மலாலா மேஜிக்-16



நினைவுகள் அழிவதில்லை

மலாலா கண் விழித்துப் பார்த்தார். சுற்றிலும் மனித முகங்கள். ஒருவரையும் மலாலாவால் அடையாளம் காணமுடியவில்லை. இவர்கள் எல்லோரும் யார்? ஏன் என்னையே உற்றுப் பார்த்துக்கொண்டு நின்றுகொண்டிருக்கிறார்கள்? மலாலா கண்களை இடுக்கி ஒவ்வொரு முகமாகப் பொறுமையாகப் பார்க்க முயன்றார். விநோதம்தான். ஒவ்வொரு முகத்திலும் நான்கு விழிகள் இருந்தன. இரண்டு மூக்குகள். இரண்டு வாய்கள். இதென்ன, நான் கனவு கண்டுகொண்டிருக்கிறேனா? என்ன ஆனது எனக்கு? ஏன் என்னால் எதையும் சரியாகப் பார்க்க முடியவில்லை? இவர்கள் அந்நியர்களா அல்லது என் நினைவு குழப்புகிறதா? யாரோ தன்னைப் படுக்க வைத்திருந்தார்கள் என்பது தெரிந்தது. இது ஸ்வாட் போலவோ பாகிஸ்தான் போலவோ இல்லையே? என்னை எங்கே அழைத்து வந்திருக்கிறார்கள்? அப்பாவும் அம்மாவும் எங்கே?

கத்த முயன்றார். உதடுகளைப் பிரிக்கக்கூட முடியவில்லை. வாயில் குழாய் போல ஏதோ பொருத்தப்பட்டிருந்ததை உணர்வதற்குச் சில விநாடிகள் பிடித்தன. தான் இருப்பது ஒரு மருத்துவமனையில் என்பது சில நிமிடங்களுக்குப் பிறகே தெரியவந்தது. படுத்த வாக்கில் கண்களை உருட்டிப் பார்த்தார். வலித்தது. கைகளால் மெத்தையை இறுகப்  பற்றிக்கொண்டார். வலித்தது. எங்கே வலி என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லை. யோசித்தால் வலித்தது. சுவாசித்தால் வலித்தது. இதென்ன உணர்வு? எங்கிருந்து வந்து ஒட்டிக்கொண்டது இந்த வலி? வாயில் என்ன பொருத்தியிருக்கிறார்கள்? ஏன் எல்லாமே இரண்டு இரண்டாகத் தெரிகிறது?

அப்பா! அவர் எங்கே? அவரும்கூட என்னைப் போலவே கிடத்தப்பட்டிருக்கிறாரா? என்னைக் காட்டிலும் ஆபத்தான நிலையில் இருக்கிறாரா? கண்களை இயன்றவரை சுழலவிட்டுப் பார்த்தார். அருகில் அப்பா இல்லை. அவர் இருந்தது ஒரு தனியறையில். அப்படியானால் அப்பாவை அடுத்த அறையில் படுக்க வைத்திருக்க வேண்டும். ஏன் இப்படித் தனக்குத் தோன்ற வேண்டும் என்று மலாலாவுக்குத் தெரியவில்லை. தன்னைப் போலவே அப்பாவும் நினைவு தப்பி, காயப்பட்டு, வலியோடு படுத்துக் கிடப்பார் என்று ஏன் அவர்  நம்ப வேண்டும்?

கையால் ஏதோ சைகை காட்டினார் மலாலா. புன்முறுவலுடன் ஒரு பெண் மலாலாவை நெருங்கினார். தன்னை ரெஹானா என்று அவர் அறிமுகப்
படுத்திக்கொண்டார். மலாலாவை ஆற்றுப்படுத்திய ரெஹானா புனித குர்ஆன் நூலை எடுத்து வைத்துக்கொண்டு பிரார்த்தனை செய்யத் தொடங்கினார். தெளிந்த, பழக்கப்பட்டுப்போன வார்த்தைகள் ஒவ்வொன்றாக அவரிடமிருந்து வெளிப்பட மலாலாவின் உடலும் உள்ளமும் அமைதியடைந்தது போல இருந்தது. மலாலா தன் கண்களை மூடிக்கொண்டார். அந்த மயக்கத்திலும் அவர் உதடுகள் முணுமுணுத்தன. கடவுளே, என்னைக் காப்பாற்றியதற்கு நன்றி!

விழித்தபோது ரெஹானாவைக் காணவில்லை. அது ஒரு பச்சை அறை. ஜன்னல்கள் எதுவும் இல்லை. விளக்குகள் மிகவும் பிரகாசமான ஒளியை கண்களைக் கூசச்செய்யும் வகையில் அந்த அறை முழுக்கப் பரப்பிக் கொண்டிருந்தன. ஒரு மருத்துவரும் வேறொரு நர்ஸும் இருந்தனர். மலாலா அவர்களிடம் பேச முயன்றார். ரேடியோவிலும் தொலைக்காட்சியிலும் ஓங்கி வெளிப்பட்ட அவருடைய குரல் இப்போது எங்கோ சென்று பதுங்கிகொண்டுவிட்டது. வாயில் உள்ள குழாய் காரணமா அல்லது பேசும் திறனே போய்விட்டதா என்று தெரியவில்லை.

மலாலாவின் தவிப்பைப் பார்த்ததும் நர்ஸ் விரைந்துசென்று ஒரு பேனாவையும் காகிதத்தையும் கொண்டுவந்தார். மலாலா அவசரமாக எழுத முயன்றார். பேனா காகிதத்தில் ஓடி ஓடிச்சென்றதே ஒழிய, எழுத்துகள் வரவில்லை. வந்து விழுந்த எழுத்துகள், எழுத்துகளாகவே இல்லை. கைகள் நடுங்கின. தலை வலித்தது.  தன் அப்பாவின் தொலைபேசி எண்ணை எழுதிக் காட்ட விரும்பினார். எழுத்துகளைப்போல் எண்களும் விரல்களுக்குள் அகப்படாமல் விலகி விலகிச் சென்றன. இறுதியில் அந்த நர்ஸ் ஆங்கில எழுத்துகளை எழுதிக்கொண்டுவந்து மலாலாவிடம் காட்டினார். மலாலா ஒவ்வொரு எழுத்தாகத் தொட்டுத் தொட்டுக் காட்டினார். இரண்டு வார்த்தைகளை நர்ஸ் புரிந்துகொண்டார். முதல் வார்த்தை, அப்பா. இரண்டாவது, நாடு. அப்பா எப்படி இருக்கிறார்? நான் இப்போது எந்த நாட்டில் இருக்கிறேன்? மருத்துவர் நிறுத்தி, நிதானமாகப் பதிலளித்தார்.

கவலைப்படாதே, உனக்கு எதுவும் ஆபத்தில்லை. நீ இப்போது இருப்பது பர்மிங்ஹாமில். போர்வையைப் போர்த்திவிட்டு அவர் விலகிச் சென்றார்.  அப்பா? அவரைப் பற்றி ஏன் இவர் எதுவும் சொல்ல மறுக்கிறார்? மலாலா மீண்டும் மீண்டும் விரல்களை எழுத்துகளில் ஒத்தி எடுத்தார். பதிலில்லை. ஓய்வெடு, அமைதியாக இரு, இப்போது எதைப் பற்றியும் யோசிக்காதே என்று மட்டுமே அவர்கள் திரும்பத் திரும்பச் சொன்னார்கள். எங்கோ வெகு தொலைவில் இருந்து அந்தக் குரல் வந்து சேர்ந்ததைப் போல இருந்தது.

திடீரென்று இரும்புக் கழியொன்று தலையில் வந்து விழுந்தது போல் இருந்தது மலாலாவுக்கு. தலையில் தொடங்கிய வலி தோள்பட்டையை வந்தடைந்து உடல் முழுவதும் பரவியது. பார்த்துக்கொண்டிருக்கும்போதே, உணர்ந்துகொண்டிருக்கும்போதே கிளைகள் பரப்பி வலி வேகவேகமாக நான்கு கால்களால் பாயத் தொடங்கியது.  மிதமிஞ்சிய எரிச்சலாக அந்த வலி உருமாறுவதையும் தலை கொஞ்சம் கொஞ்சமாக வெடித்துத் தகர்ந்துகொண்டிருப்பதையும் மலாலாவால் உணர முடிந்தது.

மண்டை ஓட்டுக்குள் நூறு ரம்பங்கள் புகுந்து ஒரே நேரத்தில் அறுக்கத் தொடங்கின. இல்லை, ரம்பங்கள் அல்ல அவை. ஏதோ ஒரு பெரிய இயந்திரம் பல் சக்கரங்களைச் சுழலவிட்டபடி தலைக்குள் இயங்கிக் கொண்டிருக்கிறது. அது பெருத்த ஓசையை எழுப்பியபடி அங்கும் இங்குமாக நகர்ந்துகொண்டும் இருக்கிறது. ஒவ்வொரு நகர்வின்போதும் ஆயிரக்கணக்கான சிறு ஊசிகள் விழித்துக்கொள்கின்றன. ஒவ்வொன்றும் ஓர் இலக்கைத் தேர்ந்தெடுத்து சொல்லிவைத்தாற்போல ஒரே நேரத்தில் குத்துகின்றன. சதையைக் குத்திக் கிழிக்கின்றன. குத்தும் இடங்களில் எல்லாம் குபுக் குபுக்கென்று ரத்தத் துளிகள் கொப்புளிக்கின்றன. இயந்திரம் நிற்காமல் சுழல்கிறது. மேலும் மேலும் வேகமாக நகர்கிறது. பல் சக்கரம், ஊசி, சதை, ரத்தம், மேலும் ரத்தம். வலி!

தலையைக் கைகளால் பிடித்துக்கொள்ள முடிந்தால், கெட்டியாகப் பிடித்து சத்தம் எதுவும் உள்ளே போகாதவாறு அழுத்திக்கொள்ள முடிந்தால் ஒருவேளை வலி நின்றுவிடக்கூடும். ஆனால், அசையக்கூடமுடியவில்லையே. படுக்கையோடு படுக்கையாகத் துவண்டு கிடக்கும் கைகளைத் தூக்கமுடியுமா? தலை வரைக்கும் கொண்டுபோகமுடியுமா?

அப்படியே கொண்டு போனாலும் அழுத்தமுடியுமா? அதற்கான வலு உடலில் எஞ்சியிருக்கிறதா? நர்ஸ் தலையைக் குனிந்து மலாலாவை நெருங்கினார். ஏதோ பேசினார். மலாலா காதுகளைக் கூர்மையாக்கிக்கொண்டார். அவர் உதடுகளை உற்றுப் பார்த்து அவர் என்ன பேசுகிறார் என்பதைப் புரிந்துகொள்ள முயன்றார். பல் சக்கரங்கள் பெரும் சத்தத்துடன் வேக வேகமாக உருண்டுகொண்டிருந்ததால் காதில் எதுவும் விழவில்லை.நர்ஸ் மலாலாவின் முகத்துக்கு அருகில் குனிந்து ஏதோ சொன்னார். மலாலாவின்  காதில் இருந்து ரத்தம் வழியத் தொடங்கியது.

என்ன ஆகிவிட்டது எனக்கு? உடலை அசைக்க முடியாமல், பேச முடியாமல், விரல்களைக்கூட நகர்த்த முடியாமல் இதென்ன விநோத நிலை? என்னால் இந்தப் படுக்கையைவிட்டு எழுந்திருக்கவே முடியாதா? காதில் இருந்து ஏன் ரத்தம் வடிகிறது? ஏன் இந்த அறைக்குள் மருத்துவர்கள் முடிவின்றி நடமாடிக்கொண்டே இருக்கிறார்கள்?நான் உண்மையில் பிழைத்துவிட்டேனா? அல்லது செத்துக்கொண்டிருக்கிறேனா? அப்பாவைப் பற்றி ஏன் இவர்கள் எதுவும் பேச மறுக்கிறார்கள்? நான் ஏன் தனித்து விடப்பட்டுள்ளேன்?

நர்ஸ் மலாலாவின் காதைத் துடைத்துக்கொண்டிருக்கும்போதே ஒரு மருத்துவர் மலாலாவின் முகத்துக்கு அருகில் குனிந்தார். உன் பெயர் என்ன? உன்னால் உன் பெயரை நினைவுபடுத்திக்கொள்ள முடிகிறதா? பேச வேண்டாம், தலையை மட்டும் அசைத்துக் காட்டு. உன் கையை உயர்த்தமுடிகிறதா? இல்லை, அந்தக் கை இல்லை. இடது கை. மேலாகத் தூக்க முடிகிறதா? நான் பேசுவது உன் காதில் விழுகிறதா? என்னைப் பார். நான் தெரிகிறேனா? நான் சொல்வது காதில் விழுகிறதா? மலாலா தலையை மேலும் கீழுமாக அசைத்துப் பதிலளித்துக் கொண்டிருந்தார். ஆனால், அவருக்கு ஒரு விஷயம் புரியவில்லை. என்னுடைய கேள்விக்கு இவர்கள் யாரும் இதுவரை பதிலளிக்கவில்லை.

படுத்துக்கொண்டிருக்கும் என்னிடம் மட்டும் ஓயாமல் கேள்விகள் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். தான் இருப்பது அவசர சிகிச்சைப் பிரிவில் என்பதை மலாலா தெரிந்துகொண்டார். அதனால்தான் இந்த அறையில் ஜன்னல் இல்லை. பர்மிங்ஹாம் லண்டனில் உள்ளது என்பதையும் தெரிந்துகொண்டார். தெரிந்துகொள்ளமுடியாத ஒரே விஷயம் நான் ஏன் ஒரு தொலைதூர தேசத்தில் தனியாக இருக்கிறேன்... ஏன் என் குடும்பத்தினர் யாரும் இங்கே இல்லை என்பதைத்தான். வாயில் இருப்பதைப் பிடுங்கி வீசிவிட்டு வெளியேறிவிடலாமா என்றுகூடத் தோன்றியது.  இங்கே பக்கத்தில் கம்ப்யூட்டர் எங்காவது கிடைக்கும் அல்லவா? மெயில் பார்க்கலாமா? என் குடும்பத்தினர் பற்றி யாராவது எனக்கு எழுதியிருப்பார்கள் அல்லவா? அல்லது அப்பாவின் எண்ணை அழைத்துப் பார்க்கலாம். தட்டுத் தடுமாறியாவது பேசிப் பார்க்கலாம்.  அனைவரும் நலமாக இருக்கிறார்கள் என்னும் ஒரு செய்தி போதாதா?

ஃபியோனா ரெனால்ட்ஸ் என்னும் பெண் மருத்துவர் ஒரு பெரிய டெட்டி பொம்மையை மலாலாவுக்குப் பரிசளித்தார். பச்சை நிறத்தில் இருந்தது அந்தப் பொம்மை. கூடவே ஒரு சிறிய நோட்டு புத்தகம். மலாலாவால் இந்த முறை எழுத முடிந்தது. முதலில் தேங்க் யூ என்று பொறுமையாக எழுதினார். அடுத்து சற்றே நிதானமாக எழுதினார். என் அப்பா ஏன் இங்கே இல்லை? அடுத்த வரியில் இன்னொரு வரி.  என் அப்பாவிடம் அதிகப் பணம் இல்லை. இதற்கெல்லாம் யார் பணம் கொடுப்பது?

ஃபியோனா நிறுத்தி நிறுத்திப் பேசினார். உன் அப்பா பாகிஸ்தானில் இருக்கிறார். மருத்துவமனை கட்டணத்தைப் பற்றி பயப்படாதே. இப்போது நீ ஓய்வெடுக்க
வேண்டும். மலாலா மேற்கொண்டு எழுத முயன்ற போது ஃபியோனா அவர் கையைப் பிடித்து அழுத்தினார். நீ உன்னை அலட்டிக்கொள்ளக்கூடாது. நடக்கக்கூடாதது நடந்திருக்கிறது. ஓய்வெடுத்துக்கொள்.நீண்ட நேரம் படுத்தபடியே மலாலா  யோசித்துக் கொண்டிருந்தார். முதலில் எனக்கு என்ன நடந்திருக்கிறது? பர்மிங்ஹாம் பற்றியும் மருத்துவக் கட்டணம் பற்றியும் யோசிப்பதற்கு முன்பு இந்த அடிப்படையை நான் யோசித்திருக்க வேண்டும் அல்லவா? எப்படி மறந்தேன்? நினைவுத் துவாரங்களில் வெளிச்சத்தைப் பாய்ச்சி தேடத் தொடங்கினார் மலாலா. பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்தேன்.  உடன் யாரெல்லாம் இருந்தார்கள்? தெரியவில்லை. அப்பா! ஆம் அவர் என்னுடன் இருந்தார்.

என் அருகில்தான் இருந்தார். என்னைப் பார்த்து ஏதோ கத்தினார். அல்லது பேசினாரா? நான் சிரித்தபடி நின்று கொண்டிருந்தேன். பிறகு என்னவோ நடந்தது. நான் சரிந்துவிட்டேன். அப்பா ஓடிவந்தார். கூட்டம் கூடிவிட்டது. என்னைச் சுற்றி யார் யாரோ நின்று கொண்டிருந்தார்கள். அவர்களில் சிலர் மருத்துவர்களா? சற்று முன்பு இந்த அறைக்குள் நுழைந்தவர்கள்தானா அவர்கள்? இவர்கள் பாகிஸ்தானுக்கும் வந்திருந்தார்களா? ஒருவேளை நான் நினைவு தப்பி விழுந்ததே பர்மிங்ஹாமில்தானோ?

நினைவற்று மயங்கிக் கிடந்த தருணம் நினைவுக்கு வந்தது. இப்போது படுத்திருப்பதுபோலத்தான் அப்போதும் கிடந்தேன். ரத்தம் வடிந்துகொண்டிருந்தது. யாரோ நெருங்கி வந்து என் கழுத்தை நெறிக்கிறார்கள். என்னால் பேச முடியவில்லை. வாயில் குழாய் பொருத்தியிருக்கிறார்கள். அந்நியர்கள் பலர் என்னை உற்றுப் பார்க்கிறார்கள். ஒரு ஸ்ட்ரெச்சரை யாரோ கொண்டுவந்து என்னை அதில் கிடத்துகிறார்கள். என் கைகள் என்னைவிட்டு கீழே விழுகின்றன. நான் இறந்து போகிறேன்.

இல்லை, இறக்கவில்லை. இறந்திருந்தால் தேவதை இறங்கி வந்து என்னைப் பார்த்திருக்கும். உன் கடவுள் என்ன? உன் இறைத்தூதர் யார் என்று கேட்டிருக்கும். ஒரு முஸ்லிம் இறந்துபோனால் இந்தக் கேள்விகள் கேட்கப்படும் என்று சொல்லியிருக்கிறார்கள். நான் தேவதையை இன்னும் தரிசிக்கவில்லை. அப்படியானால் நான் உயிருடன்தான் இருக்கிறேன்.

ஆனால், உயிர்ப்புடன் இருக்கிறேன் என்று சொல்லமுடியாது. எழுந்திருக்க முயற்சி செய்கிறேன். எழுந்து ஓடவேண்டும் என்று விரும்புகிறேன். என் பள்ளிக்குப் போக வேண்டும். அப்பாவைப் பார்க்க வேண்டும். அம்மாவிடம் பேசவேண்டும். தோழிகள் எனக்காகக் காத்திருக்கிறார்கள். நான் ஓடிப்போக வேண்டும். ஆனால், நகரக்கூட முடியாமல் என் கைகளும் கால்களும் கட்டிப்போடப்பட்டுள்ளன. எனக்கு ஏன் இந்த நிலை? நீண்ட நேரத்துக்குப் பிறகே தான் சுடப்பட்டுள்ளோம் என்பது மலாலாவுக்குப் புரிந்தது. யாரால் என்று தெரியவில்லை. ஏன் என்றும் புரியவில்லை.

இனி இப்படித்தான் என் பொழுதுகளைக் கழிக்க வேண்டுமா? அறிமுகமற்ற இந்த இங்கிலாந்து நாட்டில், தனிமையில் நான் சிறைபட்டுக் கிடக்கவேண்டுமா? அப்பா எங்கே? அவரை என்னுடன் இருக்கவிடாமல் தடுத்தது எது? முதலில் அவர் உயிருடன்தான் இருக்கிறாரா? நான் எப்படி இங்கே வந்து சேர்ந்தேன்? இனி என்னால் பழைய மலாலாவாக இருக்க முடியாதா? விட்ட இடத்திலிருந்து என் வாழ்வைத் தொடங்க முடியாதா? பேசமுடியாதா? எழுத முடியாதா? கண்களுக்கும் காதுகளுக்கும் கால்களுக்கும் எப்போது உயிர் திரும்பும்? அதுவரை ஓய்வெடுத்துக்கொண்டிருந்த இயந்திரம் மீண்டும் இயங்கத் தொடங்கியது. மலாலா கண்களை இறுக மூடிக்கொண்டாள். ஆச்சரியம்! கண்களை மூடினால் இருட்டுதானே தெரிய வேண்டும்? ஏன் வெளிச்சமாக இருக்கிறது?

மலாலாவுக்கு ஒரு விஷயம் புரியவில்லை. என்னுடைய கேள்விக்கு இவர்கள் யாரும் இதுவரை பதிலளிக்கவில்லை. படுத்துக்கொண்டிருக்கும் என்னிடம் மட்டும் ஓயாமல் கேள்விகள் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.

ஏதோ ஒரு பெரிய இயந்திரம் பல் சக்கரங்களைச் சுழலவிட்டபடி தலைக்குள் இயங்கிக் கொண்டிருக்கிறது. அது பெருத்த ஓசையை எழுப்பியபடி அங்கும் இங்குமாக நகர்ந்து கொண்டும் இருக்கிறது. ஒவ்வொரு நகர்வின்போதும் ஆயிரக்கணக்கான சிறு ஊசிகள் விழித்துக்கொள்கின்றன. சதையைக் குத்திக் கிழிக்கின்றன. பல் சக்கரம், ஊசி, சதை, ரத்தம், மேலும் ரத்தம். வலி!


(மேஜிக் நிகழும்!)