தூரிகையின் ஆற்றல்
இந்தியப் பாரம்பரிய ஓவியங்களின் மினியேச்சராய் காட்சியளிக்கின்றன ரெஞ்சினியின் ஓவியங்கள். மலையாளியான இவர் பிறந்து வளர்ந்ததெல்லாம் துபாயில்தான். எம்.பி.ஏ பட்டதாரியான இவருக்கு இந்தியப் பாரம்பரிய ஓவியங்கள் மீதான ஆர்வமும் தேடலும் அதிகம். இந்தியப் பழங்குடி ஓவியங்கள், கேரள சுவரோவியங்கள், ஆயில் பெயின்டிங் என பலவற்றையும் கற்றறிந்து வரைந்திருக்கிறார். ஒவ்வோர் ஓவியமும் அதன் தொன்மை மாறாது காட்சியளிக்கிறது... புதுச்சேரியில் சமீபத்தில் ரெஞ்சினி நடத்திய ஓவியக் கண்காட்சியில் அவரைச் சந்தித்தேன்...
‘‘துபாயில் ‘க்ளோபல் வில்லேஜ்'ங்குற கலா சாரத் திருவிழாவுல இந்திய ஓவியர்கள் நிறைய பேர் கண்காட்சி நடத்துவாங்க அதில் காட்சிக்கு வைக்கப் பட்டிருக்கும் ஓவியங் களைப் பார்த்தப்ப ஒரு பிரமிப்பு ஏற்பட்டது. அது ஏற்படுத்தின தாக்கம் என்னை வரையத் தூண்டியது. நான் படிச்ச எம்.பி.ஏ-க்கும் ஓவியத்துக்கும் துளியும் தொடர்பில்லை தான். ஆனால் ஓவியம் கத்துக்கணும்ங்குற ஆர்வம் எனக்கு அதிகமாக இருந்தது. ஓவியர் ஷ்யாம்குமார் சார்கிட்ட கேரள சுவரோவியங்கள், ஆயில் பெயின்டிங் வரைய கத்துக்கிட்டேன்.
 அத்தோட நிற்க விரும்பலை. இந்திய பாரம்பரியத்தில் பல வகையான ஓவியங்கள் வரையப்பட்டிருக்கு. அதையெல்லாம் கத்துக்கிட்டு வரையணும்ங்கிற ஆர்வம் மேலோங்கி இருந்தது. இந்தியாவின் பல பகுதிகளுக்கும் பயணம் பண்ணி பல வகையான ஓவியங்களை பார்க்கவும், தெரிஞ்சுக்கவும் செஞ்சேன்’’ என்றவர் அடுத்ததாக, தான் வரைந்திருக்கும் ஓவியங்களின் பாரம்பரியம் பற்றிக் கூறினார்...
‘‘குகை ஓவியங்கள், வர்லி, சந்தல், சௌரா, கெளண்ட் ஆகிய பழங்குடி ஓவியங்களை வரைஞ்சிருக்கேன். வர்லி மஹாராஷ்ட்ராவுல இருக்கிற பழங்குடி மக்களின் ஓவியம், சந்தல் மத்திய இந்தியாவைச் சேர்ந்த பழங்குடிகளுடையது. செளராவுக்கும், கெளண்டுக்கும் பெரிசா வித்தியாசம் இருக்கிற மாதிரி தெரியாது. நுணுக்கமாக பார்த்தால்தான் அந்த வித்தியாசத்தைப் புரிஞ்சுக்க முடியும். கலம்காரி வரைஞ்சிருக்கேன். கலம்காரியிலயே பெர்சியன், காளஹஸ்தினு இரண்டு ஸ்டைல் இருக்கு. நான் பெர்சியன் ஸ்டைல்ல தமிழ் பண்பாடு பற்றிய ஓவியத்தை வரைஞ்சிருக்கேன். புத்த மதத்தின் ஓவிய வடிவமான தங்கா ஓவியம் வரைஞ் சிருக்கேன்.
அந்த ஓவியத்தில் புத்தரின் பல ரூபங்கள் இருக்கும். மதுவனி, ஃபட், பதசித்ரா ஆகிய பாரம்பரிய ஓவியங்களையும் வரைஞ்சிருக்கேன். அதுல ஃபட், பதசித்ரா ரெண்டும் நீளமாக விரியக்கூடிய ஓவியங்கள். அஜந்தா ஓவியம், பெங்காலி ஓவியமான காளிகாட், ராஜ்புத், டெக்கான், பஹாரி, மொஹல் ஸ்டைலில் கேரள மினியேச்சர் ஓவியங்கள், ராஜஸ்தானின் பாரம் பரிய ஓவியமான பிச்வாய், ஐரோப்பிய தாக்கத்தில் உருவான ஆயில் அண்ட் ஈசிலர் ஓவியங்கள்னு பல வகையான ஓவியங்களை முயற்சி செஞ்சு பார்த்திருக்கேன். 2 ஆயிரம் ஆண்டு கால இந்திய ஓவியக் கலாச்சாரத்தின் மினியேச்சர் மாதிரிதான் என்னோட கண்காட்சியை வடிவமைச்சேன்’’ என்கிறார்.
 2010ம் ஆண்டிலிருந்து ஓவியப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வரும் ரெஞ்சினி கொச்சினில் தன் முதல் ஓவியக் கண்காட்சியை நடத்திஇருக்கிறார். அடுத்ததாக சென்னையிலும் அதைத் தொடர்ந்து தற்போது புதுச்சேரியிலும் நடத்தியிருக்கிறார். இன்னமும்தான் கற்றுக் கொண்டு வரைய வேண்டிய ஓவியங்கள் நிறைய இருப்பதாகக் கூறும் ரெஞ்சினி அதற்கான தயாரிப்பிலும் இருக்கிறார். இந்தியப் பாரம்பரிய ஓவியங்களையே விரும்பும் தூரிகை இவருடையது.
- கி.ச.திலீபன்
|