ஃபேஸ்புக் ஸ்பெஷல்



மயக்குறுமகள்‬

காயத்ரி சித்தார்த்

‘ஓ.கே. கண்மணி’ பாடல்கள் கேட்டதிலிருந்து அம்மு ஏ.ஆர்.ரஹ்மானின் அதி தீவிர ரசிகையாகி விட்டாள்.“அவரு எங்க இருக்காரு? நாம போய் பாக்க முடியாதா? நாம போனா பேச மாட்டாரா? ‘எனக்கு நிறைய வேலையிருக்கு போங்க’ன்னு சொல்லிடு வாரா... எனக்கு உலகத்துலயே இப்ப ஏ.ஆர்.ரஹ்மானைத்தான் ரொம்பப் பிடிச்சிருக்கு” என்றெல்லாம் பினாத்திக் கொண்டே இருப்பாள். ‘மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை’ பாடலை அவள் ரசிப்பதைப் பார்த்து, “இது சித்ரான்னு ஒரு அத்தை பாடினது” என்று சித்து சொல்லிக் கொடுத்திருந்தார்.

படத்தில் அந்தப் பாடலை நித்யா மேனன் பாடுவதைப் பார்த்தவள் டென்ஷனாகி, “நீங்க தப்புத்தப்பா சொல்லிக் குடுக்கறீங்க. இந்தப் பாட்டு சித்ரா அத்தை பாடினது இல்ல. காரா (தாரா) அத்தை பாடறாங்க பாருங்க” என்றாள். “அவங்க சும்மா வாயசைக்கறாங்க... நிஜமாவே பாடறது சித்ரா அத்தைதான்” என்று சொல்லி நானும் வாயசைத்துக் காண்பித்தேன். புரிந்தாற்போல ‘‘ஓஹோ” என்றாள்.

மறுநாள் கிச்சனில் வேலை செய்துகொண்டே அந்தப் பாட்டைப் பாடிக் கொண்டிருந்தேன். வேகமாக உள்ளே வந்து என்னையே பார்த்தாள். “என்னடா பாக்கற?”‘இப்ப நீங்க பாடறீங்களா... சித்ரா அத்தை பாடறதுக்கு வாயசைக்கிறீங்களான்னு பாக்கறேன்”

கீர்த்து பிறந்ததிலிருந்து அம்மு அவளைக் கொஞ்சியபடியே இருந்தாலும், எப்போதாவது நாங்கள் குழந்தையைக் கொஞ்சுகையில் முகம் வாடிப் போவாள். அருகில் வந்து, “அம்மா எனக்கு உங்களை ரொம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்பப் பிடிக்கும். உங்களுக்கு என்னைப் பிடிக்குமா?” என்றோ, “எப்பப் பார்த்தாலும் கீர்த்துவை கொஞ்சிட்டேதான் இருப்பீங்களா?” என்றோ கேட்பாள்.

அவளைத் தூக்கி மடியில் வைத்துக் கொண்டு, “உன்னை அம்மாக்கு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்பப் பிடிக்கும்டா. என் பொண்ணை எனக்கு பிடிக்காம போகுமா? நீதாண்டா என் ஃபர்ஸ்ட் குழந்தை... நீ குட்டியா இருந்தப்ப உன்னையும் இப்டிதான் எப்பப் பார்த்தாலும் கொஞ்சிட்டே இருந்தேன். நீதான் என் ஃபர்ஸ்ட் செல்லம்... நீதான் என் ஃபர்ஸ்ட் தங்கம்...” என்றெல்லாம் கொஞ்சுவேன். ஒருநாள் விளையாட்டாக அவள் மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டு, “அம்முக்குட்டிக்கு அம்மாவை எவ்ளோ புடிக்கும்?” என்றேன்.“ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம் ம்ம்பப் பிடிக்கும். என் அம்மாவை எனக்குப் பிடிக்காதாம்மா? நீங்கதான் என் ஃபர்ஸ்ட் அம்மா” என்றாள். அவ்வ்வ்வ்...