செல்லூலாய்ட் பெண்கள்



நினைக்கத் தெரிந்த மனங்களில் நிரந்தரமானவர் தேவிகா

60களில் கே.ஆர்.விஜயா, காஞ்சனா, ஜெயலலிதா, வெண்ணிற ஆடை நிர்மலா என பல கதாநாயகிகள் அறிமுகமாகித் திரையில் மின்னினாலும், வண்ணப் படங்களின் விகிதம் கூடினாலும் 50களின் நாயகிகளும் அவர்களுடன் சரி சமானமாகப் போட்டியிட்டார்கள். அவர்களில் தேவிகாவுக்கும் முதன்மையான இடம் உண்டு. பாவ மன்னிப்பு, கர்ணன், நெஞ்சில் ஓர் ஆலயம், நெஞ்சம் மறப்பதில்லை, வாழ்க்கைப்படகு, வானம்பாடி, நீலவானம், மறக்க முடியுமா?, பழநி, சாந்தி, பந்தபாசம், அன்புக் கரங்கள், முரடன் முத்து, ஆனந்தஜோதி, ஆண்டவன் கட்டளை, அன்னை இல்லம் என்று தொடர்ச்சியாக பல நல்ல படங்களைக் கொடுத்தவர் தேவிகா. கொஞ்சமும் சோடை போகாத நடிப்பு அத்தனை படங்களிலும். அவற்றில் சில  படங்கள் பெரிதாக வெற்றி பெறவில்லை என்றாலும் தேவிகாவின் கதாபாத்திரமும் அவரின் நடிப்பும் எப்போதும் சோடை போனதில்லை.

இயக்குநர்களின் தேர்வுக்கு ஏற்ற நாயகியாக…
இயக்குநர் ஸ்ரீதரின் நெஞ்சில் ஓர் ஆலயம், நெஞ்சம் மறப்பதில்லை, சுமைதாங்கி மூன்று படங்களிலும் நாயகியாக நடித்தவர் தேவிகா. ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்தின் நாயகியாக முதலில் தேர்வு செய்யப்பட்டவர் விஜயகுமாரி. ஆனால் அவர் தனக்கு இணையாக எஸ்.எஸ்.ராஜேந்திரன் நடிக்க வேண்டும் என்று இயக்குநருக்குப் பரிந்துரைத்ததுடன் அல்லாமல், அந்த நிலைப்பாட்டில் பிடிவாத மாகவும் இருந்ததால் அவருக்கு மாற்றாகக் கொண்டுவரப்பட்டவர் தேவிகா.

ஒருவிதத்தில் தேவிகா நன்றி சொல்ல வேண்டியது  நல்வாய்ப்பைத் தவறவிட்ட விஜயகுமாரிக்குதான். படத்தில் கதாநாயகி சீதாவாகவே மாறிவிட்டார் என்றும் சொல்லலாம். மிக அழுத்தமான ஒரு பாத்திரம் அது. தனக்குள்ளாகவே குமைந்து, வெளியில் சொல்ல முடியாத துயரங்கள் மனதில் பாரமாக அழுத்த, அதை மறைத்துக்கொண்டு போலியாகச் சிரித்து கணவனின் உடல்நலம் பெற வேண்டும் என்பது ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு, முன்னாள் காதலனை நம்பவும் முடியாமல் ஒரு டாக்டரான அவரிடம் கடுமை காட்டவும் விரும்பாமல் அடக்கி வாசிக்க வேண்டிய பாத்திரம்.

அந்தப் பாத்திரத்தின் தன்மையை உணர்ந்து உள்வாங்கிக்கொண்டு மிகப் பிரமாதமாக நடித்திருந்தார். இரு ஆண்களுக்கு இடையில் மனத் தவிப்போடு நடமாட வேண்டிய ஒரு பெண்ணைக் கண் முன் கொண்டு வந்து நிறுத்தினார். ‘சொன்னது நீதானா?’ பாடல் காட்சியில் அவரது தவிப்பும் துயரமும் நம்மையும் தொற்றிக் கொள்ளும். காதலில் தோற்றுப் போன பெண்களுக்கும் வாழ்க்கை உண்டு என்பதைத் தன் படங்களில் அழுத்தமாகச் சொன்னவர் இயக்குநர் ஸ்ரீதர். அவரது ‘கல்யாணப் பரிசு’ படத்துக்கு முன்னர் காதலில் தோற்ற கதாநாயகிகள் இயக்குநரால் கொல்லப்பட்டார்கள் என்பதே வரலாறு. 1962ஆம் ஆண்டின் சிறந்த நடிகையாக தேவிகா கொண்டாடப்பட்டார். சிறந்த மாநில மொழிப்படத்துக்கான விருதும் வெள்ளிப் பதக்கமும் இப்படம் வென்றது.

தான் நடித்த கதாபாத்திரங்களிலேயே தன்னை மிகவும் ஈர்த்த ஒரு பாத்திரமாகவும், அந்தப் படத்தை முதன்முதலாகப் பார்த்தபோது, தன்னை மீறிய மன அழுத்தத்தால் கட்டுண்டு, கட்டுப்படுத்த முடியாமல் கதறி அழுததாகவும் தேவிகா குறிப்பிட்டிருக்கிறார். தேவிகாவை மட்டு மல்லாமல், பல ஒட்டு மொத்தப் பெண்களையும்  கவர்ந்த படம் இது.

கண்ணுக்குக் கண்ணான கண்ணம்மா
’நெஞ்சம் மறப்பதில்லை’ நாயகி கண்ணம்மாவை யாருக்குதான் பிடிக்காது. இரு மாறுபட்ட வேடங்களை முற்பிறவி, இப்பிறவிகளில் அவர் எடுத்திருந்தாலும் கிராமிய மணம் கமழ அள்ளி முடிந்த கூந்தலும், கணுக்காலுக்கு மேலான பாவாடை தாவணியில் கள்ளம் கபடம் இல்லாத ஏழைப் பெண்ணான கண்ணம்மாவே முதலிடம் பிடிக்கிறார். பாழடைந்த பங்களாவில் எதையோ கண்டு பயந்து மிரண்டு தன்னிலை இழந்தவராய் மான் போல் மிரள மிரளக் கண்களை உருட்டி விழிக்கும் விஜயாவுக்கு அடுத்த இடம்தான். அத்துடன் படம் நெடுக வந்து நம்மை ஆக்கிரமித்து மனங்களைக் கொள்ளையிட்டவளும் கண்ணம்மாதான். தேவிகாவுக்குக் கிடைத்த நல்ல வாய்ப்புகளில் இந்தக் கண்ணம்மாவுக்கு ஒரு தனித்த இடமுண்டு. சாதி வெறி தலைக்கேறிய ஜமீன்தார், அந்த எளிய பெண்ணைச் சுட்டுக் கொல்லும் காட்சியில் நம்மையும் அறியாமல் கலங்க வைத்து விடுவார். ஆனால், அப்போதைய படங்களில் சாதிக்கு எதிரானதாகச் சொல்லப்படவேயில்லை. காதலுக்கு எதிரானதாகவே காட்சிப்படுத்தப்பட்டது. சாதி இங்கு மறைபொருளாகவே சுட்டப்பட்டது.   

இரு வேறு மதங்களும் காதலின் பின்னணியும்
அசல் வாழ்க்கையில் ஒரு ரஹீமும் ஒரு மேரியும் காதலித்துத் திருமணம் செய்து கொள்வது பற்றி இன்றைய காலகட்டத்தில் யோசிப்பதும் கூட குற்றமாகி விடக்கூடிய பரிதாபமான சூழலில் இருக்கிறோம் என்பதே வேதனை. ஆனால், 60களில் அப்படி இரு கதாபாத்திரங்களை உருவாக்கி அவர்களுக்கிடையே காதலையும் வளர்த்து அதைத் திருமண பந்தம் நோக்கித் திருப்பிய கதைக்களம் பீம்சிங்கின் ‘பாவமன்னிப்பு’ திரைப்படத்தில் உருவாக்கப்பட்டது. அப்போது அந்தப் படத்தைப் பார்த்தவர்கள் அது கண்டு கொந்தளித்ததாகத் தெரியவில்லை.

ஆனால், இன்றைக்கு எதிர்ப்புகள் மட்டுமல்லாமல் கலவரங்களும் உருவாக்கப்படும் சூழல் இருப்பதை மறுப்பதற்கில்லை. ஆனாலும், அவர்கள் இருவரும் இந்து மதத்தைச் சார்ந்தவர்களே, சந்தர்ப்ப சூழ்நிலையின் பொருட்டு இஸ்லாமியராகவும் கிறித்தவராகவும் வளர்க்கப்பட்டதாகக் கதையின் திருப்புமுனை அமையும். தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்கும் உள்ளூர ஒரு அச்சம் இருந்திருக்கவும் வாய்ப்பிருக்கலாம். ஆனால், படத்தில் அனைத்து மதங்களும் ஒன்றே என்பதாகக் காட்சிகள் பின்னப்பட்டு, படமும் ஓஹோவென்று ஓடியது. கிறிஸ்துவ,  இஸ்லாமிய ஒருங்கிணைப்பையும் இந்தக் காதலர்களின் வழியாகப் படம் பேசியது. தேவிகா, அந்த மேரி பாத்திரத்தை ஏற்று அதற்கான நியாயத்தைச் செய்திருந்தார். இந்தப் படத்துக்குப் பிறகே படவுலகில் அவர் உச்சநிலையை எட்டிப் பிடித்தார்; ஏராளமான பட வாய்ப்புகளும் தேடி வந்தன. ‘பாலிருக்கும் பழமிருக்கும் பசியிருக்காது’ பாடலும் பெரு வெற்றி பெற்றது.

இரு பெண்கள், இரு குரல்கள்
இரு கதாநாயகிகள் இணைந்து நடிக்கும் படங்களில் இருவரும் இணைந்து பாடுவதாகக் காட்சிப்படுத்தப்பட்ட பல பாடல்கள் வெற்றி பெற்றிருக்கின்றன. பெரும்பாலும் பீம்சிங் இயக்கிய பல படங்களிலும் அத்தகைய காட்சிகள் இடம் பெற்றதுண்டு. தேவிகாவும் சாவித்திரியும் பாடும் ‘அத்தான்… என்னத்தான்…’ பாடல் ஒரு கிளாசிக் ரகப் பாடல் என்றே சொல்லலாம். பருவ வயது வந்த இரு இளம் பெண்கள் தங்கள் காதலனை மனதில் இருத்தி, அவன் நினைவில் பாடுவதாக அமைந்த இப்பாடல் கண்ணதாசனின் கைவண்ணத்தில், மெல்லிசை மன்னர்களின் இசைத்திறனால் சாகாவரம் பெற்று கம்பீரமாக நிற்கிறது. பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையும் வர்க்க பேதத்தையும் கொண்ட பெண்கள் இருவரும், காதல் என்ற உணர்வுக்கு ஆட்படும்போது ஒரே மனநிலையை எட்டிப் பிடிக்கும் காட்சியமைப்பு உன்னதமானது. 

‘இதயத்தில் நீ’ படத்தில் இடம் பெற்ற ‘சித்திரப்பூவிழி வாசலிலே வந்து யார் நின்றவரோ’ பாடலும் ஏறக்குறைய இதே பாணியில் அமைந்த பாடல்தான். தேவிகா, லட்சுமிராஜம் இணைந்து சுசீலா, ஈஸ்வரியின் குரலில் மயங்க வைத்தார்கள். இருவர் இணைந்து நடிக்கும்போதும் தேவிகாவிடம் ஒரு தனித்தன்மையும் வசீகரமும் கூடுதலாகவே தென்பட்டது.

வன்தொடர்தல் என்று அறியாமலே…
‘பெண்களை வன்தொடர்தல்’ என்ற சொல்லாக்கம் தற்போது பரவலாகியிருக்கிறது. அதன் நேரடி அர்த்தம் ஒரு பெண்ணைப் பின் தொடர்ந்து சென்று அவளுக்குத் தொந்தரவு தருவது. அது ஈவ்டீஸிங் குற்றமாகவும் இன்றைக்குக் கருதப்படுகிறது. ஆனால், இவர் நடித்த ஒரு பாடல் காட்சி மிக மிகப் பிரபலமானதுடன் புகழ் பெற்ற காட்சியும் கூட. நாகரிகமான படித்த இளைஞன் ஒருவன், கடற்கரையில் பொது இடத்தில் ஒரு இளம் பெண்ணைப் பின்தொடர்ந்து செல்வதுடன் அவளின் நடையையும் தோற்றத்தையும் புகழ்வதாகக் கேலி செய்யும் பாடல் 60களில் வானொலியிலும், அசலாகவே கல்லூரி மாணவர்கள் மாணவிகளைப் பார்த்துப் பாடும் பாடலாகவும் இருந்தது.

அதுதான் ‘தி கிரேட்’ ‘நடையா…. இது நடையா… ஒரு நாடகமன்றோ நடக்குது….’ ஆனால், காட்சியின் முடிவில் சம்பந்தப்பட்ட பெண் பாத்திரமான கீதா, அந்த இளைஞனை போலீஸ் ஸ்டேஷன் லாக்கப்புக்குள் தள்ள வைப்பாள். அது குறித்த விழிப்புணர்வு பெண்களிடையே அப்போது ஏற்பட்டதா என்றால் இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். நாயகியாக நடித்தவர் தேவிகா. நாயகன் சிவாஜி. அது அவரின் சொந்தப் படமும் கூட. பின்னர் அந்த மோதலே காதலை நோக்கி இட்டுச் செல்வதாகவும் காட்சிகள் மாறும்.

காகித ஓடம் கடலலை மீது போனதை மறக்க முடியுமா?
1966ல் வெளியான ‘மறக்க முடியுமா?’ கலைஞர் கருணாநிதியின் வசனத்தாலும் பாடல்களாலும் மிளிர்ந்தது. படத்தின் இறுதிக்காட்சிகள் நம்மை உறைய வைத்து விடும். தேவிகாவின் விழி வீச்சு வாள் வீச்சைக் காட்டிலும் கூர்மையாகித் தைத்தது. அக்காட்சியில் வசனங்கள் ஏதுமின்றிப் பேசாத கதைகளைப் பேசின அந்த விழிகள். கலைஞரின் சொற்களில் மிளிர்ந்த ‘காகித ஓடம் கடலலை மீது, போவது போலே மூவரும் போவோம்’ பாடல், காட்சிச் சூழலுக்கு ஏற்ப அமைந்து ரசிகர்களின் கரவொலியால் அதிர்ந்ததில் ஆச்சரியம் ஏதுமில்லை. மெல்லிசை மன்னர் டி.கே.ராமமூர்த்தியின் இசையும் தனித்து வென்றது.

தெலுங்கில் வெளியான ‘சந்தானம்’ தமிழில் ‘மறக்க முடியுமா?’ என்றானது நிச்சயமாக மறக்க முடியாததுதான். கலைஞரின் வசனங்களைப் பேசி தேவிகா நடித்த முதலும் கடைசியுமான படமும் இதுதான். ‘மறக்க முடியுமா?’ படத்தை அடுத்து தேவிகா ஜெய்சங்கருடன் ‘தெய்வீக உறவு’ படத்தில் கதாநாயகியாக நடித்தார். இது அவர் இரட்டை வேடம் ஏற்று நடித்த படமும் கூட. வேறு படங்களில் தேவிகா இரட்டை வேடம் ஏற்கவில்லை. மற்றொரு படமான ‘தேவி’ மலையாளத்திலிருந்து தமிழுக்குப் பெயர்க்கப்பட்டது. முத்துராமன் நாயகனாக நடிக்க ‘தேவி ஸ்ரீதேவி… தேடி அலைகின்றேன்’ என்ற தட்சிணாமூர்த்தி சுவாமிகளின் இசையில் அமைந்த பாடல் மட்டுமே பிரபலமானது.

கால மாற்றத்தின் பரிணாம வளர்ச்சி 
1968க்குப் பின் தமிழில் புதிய நட்சத்திரங்களின் வரவால் கதாநாயகி வாய்ப்புகள் குறையத் தொடங்கிற்று. சிவாஜி கணேசனுடன் அதிகப் படங்களில் நடித்தவர் என்ற நிலை மாறி கே.ஆர்.விஜயா அந்த இடத்தை எட்டிப் பிடித்தார். 70களில் வெளியான ‘எங்கிருந்தோ வந்தாள்’ படத்தில் சிவாஜிக்கு அண்ணியாக நடித்தார். ‘அபூர்வ சகோதர்கள்’ படத்திலும் ஏ.வி.எம்.ராஜன், ஜெய்சங்கர் போன்ற நாயகர்களின் அண்ணியானார். ‘பாரத விலாஸ்’ படத்திலும் பஞ்சாபிப் பெண்ணாக குணச்சித்திர வேடம். கடைசியாக சிவாஜிக்கு ஜோடியாக ‘சத்யம்’ படத்தில் நடித்தார்.

‘ஆனந்த ஜோதி’ யில் மாஸ்டர் கமலஹாசனின் அக்காவாக நடித்தவர், இப்படத்தில் இளம் கமலஹாசனின் அண்ணியாக அவதாரம் எடுத்தார். 70களில் தமிழை விட தெலுங்குப் படங்களிலேயே அதிக வாய்ப்புகள் கிடைத்தன. அதன் பிறகு பல ஆண்டுகள் பட வாய்ப்புகள் இன்றி இருந்தவரை மீண்டும் 1986ல் கமல் கதாநாயகனாக நடித்த ‘நானும் ஒரு தொழிலாளி’ படத்துக்காக அழைத்து வந்தார் ஸ்ரீதர். தேவிகாவுக்கு இதிலும் கமலின் அண்ணி வேடமே வாய்த்தது. பத்தாண்டு கால இடைவெளியில் சற்றே வயது கூடிய, உடல் பெருத்துப் போன தேவிகா பார்ப்பதற்கே பரிதாபமாக இருந்தார்.

தேவிகாவின் குண நலன்கள்
தேவிகாவை வைத்துப் படமெடுக்காத இயக்குநர்கள் மூவர். கிருஷ்ணன் -பஞ்சு இரட்டையர்கள், கே.எஸ்.கோபால கிருஷ்ணன், கே.பாலசந்தர் ஏதோ சில காரணங்களால் தேவிகாவை அணுகவில்லை. சின்னப்பா தேவரின் தேவர் பிலிம்ஸ், டி.ஆர்.ராமண்ணாவின் ஆர்.ஆர்.பிக்சர்ஸ் நிறுவனங்களிலும் தேவிகா நடிக்க அழைக்கப்பட்டதில்லை. ஆனால், மற்ற இயக்குநர்கள் பாராட்டும் வகையில்தான் தேவிகா இருந்தார். அவர் இருக்கும் படப்பிடிப்பு அரங்குகள் அவரது கள்ளமில்லாத கலகல சிரிப்பாலும், தின்று தீர்த்த வேர்க்கடலைத் தொலிகளாலும் நிறைந்திருக்கும் என்று பலரும் குறிப் பிட்டிருக்கிறார்கள். 

குறிப்பாக கால்ஷீட் பிரச்சனைகள் செய்யாதவர் என்பதும் அப்போதைய இயக்குநர்கள் குறிப்பிட்ட காரணங்களில் முதன்மையானது. நடிகை சரோஜா தேவி இதே காரணத்துக்காகவே  புறக்கணிக்கப்பட்டவர். கட்டுப்பெட்டித்தனமாகப்   பழமைவாதம் பேசும், அதைத் தீவிரமாக ஆதரிக்கும் உறவுகளைக் கொண்ட குடும்பத்திலிருந்து திரையுலகுக்கு வந்தவர் என்பதால் ஒழுக்க நியதிகள் பேசிய உறவுகள் அவரை முற்றிலும் நிராகரித்தன. அதனால் அவரும் நிர்தாட்சண்யமாக அவர்களிடமிருந்து விலகியே இருந்தார்.

தானே தேடிய வாழ்க்கைத் துணை
உறவுகளற்று இருந்ததாலோ என்னவோ தனக்கான வாழ்க்கைத் துணையையும் தானே தேர்வு செய்து கொண்டார். பிற்காலத்தில் நடிகை தேவயானி புகழின் உச்சியில் திரைவானில் நட்சத்திரமாக ஜொலித்தபோது, உதவி இயக்குநரான ராஜகுமாரன் மீது காதல் கொண்டு, பின் அவர் இயக்குநர் ஆனதும் தன் வீட்டையும் உறவுகளையும் மீறி திருமணம் செய்துகொண்ட சம்பவமே நினைவுக்கு வரும். ஆனால், இவர்கள் காதலுக்கு முன்னோடியாக தேவிகாவின் காதல் இருந்தது. அந்தக் காலகட்டத்தில் எந்தத் திரைப்பட நடிகையும் எடுக்காத ஒரு துணிச்சலான தீர்மானமான முடிவெடுத்து தனக்கு இணையாக, இயக்குநர் பீம்சிங்கிடம் அப்போது ஒரு உதவி இயக்குநராகப் பணியாற்றிய தேவதாஸை தேர்வு செய்தார்.

தேவதாஸின் தந்தை ஒரு திரைப்படத் தயாரிப்பாளர். எம்.கே.தியாகராஜ பாகவதர் நடித்த ‘அசோக்குமார்’ திரைப்படத்தைத் தயாரித்தவர் அவர்தான். மகனுக்கு திரைப்படத்தில் ஆர்வம் இருப்பதை அறிந்து, இயக்குநர் பீம்சிங்கிடம் உதவி இயக்குநராகச் சேர்த்துக் கொள்ளும்படி சிபாரிசு செய்தவரும் அவர்தான். ‘பாசமலர்’ படத்திலிருந்து தேவதாஸ் உதவி இயக்குநராகப் பணியாற்றத் தொடங்கினார். முதலில் தேவிகாவின் காதலை அவர் ஏற்க மறுத்தபோதும், தேவிகாவின் மாறாத அன்பும் பிடிவாதமும் அவரைச் சம்மதிக்கச் செய்தன.

உதவி இயக்குநராக இருந்த தேவதாஸ், படம் தயாரித்து இயக்குநராக மாறக் காரணமாக இருந்தவரும் தேவிகாதான். அவரே ‘வெகுளிப்பெண்’ படத்தைத் தயாரித்தார். இதன் மூலக்கதை நாடகமாக நடத்தப்பட்ட ‘வெள்ளிக்கிழமை’யின் கதாசிரியர்,  இயக்குநர் கலைஞானம். ஜெமினி கணேசன், தேவிகா இணையாக நடிக்க முத்துராமனின் அண்ணியாக மாறினாலும் முதன்மைப் பாத்திரம் ஏற்று நடித்தார். அப்படம் 1971 ஆம் ஆண்டின் சிறந்த மாநிலப் படத்துக்கான ஜனாதிபதி விருது பெற்றது.

அவ்வளவு தீவிரமாகக் காதலித்து மணந்து கொண்டதன் பலனாகக் கிடைத்தவர் மகள் கனகா மட்டுமே. இந்தத் திருமண பந்தம் நீடிக்கவில்லை என்பது கசப்பான உண்மை. இதுவே அவரது இயல்பான குணத்தையும் மாற்றி பிடிவாதக்காரராகவும் சிடுசிடுப்பு நிறைந்த பெண்ணாகவும் மாற்றி இருக்கலாம். மகள் கனகா நடிகையானபோதும், தேவிகாவின் குறுக்கீடுகளும் தலையிடுதலும் கனகாவின் திரையுலக வீழ்ச்சிக்குக் காரணமாகச் சொல்லப்பட்டது. தேவிகா நடிகையாக இருந்த காலமும் அவர் மகள் கனகா நடிக்க வந்த காலமும் வேறு வேறு என்பதையும் அவர் உணரவில்லை. மன உளைச்சல்கள் நோயாளியாக்கி 60 வயது நிறையும் முன்பாகவே, மகளை நிராதரவாக்கி விட்டு 2002ல் மறைந்தார் தேவிகா.

அசலும் திரையுலக பிம்பமும்
திரைப்படங்களில் அன்பே உருவான பெண்ணாக, மென்மையான குணநலன்களை பிரதிபலிக்கும் தேவதையாக, கணவன், காதலன், தந்தை என ஆண் பாத்திரங்களின் சொல்லுக்குக் கட்டுப்பட்டவர்களாகவே பெரும்பாலும் அக்காலக் கதாநாயகிகள் பலரும் சித்தரிக்கப்பட்டார்கள். சொல்லப்போனால் அவர்களை சிருஷ்டித்தவர்கள் ஆண்களே. ஒரு ஆண் மனது பெண் எவ்வாறானவளாக இருக்க வேண்டுமென விரும்பியதோ, விரும்புகிறதோ அவ்வாறே தங்களுக்கேற்ற கதாநாயகிகளை களிமண் பொம்மைகளைப் போல உருவாக்கினார்கள்.

அவற்றில் ஒரு சில விதி விலக்குகள் இல்லாமல் இல்லை. ஆனால், பிற்காலத்தில் அந்த நாயகியை அதே  பிம்பத்தோடே அணுகியவர்களுக்குப் பெரும் அதிர்ச்சிதான் பலனாகக் கிடைத்தது. ஒரு பெண் எப்போதும் மென் முறுவல் தவழ மென்மையானவளாகவே வாழ்வதென்பதும் சாத்தியமல்ல. அசல் வாழ்க்கை வேறு; திரையில் காண்பிக்கப்பட்ட நகல் பிம்பம் வேறு என்ற புரிதல் இல்லாமல் அணுகியவர்கள் ‘சிடுசிடு’ முகத்தையும் கண்டு அதிர்ந்துதான் போனார்கள்.

அது நிச்சயமாக தேவிகாவின் தவறல்ல. பெண்ணுக்கே உரித்தான ஆசாபாசங்களும், வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்களையும் அனுபவித்துத் துவண்டு போன ஒரு சாதாரண பெண் அவர் என்ற புரிதலுடன் அணுகினால் அவரது நடவடிக்கைகள் ஏமாற்றம் அளித்திருக்காது. சில சினிமா பத்திரிகையாளர்கள் தங்களுக்கு நேர்ந்த அனுபவம் குறித்து எழுதியபோதும், பேசியபோதும் எனக்குள் இவ்வாறான சிந்தனைகளே அலை பாய்ந்தன. எது எவ்வாறு இருப்பினும், தன் நடிப்பாற்றலால் கலையுலகுக்கு அவர் ஆற்றிய சேவை, எளிய ரசிக மனங்களைக் கொள்ளை  கொண்ட தன்மை இவை போதும் தேவிகாவை நினைக்கவும் ரசிக்கவும். தன் ஆடல், பாடல், நடிப்பால் நம்மை மகிழ வைத்த ஒரு கலைஞருக்கு நாம் திருப்பிச் செலுத்தும்  மரியாதை அதுவேயாகும்.

(ரசிப்போம்!)

- பா.ஜீவசுந்தரி
படங்கள்: ஸ்டில்ஸ் ஞானம்