இந்தப் பள்ளிக்கு ‘வானவில்’ என்கிற பெயர் எந்த நோக்கத்தில் வைக்கப்பட்டதோ? மழை பெய்து ஓய்ந்த வானத்தில் ஏழு வண்ணங்களைத் தாங்கி காட்சி தரும் வானவில் எவ்வளவு எழில்மிக்கதாக இருக்கும்? அதுபோலத்தான் இங்கு பயிலும் மாணவர்கள் யாவரும் தங்களது சிந்தனை மற்றும் செயல்பாடுகளால் நம்மை வசீகரிக்கிறார்கள். பூம்பூம் மாட்டுக்காரர்கள் என்று சொல்லக்கூடிய ஆதியன் சமுதாயக் குழந்தைகளும், நரிக்குறவர் சமுதாயக் குழந்தைகளும்தான் இங்கு பயில்கின்றனர். நிகழ்த்துக் கலைகள் புரியும் சமூகத்தில் பிறந்ததன் காரணமாக படிப்பில் மட்டுமல்லாமல் விளையாட்டு மற்றும் கலைகளிலும் சொல்லியடிக்கும் கில்லிகளாக இருக்கிறார்கள்!

கையில் பிரம்பேந்தியபடி வீட்டுப்பாடம் எழுதாதவர்களை மண்டியிடச் சொல்லும் கண்டிப்பான ஆசிரியர்கள் இங்கு யாரும் இல்லை. ஆசிரியர் - மாணவர்களுக்கிடையிலான நட்புணர்வே நல்லதொரு கல்விக்கு அடித்தளமாக இருக்கும் என்பதற்கு உதாரணமாகத் திகழ்கிறது இப்பள்ளி. சமூகப் படிநிலையில் மிகவும் பின்தங்கியவர்களாக இருக்கும் நாடோடி சமுதாயத்திலிருந்து படித்த பட்டதாரிகளை உருவாக்க வேண்டும் என்பதே இப்பள்ளியின் சிரத்தையான நோக்கம். நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் கிராமத்தில் ஜொலிக்கும் இந்த வானவில்லைத் தொடங்கி வழிநடத்திச் சென்று கொண்டிருக்கிறார் பிரேமா ரேவதி.
பத்திரிகையாளர், ஆவணப்பட இயக்குநர், திரைப்பட துணை இயக்குநர் என இவருக்கு இன்னும் சில முகங்கள் இருந்தாலும் அவற்றைக் காட்டிலும் இப்பள்ளியை நடத்திச் செல்வதில்தான் முழுமூச்சாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
‘‘2004ம் ஆண்டு இந்தோனேஷியாவில் உருவெடுத்து தெற்காசிய நாடுகளை தாக்கிய ஆழிப்பேரலை (சுனாமி) என்னும் இயற்கைப் பேரிடரையும், கணக்கற்ற உயிர்களை அது விழுங்கிய கொடுந்துயரையும் யாரும் மறந்திருக்க மாட்டோம். தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலேயே குறிப்பாக கடலூர், நாகையில் ஏற்பட்ட உயிர் மற்றும் பொருட்சேதங்கள் அதிகம். அரசு மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் யாவும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தீவிரமாக இறங்கினர். பிணங்களைத் தூக்குவதற்குக்கூட ஆட்கள் இல்லை என்று பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து எனது நண்பர்கள் தகவல் சொன்னார்கள். நானும் தன்னார்வத்தோடு என்னால் இயன்றதைச் செய்யும் பொருட்டு சிக்கல் கிராமத்துக்குக் கிளம்பிச் சென்றேன்.
சுனாமியால் மீனவர்கள்தான் பாதிக்கப்பட்டார்கள் என்பது போன்ற பிம்பமே இருந்தது. நேரில் சென்று பார்த்தபோதுதான் மீனவர்களோடு, அவர்களைச் சார்ந்து வாழும் தலித் மக்கள் மற்றும் பின்தங்கிய சமூக மக்களும் பெருத்த பாதிப்புக்குள்ளாகியிருப்பது தெரிய வந்தது. தமிழகமெங்கும் மக்கள் ஈந்த பணம் மற்றும் பொருளுதவிகள் பெருமளவில் வந்து குவிந்த சூழலிலும் கூட, ‘ஆதியன்’ என்று சொல்லக்கூடிய பூம்பூம் மாட்டுக்காரர்கள் மற்றும் நரிக்குறவர்களுக்கு அந்த நிவாரண உதவிகள் கிடைக்கவில்லை.
அம்மக்களின் வறுமையையும் அவர்களின் அடிப்படையான பிரச்னையையும் நான் கண்ட ஒரு காட்சி எனக்கு உணர்த்தியது. அந்தக் காட்சிதான் ‘வானவில்’ என்கிற கோட்டின் முதற்புள்ளி. முருகம்மாள் என்ற சிறுமி கையில் லஷ்மி என்ற உடல் மெலிந்த நோஞ்சான் குழந்தையை வைத்து பிச்சையெடுத்துக் கொண்டிருந்தாள். அவளை விசாரித்த பின்புதான் அவள் ஆதியன் சமூகத்தைச் சேர்ந்தவள் என்பதும், அச்சமூக மக்கள் ஒரு வேளை சாப்பாட்டுக்குக் கூட அல்லாடும் சூழலில் இருப்பதுவும் தெரிய வந்தது.
ஆதியன் சமூகத்தவர்கள் தமிழின் தொன்மையான நிகழ்த்துக் கலைஞர்கள். காளை மாட்டின் மீது துணி போர்த்தி அலங்கரித்து இசைக்கருவியை இவர்கள் ஊதியபடி வந்து குறி சொல்ல, மாடும் அதற்கேற்றபடி தலையசைக்கும். இப்படியாக குறி சொன்னதற்கு தட்சணையாக அரிசியைப் பெற்றுக் கொண்டு சமைத்துச் சாப்பிட்டு நாடோடியாக வாழ்ந்து வந்தார்கள். சமீபகால நகரமயமாக்கலின் விளைவால் மேய்ச்சல் நிலங்கள் பெரும்பாலும் அழிக்கப்பட்டு விட்டபடியால் காளை மாட்டைப் பராமரிப்பது சவாலானதாக மாறிவிட்டது. குறி சொல்கிற இவர்களுக்கு முன்பு போல அரிசி கொடுக்கிற வழக்கமும் முற்றிலுமாக மறைந்து விட்டது. அதனால் வேறு தொழிலுக்கு மாறி ஆக வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். அதன் விளைவாக பிளாஸ்டிக் பொருட்களைக் கொடுத்து பழைய துணிகளை வாங்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தார்கள்.
அவர்களது குழந்தைகள் வேளாங்கண்ணி சர்ச் மற்றும் பேருந்து நிலையங்களில் ஸ்டிக்கர்கள் வாங்கிக்கொள்ளக்கூறி புது வடிவத்தில் பிச்சையெடுத்து வந்தார்கள். இப்படியான சூழலில் சுனாமி அவர்களை மேலும் முடக்கிப் போட்டிருந்தது. பஞ்சத்தில் சாகவிருக்கும் குழந்தையை கழுகு ஒன்று கொத்தித் தின்னக் காத்திருப்பதாக கெவின் கார்டர் எடுத்த புகைப்படம் சூடானின் கொடூரத்தை உலகுக்குச் சொன்னது. அதில் காணப்படும் குழந்தை போலவே மெலிந்திருந்தாள் லஷ்மி. அவளைக் காப்பாற்ற வேண்டி மருத்துவ உதவிகள் மற்றும் ஊட்டச்சத்துள்ள உணவுகள் வழங்கி வெகுவாகப் போராடினோம். எங்களது போராட்டங்கள் எல்லாம் தோற்றது போல அவள் இறந்து விட்டாள். சத்தான உணவு கிடைக்காததால் ஒரு குழந்தை இறந்து போனது எனக்குள் பெருத்த அதிர்வை ஏற்படுத்தியது. இம்மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட வேண்டுமெனில் கல்வி ஒன்றே அதற்கான வழி.
மற்ற சமூகத்தினருக்கு கல்வி குறித்து இருக்கும் சிறிய புரிதல் கூட இச்சமூக மக்களுக்கு இல்லை. ‘படித்து என்னவாகிவிடப் போகிறது’ என்கிற எண்ணம்தான் அவர்களிடம் இருந்தது. அன்றைய சூழலில் தமிழக அளவில் ஆதியன் சமூகத்திலிருந்து ஒரு பட்டதாரி கூட உருவாகவில்லை என்று அறிந்ததும் பேரதிர்ச்சியாக இருந்தது. இத்தலைமுறையை கல்வியறிவுடைய தலைமுறையாக மாற்ற வேண்டும் என்று அப்போதுதான் தோன்றியது. ஆதியன் குழந்தைகள் பத்துக்கும் மேற்பட்டவர்களை அருகிலிருந்த அரசுப் பள்ளியில் சேர்க்க முயற்சியெடுத்தோம்.
இவர்களின் பின் தங்கிய வாழ்வியல் முறை மற்ற சமூக குழந்தைகளுடன் இணைந்து பயில்வதற்குத் தடையாக இருந்தது. பள்ளிக்கூடங்களிலும் கூட தீண்டாமை பாராட்டப்பட்டதும் அவர்களை சேர்க்க முடியாததற்குக் காரணமாக இருந்தது. ஆதியன் மற்றும் நரிக்குறவர் ஆகிய நாடோடி சமூகக் குழந்தைகளால் மற்ற சமூகக் குழந்தைகளோடு இயல்பாகக் கலக்க முடியாது என்பதனைப் புரிந்து கொண்டதன் பின்னர் தோன்றிய வழிதான் இவர்களுக்கென தனியே ஒரு பள்ளி’’ எனும் ரேவதி, இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனிடம் ‘காக்க காக்க’ படத்திலிருந்து உதவி இயக்குநராகப் பணிபுரிந்து வந்திருக்கிறார்.
‘வேட்டையாடு விளையாடு’ படத்தின் கதை விவாதத்தில் மட்டும் கலந்து கொண்ட சூழலில், இங்கு பள்ளி தொடங்க வேண்டிய பணிகளுக்காக அப்படத்திலிருந்து விலகியிருக்கிறார். ‘‘பலரது உறுதுணையோடு 2005 ஜூன் மாதத்தில் 25 குழந்தைகளைக் கொண்டு வானவில் பள்ளியை தொடங்கினேன். 6 மாதம் மட்டும் இக்குழந்தைகளுக்கு அடிப்படைக் கல்வி மற்றும் நாகரிகத்தை புகட்டி விட்டு அவர்களை அரசுப் பள்ளியில் சேர்த்து விட்டதும் பள்ளியை மூடி விடலாம் என்ற எண்ணம்தான் முதலில் இருந்தது.
பிச்சையெடுத்து வரும் காசைக் கொண்டு சைக்கிளை வாடகைக்கு எடுத்து ஓட்டியும், சினிமா பார்த்தும் பொழுதுபோக்கப் பழகிக்கொண்ட குழந்தைகளை படிக்கச் சொல்லி அழைத்து வருவதில் பல சிக்கல்கள்... ஆரம்பத்தில் அக்குழந்தைகளின் பெற்றோருக்கே அவர்கள் படிப்பார்கள் என்கிற நம்பிக்கையில்லை. என் மீதுதான் அனுதாபப்பட்டார்கள்.
‘பள்ளிக்கூடம் என்றாலே வாத்தியார் படிக்கச் சொல்லி அடிப்பார்’ என்கிற கற்பனையைத் தகர்க்க வேண்டும். பள்ளிக்கூடம் போவது போல மகிழ்ச்சியான செயல் வேறில்லை என்கிற சூழலை அப்பள்ளியில் உருவாக்க வேண்டும் என்று நினைத்தேன். பள்ளிக்காக சொந்தமாக சைக்கிள் வாங்கினோம். இங்கு பயில்கிற யார் வேண்டுமானாலும் சைக்கிளை எடுத்துக்கொண்டு சுற்றி வரலாம். வாரந்தோறும் ஏதேனும் ஒரு சினிமாவுக்கு அழைத்துப் போவதை வாடிக்கையாக்கிக் கொண்டோம். அப்படி யாக பள்ளியின் மீதிருந்த ஒரு வெறுப்பான நினைவை அழித்து மகிழ்ச்சியான சூழலில் அவர்களை படிக்க வைக்கிறோம்’’ என்கிறார் ரேவதி. 5 புத்தகங்களை மனனம் செய்யச் சொல்லி அதை ஒப்புவித்து தேர்ச்சி பெறும் வழக்கமான அம்சத்தைத் தாண்டி வானவில்லில் வேறென்ன சிறப்புகள் இருக்கின்றன?
‘‘நிகழ்த்துக் கலைஞர்களின் சமூகக் குழந்தைகளுக்கு கலை என்பது மரபிலேயே ஊறிப்போன ஒன்று. கல்வியுடன் விளையாட்டு, இசை, நாடகம், ஓவியம் ஆகியவற்றுக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறோம். ஓவியர்கள் சந்ரு, நடராஜ், பரணி, சோலை என பல ஓவியர்களை அழைத்து வந்து ஓவியப் பயிற்சி அளித்திருக்கிறோம். ஓவியர் எழில் இங்கேயே சில காலம் தங்கி மாணவர்களுக்கு ஓவியம், களிமண் பொம்மைகள் செய்யும் பயிற்சிகளை வழங்கினார். நாடகக் கலைஞர்கள் மங்கை, க்ளேர், மணிமாறன், ஜானகி போன்றோர் நாடகப் பயிற்சி அளித்திருக்கின்றனர். நரேஷ் செல்வா என்ற கலைஞர் இதற்காக கர்நாடகாவிலிருந்து வந்திருந்தார். நல்ல ஒரு தலைமுறையை உருவாக்க கல்வி மட்டுமே போதாது அதனுடன் கலையும் இணைவது அவசியமானது’’ என்பவரிடம், ‘வானவில் தொடங்கிய இந்த 10 ஆண்டுகளில் நிகழ்த்திய மகத்தான சாதனை என எதைச் சொல்வீர்கள்’ என்றோம்.
‘‘கல்வியறிவற்ற ஒரு சமூகத்திலிருந்து கல்வியறிவு பெற்ற முதல் தலைமுறையை உருவாக்குகிறோம் என்பதே எங்களது பணியின் வெற்றிதான். 145 பேர் இப்போது வானவில்லில் பயில்கின்றனர். இன்னமும் எத்தனையோ குழந்தைகள் கல்வியறிவில்லாமல் இருக்கிறார்கள்தான்... என்றாலும் எங்களால் இயன்ற குறுகிய பரப்பில் நிறைவாக செயல்பட்டு வருகிறோம். தனது 12வது வயதில் வானவில்லில் இணைந்த லட்சுமி இப்போது திருவாரூர் திரு.வி.க. கலைக் கல்லூரியில் இளங்கலை பொருளாதாரம் படித்து வருகிறாள். ஆரம்பத்தில் குழந்தையை வைத்து பிச்சையெடுத்த முருகம்மாளைப் பற்றிச் சொன்னேனல்லவா? அவள் இப்போது குறுக்கத்தியில் டீச்சர் ட்ரெயினிங் டிப்ளமோ படிக்கிறாள். ஆதியன் சமூகத்திலிருந்து முதல் தலைமுறையாக கல்லூரிக்குச் செல்கின்றனர் என்பதே பெரிய மாற்றம்தான்.
இருந்தும் எங்களுடைய பணி மட்டுமே போதாது, தமிழகத்தில் இது போன்ற எண்ணற்றவர்கள் கல்வி வெளிச்சம் கிடைக்காமலும் அது குறித்த விழிப்புணர்வு இல்லாமலும் இருக்கிறார்கள். சமூக மாற்றத்தின் திறவுகோலாக இருக்கும் கல்வியை முழுமையாகச் சாத்தியப்படுத்த அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’’ என்கிறார் ரேவதி.பள்ளி தொடங்குவதற்காக ‘வேட்டையாடு விளையாடு’ படத்திலிருந்து விலகி யவர், மீண்டும் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தில் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனிடம் துணை இயக்குநராகப் பணியாற்றியிருக்கிறார். கௌதம் தயாரித்த படமான ‘தங்கமீன்கள்’ படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளர் ரேவதிதான்.
பத்திரிகையாளராகவும் பணிபுரிந்த ரேவதி, ரீட்டா மேரி கற்பழிப்பை மையப்படுத்தி எடுத்த ‘உங்களில் ஒருத்தி’ என்கிற ஆவணப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. சுனாமி நிவாரணத்தில் கைவிடப்பட்ட தலித்துகளை மையப்படுத்தி ‘கருணைக்கும் வெளியே’ என்கிற ஆவணப் படம், மீனவப் பெண்களின் வாழ்க்கையை பதிவு செய்யும் ஆவணப் படங்களை இயக்கியிருக்கிறார்.
‘நீங்கள் படம் இயக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளீர்களா’ என்றதற்கு, ‘‘அப்படியான எண்ணம் இதுவரையிலும் இல்லை. படம் இயக்க இங்கு எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அதைக்காட்டிலும் பின் தங்கிய சமூக மக்களின் கல்விக்காகச் செயல்படுவதே இப்போது எனக்கு முக்கியமாகத் தோன்றுகிறது’’ என்கிறார் பிரேமா ரேவதி.
குழந்தையை வைத்து பிச்சையெடுத்த முருகம்மாள், இப்போது டீச்சர் ட்ரெயினிங் டிப்ளமோ படிக்கிறாள்...
- கி.ச.திலீபன்
படங்கள்: ஏ.டி.தமிழ்வாணன்