வாழ்க்கையில் நிச்சயம் நல்திருப்பம் உண்டாகும்!



என்ன சொல்லுது எதிர்காலம்?

? என் மகன் தான் பார்க்கும் வேலையில் பல இன்னல்களை அனுபவிக்கிறான். ஊர் ஊராக அலையும் வேலை. அவன் சென்னையிலேயே பணிபுரியும் வாய்ப்பு இருக்கிறதா? என் மகள்களுக்கு திருமணம் செய்ய வேண்டிய கடமையும் உள்ளது. அவனின் திருமணம் மற்றும் எதிர்காலம் பற்றி கவலையாக உள்ளது. பரிகாரம் என்ன செய்வது? வழி கூறுங்கள். - கல்யாணி, சென்னை-99.உங்கள் மகனின் ஜாதகம் அடிப்படையில் மிகவும் அருமையான ஜாதகம்.

 லக்னத்திற்கு 5ம் வீட்டில் புதனும், சுக்கிரனும் இருக்கிறார்கள். அத்துடன் ஐந்தாமதிபதி 5ல் ஆட்சிபெற்று இருப்பதால் செய்நன்றி மறவாதவராக மகன் இருப்பார். தான் தொடக்கத்தில் கஷ்டப்பட்ட நேரத்தில் உதவி செய்தவர்களுக்கு அதை நினைத்து அவர்களுக்காக பல வருடங்கள் உழைத்து பிரதி உதவி செய்யும் மனநிலை உள்ளவராகவும் இருப்பார். அவருடைய ஜாதகத்தை உத்திர காலாமிர்தம் எனும் பழமையான நூலைக் கொண்டு ஆராய்ந்தோம். தற்சமயம் அவருக்கு கேது மகாதசை நடைபெற்று வருகிறது.

அதோடு அஷ்டமத்துச் சனியும் நடைபெறுகிறது. அதனால் ஊர் ஊராக அலைந்து கொண்டிருக்கிறார். ஆனால், அதுவும் நல்லதுதான்; நல்ல பரிகாரமும் கூட. தசாபுக்தி, அந்தரங்கள், இவற்றின் அடிப்படையில், 15.1.2015லிருந்து இவருக்கு நல்ல காலம் தொடங்குகிறது. எல்லா வகையிலும் மாற்றங்கள் உருவாகும். சென்னையிலேயே உங்களுடன் தொடர்ந்து இருந்திருந்தால் வாக்குவாதங்களும், மனக்கசப்புகளும் ஏற்பட்டிருக்கும். இப்படி பல இடங்களில் அலைந்து கொண்டிருப்பது அஷ்டமத்துச் சனிக்கு ஒரு ப்ராக்டிக்கல் பரிகாரம் என்றே கூறலாம்.

அவர் ஜாதகத்தில் தொழில் ஸ்தானாதிபதி செவ்வாய் 8ல் மறைந்து சனியுடன் காணப்படுகிறார். இந்த அமைப்பு அவருக்கு தொடர்ந்து அலைச்சல் தரக்கூடிய வேலையைத் தரும். ஆனால், யோகாதிபதிகளான சுக்கிரனும், புதனும் உங்கள் மகனின் ஜாதகத்தில் நன்றாக இருக்கிறார்கள். மேலும் சுக்கிர தசையும் அடுத்து வர உள்ளது. வரும் ஜனவரி 2015லிருந்து இவருக்கு அலைச்சல் தரும் வேலையை விட்டு விலகி அலுவலகத்தில் அமர்ந்து பணிபுரியும் அமைப்பு உண்டாகும். சென்னையிலேயே கிடைக்கவும் வாய்ப்பிருக்கிறது.

இவர் எதிர்காலத்தில் வெளிநாடு, அண்டை மாநிலம் தொடர்புடைய நிறுவனத்தில் பணியாற்றும் அமைப்பு உண்டாகும். அயல்நாடு செல்லவும் கூடும். அந்த வாய்ப்புகளை மறுக்காமல் பயன்படுத்தி அவரை வெளிநாடு அனுப்பி வையுங்கள். இவருக்காக பைரவர் வழிபாடு செய்வது நல்லது.

மாதந்தோறும் இவருடைய உத்திரட்டாதி நட்சத்திர நாளன்று சென்னை திருவான்மியூரில் ஜீவசமாதி அடைந்தி ருக்கும் பாம்பன் சுவாமிகளை நெய் தீபமேற்றி தியானம் செய்து வழிபடுவது நல்லது. அதனால் அவருக்கு நல்ல எதிர்காலம் அமையக்கூடும். இப்போது உத்யோகஸ்தானாதிபதியான செவ்வாய் சனியுடன் சேர்ந்து 8ல் மறைந்து காணப்படுவதால்தான் இவர் உத்யோகத்தில் கடுமையான போராட்டங்களை சந்தித்துக் கொண்டிருக்கிறார். ஆனால், வருங்காலத்தில் சுக்கிர தசை இவருக்கு நன்மை தருவதாக அமையும்.

? என் மகளுக்கு ஐந்து வருடங்களுக்கு முன்பு , நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால், திருமணம் நடக்காமல் நின்று விட்டது. பிறகு நாங்கள் மேற்கொண்ட திருமண முயற்சி எதற்குமே அவள் ஒப்புக்கொள்ளவில்லை. தற்போது வேறு மாநில பையனை காதலிக்கிறாள். திருமணம் என்றால் அவரோடுதான் இல்லையெனில் இப்படியே இருந்து விடுகிறேன் என்கிறாள்.

நாங்கள் திருமண முயற்சி களை மேற்கொள்ளலாமா? இந்த பிரச்னைக்கு விடிவு ஏற்படுமா? - ஒரு வாசகர். உங்கள் மகளின் ஜாதகத்தை சுக்கிர நாடி எனும் நூலை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்தோம். ஜாதகம் நன்றாக இருக்கிறது. மேஷ லக்னம், விருச்சிக ராசியில் பிறந்திருக்கிறார்.

லக்னத்தில் ராகு, 7ல் கேது, லக்னாதிபதி செவ்வாய் 8ல் அமர்ந்துள்ளார். மேஷ லக்னத்திற்கு பாதகாதிபதியாக வரும் சனியும் 8ல் அமர்ந்திருக்கிறார். காலாகாலத்தில் திருமணம் நடந்து குழந்தை பாக்யம் கிடைத்து வாழ்க்கையை முழுமையாக எந்த தடையும் இல்லாமல் அனுபவித்து, மகிழ்ச்சியைத் தரக் கூடிய கிரகமான 4ம் வீட்டுக்குரிய கிரகமான சந்திரனும் 8ம் வீட்டில் மறைந்து காணப்படுகிறார். பாதகாதிபதியான சனியின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது.

லக்னாதிபதியும், ராசிநாதனுமான செவ்வாயும் பாதகாதிபதி சனியிடம் பணிந்து காணப்படுகிறார். அதேபோல பாதக ஸ்தானமான 11ம் வீட்டில் பூர்வ புண்ணியாதி பதி சூரியன், பாக்யாதிபதி குரு, தன சப்தமாதிபதி சுக்கிரனெல்லாம் காணப்படுகிறார்கள். இப்படி எந்த வகையில் பார்த்தாலும் அனைத்து கிரகங்களையும் சனி தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளார். இப்படிப்பட்ட கிரக அமைப்புகள் இருக்கும் போது உங்களுடைய மகளை நீங்கள் அவர் விருப்பப்படியே திருமணம் செய்துகொள்ள அனுமதிப்பதுதான் நல்லது.

உங்கள் மகளின் நட்சத்திரமும் சனிபகவானின் நட்சத்திரமாக உள்ளது. உங்கள் மகள் ஜாதகத்தில் முழுமையாக சனியின் ஆதிக்கம் நிறைந்துள்ளது. சனி முன் ஜென்ம வினைகளை அடிப்படையாகக் கொண்டு, பலன் தரக்கூடிய ஒரு கிரகம். அதுமட்டுமல்லாமல் வெளிநாடு, வெளி மாநிலத்திற்குரிய கிரகம்.

விட்டகுறை தொட்டக்குறை என்று சொல்வார்களே அதற்கு தகுந்தாற்போல் பலன் தரக் கூடிய கிரகம். அந்த வகையில்தான் உங்கள் மகளின் ஜாதகப் பலன்கள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. வெளிநாட்டிற்கும், வெளி மாநிலத்திற்கும் உரிய கிரகமான சனியின் அமைப்புப் படிதான் அவர் வெளி மாநிலத்தைச் சேர்ந்த ஒரு வரனை விரும்புகிறார்.

அதனால்தான் ஐந்து வருடத்திற்கு முன்பு நீங்கள் பார்த்துச் செய்த திருமணம் நடக்காமலேயே போய்விட்டது. தாமதிக்க வேண்டாம். உங்கள் மகளுக்கு 27.7.2015 வரை குருபலன் நன்றாக உள்ளது. ஆகவே திருமணத்தை விரைந்து முடிக்கப் பாருங்கள். உங்கள் மகள் வாழ்க்கை நன்றாக இருக்கும். எல்லா பாக்கியங்களும் கிடைத்து அவர் வாழ்வில் முன்னேறுவார். முடிந்தால் திருப்பதிக்கு ஒருமுறை அழைத்துச் சென்று வாருங்கள். நற்பலன்கள் உண்டாகும்.

?நான் தமிழில் முனைவர் பட்டம் பெற்றுள்ளேன். எல்லா தகுதித் தேர்வுகளும் எழுதியுள்ளேன். ஆனால், இன்னும் அரசு வேலை கிடைக்கவில்லை. எனக்கு எப்போது கிடைக்கும்? நான் ஒருவரை மனதார விரும்புகிறேன். அவரைத் தவிர வேறு யாரையும் திருமணம் செய்ய மாட்டேன். எங்கள் திருமணம் எப்போது நடக்கும்?
- ஒரு வாசகி.

பரணி நட்சத்திரத்தில் பிறந்ததுடன், தமிழுக்குரிய கிரகமான சந்திரன் உங்கள் ஜாதகத்தில் வலுவடைந்திருப்பதால்தான் நீங்கள் தமிழை சிறப்பாக முதன்மைப் பாடமாக எடுத்து படித்திருக்கிறீர்கள். உங்கள் ஜாதகம் நன்றாக இருக்கிறது. பிருகு மங்கல யோகம், புதாதித்ய யோகம் உள்ளிட்ட பல யோகங்கள் உங்களுக்கு இருக்கிறது. இப்போது செவ்வாய் தசை நடைபெற்று வருகிறது. அதில் குரு புக்தி 10.7.2015 வரை நடைபெறும். நீங்கள் பிறக்கும்போதே உத்யோக ஸ்தானத்தில், சிவராஜ யோகம் என்ற அமைப்பில் குரு அமர்ந்திருக்கிறார். அதனால் குரு புக்தி நடைபெற்று கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் உத்யோகம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

11.7.2015 முதல் 19.8.2016 வரை சனி புக்தி நடைபெறும். அந்த காலகட்டமும் நன்றாகவே இருக்கும். அரசு உத்யோகம் உங்களுக்கு உண்டு. கல்லூரியில் பணியாற்றக் கூடிய அமைப்பு, மாணவர்களை வழி நடத்திச் செல்லும் அமைப்பு, சமயோஜித புத்தி, வாக்கு சாதூர்யம், நிர்வாகத் திறமை என்ற அனைத்தும் உங்களுக்கு உண்டு. ஆனால், தற்சமயம் உங்களுக்கு கண்டகச் சனி நடைபெற்று கொண்டிருக்கிறது. 2.11.2014 வரை அது நீடிக்கும்.

3.11.2014 முதல் உங்களுக்கு அஷ்டமத்துச் சனி தொடங்குகிறது. சனியின் குறுக்கீடு உங்களுடைய ஜாதகத்தில் அதிகமாக காணப்படுகிறது. என்றாலும் நீங்கள் பிறக்கும்போது உங்களின் லக்னாதிபதியாக சனி அமைந்ததாலும். சனிபகவானின் லக்னமான கும்ப லக்னத்தில் பிறந்து லக்னாதிபதி சனி உச்சம் பெற்று காணப்படுவதாலும் சனியால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் உங்களுக்கு நிச்சயமாக குறையும். எனவே, அரசுப்பணி உண்டு.

நீங்கள் ரேவதி நட்சத்திரம், மீன ராசிக்காரரை விரும்புவதாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள். அவருடைய ஜாதகத்தை நீங்கள் அனுப்பவில்லை. நட்சத்திரப்படி பார்க்கும்போது உங்கள் இருவருக்கும் பொருத்தம் நன்றாக இருக்கிறது. உங்கள் காதல் நிறைவேறும். ஆனால், தற்சமயம் அவருக்கு அஷ்டமத்துச் சனியும், உங்களுக்கு கண்டகச் சனியும் நடைபெறுவதால் திருமணம் தடைப்பட்டுக் கொண்டிருக்கிறது. நீங்கள் விரும்பும் மீன ராசிக்காரருக்கு 3.11.2014 முதல் நல்ல காலகட்டம் தொடங்குவதால் அதுமுதல் தடைகள் நீங்கி, திருமணம் நல்ல விதத்தில் முடியும்.

 மற்றவர்களின் ஆசீர்வாதமும் கிடைக்கும். தசா புக்தி, கோச்சார கிரகங்களால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து விடுபட மயிலாடுதுறை, பேரளத்திற்கு அருகிலுள்ள திருமீயச்சூர் சென்று லலிதாம்பிகையை வணங்கி வாருங்கள். அதற்கு அருகிலுள்ள திருப்பாம்புரத்தில் அருள்பாலிக்கும் சேஷபுரீஸ்வரரையும் நெய் தீபமேற்றி வணங்குங்கள். விரைவில் உங்களுடைய எண்ணங்கள் இரண்டும் நிறைவேறும்.

?நான் பல தொழில்கள் செய்து நஷ்டமடைந்தேன். தற்போது காயலான் கடை வைத்துள்ளேன். கடையில் அடிக்கடி போலீஸ் தொல்லை இருக்கிறது. வேறு தொழிலுக்குச் சென்று விடலாமா?
- வே.செந்தில்குமார், குளச்சல்.  உங்களுடைய ஜாதகத்தை சாதக அலங்காரம் என்ற நூலில் சொல்லப்பட்டுள்ள விதிகளை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்தோம். லக்னாதிபதி குரு லக்னத்தை பார்த்துக் கொண்டிருப்பதால் கடின உழைப்பு, தெய்வ பக்தி, பிறருக்குக் கெடுதல் செய்யாத மனப்பான்மை எல்லாம் உங்களிடம் உண்டு. 3ம் இடத்தில் சனி ஆட்சிபெற்று அமர்ந்திருப்பதால் எப்போதும் உழைத்துக் கொண்டிருக்கும் சுபாவம் உண்டு. புதன், சுக்கிரன் அவரவர்கள் வீட்டில் அமர்ந்திருப்பதுடன் செவ்வாயும் அமர்ந்திருக்கிறார்.

செவ்வாய், கேதுவுடன் சேர்ந்து 12ல் நிற்பதால் யாருக்கும் தீங்கு நினையாத மனசு உங்களுக்கு உண்டு. மோட்ச ஸ்தானாதிபதி செவ்வாய் மோட்ச ஸ்தானத்தில் ஆட்சிபெற்று அமர்ந்திருப்பதுடன், மோட்சக்காரகன் கேதுவுடன் சேர்ந்திருப்பதால் நீங்கள் ஒரு நல்ல ஆத்மா. இந்தப் பிறவியுடன் உங்களுக்கு பிறவிப் பிணி விலகுகிறது. செவ்வாய் தசையில் பிறந்திருக்கும் உங்களுக்கு சனி மகாதசை 11.9.2024 வரை நடைபெறும். தற்சமயம் சனி மகா தசையும், ஏழரைச் சனியும் நடைபெற்று வருகிறது. சனிபகவான் உங்களுக்கு சொந்த வீட்டில் இருப்பதால் கெடுதலான பலன்களை தருவதுபோல தோன்றினாலும் இறுதியில் நல்லதைத்தான் தருவார்.

சனியின் தொந்தரவுகளும், சனி தரும் இழப்புகளும் இறுதியில் உங்களுக்கு உதவியாகத்தான் இருக்கும். சனி தனியாக இல்லாமல் மாந்தியுடன் சேர்ந்திருப்பதால்தான் இடையிடையே தொந்தரவு களை கொடுத்துக் கொண்டிருக்கிறார். தற்சமயம் ஏழரைச் சனியும், சனி மகா தசையும் சேர்ந்து நடப்பதால்தான் பணம் கொடுத்து ஏமாறுதல், உறவினர்களால் அலைக்கழிக்கப்படுதல், ஏமாற்றப்படுதல், காவல்துறை தொந்தரவு என்று பல்வேறு இன்னல்களை நீங்கள் சந்திக்கிறீர்கள்.

3.11.2014 யோடு ஏழரைச் சனி முடிவடைவதால் அதுமுதல் உங்களுக்கு காவல் துறை தொந்தரவு இருக்காது. மனைவி, மகனை விட்டுப் பிரிந்து வாழும் நீங்கள், வரும் நவம்பர் மாதத்திற்கு பிறகு குடும்பத்துடன் ஒன்று சேருவீர்கள். வீண் சந்தேகத்தால் ஏற்பட்ட குழப்பங்கள், பிரச்னைகள், பிரிவுகளெல்லாம் நீங்கி, நவம்பர் மாதத்திற்கு பின்பு குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக சேர்ந்து வாழ்வீர்கள். அதன் பின்பு இழந்த தொகை கிடைக்கும். வியாபாரமும் சூடுபிடிக்கும்.

 10ம் வீட்டில் சூரியன், புதன், சந்திரன் மூன்று கோள்களும் நின்று கொண்டிருப்பதாலும், லாப ஸ்தானத்தில் சுக்கிரன் நின்று கொண்டிருப்பதாலும் கட்டிட உதிரி பாகங்கள், ரசாயனப் பொருட்கள், உர வகைகளாலும் லாபம் வரும். வருங்காலத்தில் அதுபோன்ற தொழில்களிலும் நீங்கள் ஈடுபட்டு பெருந்தனம் சம்பாதிக்கும் யோகம் இருக்கிறது.

இந்தச் சனி மகாதசையில் இழந்த பணத்தை மீண்டும் பெறவும், மனைவி, மகனுடன் சேர்ந்து வாழவும், நீங்கள் ஒருமுறை திருநள்ளாறு சென்று தர்பாரண்யேஸ்வரரையும், சனீஸ்வரரையும் வணங்கி வாருங்கள். நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும்.

? எனக்கு வருமானம் இல்லாததால் மனைவி, குழந்தைகளை மாமியார் வீட்டிற்கு அனுப்பி விட்டேன். தினமும் டீ குடித்துக் கொண்டும், கோயில் கோயிலாகவும் அலைந்து கொண்டும் இருக்கிறேன். வேறு மதத்திற்கு மாறி மீண்டும் தாய் மதத்திற்கே திரும்பி விட்டேன். பிரச்னைகள் தீர்ந்தபாடில்லை. நான் என்ன பரிகாரம் செய்தால் முன்னேறுவேன்?  
- ரமேஷ் பாபு. விருத்தாசலம்

வாழக்கையில் கடுமையான போராட்டங்களை நீங்கள் சந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள். பிறந்தது முதல் எந்தச் சுகமும் இல்லாமல் வாழ்க்கையே சோகமாகிவிட்டது. உங்கள் ஜாதகத்தை சுக்கிர நாடி எனும் நூலை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்து பார்த்தோம். நீங்கள் மிதுன லக்னம், கடக ராசியில் பிறந்திருக்கிறீர்கள்.

லக்னமும், ராசியும் பக்கம் பக்கமாக அமைவது நல்ல அமைப்புதான். ஆனால், உங்கள் ஜாதகத்தில் லக்னாதிபதி புதன் தனியாக அமர்ந்திருப்பது அவ்வப்போது தன்னம்பிக்கையை குறைக்கக் கூடியதாகவும், தன்னைத்தானே
வெறுக்கும் தாழ்வு மனப்பான்மையையும் தரக்கூடிய அமைப்பாகும்.

உங்களுடைய ஜாதகத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்குரிய கிரகமான சுக்கிரன் லக்னத்தில் அமர்ந்திருந்தாலும் செவ்வாய் 6க்குரியவனாகிய ரோகம், ருணம், சத்ரு, கடன் பிரச்னைகள்
இவற்றிற்கெல்லாம் உரிய கிரகமான செவ்வாயுடன் சேர்ந்து அமர்ந்திருப்பதாலும், உங்களுக்கு அடுத்தடுத்து பிரச்னைகளும் வறுமையுமாக இருக்கிறது.

 சுக்கிரனும், செவ்வாயும் 5 பாகைக்குள் அமர்ந்து கிரக யுத்தம் செய்து கொண்டிருப்பதோடு, இருவரும் நிழல் கிரகமான ராகுவின் நட்சத்திரத்தில் அமர்ந்திருப்பதும், துன்ப அமைப்பை தருகின்றன. அதுமட்டுமல்லாமல் ‘ஐந்து, ஒன்பதுக்குரியோன் விஞ்சிப் பலன் தருவான்’ என்ற பாடலுக்கேற்ப 5ம் வீட்டிற்குரிய சுக்கிரன் கெட்டுப் போய் விட்டார். அடுத்ததாக ஒன்பதாம் வீட்டிற்குரிய சனியும் சூரியனுடன் சேர்ந்து 12ம் இடத்தில் மறைந்து காணப்படுகிறார்.

அதனாலும் உங்களுக்கு தனதான்ய சம்பத்து, பணம் போன்றவற்றை சேர்க்க முடியாமலும், அனுபவிக்க முடியாமலும் போய்க் கொண்டிருக்கிறது. நீங்கள் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்திருக்கிறீர்கள். தற்சமயம் 22.1.2010 முதல் 22.1.2016 வரை சூரிய தசை நடைபெறுகிறது. ஏறக்குறைய பதினோரு வயது வரை நடைபெற்ற புதன் தசையும் பலன் தரவில்லை. கேது 2ம் வீட்டில் அமர்ந்ததால் பதினெட்டு வயது வரை நடைபெற்ற கேது தசையும் பலன் தராமல் போய்விட்டது.

 பதினெட்டு முதல் முப்பத்தெட்டு வயது வரையிலான மிக முக்கியமான காலகட்டத்தில் சுக்கிர தசை வந்தது. ஆனால், அந்த சுக்கிரன் சத்ரு ஸ்தானாதிபதியும், கடன் தொல்லைகளுக்கும், பிரச்னைகளுக்கும், பிரிவுகளுக்கும் உரிய 6ம் வீட்டிற்கு அதிபதியாக வந்ததால் சுக்கிர தசையாலும் பலன் இல்லை. அதனால்தான் மனம் நொந்து போனீர்கள். தொடர்ந்து முயற்சித்தும் எந்தவித பலனும் இல்லை என்று வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.

சூரியனும், சனியுடன் சேர்ந்து 22.1.2016 வரை சூரிய தசை நடைபெறுவதால் அந்த தசையும் உங்களுக்கு சோதனைக்குரியதாகிவிட்டது. உங்கள் வாழ்க்கையில் நம்பிக்கைக்குரிய கிரகமாக சந்திரன் விளங்குகிறது. சந்திரன் கேதுவுடன் சேர்ந்திருந்தாலும் இரண்டு கிரகங்களும் அதிகப் பாகை வித்தியாசத்தில் இடம் பெற்றிருப்பதாலும் இரண்டு கிரகங்களும் வெவ்வேறு நட்சத்திரங்களில் அமர்ந்திருப்பதாலும் சந்திர தசை யோக தசையாக இருக்கும். 22.1.2016 முதல் தொடங்கும் சந்திர தசை, வாழ்க்கையில் திருப்பத்தையும் யோகத்தையும் உண்டாக்கும்.

வசதி, வாய்ப்புகள், பணவரவு உண்டு. குடும்பத்தினரை காப்பாற்றும் சக்தியும் கிடைக்கும். ஜாதகத்தில் சப்தமாதிபதியும், ஜீவனாதிபதியுமான குருபகவான் வக்ரமடைந்து கேந்திராதிபத்ய தோஷமடைந்து காணப்படுவதால்தான் குடும்பத்தினருடன் தொடர்ந்து சேர்ந்து வாழக்கூடிய அமைப்பு இல்லாமல் போய்விட்டது. ஏனென்றால், குரு 7ம் இடமாகிய மனைவி ஸ்தானத்திற்கும், 10ம் இடத்திற்குரிய தொழில் ஸ்தானத்திற்கும் வருகிறார். குடும்பத்தினருடன் இருந்தால் தொழில் இல்லை.

தொழில் இருந்தால் குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ முடியவில்லையென்ற அமைப்பு! ஆனால், அடுத்தடுத்த வரக்கூடிய தசைக ளெல்லாம் உங்களுக்கு நன்றாக இருப்பதால் நல்ல நிலைக்கு வருவீர்கள். ‘மதம் மாறியும் நிம்மதியில்லை’ என்கிறீர்கள். உங்கள் ஜாதகப்படி வேற்றுமதம் சென்றாலும் நல்ல பலன் கிடைக்கப் போவதில்லை. இருக்கும் மதத்திலேயே தொடருங்கள். அடுத்ததாக சென்னைக்கு வந்தபோது ‘காகம் தலையில் தட்டியது அதனால் பிரச்னை’ என்று எழுதியிருக்கிறீர்கள்.

 காகம் தலையில் தட்டினால் உடுத்தியிருக்கும் வஸ்திரத்துடன் தலைக்கு குளித்துவிட்டு அந்த வஸ்திரத்தை எறிந்து விடுவது நல்லது. மற்றபடி காகம் தலையில் தட்டினாலெல்லாம் தலைவிதி உங்களுக்கு மாறிவிடாது;

கெட்டது நடந்து விடாது. காய்ந்த தென்னை மட்டை தலையில் விழுந்தாலும் அதனாலும் கெடுபலன் கிடையாது. எனவே எதையும் நினைத்து குழம்பிக் கொண்டிருக்காதீர்கள். தாழ்வு மனப்பான்மையை தள்ளி வையுங்கள். அடுத்தடுத்து வரக்கூடிய கிரக அமைப்புகள் உங்களுக்கு சாதகமாக இருக்கின்றன.

 கோச்சார கிரகங்களின்படி 19.8.2015 முதலே உங்களுக்கு நல்ல பலன்கள் தொடங்கி விடும். ஜாதகத்தில் கிரக தசா, புக்திகள், அந்தரங்கள், நட்சத்திராதிபதிகள், உப நட்சத்திராதிபதிகள் இவற்றின் அடிப்படையில் நீங்கள் கமிஷன் வியாபாரத்தில் ஈடுபடுவது நல்லது.

சந்திரன் ஜாதகத்தில் வலுவாக நிற்பதால் ஐஸ்க்ரீம், தேநீர், காய்கறிகள் விற்பனை மூலமாகவும் வருமானம் வரும். கட்டுமானப் பொருட்கள், செங்கல், மணல், ஜல்லி, கம்பி வியாபாரம் மூலமாகவும் லாபம் வரும். ஒட்டுமொத்தமாக உங்களுடைய ஜாதகத்தில் இடம் பெற்றுள்ள கிரகங்களின் வலிமையைப் பெற நீங்கள் குலதெய்வத்தை இடைவிடாமல் வணங்குவது நல்லது. அடுத்து நரசிம்ம மூர்த்தியையும் வணங்குங்கள். நிச்சயம் உங்கள் வாழ்க்கையில் திருப்புமுனை உண்டாகும்.

ஜோதிட  ரத்னா கே.பி.வித்யாதரன்