விண்ணளந்த பெண் இவர்
நாம் அண்ணாந்துப் பார்த்து வானத்தை ரசித்துக்கொண்டிருக்கும்போது ஒரு பெண் வானையே அளந்து கொண்டிருந்தார். விண்வெளித்துறையில் முதல் பெண் விண்கல பைலட் மற்றும் விண்கல மையத்தின் முதல் பெண் படைத் தளபதி என்கிற பெருமைக்குரியவர் எலைன்ஸ் கொலின்ஸ். “என் பால்யத்தில் நான் வாசித்த ஒரு பத்திரிகையில் விண்வெளி வீரர்கள் குறித்த தகவல்கள் இடம்பெற்றிருந்தன. அதைப் பார்த்த பின்னால், நானும் விண்வெளிக்குச் செல்லவேண்டுமென ஆசை வந்தது.
 ஆனால் பெண்ணாகிய என்னால் அது சாத்தியமா? ஆண்கள் மட்டும்தானே செல்கிறார்கள்? என்கிற எண்ணம் எனக்குள் எழுந்தது. பெண்களும் விண்வெளிக்குச் செல்லலாம் என்பதே என் உயர் நிலைப் பள்ளிப் படிப்பின்போதுதான் எனக்குத் தெரியவந்தது” என்கிறார். 1978 ஆம் ஆண்டு கணிதம் மற்றும் பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். 1989 ஆம் ஆண்டில் விண்வெளி அமைப்பு மேலாண்மை பட்டம் பெற்றார்.
ஓக்லஹோமாவின் வான்ஸ் ஏர் ஃபோர்ஸ் பேஸில் அண்டர் கிராஜுவேட் பைலட் பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்ட நான்கு பெண்களில் ஒருவராக எலைன்ஸ் தேர்வு செய்யப்பட்டார். பயிற்சிக்குப் பின் 1989 ஆம் ஆண்டில், அமெரிக்க விமானப் படை டெஸ்ட் பைலட் பள்ளியில் பெண் பைலட்டாக எலைன்ஸ் தேர்வு செய்யப்பட்டார். தான் ஒரு சிறந்த பைலட்டாக இருக்க வேண்டும் என்பதில் எலைன்ஸ் கொலின்ஸ் கவனமாக இருந்தார். 1990 ஆம் ஆண்டு நாசா மையத்தில் விண்வெளி வீரராக சேர்ந்தார். விண்வெளியின் முதல் பெண் பைலட்டாக எலைன்ஸ் கொலின்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த செய்தியை உயரதிகாரி இவருக்குச் சொன்னபோது எப்படி இருந்தது இவருக்கு? “நான் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கவில்லை. ஆனால் ஆழ்ந்த நிம்மதியை உணர்ந்தேன். என் குறிக்கோள் நிறைவேறியதான உணர்வு அது” என்கிறார்.
1999 ஆம் ஆண்டு ஜூலை மாதம் விண்ணில் அனுப்பப்பட்ட சண்டே எக்ஸ்-ரே STS-93 யுஎஸ் விண்கலத்திற்கு தளபதியாக பொறுப்பேற்று வழிநடத்தினார். இதன் மூலம் விண்வெளி மையத்தில் தளபதியாக பொறுப்பேற்ற முதல் பெண் என்கிற பெருமையை பெற்றார் எலைன்ஸ் ெகாலின்ஸ். விண்வெளித் துறையில் தனக்கென தனி அடையாளத்தை பதித்தவர் 38 நாட்கள் 8 மணிநேரமும் 20 நிமிடங்களும் விண்வெளியில் இருந்து சாதனை படைத்தார். 2006 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.
பெண்களால் எந்த உயரத்தையும் அடைய முடியும் என்ற கனவை நனவாக்கியவர் எலைன்ஸ் கொலின்ஸ். “நாம் முதுமை அடைந்தபின், நம் வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும்போது, இதை முயன்று பார்த்திருக்கலாமோ என்று ஒருபோதும் எண்ணக்கூடாது. வாழ்க்கையில் அனைத்து வாய்ப்புகளையும் முடியுமோ முடியாதோ என்கிற கவலையின்றி முயன்று பார்த்துவிடவேண்டும். அப்போதுதான் சாதனைகள் சாத்தியம்” என்கிறார்.
- ஜெ.சதீஷ்
|