின்னர் வரதராஜராகவும் (காஞ்சிபுரம்), அரங்கநாதராகவும் (திருவரங்கம்), முக்தியளிக்கும் யோக நரசிம்மராகவும் (சோளிங்கர்) திருக்காட்சி நல்கினார். பின்னர் அந்தந்த தலத்து அர்ச்சா மூர்த்தங்களாகவும் எழுந்தருளினார்.
பெருமாளின் பஞ்ச திருத்தலக் கோலங்களையும் ஒருங்கே தரிசித்த பிருகு முனிவர், அம்மூர்த்திகளைப் பூஜிக்கத் தீர்த்தம் ஒன்றினை அருளுமாறும் வேண்டினர். அதன்படி லட்சுமி நரசிம்மர் தனது வலக்கரத்திலிருந்து ஒரு தீர்த்தத்தினை உண்டாக்கினார். பெருமாளின் திருக்கரத்திலிருந்து தோன்றிய அத்தீர்த்தம் பாகூ நதி எனும் பெயர் பெற்று, அக்குன்றிற்குக் குடதிசையில் செல்லும் சேயாற்றுடன் கலந்தது.பிருகு முனிவர், அத்தீர்த்தத்தைக் கொண்டு நாள்தோறும் பஞ்ச திருத்தல மூர்த்திகளையும் பூஜித்திருந்து, பெருமாளை அடைந்தனர். சிங்கமுகப் பெருமாள் எழுந்தருளிய அத்தலம், அவரது திருப்பெயரால் ஆவணி நாராயணபுரம் என்று அழைக்கப் படலாயிற்று.
பிருகு முனிவர் பேறு பெற்ற இத்தலத்தில் வழிபாடு செழித்தது. எங்கும் அஷ்டாட்சர நாமம் ஒலித்தது. வெட்பாலை மரங்களாய் நிற்கும் தேவர்கள், ஒவ்வொரு பௌர்ணமி தோறும் சுயவுருப்பெற்று லட்சுமி நரசிம்மரைப் பூஜித்து வந்தனர்.
அதனால் மகிழ்ந்த பெருமாள், ஒரு சுபநாளில், எங்கும் தனது தோற்றம் விளங்குமாறு திருக்காட்சி நல்கினார். அவ்வமயம் நரசிம்மரின் இடப்பாகத்தில் அமர்ந்துள்ள திருமகளின் திருமுகமும், கருடனின் திருமுகமும், அவர்கள் எழுந்தருளியுள்ள திருமலையும் சிங்கமுகத் தோற்றத்துடன் காட்சியளித்தன.
அதனைக் கண்ட தேவர்கள் மகிழ்ச்சிப்பெருக்கால், பலமுறை நரசிம்மரின் திருவடியில் விழுந்து வணங்கினர். நரசிம்ம மந்திரத்தை ஆயிரத்தெட்டு முறை சொல்லி கிரிவலஞ்செய்தனர். அவ்வாறு பலகாலம் பூஜித்திருந்து, விரும்பிய பலன்களைப் பெற்று, பின்னர் தத்தம் இருப்பிடங் களை அடைந்தனர்.
பின்பொரு சமயம் திருத்தல யாத்திரை செய்த ஏரண்ட முனிவர் இத்தலத்திற்கு வந்திருந்து, நரசிம்மரை வணங்கி, அஷ்டா சித்திகளைப் பெற்றார். நாரதரும், தும்புருவும் வணங்கி, விரும்பிய உலகங்களுக்குச் செல்லும் பேற்றினை அடைந்தனர்.
இக்கோயிலில் வைகானச ஆகமப்படி நாள்தோறும் இருகால பூஜைகள் நடைபெறுகின்றன. பிரதி சனி வாரத்தில் லட்சுமி நரசிம்மருக்குத் திருமஞ்சனமும், மாதந்தோறும் நரசிம்மரின் திருநட்சத்திரமான சுவாதியில் விசேஷ பூசையும், யாகமும், வேத பாராயணமும் நடைபெறுகின்றன.
சித்திரைப் பௌர்ணமி நாளன்று கொடியேற்றம் தொடங்கி, பத்து நாட்கள் பிரம்மோற்சவம் லட்சுமி நரசிம்ம சுவாமிக்கு நடைபெறுகின்றது. சித்திரைச் சுவாதியன்று நரசிம்ம ஜெயந்தி ஆவணியில் கிருஷ்ண ஜெயந்தி, புரட்டாசியில் மூன்றாவது சனிவாரம் வேங்கடேசப் பெருமாள் கருட சேவை, ஐப்பசியில் தீபாவளித் திருமஞ்சனம், கார்த்திகை தீபம், மார்கழி வைகுண்ட ஏகாதசி, தை காணும் பொங்கல், மாசி மகத்தன்று லட்சுமி நரசிம்மர் பில்லாந்தி கிராமத்திற்கு எழுந்தருளுதல், பங்குனி உத்திரத்தன்று லட்சுமி நரசிம்மர் சோழவரம் கிராமத்திற்கு எழுந்தருளும் உற்சவம் என ஒவ்வொரு மாதமும் உற்சவங்கள் சிறப்பாக நடைபெறுகின்றன.
சிறந்த பிரார்த்தனைத் தலமாக இக்கோயில் விளங்குகின்றது. பக்தர்கள் தங்களின் நிலத்தில் பயிரிட்ட தானியங்களின் முதல் அறுவடையினை, லட்சுமி நரசிம்ம சுவாமிக்கு நேர்த்திக் கடனாகச் சமர்ப்பிக்கின்றனர். இப்பெருமாளின் சந்நதியில் நெய் தீபமேற்றி வழிபடுவோர், தோஷங்கள் நீங்கப்பெற்றும், பகைவர் பயம் இன்றியும், வாழ்வில் ஏற்றம் பெற்றுத் திகழ்வர். சனிவாரத்தில் உபவாசமிருந்து வணங்குவோருக்குச் சந்தானப்பேறு வாய்க்கும். அவ்வாறு குழந்தைப் பேறு வாய்க்கப்பெற்றோர், துலாபாரம் செலுத்திப் பிரார்த்தனையை நிறைவேற்றுகின்றனர்.
- பரசுராமன்
|