காதலி பணத்தில் காதலன் தயாரிக்கும் படம்




திடீரென்று சருமத்தில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, சில மாதங்கள் தலைமறைவு வாழ்க்கை நடத்திய ‘சமந்த’ நடிகை, பிறகு ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு, பழையபடி அழகாகத் திரும்பி வந்திருக்கிறார். டோலிவுட் மற்றும் கோலிவுட்டில் பழைய வரவேற்பு கிடைத்திருப்பதால், அம்மணி சந்தோஷத்தில் குதிக்கிறாராம். இதற்கிடையே ‘சித்தார்த்த’ நடிகருடன் காதல் வேறு. பிறகு துள்ளலுக்கு கேட்க வேண்டுமா என்ன? தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் ஸ்ருதிஹாசன், காஜல் அகர்வால், நயன்தாரா, இலியானா, தமன்னா போன்ற நடிகைகளுக்கு மாற்று நடிகையாக அவரைக் கருதுவதால், கேட்பதைவிட அதிகமாகவே சம்பளம் கிடைக்கிறதாம். இந்த வரவேற்பையும், சந்தர்ப்பத்தையும் அடிப்படையாக வைத்து டோலிவுட்டில் சொந்தப் படம் தயாரிக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அதாவது, காதலனின் கம்பெனிக்கு நடிகையின் பணம் உதவியாக இருக்குமாம். உலகத்தாருக்கு அவர் ஒரு தயாரிப்பாளர் என்ற விஷயம் தெரியாதாம். நடிகர் மட்டுமே படம் தயாரிக்கிறார் என்பது போல் தகவல் வருமாம்.

பாலிவுட்டில் கத்ரினா கைஃப், அனுஷ்கா சர்மா, தீபிகா படுகோன் போன்ற நடிகைகள் தங்கள் உதடுகளின் அழகை மெருகுபடுத்துவதற்காக ரகசிய சிகிச்சை மேற்கொண்டதாக வந்த தகவல்களை இதுவரை அவர்கள் மறுக்கவும் இல்லை; எழுதுகின்றவர்களை நேரில் பார்த்தால் வெறுப்பதும் இல்லை. நல்ல செய்தியாக இருந்தால் என்ன, பரபரப்பான வதந்தியாக இருந்தால் என்ன, எல்லாவிதத்திலும் தங்களுக்கு பப்ளிசிட்டி கிடைக்கிறது என்பதில் சந்தோஷமாக இருக்கிறார்கள். இந்த விஷயத்தை அறிந்த உலகநாயகனின் வாரிசு, தன் உதடுகளின் அழகை மெருகுபடுத்துவற்காக அழகு சிகிச்சை மேற்கொண்டாராம். உள்நாட்டிலா, வெளிநாட்டிலா என்பதை ரகசியமாக வைத்திருக்கிறார் என்றாலும், உதடுகளுக்கு சிகிச்சை பெற்ற விஷயத்தை மறுக்கவில்லையாம்.

மேக்கப் போட்டுக்கொண்டதில் ஏதோ சிக்கல், அதனால் முகம் பொலிவிழந்து காணப்படுவதாக, ‘காதல் தோல்வி’ புகழ் ‘தாரா’ நடிகையைப் பற்றி லேட்டஸ்ட் செய்தி. விசாரித்துப் பார்த்தால், இது யாரோ கிளப்பிவிட்ட வதந்தியாகவே பட்டது. என்றாலும், அம்மணியின் திடீர் கேரள விஜயத்தைப் பற்றி கேள்விப்பட்டபோது, அது உண்மையாக இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்பட்டது. தோல் அலர்ஜி காரணமாக அவதிப்படும் அம்மணி, ஷூட்டிங் ஸ்பாட்டில் சரியாக நடிக்க முடியாமல் அவதிப்பட்டாராம். உடனே ஒரு மருத்துவரின் ஆலோசனைப்படி கேரளா சென்ற அவர், அங்கு ஒரு வாரம் தங்கி ஆயுர்வேத சிகிச்சை பெற்றாராம். இப்போது அலர்ஜிக்கு விடை கிடைத்து, முகத்தில் பழைய பொலிவு திரும்பியுள்ளதாம்.



தமிழகம் முழுவதும் ‘வம்பு’ ஹீரோவுக்கு எவ்வளவு சொத்துகள் இருக்கிறது என்று தெரியாத அளவுக்கு நிறைய சேர்ந்துவிட்டதாக சொல்கிறார்கள். எல்லாம் அவரது அப்பா கஷ்டப்பட்டு சேர்த்த சொத்துகள் என்றாலும், சினிமாவுக்கு வந்த பிறகு, தான் சேர்த்த சொத்துகளின் மதிப்பு எவ்வளவு இருக்கும் என்று, ஹீரோ ஆற அமர உட்கார்ந்து கணக்கு வழக்கு பார்க்க ஆரம்பித்துள்ளாராம். சமீபத்தில் ‘பட்டிஆண்டி’ பகுதியில், நூறு ஏக்கர் நிலம் வாங்கியிருக்கிறார்களாம். பிற்காலத்தில் அங்கு ஸ்டுடியோ கட்டுவார்களா? அல்லது தொழிற்சாலை அமைப்பார்களா என்று தெரியவில்லை என்று, விஷயம் அறிந்தவர்கள் கிசுகிசுக்கிறார்கள்.

சென்னை தி.நகரில் எம்.ஜி.ஆர் வாழ்ந்த பகுதியில், ஏழெட்டு கிரவுண்டில் மாபெரும் கனவு மாளிகையை ‘பிரகாச’ நடிகர் உருவாக்கி வருகிறார் அல்லவா? அதன் கட்டுமானப் பணி இன்னும் சில வருடங்களாவது நடக்கும் என்று, அந்த இடத்தைப் பார்த்து வியந்த இன்னொரு ஹீரோ சொல்கிறார். உலகிலேயே அதி நவீன வசதிகள் கொண்ட மாளிகையாக இருக்க வேண்டும், இன்டீரியர் டெகரேஷன் இதுவரை எந்த பங்களாவிலும் இல்லாத அளவு ரொம்ப புதுமையாக இருக்க வேண்டும் என்று, ஒவ்வொரு அங்குலமாகப் பார்த்து கட்டிக் கொண்டிருக்கிறாராம். நடிகர்களின் பங்களாக்கள் இதுபோல் இருந்தது இல்லை என்று அனைவரும் மூக்கின் மேல் விரல் வைக்கும்படி உருவாகும் இந்த மாளிகையின் சிறப்பம்சம் என்ன தெரியுமா? பெற்றோருடன் ‘பிரகாச’ நடிகரின் குடும்பம் மற்றும் ‘சிறுத்தை’ ஹீரோவின் குடும்பமும் இணைந்து, மிகப் பெரிய கூட்டுக்குடும்பமாக வாழப் போகிறார்களாம்.



தன் அக்கா கணவரும், இயக்குநருமான ‘ருதி’விடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிவிட்டு, பிறகு தனியாகப் படம் இயக்குவேன் என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்த ‘மங்களகரமான விஜய’ நடிகை, திடீரென்று அந்த எண்ணத்துக்கு கும்பிடு போட்டுவிட்டாராம். காரணம், நடிப்பின் மீது அவருக்கு திடீர் பாசம் ஏற்பட்டுள்ளதாம். ஆரம்பகாலத்தில் தன் சினிமா கேரியர் குறித்து எந்த அக்கறையும் இல்லாமல் இருந்த அவர், தனக்குப் பிறகு வந்த நடிகைகள் எல்லாம் லட்சம், கோடி என்று பணத்தில் புரளும்போது, தான் மட்டும் எதிர்காலத்தை தொலைத்து நிற்கிறோமே என்று வருத்தப்பட்டாராம். அப்போது ஒருவர் அவருக்கு ஆறுதல் சொல்லி, ‘இப்பவும் ஒண்ணும் கெட்டுப்போகல. நல்லா எக்சர்சைஸ் பண்ணு. உடம்பை நல்லா வெச்சுகிட்டு, புது ஸ்டைலில் ஒரு போட்டோசெஷன் பண்ணு. அதை விளம்பரப்படுத்து. அதுக்குப் பிறகு உன் வீட்டு கூரையைப் பிச்சிகிட்டு புதுப்பட வாய்ப்பு வருதா, இல்லையா பாரு’ என்றாராம். இப்போது அதன்படி செயல்பட்டுக் கொண்டிருக்கும் நடிகை, ‘ரெண்டாவது பிலிம்’ மற்றும் ‘ஒயிட்மூன் ஹவுஸ்’ ரிலீசை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறாராம். இப்படங்கள் தன் மார்க்கெட்டை நிலைப்படுத்தும் என்று நம்புகிறாராம்.

‘பிரசன்ன’ ஹீரோவை காதலித்து மணந்த ‘சினேக’ நடிகை, சினிமா விழாக்களுக்கு பட்டுப்புடவைச் சரசரக்க வந்து தரிசனம் கொடுக்கிறார். இதற்காகவே அவரது பீரோவில் நூறு பட்டுப்புடவைகளை சேகரித்து வைத்திருக்கிறாராம். எல்லாமே விலையுயர்ந்த புடவைகள். மேலும், எந்த டிசைனில் பட்டுப்புடவை வாங்க வேண்டும் என்பது குறித்தும் தோழிகளுக்கு ஆலோசனை சொல்கிறாராம். இப்போது சமையல் பணியில் நன்கு தேறியுள்ள அவர், கணவருக்கு எது பிடிக்கும் என்பதைவிட, எது பிடிக்காது என்பதை தெளிவாகத் தெரிந்துகொண்டாராம். காதல் கணவருக்காக அசைவத்தை அறவே துறந்து, அநியாயத்துக்கு சைவத்துக்கு மாறிவிட்டாராம்.



‘கும்கி’ மேனன் நடிகையைப் பற்றி பரபரப்பாக நியூஸ் வந்த காலம் மலையேறி விட்டது. என்றாலும், நான்கைந்து படங்களில் அவர் நடித்து வருகிறார். கேரளாவில் எக்ஸாம் நடந்த நேரத்தில், அவர் பெயிலாகி விட்டதாக வதந்தி வந்தது. அதற்கு பதில் சொல்லியே சோர்ந்து போனார். தேர்ச்சி பெற்ற மகிழ்ச்சியில், மீண்டும் பள்ளியில் சேர்ந்தார். அப்போது, இனி அவருக்கு சினிமா முக்கியம் கிடையாது என்பதாக வதந்தி பரப்பினார்கள். அதற்கும் பதில் சொல்லி சோர்ந்து போனார். இந்நிலையில், தன்னைப் பற்றி யாரும் எதுவும் பரபரப்பாகப் பேசவில்லையே என்ற கவலையில் மூழ்கிய அவர், மதுரை ஏரியாவில் புகழ்பெற்ற குளிர்பானத்தின் பெயரில் உருவாகும் படத்தில், செம கவர்ச்சியாக குத்துப் பாட்டுக்கு ஆடுவதாக தகவல் பரப்புகிறாராம். கவர்ச்சி என்றாலே கடுப்படித்த அவர், இப்போது கவர்ச்சி காட்டி ஆடியதாக சொல்வதற்கு என்ன காரணம் என்று தெரியாமல், மீடியா நபர்கள் முழிக்கின்றனர்.

‘அங்காடித்தெரு’ அறிமுக நாயகனுடன் அடுத்தடுத்து இரு படங்களில் ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கும் ‘..ஷி’ நடிகை, அவருடனான நட்புக்கு பலமான அடித்தளம் போட்டிருப்பதாகவும், இருவருக்கும் இடையே கெமிஸ்ட்ரி செமையாக ஒர்க்கவுட் ஆகியிருப்பதாகவும் கோலிவுட் ஏரியாவில் கிசுகிசு பரவியுள்ளது. இதுகுறித்து விசாரிக்க நடிகையின் செல்போனைத் தொடர்பு கொண்டால், ஊகூம், பல ரிங்குகள் போயும் எடுக்கவில்லை. ‘மிஸ்டு கால்’ பார்த்தாவது மறுபடியும் கூப்பிடுவார் என்று பார்த்தால், அப்போதும் கண்டுகொள்ளவே இல்லை. ஏற்கனவே அந்த நடிகர், ‘லி’ நடிகையுடன் இணைத்து பேசப்பட்டார். என்றாலும், அது வெறும் வதந்தியாகவே கரைந்து விட்டது நினைவிருக்கலாம்.


ஒரு இந்திப் படம் இயக்க, 22 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்குகிறாராம் இயக்குநரும், நடிகருமான ‘காதல் மச்சம்’ உள்ள டான்ஸ் மாஸ்டர். அவரது கால்ஷீட்டுக்காக பாலிவுட் தவம் இருக்கிறதாம். அங்குள்ள இளம் முன்னணி நடிகர்கள், அவரது டைரக்ஷனில் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்று துடிக்கிறார்களாம். தென்னகத்தில் இருந்து பாலிவுட்டுக்கு சென்று சாதித்திருக்கும் அவர், பழைய காதல் விவகாரத்தை தன் மனதில் இருந்து தூக்கி எறிந்துவிட்டாராம். தனது முன்னாள் காதல் மனைவியிடம் வளரும் மகன்களின் எதிர்காலம் குறித்து அக்கறை கொண்ட அவர், மும்பையில் நடக்கும் ஷூட்டிங்கில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் சரி, மகன்களிடம் செல்போனில் பேசிய பிறகுதான் தூங்குவாராம். சென்னையிலுள்ள பள்ளியில் படிக்கும் அவர்கள், விடுமுறை நாட்களில் அப்பாவைப் பார்க்க மும்பைக்குப் பறப்பார்களாம். மகன்கள் பொழியும் அன்பிலும், பாசத்திலும் வசப்பட்டுள்ள அவர், அடுத்த திருமணம் குறித்து முடிவு செய்யவில்லையாம்.
(படத்தில் இருக்கும் நடிகைகள் லவினா, ரம்யா, கோமல், ராக்கி சராவத் ஆகியோருக்கும்  இந்தச் செய்திகளுக்கும் தொடர்பில்லை)
- மாயன்