ஆன்ட்டி ஏஜிங் எனும் அபாயம்





தலைப்பைப் பார்த்ததும், ‘இதற்கும் நமக்கும் சம்பந்தமில்லை’ எனப் பக்கத்தைப் புரட்டாதீர்கள். 25 பிளஸ்சில் இருக்கும் ஒவ்வொரு பெண்ணும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் இவை. ‘50 பிளஸ் நெருங்குபவர்கள்தான் வயதானவர்கள்’ என்கிற பார்வை உங்களுக்கு இருக்கலாம். ஆனால், முதுமைத்தோற்றம் என்பது உங்கள் சருமத்தையும் கூந்தலையும் 25 வயதிலிருந்தே விரட்ட ஆரம்பிக்கிற உண்மை தெரியுமா?

“முதுமைத் தோற்றத்துக்கு எதிரான உங்கள் போராட்டமும் முயற்சிகளும், 25 வயதிலிருந்தே தொடங்கப்பட வேண்டியது அவசியம்” என்கிறார் ‘நேச்சுரல்ஸ் டபிள்யூ’ உரிமையாளர் வீணா குமாரவேல். இளமையைத் தக்க வைத்துக்கொள்ள ஆசைப்படுவோருக்கு அவரது ஆலோசனைகள் நிச்சயம் உதவும்.

‘‘நமது சருமம், 20 வயதில் இருப்பது மாதிரி 40 வயதிலோ, 40ல் இருப்பது மாதிரி 60 வயதிலோ இருப்பதில்லை. 20களின் தொடக்கத்தில், சருமத்தின் செல்கள், மீள்தன்மையையும் ஈரப்பதத்தையும் இழக்கத் தொடங்கும். சருமத்தில் அது வரை இருந்த மிருதுத்தன்மை மாறி, ஒருவித வறட்சியையும் மெலிதான கோடுகளையும் பார்க்கலாம். சருமத்தின் அழகுக்கும் பூரிப்புக்கும் காரணமான எலாஸ்டின் மற்றும் கொலாஜன் என்கிற இரண்டு புரதங்களின் சுரப்பும் குறையத் தொடங்கும். அதற்கு மிக முக்கிய காரணம் வெயில். கூடிய வரையில் வெயிலில் செல்வதைத் தவிர்ப்பதும், தினம் இரண்டரை லிட்டர் தண்ணீர் குடிப்பதும், 30 வயதில் அடியெடுத்து வைப்போருக்குப் பாதுகாப்பளிக்கும்.

*  30ல் அடியெடுத்து வைப்போருக்கு, கண்களுக்கடியில் மெலிதான கோடுகள் தென்பட ஆரம்பிக்கும். சருமம் வறண்டு போவது, சருமத்தில் ஆங்காங்கே சிவப்பு மற்றும் பிரவுன் நிறப் புள்ளிகள் தோன்றுவது, கண்களுக்கடியில் வீக்கம், வாயைச் சுற்றியும் நெற்றியிலும் கோடுகள் போன்றவை தோன்றலாம். கொலாஜன் மற்றும் எலாஸ்டின் ஆகிய புரதங்களின் சுரப்பு இன்னும் அதிகமாகக் குறையத் தொடங்குவதன் விளைவுகளே இவை.

*  40 வயதுக்குப் பிறகு சருமத்தில் உண்டாகிற பிரச்னைகளை சரி செய்து, பழைய தோற்றத்துக்குத் திரும்பச் செய்வது சற்றே சிரமமானதுதான். அதனால்தான், 40 பிளஸ்ஸில் இருப்பவர்கள் எடை குறைக்கும் முயற்சிகளை மேற்கொள்ளும்போது, அவர்களது முகத்தசைகள் தொய்வடைந்து, முதுமைத்தோற்றம் தெரிகிறது. எலாஸ்டின், கொலாஜன் சுரப்பு இல்லாததால், சருமம் உறுதி இழந்து, தொய்வடைகிறது. சுருக்கங்களும் கோடுகளும் இன்னும் சற்று ஆழமாகத் தெரியும்.

*  50 வயதில் சருமச் சுருக்கங்களும் கோடுகளும் வெளிப்படையாகவே தெரியத் தொடங்கும். மெனோபாஸ் காலகட்டம் என்பதால், பெண்களின் உடலில் நிகழும் ஹார்மோன் மாற்றங்களும் சரும அழகைப் பெரிதாகப் பாதிக்கும்.

இவை எல்லாம் அந்தந்த வயதுக்குரிய இயற்கையான மாற்றங்கள். இளமையில் இருந்தே சருமப் பராமரிப்பில் அக்கறை காட்ட ஆரம்பிக்கிறவர்களுக்கு, இந்த மாற்றங்கள் தள்ளிப் போவதுடன், நீண்ட காலம் இளமைத் தோற்றம் தக்க வைக்கப்படுகிறது. அதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும்?

*  தினமும் சருமத்துக்கு கிளென்சர், டோனர், மாயிச்சரைசர் உபயோகிக்க வேண்டும்.

*  வயதாக ஆக கொழுப்பு உணவு தவிர்த்து, முழு தானிய உணவுகள், மீன், காய்கறிகள், பழங்களை அதிகம் சேர்க்க வேண்டும். உப்பையும் சர்க்கரையையும் பாதியாகக் குறைப்பது நல்லது.

*  சோயா உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். மெனோபாஸில் இருப்போருக்கு ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க சோயா உதவும்.

*  வால்நட் மற்றும் பிரேசில் நட், பாதாம் ஆகியவை இளமைக்கு உதவக்கூடியவை.

*   தக்காளி, பப்பாளி, கிவி, ஆரஞ்சு, திராட்சை, மாதுளை, அவகேடோ, ஸ்ட்ராபெர்ரி ஆகிய பழங்களும், பசலைக்கீரை, பீட்ரூட், கிரீன் டீ, டார்க் சாக்லெட் போன்றவையும் இளமைத் தோற்றத்துக்கான உணவுகள்.

- ஆர்.வி.
படங்கள்: ஜெகன் மாடல்: அமுதா


பார்லரில் என்ன செய்யலாம்?
பார்லர் சிகிச்சைகளை வருமுன் காப்பது, வந்த பிறகு செய்ய வேண்டியது என இரண்டாகப் பிரிக்கலாம். அதாவது 28 பிளஸ்சில் இருப்போருக்கு இளமையைத் தக்க வைக்கும் ‘ஏஜ் டிஃபென்ஸ்’ ஃபேஷியல் செய்யப்படும். இது சீக்கிரமே சருமத்தில் சுருக்கங்களும் தொய்வும் ஏற்படாமல் காக்கும்.

சருமப் பாதுகாப்பில் அக்கறையே எடுத்துக் கொள்ளாமல் விட்டதன் விளைவாக, அது முதுமையின் அடையாளங்களைக் காட்ட ஆரம்பித்து விட்டது, இழந்த இளமையைத் திரும்பப் பெற என்ன செய்யலாம் என்கிற 40 பிளஸ் வயதுக்காரர்களுக்காக ‘ஏஜ் ரிவர்சல்’ ஃபேஷியல் செய்யப்படுகிறது. இதில் உபயோகிக்கப்படுகிற கிளென்சர், மசாஜ் கிரீம், சீரம், மாஸ்க் என எல்லாவற்றிலும் கொலாஜன் இருக்கும். அதன் விளைவாக தொய்வடைந்த சருமம் மீண்டும் நிமிர்ந்து, இளமையாக மாறும்.

வீட்டிலேயே என்னவெல்லாம் செய்யலாம்?
*  இரவு தூங்கச் செல்வதற்கு முன், சோப் ஃப்ரீ ஃபேஸ் வாஷ் கொண்டு முகம் கழுவி, பிறகு மாயிச்சரைசர் உபயோகிக்க வேண்டும்.

*  மாயிச்சரைசர் கலந்த, எஸ்.பி.எஃப் 15க்கு மேல் உள்ள சன் ஸ்கிரீன் உபயோகிக்க வேண்டும்.

*  ஓட்ஸ் பவுடருடன், சில துளிகள் தேன் கலந்து, முகம், கழுத்தில் தடவி, 10 நிமிடங்கள் கழித்து, விரல்களைத் தண்ணீரில் நனைத்து, ஓட்ஸ் பேக் தேய்த்துக் கழுவ வேண்டும்.

*  பாசிப்பயறை அரைத்த மாவுடன், எலுமிச்சைச்சாறு, தக்காளி விழுது சேர்த்துக் குழைத்து, முகத்துக்கும் கழுத்துக்கும் வாரம் 2 முறை போடலாம்.