கோலிவுட்டில் கோலோச்சும் பெண் இயக்குநர்கள்




தமிழில் ‘காதல் வைரஸ்’, ‘நாளை’ உள்பட பல படங்களில் நடித்த அஜீத்தின் மைத்துனர் ரிச்சர்ட், தெலுங்கில் ‘ரிஷி’ என்ற பெயரில் நடிக்கிறார். இப்போது தமிழில் ‘ரெண்டாவது படம்’, ‘நேற்று இன்று’, ‘சுற்றுலா’ படங்களில் நடித்து வரும் அவர், ‘ரெண்டாவது படம்’ படத்தில் விஜயலட்சுமியுடன் ஜோடி சேர்ந்துள்ளார். ‘திரையுலகில் ஒரு நல்ல திருப்புமுனைக்காகக் காத்திருக்கிறேன். அதற்காகத்தான் மார்ச் மாதம் நடந்திருக்க வேண்டிய என் திருமணத்தை நவம்பர் மாதம் தள்ளி வைத்திருக்கிறேன்’ என்ற ரிச்சர்ட், அடுத்த ஆண்டு சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்தை இயக்க உள்ளார்.

ஆர்யா, அனுஷ்கா இருவரும் இரட்டை வேடங்களில் நடித்துள்ள ‘இரண்டாம் உலகம்’ படத்தை செல்வராகவன் இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரெய்லரை வெளியிட்டு சூர்யா பேசுகையில், ‘‘ஒரு படம் ரிலீசாகிறது என்றால், ரசிகர்கள்தான் முதலில் எதிர்பார்ப்பார்கள். ஆனால், செல்வராகவனின் படம் ரிலீசாகிறது என்றால், ரசிகர்களுடன் சேர்ந்து, திரையுலகிலுள்ள எல்லா டெக்னீஷியன்களும் எதிர்பார்க்கிறார்கள். ‘இரண்டாம் உலகம்’ போஸ்டர்களைப் பார்த்து விட்டு, ‘இது எப்படிப்பட்ட கதையாக இருக்கும்?’ என்று யோசித்து சஸ்பென்ஸ் தாங்க முடியவில்லை. செல்வராகவனுடைய படத்துக்கு இன்னொரு செல்வராகவனின் படம்தான் போட்டியாக இருக்கிறது. ‘நான் கடவுள்’, ‘இரண்டாம் உலகம்’ என ஆர்யாவின் அட்டகாசமான நடிப்பு விரிவடைந்துகொண்டே போகிறது. ஷூட்டிங் இல்லாத நேரங்களில் அவர் ஈ.சி.ஆர் ரோட்டில் சைக்கிளில் சென்று எக்ஸர்சைஸ் செய்கிறார். அந்த ஈடுபாடு என்னை பிரமிக்க வைக்கிறது. ஜார்ஜியா ஷூட்டிங்கில் நடந்த சுவாரஸ்யமான விஷயங்களை, ‘சிங்கம் 2’ ஷூட்டிங்கில் அனுஷ்கா என்னிடம் பகிர்ந்துகொண்டார். அப்போதே இந்த ‘இரண்டாம் உலகம்’ படத்தை தியேட்டரில் முதல் ஆளாகப் பார்த்து ரசிக்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டுள்ளது’’ என்றார்.



விஜய்யுடன் ‘துப்பாக்கி’, கார்த்தியுடன் ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ ஆகிய படங்களில் நடித்து வரும் காஜல் அகர்வால், அடுத்து உதயநிதி ஜோடியாக நடிக்கிறார். ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’யில் உதயநிதி ஜோடியாக ஹன்சிகா நடித்தார். ‘இது கதிர்வேலன் காதல்’ படத்தில் நயன்தாரா ஜோடியாக நடித்து வருகிறார். இதையடுத்து ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி தயாரித்து, நடிக்கும் ‘நண்பேன்டா’ என்ற படத்தில் காஜல் அகர்வால் ஹீரோயினாக நடிக்கிறார். சந்தானம் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். பாலசுப்ரமணியெம் ஒளிப்பதிவு செய்ய, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஷூட்டிங் தொடங்குகிறது.

சாஸ் கிரியேஷன்ஸ் சார்பில் ஷிகாஜுதின் தயாரிக்கும் பெயரிடப்படாத படத்தில், விதார்த் ஹீரோவாக நடிக்கிறார். மலையாளத்தில் முன்னணி இயக்குநரும், தமிழில் ‘காசி’, ‘என் மன வானில்...’, ‘அற்புதத்தீவு’ உள்பட பல படங்களை இயக்கியவருமான விநயனிடம் பதினான்கு வருடங்கள் உதவி இயக்குநராகப் பணியாற்றிய சஜின் வர்கீஸ் கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார். முரளி ராமன் ஒளிப்பதிவு செய்கிறார். ரவிவர்மா வசனம் எழுதி, இணை இயக்குநராகப் பணியாற்றுகிறார். அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது.

இதற்கு முன் இமான் இசையமைப்பில் சிம்பு, சிவகார்த்திகேயன், மீனா, ரம்யா நம்பீசன், இயக்குநர் ஐஸ்வர்யா தனுஷ், இசையமைப்பாளர் அனிரூத் ஆகியோர் சொந்தக்குரலில் பாடியிருக்கின்றனர். அந்த வரிசையில் ஸ்ருதிஹாசனும் பாடியுள்ளார். தெலுங்கு, இந்தி என நடிப்பில் பிஸியாக இருக்கும் அவர், இமான் கேட்டுக்கொண்டதற்காக சென்னைக்கு வந்து, இரண்டு மணி நேரத்தில் ஒரு பாடலைப் பாடிக் கொடுத்தார். தெலுங்கு ‘ஆதால மொதலைந்தி’ தமிழில் ரீமேக் ஆகிறது. ரவி தியாகராஜன் இயக்குகிறார். பெயரிடப்படாத இப்படத்தில் கவுதம் கார்த்திக், ரகுல் பிரீத்திசிங் ஜோடி சேர்ந்துள்ளனர். இன்னொரு ஹீரோயினாக நிகிஷா படேல் நடிக்கிறார். படத்தில் இடம்பெறும் ஒரு ஜாலியான காதல் பாடலை மதன் கார்க்கி எழுதியுள்ளார். ‘ஷட்டப் யுவர் மவுத்...’ என்று தொடங்கும் அந்தப் பாடலை ஸ்ருதிஹாசனுடன் இணைந்து தீபன் பாடினார்.



‘தலைவாசல்’ மூலம் அறிமுகமாகி, 150 படங்களுக்கு மேல் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ள தலைவாசல் விஜய், மலையாளத்தில் ‘யுகபுருஷன்’, ‘மேல் விலாசம்’ படங்களில் நடித்தார். அதில் அவரது நடிப்பு பேசப்பட்டதைத் தொடர்ந்து, மலையாளத்தில் நிறைய வாய்ப்பு கிடைத்தது. இப்போது ‘நார்த் 24 காதம்’, ‘ஒலிப்போரு’, ‘பேங்கிள்ஸ்’, ‘அப்பாவிக்காட்டேரி’, ‘கேமர்’, ‘பியானிஸ்ட்’ ஆகிய படங்களில் நடித்து வரும் அவர், தமிழிலும் உருவாக்கப்படும் ‘அப்பாவிக்காட்டேரி’ படத்தில், முதல்முறையாக காமெடி வேடத்தில் நடிக்கிறார்.

சிம்புவை காதலிக்கத் தொடங்கிய பிறகு ஹன்சிகா, அடி முதல் நுனி வரை தன் குணத்தை அப்படியே மாற்றிவிட்டார். முன்பெல்லாம் அவருடைய செல்போனில் தொடர்புகொண்டால், அவரே எடுத்துப் பேசுவார். எஸ்.எம்.எஸ் அனுப்பி வைத்தால், அதைப் படித்துவிட்டு பதில் அனுப்புவார். இன்று அந்த நல்ல பழக்கத்தை விட்டுவிட்டார். அவரது செல்போன் இப்போது அம்மாவின் கையில் இருக்கிறது. அவர்தான் பதில் எஸ்.எம்.எஸ் அனுப்புகிறார். கடந்த 9ம் தேதி ஹன்சிகாவுக்கு பிறந்தநாள். ஒவ்வொரு ஆண்டும் அனாதை குழந்தைகளை தத்தெடுக்கும் அவர், இந்த ஆண்டும் ஒரு ஏழை குழந்தையை தத்தெடுத்துள்ளார். இத்துடன் அவர் 23 குழந்தைகளை படிக்க வைக்க உதவி செய்துள்ளார்.



தன்னைப்பற்றிய கிசுகிசுக்களுக்கு பதில் சொன்னால், மேலும் மேலும் தவறான தகவல்களையே எழுதுகிறார்கள் என்று மனம் வெறுத்த சமந்தா, இனி சித்தார்த் பற்றி யார், என்ன கேட்டாலும் பதில் சொல்லக்கூடாது என்று முடிவு செய்துள்ளாராம். மேலும், தன் உதவியாளர்களிடம் கூட எந்த ரகசியத்தையும் பகிர்ந்துகொள்வது இல்லையாம். தெலுங்கில் நல்ல மார்க்கெட் இருப்பதால், அதை அடிப்படையாக வைத்து, மீண்டும் தமிழுக்கு வந்துள்ள அவர், கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் கேட்டு அலற வைக்கிறாராம். என்றாலும், இரண்டு மொழிகளிலும் அவரது படத்தை ரிலீஸ் செய்யலாம் என்ற பிளஸ் பாயின்ட் இருப்பதால், அவரை தமிழில் ஒப்பந்தம் செய்ய பல இயக்குநர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். முதலில் லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா ஜோடியாக நடிக்கும் சமந்தா, அடுத்து விஜய்யுடன் நடிக்கிறார்.


கோலிவுட்டில் பெண் இயக்குநர்களின் கொடி பட்டொளி வீசிப் பறக்கும் காலம் இது. சவுந்தர்யா அஸ்வின் டைரக்ஷனில் ரஜினி, தீபிகா படுகோன், சரத்குமார், ஆதி, ஜாக்கி ஷெராப் நடிக்கும் படம், ‘கோச்சடையான்’. அடுத்து ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் ‘வை ராஜா வை’ என்ற படத்தில் கவுதம் கார்த்திக், பிரியா ஆனந்த் ஜோடி சேர்ந்துள்ளனர். கிருத்திகா உதயநிதி டைரக்ஷனில் வளரும் ‘வணக்கம் சென்னை’ என்ற படத்தில் சிவா, பிரியா ஆனந்த் ஜோடியாக நடித்துள்ளனர். ஸ்ரீபிரியா இயக்கத்தில் ‘22 மாலினி பாளையங்கோட்டை’ என்ற படம் உருவாகிறது. ரோகிணி ரகுவரன் டைரக்ஷனில் உருவான ‘அப்பாவின் மீசை’ முடிந்துவிட்டது. இவ்விரு படங்களிலும் நித்யா மேனன் ஹீரோயின். தவிர, ஜே.எஸ்.நந்தினி இயக்கும் ‘கொலைநோக்குப் பார்வை’, அம்பிகா டைரக்ஷனில் ‘நிழல்’, ஷகீலா இயக்கத்தில் ‘நீலக்குறிஞ்சி பூத்து’ ஆகிய படங்களின் ஷூட்டிங் நடந்து வருகிறது. விரைவில் மதுமிதா டைரக்ஷனில் இந்திப் படமும், லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் மதுபாலா நடிக்கும் படமும், சினேகா பிரிட்டோ டைரக்ஷனில் ஒரு படமும் உருவாக்கப்படுகின்றன. பார்த்திபன் - சீதா தம்பதியின் மகளும், ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் சிம்ரனின் மகளாக நடித்தவருமான கீர்த்தனா, விரைவில் படம் இயக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
- தேவராஜ்