புரட்டாசியில் தரிசிக்க வெங்கடாஜலபதி கோயில்கள்



சநாதன தர்மம் என்கிற இந்து மதத்தில் எல்லாமுமே சூட்சுமங்கள் நிறைந்தது. ஏன் இவ்வளவு கடவுள்கள் என்று கேட்போருக்கும் பதில் இருக்கிறது. கடவுள் ஒன்றே என்போருக்கும் இடம் இருக்கிறது. எல்லா சிந்தனைகளையும் வரவேற்கிறது. பகவத் கீதையை படித்தே ஆகவேண்டும் என்று கண்டிப்பாகத் திணிப்பதில்லை.

 ஆனால், தனியொரு மனிதனின் தேடல் அதிகரிக்க அதிகரிக்க, அவன் தானாக கீதையின் வாக்குகளில் தன்னுடைய விடைகளை கண்டறிகிறான். கிருஷ்ண தரிசனத்தில் தன்னையே காணுகிறான். நம் கை கால்களை அடக்கி, முகவாயை இறுக்கி, பாலாடையில் தன் தத்துவங்களையோ, வழிபாடுகளையோ நம் மதம் புகட்டுவதில்லை.

தேன் ததும்பும் மலர்போல ஆலயங்களும், நூல்களும், உபாசனைகளும், வழிபாடுகளும் நம்மிடையே ஏராளமாக விளங்குகின்றன. மலரின் மணத்தையும், தேனின் சுவையையும் ருசித்த மகான்கள், நம்மை அந்த நந்தவனத்திற்கு வருமாறு அழைக்கிறார்கள். இந்த பூவுலகின் ஆன்மிக நந்தவனமே நமது பாரத தேசம். அதில் அழகியதும், வசீகரமும், சுகந்தமுமான அற்புத மலரே ஸ்ரீநிவாசப் பெருமாள்.

அப்படிப்பட்ட பெருமாள் அருள் மணம் வீசும் அற்புதத் தலம், திருமலை திருப்பதி. அதுவே பூலோகத்தின் வைகுண்டம். திருப்பதியில் தினம் தினம் திருநாள் என்றாலும், புரட்டாசி என்றால் அந்த விசேஷம் பல்லாயிரம் மடங்காகப் பெருகும். எனவே தான் புரட்டாசியில் பெருமாள் தரிசனத்தை பெரியோர்கள் என்றுமே தவிர்க்க மாட்டார்கள். திருப்பதி யில் மட்டும்தானா என்று கேட்போருக்கு, இல்லையில்லை அர்ச்சாவதார ரூபமாக நானே ஆங்காங்கு எழுந்தருளியிருக் கிறேன் என்கிறான் ஸ்ரீநிவாசன்.

வந்து தரிசிப்போருக்கு வற்றாத வளங்களை அருளுவேன் என்று கட்டியமும் கூறுகிறான். எனவே, நாம் அருகிலுள்ள ஸ்ரீநிவாசப் பெருமாள் அருளும் ஆலயத்திற்கு சென்று தரிசிப்போம். கீழே கொடுக்கப்பட்டுள்ள தலங்கள் யாவும் ஆங்காங்கு ஒளிர்ந்த முத்துகளை ஒன்று சேர்த்ததுதான். கண்ணுக்குத் தெரியாத பல முத்துகள் ஆங்காங்கு ஒளிந்து கொண்டுதான் இருக்கும். தேடிக் கண்டு அவற்றை தரிசித்தால் அதுவும் அமுதமாய் நம் நெஞ்சை நிறை விக்கும்; வாழ்வில் வளம் பெருக்கும்.

திருமலை

வையாவூர்அனுமன் சஞ்சீவி மலையை தூக்கிக் கொண்டு வான்வழியே வந்தபோது இத்தலத்தினால் கவரப்பட்டார். சஞ்சீவி மலையை சற்றே கீழே வைத்துவிட்டு கண் மூடி தியானத்தில் ஆழ்ந்தார். பிறகு அங்கிருந்து புறப்பட முற்பட்டபோது சஞ்சீவி மலையை தூக்க முடியவில்லை. ஏதோ ஒரு சக்தி அவரை நகரவிடாது தடுத்தது. ‘ஐயனே நான் என்ன செய்ய?’ என்று நெஞ்சுருகி ராமனை பிரார்த்தித்தார்.

அங்கே புன்னகையுடன் வெங்கடேசப் பெருமாள் காட்சியளித்தார். இன்றும் நம் பொருட்டு அலர்மேல் மங்கையோடு பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் எனும் திருநாமத்தோடு இறைவன் சேவை சாதிக்கிறார். இத்தலம் சென்னையிலிருந்து 70 கி.மீ. தொலைவிலும், செங்கல்பட்டு-மதுராந்தகம் இடையே ஜி.எஸ்.டி. சாலையின் உட்பகுதியில் பட்டாளம் கூட்டு ரோடிலிருந்து 4 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.

கருங்குளம் தூத்துக்குடி மாவட்டம், தாமிரபரணி கரையோரமுள்ள தென் திருப்பதிகளுள் ஒன்றாக கருங்குளம் வெங்கடாஜலபதி கோயில் விளங்குகிறது. மூலவர் வெங்கடாஜலபதி தனித்தன்மை வாய்ந்தவர். அழகனான பெருமாள், இங்கு உருவமற்றவராக சந்தனக் கட்டையில் அருவமாக அமர்ந்து ஆட்சி செய்கிறார். இத்தலத்தைப் பொறுத்த வரையில் மலையடிவாரத்திலுள்ள மார்த்தாண்டேஸ்வரரை வணங்கி விட்டுத்தான் வெங்கடாஜலபதியை வணங்குகின்றனர். திருநெல்வேலி-திருச்செந்தூர் பிரதான சாலையில் 15வது கிலோ மீட்டரில் கருங்குளம் அமைந்துள்ளது. நெல்லை டவுனிலிருந்து பஸ் வசதி உண்டு.

குணசீலம்

திருச்சிக்கு அருகே குணசீலம் எனும் தலத்தில் மூலவராக பிரசன்ன வெங்கடாஜலபதி அருள்கிறார். இங்கு சுவாமியே பிரதானம் என்பதால் தாயார் சந்நதி இல்லை. ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்ட கோயில் இது.

உற்சவரின் திருநாமம் ஸ்ரீநிவாசப் பெருமாள். பொதுவாக கோயில்களில் விழாவின்போது மட்டுமே கருட சேவை சாதிப்பார்கள். ஆனால், இங்கு ஒவ்வொரு திருவோண நட்சத்திர தினத்தன்றும் கருட சேவை சாதிக்கப்படுகிறது. மனக்குறையுடன் வரும் பக்தர்கள் மட்டுமல்லாது, நீண்டநாள் மன நோயாளிகளும் பூரண நிவர்த்தி பெற இத்தலத்திற்கு வந்து வழிபடுகின்றனர். திருச்சி-சேலம் பாதையில் 24 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

கும்பகோணம்

கும்பகோணம் குமரன் தெருவிலுள்ள திருக்குடந்தை திருப்பதி என்கிற ஸ்ரீதேவி-பூதேவி சமேத வெங்கடாஜலபதி கோயில் 600 வருடங்கள் பழமையானது. இங்கு மூலவராக வெங்கடாஜலபதி அருள்கிறார். தனிச் சந்நதியில் பத்மாவதித் தாயார். பஞ்சமுக ஆஞ்சநேயர் மற்றும் மகாவிஷ்ணுவின் தசாவதாரப் பெருமாள்களின் சந்நதிகள் கிழக்கு நோக்கி அமைந்துள்ளன.

துறையூர்


துறையூரை அடுத்த கொல்லிமலை-பச்சை மலைத் தொடரில் பிரசித்தி பெற்ற பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில் அமைந்துள்ளது. இந்த மலைக்கோயில் ராஜராஜசோழன் பரம்பரையினரால் 11ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகக் கூறுகின்றனர். இங்கு பெருமாள் திருமண கோலத்தில் கிழக்கு நோக்கி சேவை சாதிக்கிறார். அடிவாரத்திலிருந்து கோயிலுக்கு 1554 படிக்கட்டுகள் உள்ளன.

வாகனங்கள் செல்ல 5 கி.மீ. தொலைவிற்கு மலைப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. திருப்பதி பெருமாள், தனக்கு செலுத்த வேண்டிய நேர்த்திக் கடன்களை இங்கேயே செலுத்தலாம் என்று ஒருமுறை இங்கே எழுந்தருளிச் சொன்னதாக தல வரலாறு கூறுகின்றது. இத்தலம் திருச்சி, துறையூருக்கு அருகேயுள்ளது.

சென்னை - சைதாப்பேட்டை

மேற்கு சைதாப்பேட்டையில் மிகப் பழமையான பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில் அமைந்துள்ளது. தாயார் மற்றும் பெருமாளின் திருமேனி பூமியிலிருந்து கிடைத்ததாக கூறுகிறார்கள். மேலும், விஜய நகர மன்னர்களிடம் பணியாற்றிய தேசாய் எனும் பிரிவைச் சேர்ந்தவர்களால் கட்டப்பட்ட ஆலயம் இது.

 வருடந்தோறும் தமிழ் வருடப் பிறப்பு அன்று பிரம்மோற்சவ விழா தொடங்கி பத்து நாட்கள் சிறப்பாக நடைபெறுகிறது. பிரார்த்தனைகள் நிறைவேற பெருமாளுக்கும், தாயாருக்கும் திருமஞ்சனம் செய்து புது வஸ்திரம் சாத்தி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். தாயார் அலர்மேல் மங்கை எனும் திருப்பெயரிலேயே அருள்கிறார். செண்பக மரம் தலவிருட்சம்.

சின்ன திருப்பதி


தலத்தின் பெயரே சின்ன திருப்பதிதான். தர்மபுரி மாவட்டம் ஓசூரில் இருந்து 15 கி.மீ. தொலைவில் பாகலூர் செல்லும் வழியில் அமைந்துள்ளது. திருமலை திருப்பதியில் பெருமாள் மலை மீதும் தாயார் திருச்சானூர் தலத்திலும் அருள்பாலிக்கிறார்கள். ஆனால், இத்தலத்தில் மகாலட்சுமி, பத்மாவதி தாயார்களோடு சேர்ந்து பெருமாள் சேவை சாதிக்கிறார். கரம் உயர்த்தி அருள்பாலிக்கும் தோரணை நம்மை சிலிர்க்க வைக்கிறது. வைகுண்ட ஏகாதசியை ஒட்டி பத்து நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறுகிறது.

மதுரை

அப்பன் திருப்பதி கோயில் என்றே இக்கோயிலை அழைப்பர். மூலவர், ஸ்ரீநிவாசப் பெருமாள். தாயார், அலர்மேல் மங்கை. சித்திரை திருவிழாவின்போது அழகர்கோயிலிலிருந்து புறப்படும் கள்ளழகர் இத்தல மண்டபத்தில் ஓர் இரவு முழுவதும் தங்கிச் செல்லுவார். கருவறையில் ஸ்ரீநிவாசப் பெருமாள் தன் தேவியருடன் அருள்பாலிக்கிறார். மதுரையிலிருந்து அழகர்கோயிலுக்குச் செல்லும் வழியில் அப்பன் திருப்பதி தலம் அமைந்துள்ளது.

மோகனூர்


காவிரிக் கரையில் அமைந்துள்ள அழகிய தலம் இது. கருவறையில் கல்யாண பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் வலதுபுறம் ஸ்ரீதேவி, இடதுபுறம் பூதேவியோடு நின்ற நிலையில் காட்சியளிக்கிறார். நவராத்திரியின்போது ‘திருப்பதியில் ஒருநாள்’ எனும் உற்சவம் நடைபெறுகிறது. அன்று ஒருநாள் மட்டும் திருப்பதி வெங்கடாஜலபதிக்கு நடக்கும் அனைத்து பூஜைகளும் இங்கும் நடக்கும். அர்த்தநாரீஸ்வரர் போல கிருஷ்ணனும் ருக்மிணியும் இணைந்த அபூர்வ திருக்கோலத்தை இத்தலத்தில் தரிசிக்கலாம்.

இந்த அமைப்பை சம்மோஹன கிருஷ்ணன் என்பார்கள். மோகனூர் எனும் தலப்பெயர், இவரை வைத்துதான் வந்தது. புரட்டாசி சனிக்கிழமைகள் மற்றும் திருவோண நட்சத்திரத்தில் சுவாமி கருட வாகனத்தில் எழுந்தருள்கிறார். நாமக்கல்லில் இருந்து 18 கி.மீ. தொலைவில் மோகனூர் அமைந்துள்ளது.

சென்னை- தரமணி

ஏழுமலையான் கோயில் கொண்ட பல்வேறு தலங்களுள் ஒன்று சென்னை தரமணியில் உள்ளது. சென்னை-வேளச்சேரியிலிருந்து திருவான்மியூர் செல்லும் பாதையில் பாரதி நகர் பேருந்து நிறுத்தத்திலிருந்தும், தரமணி பேருந்து நிலையத்திலிருந்தும் 2 கி.மீ. தொலைவில், ராஜாஜி தெருவில் அமைந்துள்ளது இக்கோயில். ராகவபட்டாச்சாரியார் எனும் வைணவ பெரியவர் திருப்பதி திருமலையிலும், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி ஆலயத்திலும் பல வருடங்களாக கைங்கரியம் புரிந்து வந்தார்.

 வயதான காலத்தில் அவரால் திருப்பதிக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட, ஏழுமலையானைத் தனது இருப்பிடத்திற்கே அழைத்துவர தீர்மானித்தார். உண்மையான பக்தனின் அழைப்பை வேங்கடவன் மறுப்பானா? பெரியவரின் விருப்பப்படியே தரமணியில் பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் ஆலயம், 1976ம் ஆண்டு உருவாகியது.

ஆப்பூர்


சிங்கப் பெருமாள் கோவில் - ஸ்ரீபெரும்புதூர் சாலையில் ஆப்பூர் தலத்தில் மலைமீது வெங்கடேசப் பெருமாளின் கோயில் அமைந்துள்ளது. இந்தப் பெருமாளுக்கு பிரார்த்தனையாக புடவை செலுத்தப்படுவது வித்தியாசமான வழக்கமாக இருக்கிறது. திருமணமாகாதவர்கள் பிரார்த்தனை செய்து கொண்டால் உடனே திருமணம் நடந்து விடுகிறது. பௌர்ணமியன்று பல சித்தர்கள் சூட்சுமமாக இந்தப் பெருமாளை வழிபடுவதாக கூறுகின்றனர்.

கிருஷ்ணாபுரம்

திருநெல்வேலிக்கு அருகேயுள்ள இத்தலம் சிற்பக் கலைக்கு உலகப் புகழ் பெற்றது. கலை நுணுக்கங்கள் வாய்ந்த உயிரோவியங்கள் நிறைந்த தலம். 16ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. திருப்பதிக்கு செல்ல முடியாதவர்கள் இக்கோயிலிலேயே நேர்த்திக் கடன் செலுத்தலாம். இங்குள்ள சில கற்சிலைகளை தட்டினால் வெண்கல ஓசை ஒலிக்கும். பெருமாள் நின்ற கோலத்தில் வெங்கடாஜலபதியாகக் காட்சியளிக் கிறார். பத்மாவதித் தாயாரும் அருள் பொழிகிறார். நெல்லையிலிருந்து 11 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.  

பாதூர்

ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் திருக்கோயில் விழுப்புரம்-உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையிலிருந்து 2 கி.மீ. தொலைவில் வடப்புறமாக பாதூர் கிராமத்தில் உள்ளது. வரலாற்று சிறப்புமிக்க வைணவ பஞ்ச (ஐந்து) கிருஷ்ணாரண்ய புண்ணிய பூமியில், புனிதம் நிறைந்த, மகோன்னதமான கருட நதி, சேஷ நதிகளின் தென்புறத்தில் அமைந்துள்ளது பாதூர். இந்த ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலையும், பாதூர் கிராமத்தையும் ராஷ்டிரகூட மாமன்னனான மூன்றாவது கிருஷ்ணனால் கி.பி. 964ம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டதாக கல்வெட்டுகள் கூறுகின்றன.

ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த, சரபோஜிராவிற்கு தரிசனம் தந்த பெருமாள் இவர். தன்னை நாடி வந்தவர்களின் வாழ்வில் ஒளியேற்றும் இந்த பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கிழக்கு பார்த்த வண்ணம்
அழகாய் காட்சி தருகிறார்.

திருப்பாற்கடல்


வைணவ திருக்கோயில்களில் திருமாலை கிடந்த, நின்ற, அமர்ந்த திருக்கோலங்களில் தரிசித்திருப்போம். அதுபோல திருப்பாற்கடல் எனும் இத்தலத்திலும் கிடந்த, நின்ற கோலங்களை ஒரு சேர தரிசிக்கலாம். மகாவிஷ்ணு வும் ‘ஸ்ரீரங்கநாதனாக’ கிடந்த கோலத்தில் பிரம்மாவின் வேண்டுதலுக்கு இணங்க இன்றளவும் காட்சியளிக்கிறார்.

புண்டரீக மகரிஷி வைகுண்ட ஏகாதசி அன்று பெருமாளை தரிசனம் செய்ய, இப்பகுதி வழியாக வந்தார். அப்போது இக்கோயிலைப் பார்த்தார். அங்கு தூசேஸ்வரர் என்ற ஈசனின் வடிவைக் கண்டார். ‘பெருமாள் ஆலயத்தில் சிவனா!’ என்று வியந்து குழம்பினார்.

‘பெருமாளை சேவிக்க வந்தால் சிவமாக இருக்கிறதே’ என்று மெல்லிய ஏமாற்றத்தோடு வெளியே வந்தார். இவருக்காகவே காத்திருந்த திருமால் அவரின் அறியாமையை போக்க விரும்பினார். வயோதிக வடிவில் அவர் முன் தோன்றினார். ‘‘ஏன் கவலையோடு செல்கிறீர்கள்?’’ என்று கேட்டார்.

அதற்கு புண்டரீக மகரிஷி, ‘‘நான் திருமாலை சேவிக்க வந்தால் இங்கு சிவம் நிற்கிறதே’’ என்று ஏக்கத்துடன் கூறினார். அதற்கு வயோதிக வடிவில் வந்த திருமால், ‘‘அப்படியா? ஆனால், இது திருமால் கோயில்தானே’’ என்று பொய்யுரைத்தார்.

‘இல்லை... இல்லை இது சிவன் கோயில்தான்’ என்று மறுத்தார் புண்டரீகர். வயோதிக வடிவில் வந்திருந்த வைகுந்தனும், ‘‘வாருங்கள், நீங்கள் பார்த்தது பெருமாள்தான் என்று காட்டுகிறேன்’’ என்று சொல்லி அவரை உள்ளே அழைத்துச் சென்றார். பளிச்சென்று வயோதிகர் மறைந்தார். வேங்கடநாதராக காட்சியளித்தார். புண்டரீக மகரிஷிக்காக சிவலிங்கத்தின் மேல் பிரசன்ன வெங்கடேஸ்வரராக சேவை சாதித்தார்.

அது முதல் இது புண்டரீக க்ஷேத் திரம் என்றும், புஷ்கரணி, புண்டரீக தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகின்றன. ஸ்தல விருட்சம், வில்வம்! சைவத்திருத்தலங்களில் மட்டுமே காணப்படுவது வில்வ மரம்.

ஆகவே, இங்கு ‘அரியும், சிவனும் ஒன்று,’ என்ற வாக்குக்கு ஏற்ப இறைவன் சிவமாகவும், திருமாலா கவும் ஒருசேர பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார். சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காவேரிப்பாக்கத்தில் இருந்து தெற்காக பிரியும் சாலையில் 3 கி.மீ தூரம் சென்றால் திருப்பாற்கடலை அடையலாம்.

வரகூர்

ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தியை உறியடி திருவிழாவாக கொண்டாடிய முதல் திருத்தலம் வரகூர். இவ்வூர் தஞ்சாவூரில் இருந்து 24 கி.மீ. தூரத்தில் கண்டியூர்-திருக்காட்டுப்பள்ளி சாலையில் இருந்து 1 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. ஸ்ரீ நாராயண தீர்த்தர் அவதரிப்பதற்கு சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சாது, திருமலையில் இருந்து ஸ்ரீவேங்கடேச பெருமாளையும், உபயநாச்சியாரையும் எடுத்துக்கொண்டு யாத்திரை புறப்பட்டார்.

பூபதிராஜபுரத்தில் (இப்போதைய வரகூர்) தங்கி விக்ரகங்களை வைத்து ஆராதனை செய்தார். பிறகு  யாத்திரையை தொடர எண்ணி விக்ரகங்களை எடுக்க முயன்றபோது அவற்றை அசைக்க முடியவில்லை.

அப்போது “எமக்கு உகந்த இடம் இது. எடுத்துச் செல்ல வேண்டாம்’’ என்று அசரீரி கேட்டதாம். அதன்படி சாதுவும் விட்டுவிட்டு சென்றாராம். ஸ்ரீலட்சுமி நாராயணர் மூலவராக கோயில் கொண்டுள்ள இடத்தில் ஸ்ரீவேங்கடேசரையும், உபயநாச்சியாரையும் உற்சவராக வைகாசன ஆகம விதிப்படி ஸ்ரீநாராயண தீர்த்தர் பிரதிஷ்டை செய்ததாகக் கூறப்படுகிறது.

குருவாயூரில் நாராயண பட்டத்திரிக்கு அருள் பாலித்த கண்ணன், வரகூரில் ஸ்ரீநாராயண தீர்த்தருக்கு நடனமே ஆடி தரங்கிணியை ஏற்ற அற்புதம் நிகழ்ந்தது. தனது இறுதி காலம் வரை ஸ்ரீவேங்கடேசப் பெருமாளை பூஜித்து, பஜனை வழி முறைகளை தோற்றுவித்து, தரங்கிணி பாடல்களை பாடி, ‘உறியடி’ என்ற கிருஷ்ண ஜன்மாஷ்டமி
திருவிழாவையும் தோற்றுவித்தார் நாராயணதீர்த்தர்.

அரியக்குடி

அரி என்னும் தமிழ்ச் சொல், ஹரி என்னும் வடமொழிச் சொல்லின் திரிபு. ஆகவே ஹரி குடிகொண்ட ஊர் அரியக்குடி ஆயிற்று. திருவேங்கடமுடையான் தானே உகந்து எழுந்தருளியதாலும் அவருடன் திருமலை யில் உள்ளதுபோல் தென் திசையில் அலர்மேல் மங்கைத் தாயார் சந்நதி இருப்பதாலும் திருப்பதி மலையில் நேர்ந்து கொண்ட பிரார்த்தனையை இவ்வூர் பெருமாள் ஏற்றுக் கொள்வதாலும் இவ்வூர் ‘தென் திருப்பதி’ என்னும் சிறப்புப் பெயர் பெற்றதாக விளங்குகின்றது.

இவ்வூரில் வாழ்ந்த தன வணிகர் ஒருவர் ஆண்டவன் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு திருவேங்கடமுடையானை நோக்கிக் கடுந்தவம் மேற்கொண்டார்.

இவரை சேவுகன் செட்டியார் என்பார்கள். இவர் மூப்பெய்தியபோதும், ஒருநாள் தலையில் காணிக்கை உண்டியலை சுமந்து கொண்டு மலையேறிச் சென்றார். இயலாமையால் மயங்கி விழுந்தார். பக்தனின் பக்தியில் பரவசமடைந்த பெருமாள், சேவுகன் செட்டியாருக்கு அசரீரியாக அருள் புரிந்தார். அதாவது, தள்ளாத வயதில் அவர் இனி மலையேறி வரவேண்டாம் என்றும், அவர் இருப்பிடம் தேடி தானே வருவதாகவும் திருவாய் மலர்ந்தருளினார்.

அரியக்குடிக்கு அவர் திரும்பிச் செல்லும்போது எந்த இடத்தில் நான்கு பக்கமும் முளைவிட்டு, நடுவில் உடைந்த தேங்காய், துளசி தளம், குங்குமம் ஆகியவை காணப்படுகின்றனவோ அவ்விடத்தில் தன்னை ஆவாஹனம் செய்து வழிபட்டு, காணிக்கைகளையும் செலுத்தி வந்தால் எல்லா நன்மைகளும் உண்டாகும் என அருள் வாக்கு தந்தார். அப்படிப்பட்ட அடையாளங்களை கண்ட இடமே அரியக்குடி திருத்தலமாயிற்று. சிவகங்கை மாவட்டம், காரைக்குடிக்கு தெற்கே 4 கி.மீ. தொலைவில் அரியக்குடி அமைந்துள்ளது.

திருவெள்ளக்குளம்


சீர்காழிக்கு அருகில் அமைந்துள்ளது திருவெள்ளக்குளம். இங்கே கோயில் கொண்டிருக்கும் வேங்கடவன், பிராட்டியான அலர்மேல் மங்கையுடன் (தனிக்கோயில் தாயாராக) அழகு தரிசனம் தருகிறார். அதுமட்டுமல்ல, திருமங்கையாழ்வார் திருமலை வேங்கடவனிடம் வேண்டிக் கொண்டதை, இந்தத் தலத்து வேங்கடவன் நிறைவேற்றிக் கொடுத்தான்.

 அதனால், ‘பூவார் திருமகள் புல்கிய மார்பா’ என்றும், ‘வேடார் திருவேங்கடமேய விளக்கு’ என்றும், ‘அண்ணா அடியேனிடரைக் களையாயே’ என்றும் குறிப்பிட்டு, திருமலை வேங்கடவனுக்கு அண்ணனாக இவரைப் பாடி மகிழ்ந்தார். இதையொட்டியே இந்தத் தலம் ‘அண்ணங்கோயில்’ என்று பெயர் பெற்றது. தலபுராணம், இவரை மரண பயம் நீக்கும் மகாவிஷ்ணு என்று வர்ணிக்கிறது. திருப்பதியைப் போலவே இத்தலமும் பிரார்த்தனை தலமாக விளங்கி வருகிறது.

குணசீலம்

இத்தலத்தில் மூலவர் பிரசன்ன வேங்கடாசலபதியாகத் திகழ்கிறார். சங்கும், சக்கரமும் அவரது புஜங்களை அலங்கரிக்கின்றன. வலது கரம் வரத ஹஸ்தமாக அருள் பெருக்குகிறது. இடதுகரம், இடுப்புக்குக் கீழே சற்றே உட்புறமாக வளைந்து கடிஹஸ்தமாகத் துலங்குகிறது. முன் வலக்கையில் செங்கோல் ஏந்தியிருக்கும் காட்சி அபூர்வமானது. அந்த செங்கோலால் தன்னை தரிசிப்பவர்களின் மனநோய்களை சரி செய்து மருத்துவனாய் நின்ற மாமணிவண்ணனாக அருள்பாலிக்கிறார் பெருமாள்.

 திருமலை வேங்கடவனே இங்கு இவ்வாறு காட்சியளிப்பதால் திருப்பதிக்கு செலுத்த வேண்டிய பிரார்த்தனைகளை இங்கு செலுத்தலாம் என்பது இக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு கிடைக்கும் சலுகை. ஆனால், இத்தலத்தில் செய்ய நேர்ந்துகொண்ட பிரார்த்தனைகளை இத்தலத்திலேயே செலுத்த வேண்டும் என்பது இங்கு பின்பற்றப்படும் ஒரு நியதி. திருச்சி-சேலம் மார்க்கத்தில் சுமார் 25 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது  குணசீலம்.திருவிண்ணகர் (ஒப்பிலியப்பன் கோயில்)

இத்தலத்து நாயகன் ஒப்பிலியப்பன் என்றும், திருவிண்ணகரப்பன் என்றும், பிரசன்ன வெங்கடேசன் என்றும் பலவாறாக அழைக்கப்படுகிறார். நம்மாழ்வார் இப்பெருமானை ‘தன் ஒப்பாரில் அப்பன்’ என்று பாடியதிலிருந்தே இப்பெருமானின் மகிமையைப் புரிந்து கொள்ளலாம்.

ஆறு சுவைகளில் ஒன்றான உப்புச் சுவையை நீக்கித் தான் அமுது செய்தாலும் இந்தப் பெருமான், தன்னை நாடி வந்தவர்களுக்கு அனைத்து சுவைகளையும் அளப்பறியாததாக அளித்தருள்கிறான்.

உப்புச் சுவையை நீக்கினால் புலன்களை அடக்க முடியும் என்ற கருத்தை இத்தலத்து பிரசாதங்கள் உணர்த்துகின்றன. ராமாயணத்தில் சத்ருக்னன் லவணாசுரனை (லவணம் என்றால் உப்பு) வென்றதாக ஒரு சரித்திரம் உண்டு. திருமலை திருவேங்கடவனின் மூத்த சகோதரனாக அர்ச்சாவதார நிலையில் கருதப்படும் இப்பெருமான் நிலைத்து வாழும் இவ்வூர், பரமபதத்திற்கு ஒப்பானது. இது கும்பகோணத்திலிருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ளது.

சென்னை-திருவல்லிக்கேணி


சுமதி என்ற மாமன்னனின் விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு கிருஷ்ண பகவானே இங்கு வேங்கடவனாகவும் காட்சியளிப்பதால், மூலவருக்கு ‘வேங்கட கிருஷ்ணன்’ என்று திருநாமம். ‘எல்லாம் வேங்கடவனின் இன்னருளே’ என்று பக்தி மிகக் கொண்டு வாழ்ந்த அந்த மன்னன் திருமலைக்குச் சென்று வழிபட்டான்.

அங்கு தான் தரிசித்த வேங்கடவனை தேர்ப்பாகனாக, கண்ணனாகக் கண்டு மகிழ வேண்டும் என்று விருப்பம் கொண்டான். அவன் உள்ளம் அறிந்த பகவான், அவனை பிருந்தாரண்ய க்ஷேத்திரத்துக்கு வரவழைத்து, அவன் விரும்பியபடியே பார்த்தசாரதியாகக் காட்சி கொடுக்கிறார்.

வேங்கடவனாக இருந்தாலும், தேர்ப்பாகனாக இருந்தாலும் இருவருமே குறையொன்றுமில்லா கோவிந்தன்தானே! மூலவர், கீதோபதேச கோலத்தில் காட்சியளிக்கிறார். அதே உற்சவரான பார்த்தசாரதி, தன் திருமேனி யிலும், முகத்திலும் போர்க்களத்தின் அடையாளங்களை அம்பு வடுக்களாக ஏந்தி உண்மையான தேர்ப்பாகனாகக் காட்சியளிக்கிறார். இவரே பார்த்தசாரதி. குருக்ஷேத்திரப் போர்க்களம் மட்டுமல்ல, இந்தக் கலியுகத்தின் பக்தர்கள் அனைவருடைய உள்ளங்களையும் பார்க்கும் சாரதி இவர். பார்த்துப் பார்த்து பரிவு கொள்ளும் சாரதி.

திருவண்ணாமலை (ஸ்ரீவில்லிபுத்தூர்)ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் தன் பாசுரத்தில் ‘வேங்கடவற்கென்னை விதிக்கிற்றியே’ என்றும், ‘மானிடவர்க்கென பேச்சப்படின் வாழகில்லே’ என்றும் பாடி மகிழ்ந்தாள். அந்த அடியொற்றியே திருவேங்கடவனும் ஆண்டாளை மணம் புரிய வேண்டி ஸ்ரீவில்லிபுத்தூர் வருகிறான்.

ஆனால், ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாளுக்கும், அரங்கனுக்கும் திருமணம் நிறைவேறிய செய்தியறிந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அருகே உள்ள திருவண்ணாமலையில் தங்கி விடுகின்றான். இத்தலமே ‘வைணவத் திருவண்ணாமலை’. புரட்டாசி மாதங்களில் பக்தர்கள் கூட்டம் அலை மோதும். சிறந்த பிரார்த் தனை தலமாக விளங்குகிறது.

சென்னை-நுங்கம்பாக்கம்

பார் புகழும் சென்னை மாநகரத்தின் ஒரு பகுதியான பொம்மராஜபுரம் பகுதியை பொம்மராஜன் என்ற சிற்றரசன் ஆண்டு வந்தான். அவன் சிறந்த திருமால் அடியவனாக இருந்தான். விதி வசமாய் அவனை சூலை நோய் வாட்டி வதைத்தது. திருமாலை வேண்டியபடியே இருந்த அவன் கனவில் திருமால் தோன்றி பொம்மராஜபுரத்திலேயே சிவபிரானான அகத்தீஸ்வரருக்கும், அன்னை அகிலாண்டேஸ்வரிக்கும் ஆலயம் அமைக்கச் சொன்னார்.

 அதுபோன்றே அவர்களுக்கு ஆலயம் அமைத்ததோடல்லாமல் ஸ்ரீநிவாசப் பெருமானுக்கும் அப்பகுதியிலேயே ஓர் ஆலயம் அமைத்தான். இத்தலங்கள் அமைந்துள்ள பகுதியே தற்போது ‘நுங்கம்பாக்கம்’ என்று அழைக்கப்படுகிறது. விசேஷ வைபவங்கள் நடக்கும் இப்பெருமான் தலம் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்துக்குப் பின்பகுதியில் அமைந்துள்ளது.

சௌகார்பேட்டை பைராகி மடம் அருள்மிகு திருவேங்கடமுடையான் திருக்கோயில், வடநாட்டு பைராகியான (சாது) லால்தாஸ் என்ற பக்தருடைய கனவில் தோன்றிய திருவேங்கடமுடையான் விண்ணப்பித்தபடி அவன் மூலம் அமைத்துக் கொண்ட கோயில் இது. இங்கே திருப்பதி திருமலையில் உள்ளது போலவே மூலவர் காட்சியளிக்கிறார். தாயார் அலர்மேல்மங்கையும் உடன் அருள்பாலிக்கிறார்.

இவ்வாலயத்தில் பூஜை முறைகள் திருப்பதியைப் போலவே கடைப்பிடிக்கப்படுகின்றன. அலர்மேல் மங்கைக்கும் திருச்சானூரில் நிகழ்த்தப்படுவது போலவே கார்த்திகை மாதத்தில் பஞ்சமி தீர்த்த உற்சவம் 10 நாட்கள் நடக்கின்றன. இத்திருக்கோயில் ஸ்ரீநிவாசரைத் தவிர காஞ்சி வரதர், வேணுகோபாலன், அரங்கன், ராமன் மற்றும் லட்சுமி நரசிம்மர், பூரிஜெகன்னாதர் சந்நதி களும் அமைந்துள்ளன. இத்திருக்கோயிலுக்குச் சென்று வந்தால் திருப்பதிக்கே சென்று வந்த நிறைவு கிடைக்கும் என்பது பக்தர்களின் அனுபவம்.

மேலத்திருவேங்கடநாதபுரம்


திருநெல்வேலி ஜங்ஷனிலிருந்து 20 கி.மீ. தொலைவில் இருக்கும் இத்தலம் மிகவும் பிரசித்தி பெற்ற பிரார்த்தனை தலமாகத் திகழ்ந்து வருகிறது. இங்கும் எப்போதும் திரளான பக்தர்கள் கூட்டத்தைக் காணலாம். வேங்கடநாதனையே மூலவராக கொண்டிருக்கும் இத்தலம், திருநெல்வேலி மாவட்டத்தின் திருப்பதியாக திகழ்கிறது.

மொண்டிப்பாளையம்


கோயம்புத்தூருக்கு அருகேயுள்ள இத்தலம் ஐநூறு வருடங்கள் பழமையானது. அலர்மேல்மங்கை சமேத வெங்கடேசப் பெருமாள் அருளாட்சி நடத்துகிறார். தல விருட்சமாக ஊஞ்சல் மரம் திகழ்கின்றது. இங்கு பெருமாள் சாளக்கிராம கல்லில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

பெருமாள் ஏகதள விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார். இங்கு பெருமாள் நான்கு புறம் பட்டையாகவும், மத்தியில் கூராக வாழைப்பூ வடிவில் சுயம்பு லிங்கம்போல காட்சி தருவது வேறெந்த வைணவத் தலங்களிலும் காண முடியாத சிறப்பாகும். திருமலை-திருப்பதி தலம்போல பூஜைகள் டைபெறுகின்றன. சுவாமிக்கு இடதுபுறத்தில் திருப்பாதம் அமைந்துள்ளது. இங்கு மல்லிப்பொட்டு எனும் மூலிகைப்பொருட்கள் அடங்கிய பிரசாதம் வழங்கப்படுகிறது. இதை மேலத் திருப்பதி என்று அழைப்பர்.

ஸ்ரீரங்ககவுண்டன் பாளையம்

ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் துடுப்பதி அருகேயுள்ள ஸ்ரீரங்ககவுண்டன் பாளையம் கிராமத்தில் வனவேங்கடப் பெருமாள் எனும் திருநாமத்தோடு பெருமாள் சேவை சாதிக்கிறார். பெருமாள் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

கோயிலுக்கு அருகேயுள்ள குட்டையில் தண்ணீர் நிரம்பும்போது பக்கத்திலுள்ள சிறு பள்ளத்தில் வெள்ளை நிறத்தில் நாமக் கட்டி உருவாகிறது. வேப்ப மரம் அம்மனுக்கு உகந்ததாயினும், இத்தலத்தில் வேப்ப மரத்தடியில் பெருமாள் வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார். அதனாலேயே இவரை வனவேங்கடப் பெருமாள் என்றழைக்கின்றனர்.

புரட்டாசி நான்காவது சனிக்கிழமையன்று இரவில் வன வேங்கடப் பெருமாள் கோயிலில் அபிஷேகங்கள் நடந்தேறும். அதுவரை கிராமத்து மக்கள் விரதம் இருப்பர். இரவில் ஆஞ்சநேயருக்கு நிவேதனம் ஆனபின்பே உண்பர். மறுநாள் துடுப்பதிக்கு ஆஞ்சநேயர் எழுந்தருளுவார். அவரை துடுப்பதியிலுள்ள பெருமாளும், ஈஸ்வரனும் வாசலிலேயே காத்திருந்து வரவேற்பர். இந்த வழக்கம் நானூறு வருடங்களாக வழக்கத்தில் உள்ளது.

கூழம்பந்தல்


ஆந்திராவிலுள்ள நெல்லூரையும், காஞ்சிபுரத்தையும் சேர்த்து ஆட்சிபுரிந்தவர்கள் தெலுங்கு சோழர்கள். ஸ்ரீவிஜயகண்ட கோபால மன்னர் கி.பி. 1270 வருடம் கோயிலுக்கு வந்து பெருமாளிடம் பேசியதாக கோயிலின் இரண்டு வாயிற்படியிலும் எழுதி வைத்துள்ளார். எனவே, இந்தப் பெருமாளுக்கு பேசும் பெருமாள் என்று பெயர். பேசவும் நடக்கவும் இயலாத, காது கேளாத குழந்தைகளுக்காக சிறப்பு வழிபாடு நடக்கின்றது. ஒன்பது வாரங்கள் தொடர்ந்து வேண்டிக் கொண்டு உன்னத அருள் பெறிகின்றனர் பக்தர்கள். இத்தலம் காஞ்சிபுரம்-வந்தவாசி பாதையில் 18 கி.மீ. தொலைவில் உள்ளது.

தான்தோன்றிமலை (தாந்தோணிமலை)


இந்த தலத்தை தட்சிண திருப்பதி என்பார்கள். கல்யாண வெங்கடரமணர் எனும் திருநாமத்தோடு பெருமாள் சேவை சாதிக்கிறார். ரூபமும் அரூபத்தையும் தன்னிடத்தே கொண்டவர் உற்சவர் ஸ்ரீநிவாசர். இங்கு பிரமாண்டமான பாறையில் சுயம்பு மூர்த்தியாக நின்ற கோலத்தில் அருள்கிறார்.

இதுவொரு குடைவரைக் கோயிலாகும். செருப்பு தைக்கும் சமூகத்தில் ஒரு பெரியவரின் கனவில் பெருமாள் தனது கால்களுக்கு செருப்பு தைத்து வரச் சொன்னதற்குப் பிறகு செருப்பு தைத்து பெருமாளுக்கு காணிக்கையாக கொடுக்கிறார்கள். அந்த சம்பிரதாயம் இன்றுவரை தொடர்கிறது. பாறை பிளவுண்டு அதிலிருந்து வெளிப்பட்ட பேரொளிக்கு மத்தியில் பெருமாள் சுசர்மா எனும் பக்தனுக்கு இங்குதான் தரிசனம் கொடுத்தார். கரூர் - திண்டுக்கல் பாதையில் கரூருக்கு மிக அருகிலேயே இத்தலம் அமைந்துள்ளது.

-கிருஷ்ணா,
எம்.என்.ஸ்ரீநிவாசன்