தக தக தங்கம்!



நகை எப்படித் தயாராகிறது?

பூமியிலிருந்து வெட்டி எடுக்கப்படும் சுத்தத் தங்கம், அதாவது 24 கேரட் எனப்படுகிற 999.99 அளவு சுத்தமுள்ள தங்கத்திலிருந்து 10, 12, 14, 18, 21, 22 கேரட் என எல்லா மதிப்பிலும் நகைகள் செய்யப்படுகின்றன. இந்த நகைகள் தங்கத்திலிருந்து எப்படி உருமாறி வடிவம் பெறுகின்றன என்பதை ஏ டூ இஸட் பார்க்கப் போகிறோம்!

தொழிற்சாலைகளில் உருவாக்கப்படுகிற நகைகளைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு முன், சிறிய கடைகளில், அதாவது, நாம் வளையலோ, சங்கிலியோ செய்யக் கேட்டு ஒரு கடையை அணுகும்போது அதை எப்படி உருவாக்குகிறார்கள் என்பதை அடிப்படையிலிருந்து தெரிந்து கொள்வோம்.நெற்றிச்சுட்டியிலிருந்து மெட்டி வரை நாம் அணிகிற ஒவ்வொரு நகையும் உலக கலாசாரத்துடன் சம்பந்தப்பட்டது. ஆசிய கலாசாரம், ஐரோப்பிய கலாசாரம், அமெரிக்க கலாசாரம், ஆப்பிரிக்க கலாசாரம் என்று அதில் பல உண்டு. இவற்றுக்கு அடிப்படை ஆசிய கலாசார நகைகள். ஜுவல்லரி என்கிற வார்த்தை பழைய பிரெஞ்சு வார்த்தையான ஜோவெல் (Jouel) மற்றும் ஜோக்கேல் என்கிற லத்தீன் வார்த்தையிலிருந்துமே வந்தது.

சுமார் 75 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கணவாய்களிலும் குகைகளிலும் வாழ்ந்த மனிதர்கள் ஆபரணங்களை அணியத்தொடங்கி விட்டார்கள். நத்தை ஓடு, முட்டை ஓடு, தந்தம், மிருகங்களின் பல் போன்றவற்றை ஆபரணங்களாக அணிந்து வந்த குகை மனிதர்கள், 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் செம்பிலிருந்து செய்யப்பட்ட நகைகளை அணியத் தொடங்கினார்கள். 3,500 ஆண்டுகளுக்குப் பிறகு செம்பு, வெள்ளி, தங்கம் என படிப்படியாக மாறி, பிளாட்டினம்  வரை இன்று  எல்லா நகைகளையும் அணிகிறார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்புதான் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பெண் பொற்கொல்லர் புதையுண்ட இடத்தை ஆஸ்திரியாவில் கண்டுபிடித்ததாக உலகத்துக்கு வெளிப்படுத்தப்பட்டது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, ஆணாதிக்கம் மிகுந்த சமுதாயத்தில் பெண் பொற்கொல்லர் இருந்தது நிரூபிக்கப்
பட்டிருக்கிறது. எகிப்தில் பெரிய பணக்காரர்கள் இறந்து போகும் போது அவர்கள் உபயோகப்படுத்திய நகைகளையும் சேர்த்துப் புதைக்கும் பழக்கம் இருந்திருக்கிறது. எகிப்து, மெசபடோமியா, கிரீஸ் நாடுகளில் எல்லாம் நகைத் தயாரிப்பு நவீன முறையிலேயே நடைபெற்றிருக்கிறது. அந்த நாடுகளில் சேஃப்டி பின், ப்ரூச், வங்கி, ரீத் எனப்படுகிற மணமகள் தலையில் அணிகிற வளையம், காதணி, காது வளையம் ஆகிய எல்லாவற்றையும் அணிந்திருக்கிறார்கள்.

மியான்மரில் சிறு வயதிலிருந்தே கழுத்தை நீளமாக்குவதற்காக கழுத்தில் தங்க வளையங்களை ஒன்றன் மேல் ஒன்றாக அணியும் பழக்கம் இருந்திருக்கிறது. அவர்களது அழகின் அளவுகோல் அந்தக் கழுத்தின் நீளம் எனக் கருதப்பட்டது. வருடங்கள் ஏற ஏற அவர்கள் கழுத்தில் அணிகிற வளையத்தின் எண்ணிக்கையும் கூடும். சமீப காலங்களில் அந்தப் பழக்கம் அடியோடு நிறுத்தப்பட்டு விட்டது. மருத்துவ ரீதியாக பல பின் விளைவுகளை ஏற்படுத்தியதை அடுத்து, பல வருடங்களுக்குப் பிறகு அந்தப் பழக்கம் முடிவுக்கு வந்திருக்கிறது.

ஆசியா முழுவதும், தாய்லாந்து, ஹாங்காங், சீனா, ஜெர்மனி, இத்தாலி, இந்தியா போன்ற நாடுகளில் பெரும்பாலான நகைத் தயாரிப்பு நடந்து வருகிறது. அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் நகைத் தயாரிப்பு இருந்தாலும் இவற்றில் மிகவும் சிறந்து விளங்குபவை இந்திய நகைகளே. அவை முழுவதும் மெஷினில் செய்யப்படுவதில்லை. கைகளாலேயே செய்யப்பட்டு, ஃபினிஷ் செய்யப்பட்டு இந்தியாவிலிருந்து பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஆப்பிரிக்காவில் தயாராகிற நகைகள் தனித்துவமாக அந்த மக்கள் மட்டுமே உபயோகிக்கத் தக்கனவாக இருக்கின்றன. அந்த மக்களின் கலாசாரத்தை அவை பிரதிபலிக்கக் கூடியதாக உள்ளன.

இந்தியா என எடுத்துக் கொண்டால் நாடு முழுவதற்கும் ஒரே மாதிரியான நகைகள் தயாரிக்கப்படுவதில்லை. வடக்கிலிருந்து கணக்கிட்டால் மும்பை, கொல்கத்தா, டெல்லி, அகமதாபாத், கார்வார், பெங்களூரு, மைசூர், கேரளா, ஆந்திரா எனப் பரவலாக பல மாநிலங்களிலும் நகைகள் தயாராகின்றன. ஆந்திராவிலேயே ஹைதராபாத் நகைகள் தனியாகவும் பிற இடத்தில் தயாராகிற நகைகள் வேறு மாதிரியும் இருக்கும். தமிழ்நாட்டில் பல இடங்களில் பலவாறு நகைகள் செய்யப்படுகின்றன. ஊருக்கு ஊர், மாவட்டத்துக்கு மாவட்டம் நகைத்  தயாரிப்பு பாணி வேறுபடுகிறது. இத்தனை விதம் விதமான நகைகளைத் தயாரிக்கிற ஒரே நாடு இந்தியா!

தங்கக் கட்டியை 1,150 டிகிரி உருகுநிலையில் இருந்து மீண்டும் முழுமையான நகையாக மாறும் வரை எல்லோருக்கும் பொதுவான ஒரே ஒரு முறையை நாம் பார்ப்போம்.தங்க நகைகள் எப்படி உருவெடுக்கின்றன எனத் தெரிந்து கொள்வதற்கு முன், சேதாரம் பற்றியும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். சேதாரம் என்றதும் அது முழுவதும் நகைக்கடைக்காரர்களின் ஆதாரம் என்றே நினைக்கிறார்கள். அப்படியல்ல. தங்கம் உருகுநிலையில் இருந்து நகைகளாக உருவெடுக்கும் வரை ஒவ்வொன்றிலும் அதன் இழப்பை, அதாவது, திரும்பவும் பெற முடியாத இழப்புதான் முதல் சேதாரம். அதற்கு மேற்பட்டு 3, 4 சதவிகிதம் என அவரவர் திறமைக்கேற்ப அதிகம் வைத்து அதை சேதாரம் என்று சொல்வதும் உண்டு. இப்படி அதிகப்படியாக போடுவது மட்டுமே அவர்களது ஆதாரமாகும்.

ஒரு சில கடைகளில் சேதாரம் அதிகமாகவும் சில கடைகளில் கம்மியாகவும் போடுவது ஏன் என்கிற கேள்வி பொதுமக்களுக்கு உண்டு. ஒரே ஒரு பொருளை நூறாகவோ ஆயிரமாகவோ செய்யும் போது தயாரிப்புச் செலவு இயல்பாகவே குறையும். அதை ஒரு கார்பரேட் நிறுவனம் மாதிரி செய்யும் போது நாட்டில் பல கிளைகளுக்கும் அனுப்பப்படும். ஒரே மாடல் நகை எல்லா கிளைகளிலும் கிடைக்கும். இதில் நேரமும் குறைவு. பத்தர்களின் உழைப்பும் குறைவு. இதையெல்லாம் கணக்கிட்டால் இந்த நகைகளுக்கு குறைவான சேதாரமே வரும். அதுவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட டிசைனில் ஒரு நகையைச் செய்ய வேண்டும் என்றால் அது பலவித வல்லுநர்கள், பத்தர்களின் உழைப்பு மற்றும் நேரத்தையும் எடுத்துக் கொள்கிறது. நிறைய மனிதர்களின் உழைப்பும் அதில் இருக்கும்.

அதனால் எக்ஸ்க்ளூசிவ் டிசைனில் நகை வேண்டும் என விரும்புவோர் அதற்குண்டான சேதாரத்தைக் கொடுத்தாக வேண்டும்.கொல்கத்தா நகைகள் பெரும்பாலும் கைகளால் செய்யப்படுபவை. மெஷினின் வேலை குறைவு. மனித உழைப்பை அதிகம் எடுப்பதால் அந்த நகைகள் காஸ்ட்லியாக இருந்தாலும், எத்தனை வருடங்கள் கடந்தாலும் அந்த டிசைன்கள் மாறாமலும் நீடித்து உழைப்பவையாகவும் இருக்கின்றன. கேரளா நகைகள் லைட் வெயிட் எனப்படுகிற எடை குறைவாகவும் பார்வைக்கு திடமானவையாகவும் இருக்கும். கல் பதித்த பிரத்யேக நகைகள் நெல்லூரில் தயாராகின்றன. இப்போதெல்லாம் கல் நகைகளை மக்கள் விரும்புவதில்லை. வைரம் மற்றும் செமி ப்ரெஷியஸ் கற்கள் மட்டும் விதிவிலக்கு. டெல்லியில் தயாராகும் நகைகள் ஒரு சிலருக்குப் பிடிக்கும் என்றால் பாம்பே நகைகளை விரும்பவும் ஒரு கூட்டம் உண்டு. உள்ளூரில் தயாராகிற நகைகள் தரமானவையாக இருந்தாலும், ஒரு சில நகைகளைத் தவிர பெரும்பாலானவை மும்பை, டெல்லி, கொல்கத்தா, கார்வர் போன்ற இடங்களில் தயாராகியே இந்தியா முழுக்க ஏற்றுமதியாகின்றன.

அன்றிலிருந்து இன்று வரை தங்கத்தை உருக்குவதற்கு கரி போட்டு உருக்கும் குமுட்டி அடுப்பு முதல் இப்போதுள்ள லேட்டஸ்ட் மெல்ட்டி மெஷின் வரை அனைத்தும் உபயோகப்படுத்தப்படுகின்றன. இப்போதும் தங்கப் பொற்கொல்லர்கள் சிறு சிறு அளவில் நகைகள் செய்ய குமுட்டி அடுப்பே எளிதாக இருப்பதாகச் சொல்கிறார்கள். சூட்டின் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடிவதும் ஒரு காரணம் என்கிறார்கள். பழுது பார்க்க வேண்டிய அயிட்டங்கள், நூதனமாக செய்ய வேண்டிய வைரம், ரூபி, எமரால்ட் போன்ற கற்களை வைத்துச் செய்யப்படும் நகைகளைப் பற்ற வைப்பதற்கு மட்டுமே லேசர் சால்டரிங் பயன்படுத்தப்படுகிறது. 1,068 டிகிரியில் இருந்து 1,800 டிகிரி வரை எந்த அடுப்பில் உருக்குகிறோம் என்பதைப் பொறுத்து அதனுடைய நேரம் மாறு
படும். அதாவது, விலை குறைந்த மெஷினில் 100 கிராம் தங்கத்தை உருக்குவதற்கு 25 முதல் 30 நிமிடங்கள் வரை பிடித்தால், விலை உயர்ந்த மெஷினில் 1,068 டிகிரியிலேயே உருகிவிடும் தங்கம் 15 நிமிடங்களே எடுத்துக் கொள்ளும். பிரைமரி கோல்ட், 999 சுத்தம் கொண்ட தங்கம், அதிலிருந்து எந்த கேரட் வேண்டுமோ, அந்த அளவு பியூரிட்டிக்கு தங்கத்துடன் கூட்டுப் பொருள் கலந்து உருக்கி, அதற்கு பற்ற வைப்புப் பொருள் (சால்டரிங் ஏஜென்ட்)களையும் தயார் செய்து கொள்ள வேண்டும். 

சால்டரிங் ஏஜென்ட் என்றால் என்ன தெரியுமா? ஒரு டிசைன் செய்யும் போது தகடும் கம்பியுமோ அல்லது கம்பியும் கம்பியுமோ பொதுவாக இணைப்புகள் பற்ற வைக்கப்படும் போது அதற்கு  பற்ற வைப்புப் பொருள் தேவைப்படுகிறது. ஏனென்றால் இரண்டு தங்கங்களை ஒன்றாக வைத்துப் பற்ற வைக்கும் போது அவை இணைவதில்லை. அதற்கு ஏதாவது ஒரு பொருள் தேவைப்படுகிறது. அந்தக் காலத்தில் தங்கப் பொடி என்று சொல்வார்கள். தங்கம், செம்பு, வெள்ளி மூன்றும் கலந்த அந்தப் பொடி பற்ற வைப்புப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. இப்போதெல்லாம் சுத்த தங்கத்துடன்,  ஸிங்க்கை குறிப்பிட்ட அளவு கலந்து அதை வைத்துப் பற்ற வைக்கிறார்கள். வளையல், மோதிரம் போன்றவற்றுக்குத் தகடாகவும், செயின், நெக்லஸ் போன்றவற்றுக்கு கம்பியாகவும் முதலில் மெஷினில் கொடுத்து இழுத்துக் கொள்வார்கள். அதுதான் அடிப்படை வேலை.

வளையலுக்கு தங்கக் கம்பியும் மோதிரத்துக்கு கெட்டிக் கம்பியும் இழுக்க வேண்டும். நெக்லஸ் போன்றவற்றுக்கு கம்பி, தகடு, பால்ஸ் போன்ற அனைத்தும் தேவை. மேலும் கற்கள் வைத்து செய்யப்படும் நகைகளின் தயாரிப்பு முறையே வேறு.பொதுவாக வைர நகைகளில் 18 முதல் 20 கேரட் வரை மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. தங்கத்தின் உலோகச் சேர்ப்பு குறையக் குறைய, அதாவது, உலோகம் சேர்த்து தங்கத்தின் சுத்தத் தன்மை குறையக் குறைய அது நன்றாக, பலமாக இருக்கும் என்பதாலும் அந்த வைரக் கற்கள் விழாமல் கிளிப் பிடித்துக் கொள்ளும் என்பதால் குறைவான கேரட்டை உபயோகப்படுத்துகிறார்கள். 22 கேரட் வைத்துச் செய்பவர்களும் இருக்கிறார்கள். பிரைமரி கோல்டில் எந்தளவு கேரட் வேண்டுமோ, அதற்கேற்றபடி கூட்டுப் பொருள் கலந்து உருக்கப்பட்டு, பற்றவைப்புப் பொருளும் சேரும் போது அங்கிருந்துதான் அதன் தரம் கணிக்கப்படுகிறது. அதற்கு முன்பு வரை வெறும் தங்கத்தை உருக்கும் போதெல்லாம் அதன் தரம் மாறுபடுவதில்லை.

தங்கத்துக்கு ஹால்மார்க் முத்திரை கிடைக்க சில விதிமுறைகள் உண்டு. அதில் 92 சதவிகிதம் தங்கம் இருக்க வேண்டும் என்பது முக்கியமான விதி. பற்ற வைக்கும் பொடியில் இப்போதெல்லாம் கேட்மியம், இரிடியம் போன்றவை தடை செய்யப்பட்டுள்ளன. ஏனென்றால் உலக சுகாதார நிறுவன அறிவுறுத்தலின்படி இவையெல்லாம் சருமப் புற்றுநோயை உருவாக்கக்கூடியவை என்பதால் உபயோகிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இப்போது தங்கமும் ஸிங்க் (துத்தநாகம்)கும் கலந்து, பிரைமரி கோல்டில் தாமிரம் அல்லது வெள்ளி கலந்து 22 கேரட் ஆக்கி, நகைகளைத் தயாரிக்கிறார்கள்.

கொல்கத்தாவில் செய்யப்படும் நகைகளின் சிறப்பு முழு கைவேலை, பால்ஸும் கம்பியும் அதிகம் உபயோகப்படுத்தப்படும். ஃபினிஷ் செய்யப்பட்ட நகைகள் பிறகு பாலீஷுக்கு வரும். இதுவும் ஒரு முக்கியமான கட்டமே. சரியாக பாலீஷ் செய்யப்படாவிட்டால், கஷ்டப்பட்டு வடிவமைக்கப்பட்டு உருவம் பெற்ற நகைகள் மெருகு ஏறாமல், தவறான நிறத்துடன், பொலிவிழந்து போகும். தங்கம் உருக்கப்பட்டு, வடிவமைக்கப்பட்டு, பாலீஷுக்கு வரும் வரை பலரின் உழைப்பை தன்னகத்தே கொண்ட நகைகள், சிறந்த விற்பனையாளர்களால் வாடிக்கையாளர்கள் கைகளுக்கு வரும் போதுதான் அதன் நேர்த்தியும் தரமும் பாராட்டு பெறுகிறது.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, ஆணாதிக்கம் மிகுந்த சமுதாயத்தில் பெண் பொற்கொல்லர்  இருந்தது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

தங்கத்துக்கு ஹால்மார்க் முத்திரை கிடைக்க சில விதிமுறைகள் உண்டு. அதில் 92 சதவிகிதம் தங்கம் இருக்க வேண்டும் என்பது முக்கியமான விதி.

(தங்கத் தகவல்கள் தருவோம்!)

எழுத்து வடிவம்: எம்.ராஜலட்சுமி