சிறப்புக் குழந்தைகளுக்கான டே கேர் சென்டர்
சித்ரா ஜெயசீலன்கூட்டுக் குடும்பங்களில் இல்லாமல் தனித்து வாழ்கிற பல பெற்றோருக்கு குழந்தைகளைப் பார்த்துக் கொள்வது என்பது மிகப்பெரிய சவால். நல்ல நிலையில் உள்ள குழந்தைகளை காப்பகங்களிலோ, தெரிந்தவர் வீடுகளிலோ விட்டுச் செல்லலாம். சிறப்புக் குழந்தை களை? தினமும் அல்ல, தவிர்க்க முடியாத தேவை ஏற்படுகிற நாட்களில்கூட சிறப்புக் குழந்தைகளை யார் பொறுப்பிலும் விட்டுச் செல்ல முடியாது பெற்றோருக்கு. அப்படி ஓர் அனுபவம் உள்ளவர் சென்னையைச் சேர்ந்த சித்ரா ஜெயசீலன்.

என்னோட மகன் ஆகாஷுக்கு இப்ப 15 வயசு. அவனுக்கு 3 வயசுல ஆட்டிசம் இருக்கிறதைக் கண்டுபிடிச்சோம். அதுலேருந்து அவனுக்கு ஸ்பீச் தெரபி, மொழிப் பயிற்சி, நடத்தைப் பயிற்சினு ஒவ்வொண்ணையும் கத்துக் கொடுத்து கூடவே இருந்து பார்த்துக்கறேன். அவனுக்காகவே நானும் வித்யாசாகர்ல ‘டிப்ளமோ இன் ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் டிஸ்ஆர்டர்’னு ஒரு கோர்ஸ் முடிச்சேன். ஆட்டிசம் பாதிச்ச குழந்தைகளை எப்படி நடத்தணும், எப்படிக் கையாளணும், அவங்களுக்கு எப்படிப் பயிற்சி கொடுக்கணும்னு எல்லாத்தையும் சொல்லித் தருவாங்க. இப்ப என்னோட பயிற்சியால அவன்கிட்ட நல்ல முன்னேற்றத்தைப் பார்க்கறேன். அவனோட திறமைகள் வியக்க வைக்குது. இருந்தாலும் எங்கேயாவது ஒரு மணி நேரம் வெளியில போகணும்னாலும் அவனை தனியாவோ, வேற யார்கிட்டயோ விட்டுட்டுப் போக முடியாது.
என்னைப் போலவே ஸ்பெஷல் குழந்தைங்க உள்ள பல பெற்றோருக்கும் இந்தப் பிரச்னை இருந்தது தெரிஞ்சப்பதான் இந்த மாதிரிக் குழந்தைங்களைப் பார்த்துக்க டே கேர் சென்டர் ஆரம்பிக்கலாம்னு தோணினது. என்னை மாதிரி அம்மாக்கள் அரை நாளோ, ஒரு நாளோ வெளியில போகும் போது, அவங்களோட குழந்தைகளை பத்திரமான இடத்துல விட்டுட்டுப் போகிற மாதிரி ஒரு சென்டரை ஆரம்பிச்சேன்.
இந்தக் குழந்தைகளைப் பத்திப் படிச்சிருக்கிறதால, அவங்களை எப்படிக் கையாளணும்னு எனக்குத் தெரியும். ஆட்டிசம் பாதிச்ச பிள்ளைங்களுக்கு GFCF(Gluten free casein free) உணவுகளைத்தான் கொடுக்கணும். அவங்களோட மனநிலை மாற்றங்களைப் புரிஞ்சு நடந்துக்கணும். எந்த ஒரு விஷயமும் நடக்கிறதுக்கு முன்னாடியே அவங்களை மனசளவுல அதுக்குத் தயார்படுத்தணும். அதை சோஷியல் ஸ்டோரினு சொல்வோம். யோகா கத்துக் கொடுக்கணும். ADLனு சொல்ற ஆக்டிவிட்டீஸ் ஆஃப் டெய்லி லிவிங் பயிற்சிகளைக் கத்துத் தரணும். இதுக்கெல்லாம் அடிப்படை பயிற்சி இருக்கிற பெற்றோராலதான் இந்தக் குழந்தைகளைப் பார்த்துக்க முடியும்.
சிறப்புக் குழந்தைங்க உள்ள பெற்றோர், அதே மாதிரி குழந்தைகளைப் பார்த்துக்க காப்பகம் ஆரம்பிச்சு நடத்த நான் பயிற்சி கொடுக்கறேன். காப்பகம் ஆரம்பிக்கிறதுக்கான அடிப்படை விஷயங்கள், உதவிக்கு எப்படிப்பட்ட ஆட்களை வச்சுக்கணும், குழந்தைகளுக்கான சாப்பாடு, மத்த தேவைகளை எப்படிப் பார்த்துக்கணும்னு சகலத்தையும் சிறப்புக் குழந்தைங்களோட பெற்றோருக்கு சொல்லிக் கொடுத்துடுவேன். சிறப்புக் குழந்தைங்களை பார்த்துக்க ஒவ்வொரு மணி நேரத்தையும் கணக்கு பண்ணி கட்டணம் வாங்கலாம். இது தவிர சிறப்புக் குழந்தைங்களுக்கான ஆர்ட்ஸ் அண்ட் கிராஃப்ட்ஸ் பயிற்சிகளையும் சொல்லித் தரேன்...’’ என்கிறார் சித்ரா.
ஓய்வு நேரத்துல குழந்தைங்களுக்குக் கத்துக் கொடுக்கிற பயிற்சிகள் உள்பட, சிறப்புக் குழந்தைகளுக்கான காப்பகம் ெதாடங்க ஆலோசனை கள் வரை எல்லாம் அடங்கின ஹோம் புரோகிராம் பயிற்சியை ஒரே நாள்ல கத்துக்க கட்டணம் 500 ரூபாய். மனசுக்கு இதமான இந்த சேவை லாபத்தையும் சம்பாதிச்சுக் கொடுக்கும்’’ என்கிறார் அவர்.
வாழைநார் பொம்மைகள்
ஷர்மிளா தேவி
எதிர்கால சந்ததியையே அழிக்கக்கூடியது எனத் தெரிந்தாலும், பிளாஸ்டிக்கின் உபயோகத்தை நம்மால் முற்றிலும் ஒழிக்க முடியவில்லை. குழந்தைகள் விளையாடுகிற பொம்மை முதல் வீட்டு அலங்காரம் வரை எல்லாவற்றிலும் பிளாஸ்டிக் மயம். ஓசூரை சேர்ந்த ஷர்மிளா தேவியின் கைவண்ணத்தில் உருவாகிற பொருட்களைப் பார்த்தால், அடுத்த நிமிடமே பிளாஸ்டிக்கை விட்டு விலகிவிடுவோம். வாழைநார் உள்பட சுற்றுச்சூழலுக்கு உகந்த இயற்கையான பொருட்களில் அவர் தயாரிக்கிற அத்தனையும் அழகோ அழகு!
எம்.ஏ. படிச்சிருக்கேன். சமூகநலப் பணிகள்ல ஆர்வம் உண்டு. அந்த வகையில பிளாஸ்டிக்கை தவிர்க்கிறது பத்தியும் ரொம்ப காலமா பேசிட்டிருக்கேன். வெறுமனே பேசறதோட நிறுத்திக்காம, எனக்குத் தெரிஞ்ச அடிப்படை கைவினைக் கலை அனுபவத்தை வச்சு, சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களைச் செய்ய ஆரம்பிச்சேன். அதுல குறிப்பா வாழைநார் பொம்மைகளுக்கு எக்கச்சக்கமான வரவேற்பு...’’ என்கிற ஷர்மிளா, இந்த பொம்மைகளை பச்சையான வாழைநார் மற்றும் பூ கட்ட உபயோகிக்கிற காய்ந்த வாழைநார் என இரண்டிலும் செய்கிறார்.
நிறைய பேர் வீட்டுத் தோட்டத்துல வாழைமரம் இருக்கும். ஒரு கட்டத்துல அதை வெட்டி எறிஞ்சிடுவாங்க. அப்படி வீணாப் போகிற மரத்துலேருந்து நாமளே சுலபமா கையாலயே நார் எடுக்கலாம். அது முடியாதவங்க எங்கக்கிட்டருந்தும் வாங்கிக்கலாம். காய்ந்த நார் மீட்டர் கணக்குலயும் பச்சை நார் கிலோ கணக்குலயும் கிடைக்கும். முதல்ல அதுல சாயம் ஏத்தணும். அந்தச் சாயம்கூட காய்கறி மற்றும் பழங்கள்லேருந்து எடுக்கிறதுதான். 500 ரூபாய்க்கு நார் வாங்கினா, அதுல 5 இஞ்ச் அளவுக்கு 500 பொம்மைகள் பண்ணலாம். ஒரு நாளைக்கு 25 முதல் 50 பொம்மைகள் வரைக்கும் பண்ண முடியும். இந்த பொம்மைகளோட ஆரம்ப விலையே 50 ரூபாய். கார்ல தொங்கவிடலாம். கல்யாணங்களுக்கு சீர் வரிசைத் தட்டுல வச்சுக் கொடுக்கலாம். எந்த விசேஷத்துக்கும் அன்பளிப்பா கொடுக்கலாம். வீட்டுச்சுவர்ல அலங்காரமா மாட்டலாம்... கை நிறைய லாபத்தை அள்ளிக் கொடுக்கிற பிசினஸ் இது’’ என்கிற ஷர்மிளா தேவி, ஓசூர் மற்றும் சென்னையில் வாழைநார் பொம்மைகள் தயாரிக்கப் பயிற்சி வகுப்புகள் எடுக்கிறார். ஒரே நாள் பயிற்சியில் 5 வகையான பொம்மைகள் செய்யக் கற்றுக் கொள்ள கட்டணம் 500 ரூபாய்.
தஞ்சாவூர் ஸ்டைல் கண்ணாடி ஓவியம்
மகாலட்சுமி
வாழ்க்கையில் பல விஷயங்களில் ஒன்றுக்கு இணையான இன்னொன்று கிடைப்பது அரிது. பொன் வைக்கிற இடத்தில் பூ வைக்கிற கதைகள் எப்போதும் சாத்தியமாவதில்லை.
மற்ற விஷயங்களில் எப்படியோ... தஞ்சாவூர் ஓவியங்களில் அது சாத்தியம்’’ என்கிறார் சென்னை, மந்தவெளியைச் சேர்ந்த கைவினைக் கலைஞர் மகாலட்சுமி!
தஞ்சாவூர் ஓவியங்களின் ஆரம்ப விலையே ஆயிரங்கள்தான். தஞ்சாவூர் ஓவியங்களை வாங்குவதும் மற்றவர்களுக்கு அன்பளிப்பாகக் கொடுப்பதும் அந்தஸ்தின் அடையாளமாகப் பார்க்கப்படவும் அதுவே காரணம். மகாலட்சுமியின் கைவண்ணத்தில் உருவாகிற தஞ்சாவூர் ஸ்டைல் கண்ணாடி ஓவியங்கள், விலை மலிவானவை மட்டுமின்றி, பார்ப்பதற்கு அச்சு அசல்
தஞ்சாவூர் ஓவியங்களைப் போலவே கண்களைக் கவர்பவை.
எல்லாராலயும் தஞ்சாவூர் ஓவியங்கள் பண்ண முடியாது. அது ஒரு மிகப்பெரிய கலை. அப்படியே கத்துக்கிட்டுப் பண்ணாலும், முதலீடும் செலவும் ரொம்ப அதிகம். நான் பண்றது செலவே இல்லாம பண்ணக்கூடியது. கண்ணாடி, வரைய வேண்டிய படத்துக்கான டிரேஸ், ஆயில் கலர்ஸ், தின்னர், பிரஷ், ஃபுட் ஃபாயில், ஃபேப்ரிக் கலர்ஸ், ஸ்டோன் கலர்ஸ், கருப்பு இங்க் - இவ்வளவுதான் தேவை. கண்ணாடிக்கான செலவு மட்டும்தான். மத்தபடி கலர்ஸ் எல்லாம் 6 படங்கள் பண்ற அளவுக்கு வரும். ஃபிரேமுக்கான செலவு 200 ரூபாய். மொத்தமா ஒரு படத்துக்கு 300 ரூபாய்தான் முதலீடு. அதையே 800 ரூபாய்க்கு விற்கலாம். தஞ்சாவூர் ஸ்டைல் படங்கள் என்பதால பெரும்பாலும் சாமி உருவங்களைத்தான் அதிகம் விரும்பறாங்க. ஆனா, மாடர்ன் ஆர்ட் வேணும்னு கேட்கறவங்க அதையும் இதுல பண்ணலாம்.
ஒரு படம் முழுக்க முடிக்க 4 நாளாகும். வரைஞ்சு, கலர் பண்ணி, 3 நாள் காய வைக்கணும். ஆனா, ஒரே நாள்ல பத்து படங்கள் வரைக்குமான அடிப்படை வேலைகளை முடிச்சு வச்சுக்கலாம். ஆர்ட் கேலரி, டூரிஸ்ட் அதிகம் வரும் இடங்கள்ல உள்ள கடைகள்ல நல்லா விற்பனையாகும். அன்பளிப்பா கொடுக்க சீப் அண்ட் பெஸ்ட் சாய்ஸ் இது’’ என்கிற மகாலட்சுமியிடம் 5 நாள் பயிற்சியில் தஞ்சாவூர் ஸ்டைல் ரிவர்ஸ் கிளாஸ் பெயின்ட்டிங்கை கற்றுக் கொள்ளலாம். கட்டணம் 500 ரூபாய்.
- ஆர்.வைதேகி
படங்கள்: ஆர்.கோபால்