குஷியில் மிதக்கும் நடிகைகளின் அப்பா





முன்னாள் ஹீரோவும், இந்நாள் கேரக்டர் ஆர்ட்டிஸ்டுமான ‘பிராமிஸ் கிங்’ நடிகருக்கு தமிழிலும், தெலுங்கிலும் பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருப்பதால், சந்தோஷத்தின் உச்சியில் நின்று கைகொட்டி சிரிக்கிறாராம். அதுவும் கரும்பு தின்னக் கூலியும் கொடுத்த கதையாக, நடிகர் ஏற்றிருப்பது எல்லாம் பிரபல ஹீரோயின்களுக்கு அப்பா வேடமாம். இதில் அந்த நடிகருக்கு அளவிட முடியாத மகிழ்ச்சி. ‘கிங் குயின்’ என்ற படத்தில் காதல் தோல்வி புகழ் ‘தாரா’வுக்கு அப்பா. ‘கவலைப்படாத இளைஞர்கள் யூனியன்’ படத்தில், டோலிவுட் இறக்குமதியான புது நடிகைக்கு அப்பா. இந்தியில் தயாராகும் ‘மெட்ராஸ் விரைவு வண்டி’ படத்தில், ‘படுகோனே’ நடிகைக்கு அப்பா. இப்படி அழகுப் பெண்களுக்கு அப்பாவாக நடிக்கும் ‘பிராமிஸ் கிங்’, இளைய தளபதிக்கு அப்பாவாக ‘வாலைத’ படத்திலும் நடிக்கிறார்.

‘என்னை காதலிக்கிறதா சொல்றது, அந்த நடிகரோட வேலை. ஆனா, நான் அந்த நடிகரை காதலிக்கலை. இனிமே இந்தமாதிரி காதல் கிசுகிசுவுக்கு எல்லாம் நான் பதில் சொல்ல மாட்டேன்’ என்று வீராப்பு காட்டிய ‘ஆண்ட்ரிய’ நடிகையின் சாயம் ஓரிரு வாரங்களிலேயே வெளுத்து விட்டது. ஆமாம், மலையாள இயக்குநர் ‘ல்சிபா’ மகனும், இளம் ஹீரோவுமான அந்த நடிகருடன் ஒரு மலையாளப் படத்தில் நடித்த நடிகை, அவருடன் நெருங்கிப் பழகினார். இதையடுத்து அந்த நடிகர், நடிகையை உயிருக்குயிராக காதலிப்பதாகவும், அவரைத்தான் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டு இருப்பதாகவும் கேரள பத்திரிகைகளில் தகவல்களை புலம்பிக் கொட்டினார். பிறகு நடிகை அதை மறுத்து அறிக்கை விட்டார். சரி, இனி அவர்கள் இணைந்து நடிப்பது சந்தேகம்தான் என்று சினிமா வட்டாரம் பேசிக்கொண்ட அடுத்த வாரத்திலேயே அந்த அதிசயம் நடந்து விட்டது. யெஸ், மலையாளப் படவுலகில் இளம் காதலர்கள் என்று வர்ணிக்கப்படும் அவர்கள், மீண்டும் ஒரு மலையாளப் படத்தில் ஜோடி சேர்ந்து நடிக்க கால்ஷீட் கொடுத்துள்ளனர்.



இப்போது ‘ஓவிய’ நடிகையின் நடவடிக்கைகள் மிகவும் மர்மமாக இருப்பதாக, கோலிவுட் ஏரியாவில் கிசுகிசுக்கின்றனர். அம்மணி எங்கு தங்குகிறார்? யாரை சந்தித்துப் பேசுகிறார் என்ற விஷயம், அவருடன் இருப்பவர்களுக்குக் கூட தெரியவில்லையாம். தனக்கு புதுப்பட வாய்ப்பு வாங்கித் தருவதற்கு ‘களவாணி’ ஹீரோ முன்வராத நிலையில், அவரைப் பார்க்கவும், பேசவும் விரும்பாமல் முகத்தை திருப்பிக் கொள்கிறாராம். இனி அந்த நடிகையுடன் ஜோடி சேர மாட்டேன் என்று நடிகர் சொன்னபோது, ‘அவர் யாருங்க என்னை புறக்கணிப்பதற்கு? இனி அந்த நடிகரே விருப்பம் தெரிவிச்சா கூட, நான் அவருக்கு ஜோடியா நடிக்க மாட்டேன். நான் ஒண்ணும் அந்த நடிகரை நம்பி சினிமா இண்டஸ்ட்ரிக்கு வரலை’ என்று ஆங்காரமாக பேட்டி அளித்திருக்கிறார். சமீபத்தில் ஒரு விழாவில் நடிகரும், நடிகையும் அருகருகே அமர்ந்திருந்தனர். ஊகூம், ஒருவரிடம் ஒருவர் பேசக்கூட இல்லை. ஒரு சின்ன சிரிப்பையும் அவர்கள் பகிர்ந்து கொள்ளவில்லை. அவர்களின் ஊடலைப் பார்த்த அனைவரும் மனதுக்குள்ளேயே சிரித்துக்கொண்டனர். இந்த நாடகம், இந்த மேடையில், எத்தனை நாளம்மா?

‘லி’ நடிகைக்கு தன் சித்தி மற்றும் அறிமுகப்படுத்திய இயக்குநரால் பெரிய பிரச்னை என்றபோது, வரிந்து கட்டிக்கொண்டு எல்லா மீடியாக்களும் சப்போர்ட் செய்தது. அந்த நேரத்தில் தன்னிடம் மீடியா நபர்கள் பேசுவதற்காக செல்போன் நம்பர் கொடுத்திருந்த நடிகை, இப்போது தனக்கு சாதகமாக எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வு கிட்டியுள்ள நிலையில், அந்த நம்பருக்கு யார் போன் செய்தாலும் எடுத்துப் பேசுவதில்லை. காரணம், தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவரின் கட்டுப்பாட்டு வளையத்துக்குள் சென்றுவிட்ட நடிகை, இனி எந்த மீடியாவுக்கும் பேட்டி கொடுக்கக் கூடாது என்று தீர்மானித்துள்ளார்.



தெலுங்கில் புதுப்படம் ஒப்புக்கொள்ளாத ‘சித்தார்த்’த ஹீரோ, தமிழில் ஏகப்பட்ட படங்களில் நடிக்கிறார். காரணம், அவரது புதிய காதலி கொடுத்த உற்சாகம்தானாம். ‘சமந்த’ நடிகையும், நடிகரும் காதலிப்பது ஊரறிந்த ரகசியம்தான். என்றாலும், அவர்கள் பகிரங்கமாக திருமணம் செய்துகொள்வார்களா? அல்லது ஏற்கனவே தம்பதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்களா என்பது பட்டிமன்றம் நடத்த வேண்டிய சங்கதி. இந்நிலையில், தன் காதலனிடம் ஒரு வேண்டுகோள் விடுத்த நடிகை, ‘என்னை தமிழ்ப் படவுலகம் தூக்கி எறிந்துவிட்டது. எனவே, நீங்களாவது நிறைய தமிழ்ப் படங்களில் நடித்து, கோலிவுட்டில் நம்பர் ஒன் ஹீரோவாக வர வேண்டும். அதுதான் நீங்கள் எனக்குக் கொடுக்கும் காதல் பரிசு’ என்ற ரீதியில், காதலனை உசுப்பேற்றி விட்டாராம். அதன் விளைவாகத்தான் நடிகர் இப்போது தமிழ்ப் படங்களில் நடிக்க அதிக ஆர்வம் காட்டுகிறாராம்.

‘லக்ஸுரி பஸ்’ படத்தில் பாவாடை, தாவணி அணியச் சொன்னார்கள் என்பதற்காக, அப்படக் குழுவினரிடம் சண்டை போட்டுவிட்டு, பிறகு அந்தப் படத்தில் இருந்தே நீக்கப்பட்ட ‘வழக்கு எண்’ யாதவ் நடிகை, இப்போது ‘வின்டோ ஓரம்’ என்ற படத்தில் மூன்று ஹீரோயின்களில் ஒருவராக நடிக்கிறார். இதில் அம்மணியின் காஸ்டியூம் என்ன தெரியுமா? பாவாடை, தாவணிதான். அந்தப் படத்தின் ஷூட்டிங்கில் இதை அணிய மாட்டேன் என்று அடம்பிடித்த நடிகை, இந்தப் படத்துக்காக மட்டும் எப்படி அணிந்து நடித்தார் என்ற கேள்வி, இரண்டு பட வட்டாரங்களிலும் கேட்கப்படுகிறது. பதில்தான் கிடைக்கவில்லை!

‘அவள் நேம் டமிள்குயின்’ படத்தில் அறிமுகமானபோது, சொந்தப் பெயரை இயக்குநர் மாற்றிவிட்டார் என்று, அடுத்த சில படங்களில் அதே பெயரில் நடித்த ‘சித்திர மனோ’ நடிகை, ‘வாட்டர்பேர்டு’ என்ற படத்தில் வேறொரு பெயரில் நடித்தார். இப்போது அந்தப் பெயரும் சரியில்லை என்று, ‘தல’ நடிகருடன் இணைந்து நடிக்கும் புதுப்படத்தில் இருந்து, சொந்தப் பெயரையே பயன்படுத்த முடிவு செய்துள்ளாராம்.

ல.மேனன் நடிகைக்கு துணிச்சல் ரொம்ப ஜாஸ்திதான். பழைய கார்த்திக் மாதிரி, தன் வாயில் எதையோ அடைத்து வைத்துக்கொண்டு பேசுவதைப் போல பேசுகிற ‘களவாணி’ ஹீரோவுக்கு ஜோடியாக, ‘யெல்லோ பேக்’ என்ற படத்தில் நடிக்கிறார். இந்த கேரக்டருக்கு ஸ்கூட்டி ஓட்ட கற்றுக்கொள்ள வேண்டும் என்று இயக்குநர் நிபந்தனை விதித்தாராம். உடனே நடிகை என்ன ª சய்தார் தெரியுமா? நார்த்பழநியில் இருக்கும் பச்சை பார்க் ஓட்டலில் இருந்து, 80 அடி ரோடு, பிறகு அதையும் தாண்டிய ரோடுகளில் சில நாட்களுக்கு முன் ஸ்கூட்டி ஓட்டி பயிற்சி எடுத்திருக்கிறார். சென்னை மாநகரின் டிராபிக் ஜாம் பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆனால், நடிகை தன்னந்தனியே டூ வீலர் ஓட்டியிருக்கிறார். ரசிகப் பெருமக்கள் பார்த்து விடக் கூடாது என்று, பெரிய துப்பட்டாவை எடுத்து, தன் தலையில் சுற்றிக்கொண்டார். ஆனாலும் தமிழ் ரசிகர்கள் விவரமானவர்கள் ஆச்சே. ல.மேனனின் கண்களை மட்டும் ஸ்கேன் செய்து பார்த்து, ‘அட... இது ‘கும்கி’ ஹீரோயினாச்சே’ என்று துரத்த, ஆத்தாடி... ஏதாவது பங்கம் நேர்ந்துவிடுமோ என்று பயந்த நடிகை, தப்பித்தோம்... பிழைத்தோம் என்று, மீண்டும் பச்சை பார்க்கிற்கே வந்து அடைக்கலமாகி விட்டார்.

‘நான் சானியாவின் ரசிகையாக்கும்’, ‘நான் நயன்தாராவின் ரசிகையாக்கும்’ என்று சொல்லிச் சொல்லியே, தன் பெயரில் அவர்களை இணைத்து வைத்திருக்கும் அந்த நடிகை, தன்னிடம் பேச விரும்பும் மீடியா நபர்களுக்கு செல்போன் நம்பரை மாற்றி, மாற்றிக் கொடுக்கிறாராம். அவர் கொடுத்த நம்பருக்குப் போன் செய்தால், வேறொருவர் எடுக்கிறாராம். நடிகையின் நிஜமான நம்பர் எதுவென்று தெரியாத நிலையில், மீடியாக்கள் அவரைப் பற்றி ஏதாவது எழுத வேண்டும் என்றால், தலையைப் பின்புறமாகச் சுற்றி, பிறகு மூக்கைத் தொட வேண்டிய நிலை ஏற்படுவதாக பலர் அலுத்துக்கொள்கின்றனர்.
(படத்தில் இருக்கும் நடிகை கள் திஷா பண்டே, சுனக்ஷி, ஸ்ரீலேகா, அனு ஆகியோருக்கும்  இந்தச் செய்தி களுக்கும் தொடர்பில்லை)
- மாயன்