கிச்சன் டிப்ஸ்



* காபி டிகாக் ஷன் போட்ட உடன் அதை அப்படியே எடுத்து காபி கலக்காமல், அந்த டிகாக் ஷனை சுட வைத்து பின் காபி கலந்தால் காபி வாசனை தூக்கலாக இருக்கும்.
- சுகந்தாராம், கிழக்கு தாம்பரம்.

* அரைப்படி மாவில் செய்த இடியாப்பத்துக்கு, 1 கப் துவரம்பருப்பு, 10 காய்ந்தமிளகாய், உப்பு, பெருங்காயம், அரை மூடி தேங்காய் சேர்த்து அரைத்து தாளித்த தூளை சேர்த்து வதக்கினால் உசிலி இடியாப்பம் ரெடியாகி விடும். முறுக்குகள் மீந்துவிட்டால் நன்றாக பொடி செய்து காய்கறிகள் சமைக்கும்போது மேலாகத் தூவி பரிமாறினால் சுவையாக இருக்கும்.
- ஆர்.ஜெயலட்சுமி, திருநெல்வேலி.

* மாம்பழ மில்க் ஷேக் செய்யும் போது குளிர்ந்த பால் பாதியளவும், கன்டென்ஸ்டு மில்க் பாதியும் கலந்து தயாரித்தால் சுவை அபாரமாக இருக்கும்.
- ஜே.சி.ஜெரினாகாந்த், ஒக்கியம் துரைப்பாக்கம்.

* பச்சரிசி தோசைக்கு ஓம இலையை சேர்த்து அரைத்தால் மணமும் சுவையும் கூடும்.
* கார்ன்ஃப்ளேக்ஸை உப்பு, காரம் சேர்த்து தாளித்த தயிரில் கலந்து உண்டால் அருமையாக இருக்கும்.
- ஆர்.மீனாட்சி, திருநெல்வேலி.

* அடை மாவில் தண்ணீர் அதிகமாகி விட்டால் கார்ன்ஃப்ளேக்ஸ் தூளை மாவுடன் கலந்து விடுங்கள். அடை மாவு கெட்டியாவதுடன், அடை அதிக சுவையுடனும் மிருதுவாகவும் இருக்கும்.
- உ.தஸ்மிலா, ராமநாதபுரம்.

* கோதுமை உப்புமா செய்யும் போது கொதிக்கும் தண்ணீரில் சிறிது வெந்த பாசிப்பருப்பை சேர்த்துப் பின் கோதுமை ரவையைப் போட்டு உப்புமா செய்தால் ருசியாக இருக்கும்.
* ஹோட்டலில் ரவா தோசை மொறுமொறு என்று இருக்கும். வீட்டில் செய்தால் ஒழுங்கான உருவத்தில் வராது. அதற்கு ரவையை நன்றாக வறுத்து அரை மணி நேரம் நீரில் ஊறவைத்துப் பின்னர் மற்றப் பொருட்களுடன் கலந்து வார்த்தால் ஹோட்டலில் உள்ளது போல மொறுமொறு தோசை தயார்.
- ஆர்.அஜிதா, கம்பம்.

* பலாக்கொட்டையை வேகவைத்து தோலுரித்து, சிறுதுண்டுகளாக்கி, கடுகு தாளித்து காய்ந்தமிளகாய், பச்சைமிளகாய் நறுக்கிப் போட்டு, வெங்காயம், உப்பு, பெருங்காயம், தேங்காய்த்துருவல், கொத்தமல்லித் தூவினால் பலாக்கொட்டை சுண்டல் தயார்.
- சு.கெளரிபாய், பொன்னேரி.

* எலுமிச்சை ரச வண்டல் மீந்து விட்டால், அதில் தக்காளி, வெங்காயம் போட்டு வதக்கி, கொஞ்சம் சோம்பு போட்டுத் தாளித்து செய்தால் சாப்பாத்தி, பூரிக்குத் தொட்டுக் கொள்ள நன்றாக இருக்கும்.
- இல.வள்ளிமயில், திருநகர்.

* உளுந்து வடை செய்யும் போது மாவில் சிறிதளவு சேமியாவைத் தூள் செய்து போட்டுக் கலந்தால் சுவையாக இருக்கும்.
- கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்.

* கோதுமை மாவு 1 கப், மைதா மாவு 1/2 கப், வறுத்த உளுத்தம் மாவு 1 டீஸ்பூன், உப்பு, சீரகம், பெருங்காயம் சேர்த்து சீடை செய்தால் ருசியாக இருக்கும். வெடிக்காது. எண்ணெய் குடிக்காது.
* சாம்பார் பொடி செய்யும்போது சிறிதளவு சுக்கை தட்டி போட்டுக் கலந்து அரைத்தால், வாசனையும் கூடும். பருப்பினால் உண்டாகும் வாயுவையும் தடுக்கும்.
- கே.ராஜேஸ்வரி, மணப்பாறை.

* வெங்காய வடகம் செய்யும்போது எலுமிச்சை இலை, நார்த்தை இலை, தூதுவளை, வல்லாரை, துளசி, புதினா போன்ற மூலிகைகளை சேர்த்து செய்தால் சுவையும், மணமும் கூடும்.
- சு.கண்ணகி, மிட்டூர்.

* சப்பாத்தி குருமாவில் பைனாப்பிள் பழத்துண்டுகள், திராட்சை சேர்த்தால் வித்தியாசமான சுவை கிட்டும்.
* சிறிது எண்ணெயில் மிளகாய் வற்றலை வறுத்து, அதனுடன் தோல் சீவி பொடியாக நறுக்கிய இஞ்சித் துண்டையும் சேர்த்து வதக்கி, அதனுடன் சிறிது புளி, உப்பு, வெல்லம் சேர்த்து அரைத்தால் அருமையான இஞ்சித் துவையல் தயார்.
- நா.செண்பகவல்லி, பாளையங்கோட்டை.