கண்கள்



உள்ளது உள்ளபடி!

ஸ்ருதி விஜயன்

பயணங்கள்... கட்டிடக் கலை... ஊர் பெருமை பேசும் உணவுகள் என யதார்த்த வாழ்க்கையின் பிரதிபலிப்புகள் ஒரு பக்கம்...

திருமணக்
கோலாகலங்கள்...
மணமக்களின் மனமகிழ்
தருணங்கள்...
பார்த்ததுமே பசியைக் கிளப்பும் உணவு
அலங்காரங்கள் என பிரமாண்டப் பதிவுகள் இன்னொரு பக்கம்...
ஸ்ருதி விஜயனின் புகைப்படங்கள்
ஒவ்வொன்றையும்
கால நேரம் மறந்து கண்கொட்டாமல் ரசிக்கலாம். பிரபல வழக்கறிஞர்
கே.எம்.விஜயனின்
மகள் என பெயரின்
பாதி அவரது அறிமுகம்
சொன்னாலும்,
ஸ்ருதிக்கான
அடையாளங்களோ வேறு!

தாத்தா, அப்பா, அக்கானு எங்க வீட்ல நிறைய போட்டோகிராபர்ஸை பார்த்திருக்கேன். எங்க தாத்தா, வீட்லயே டார்க் ரூம் வச்சிருந்தார். அப்பாவோட போட்டோகிராபியில உள்ள கிரியேட்டிவிட்டியையும் சின்ன வயசுலேருந்தே ரசிச்சிருக்கேன். நான் போட்டோகிராபி பண்ண ஆரம்பிச்ச நேரம் எங்க தாத்தா உயிரோட இல்லை. எம்.ஓ.பி. காலேஜ்ல விஸ்காம் படிச்சேன். அதுல போட்டோகிராபி என்னோட விருப்பப் பாடம். ஊட்டி லைஃப் அண்ட் லைட் அகடமியில இன்னும் விளக்கமா போட்டோகிராபி படிச்சேன். 

இன்ஜினியரிங்லயோ, மெடிசின்லயோ எனக்கு ஆர்வமில்லை. போட்டோகிராபிங்கிறது உடல் அளவுலயும் மனசளவுலயும் நிறைய களைப்படையச் செய்யற ஒரு வேலைன்னாலும், அது என் ஆர்வத்துக்குத் தடையா இல்லை. அப்பா எதுக்கு இதெல்லாம்னு கேள்வி கேட்கலை. தான் சொல்றதைத் தான் படிக்கணும்னு கண்டிஷன் போடலை. ரொம்ப சப்போர்ட் பண்ணினார்.

நானும் இன்னும் ரெண்டு ஃப்ரெண்ட்ஸும் சேர்ந்து ‘ப்ரிம்’னு ஒரு கம்பெனி ஆரம்பிச்சு நடத்தறோம். போட்டோகிராபிங்கிறது 9 டூ 5 வேலையில்லை. போட்டோ எடுக்கிறதுலேருந்து, எடிட் பண்றது, எங்க கம்பெனிக்கு மார்க்கெட்டிங் பண்றதுனு எல்லா வேலைகளையும் பார்க்கணும். ஆனாலும், இது பிடிச்சிருக்கு...’’ ஸ்வீட்டாக சிரித்துப் பேசுகிற ஸ்ருதிக்கு முதல் படத்திலிருந்து, சற்று முன் எடுத்தது வரை ஒவ்வொன்றும் ஒரு நினைவையும் அனுபவத்தையும் சுமந்திருக்கிறது.

பி.ஜி. படிச்சிட்டிருக்கும் போது ஒவ்வொரு மாசமும் ஸ்டூடன்ட்ஸோட படங்கள்ல ஒண்ணை பெஸ்ட் படமா நாமினேட் பண்ணுவாங்க. என்னோட ஒரு படமும் நாமினேட் ஆச்சு. ஒரு மழை நாள்ல தண்ணீர்ல தெரிஞ்ச மூணு குழந்தைங்களோட பிரதிபலிப்புதான் சப்ஜெக்ட். இப்பவும் அது என்னோட ஃபேவரைட் போட்டோ. அதே மாதிரி இன்னொரு வாட்டி காலேஜ் டைம்ல ஒரு பிரசன்ட்டேஷனுக்காக நான் எங்கப்பாவோட போர்ட்ரெயிட்டை எடுத்தேன். ஹை கோர்ட்ல வக்கீல் சூட்ல, கம்பீரமா இருந்தார் அப்பா. அந்தப் படம் எனக்கு மட்டுமல்ல... அப்பாவுக்குமே ரொம்ப ஃபேவரைட். அவரோட ப்ரொஃபைல் பிக்சரே அதுதான்னா பார்த்துக்கோங்க!’’ என்கிறவரின் வார்த்தைகளில் புளகாங்கிதம்.

டிராவல் போட்டோகிராபியில் இவருக்குள்ள அதீத ஆர்வம், அவரது படங்களிலேயே பிரதிபலிக்கிறது.டிராவல் போட்டோகிராபிங்கிறது ரொம்ப சேலஞ்சான ஒரு ஏரியா. ஒரு இடத்துக்கு டிராவல் பண்ணும்போது, நமக்கு முன்னாடி அங்கே போனவங்க பண்ணாததை நாம பண்ணணும். சமீபத்துல ராஜஸ்தான் போயிருந்தேன். ராஜஸ்தானை போட்டோகிராபர்ஸோட ஃபேவரைட் டெஸ்டினேஷன்னே சொல்லலாம். போட்டோகிராபர்ஸோட கால்கள் படாத, கேமரா பார்க்காத ஏரியாவே இருக்காது. அதையெல்லாம் தாண்டி, அங்கே வித்தியாசமா, சுவாரஸ்யமா ஏதாவது எடுக்கிறதுதான் உண்மையான சவால். அங்க உள்ள மக்களை சந்திச்சேன். உடனே கேமராவை எடுத்து அவங்களை போட்டோ எடுக்க ஆரம்பிச்சிட முடியாது. அதுக்கு முன்னாடி அவங்கக்கிட்ட பேசணும்... பழகணும்... அவங்களை சகஜ நிலைக்குக் கொண்டு வந்தபிறகுதான் படங்கள் எடுக்க முடியும். நம்மகிட்ட நெருங்கின பிறகுதான் அவங்கக்கிட்ட நாம எதிர்பார்க்கிற உணர்வுகளை எடுக்க முடியும். அந்த த்ரில் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு.

டிராவல் போட்டோகிராபி எனக்கு நிறைய விஷயங்களைக் கத்துக் கொடுத்திருக்குன்னே சொல்லலாம். மியான்மர் போயிருந்தேன். இந்தியாலேருந்து வந்திருக்கிறதா அறிமுகப்படுத்திக்கிட்டா, நாமெல்லாம் உடனே அமிதாப்பை தெரியுமா, ஷாருக்கை தெரியுமானு கேட்போம். அங்கே உள்ள மக்களோ, இந்தியாவா... எங்களோட புத்த பூமிக்கான அடிப்படை விதையே உங்க நாட்லேருந்துதானே வந்தது’னு ஆரம்பிச்சுப் பேசறதைப் பார்க்கிறப்ப பெருமையா இருந்தது. இந்தியரா பிறந்து, வாழ்ந்து இந்தியாவோட அருமை, பெருமைகளோ, வரலாறோ, கலாசாரமோ தெரியாம இருக்கோம். ஆனா, அதை மத்த நாட்டுக்காரங்க அழகா தெரிஞ்சு வச்சிருக்காங்க...’’ - அனுபவம் சொல்கிறார் அழகாக.பயணப் பதிவுகளைப் போலவே ஸ்ருதியின் இன்னொரு ஆர்வம் உணவுப் புகைப்படங்கள்.

அதை ரெண்டு விதமா பிரிக்கலாம். ஒண்ணு விளம்பரங்களுக்காக எடுக்கிறது. அதுல அழகியலும் ஆடம்பரமும்தான் பிரதானமா இருக்கும். ஒரு ஐஸ்க்ரீமை போட்டோ எடுக்கறோம்னா, நிஜ ஐஸ்க்ரீமை வச்சு எடுத்தா, கேமரா லைட்ல உருகி ஓடிடும். அதுக்காக கெட்டியான ஐசிங்கை வச்சு எடுப்போம். அது பார்க்க தத்ரூபமான ஐஸ்க்ரீம் மாதிரியே இருக்கும். பார்த்ததுமே சாப்பிடத் தூண்டும். ஆனா, சாப்பிட முடியாது. பயணங்களின் போது நான் எடுக்கிற ஃபுட் போட்டோகிராபி வேற ரகம். பயணங்கள்னு சொன்னா, அதுல உணவு கலாசாரமும் தவிர்க்க முடியாதது. உணவுங்கிறது மக்களை இணைக்கிற ஒரு விஷயமும் கூட. அது அந்த மக்களோட கலாசாரத்தைச் சொல்லும். தடைகளை உடைச்செறியும்.

உள்ளது உள்ளபடி எடுக்கிறதுதான் அதுல அழகு... ரெண்டுமே வேற வேற ஸ்டைல்னாலும் ரெண்டையுமே நான் ரசிச்சு எடுக்கறேன்...’’ - தேர்ந்த புகைப்பட நிபுணராக தகவல்கள் பகிர்கிற ஸ்ருதியின் முதல் ரசிகர் அவரது அப்பா!என்னோட படங்களைப் பார்த்து ரசிக்கிறது அவருக்கு ரொம்பப் பிடிக்கும். அப்பா மாதிரியான ஒரு கிரியேட்டிவ் பர்சனோட அந்த ரசனை எனக்குமே ரொம்பப் பெரிய விஷயம்...’’ பூரிக்கிறவருக்கு அப்பாவின் வார்த்தைகளும் வாழ்த்துகளுமே வாழ்க்கைப் பாடங்களாம்! உனக்கு எது சரினு படுதோ அதைச் செய். பிடிச்சதைச் செய். ஹார்டு ஒர்க் பண்ணு’னு சொல்வார் அப்பா. அதுதான் இப்பவும் எப்பவும் எனக்கான மேஜிகல் வேர்ட்ஸ்’’ என்கிறார் தந்தை சொல் தட்டாத மகளாக!                                    (   

வியக்க வைக்கும் மனசு!

வார்த்தைகளிலும் வாழ்க்கையிலும் தவிர்க்க முடியாத அப்பா பற்றி மகள் பேச, மகளைப் பற்றி, அப்பா என்ன நினைக்கிறார்? வழக்கறிஞர் கே.எம்.விஜயனிடம் கேட்டோம்...

பத்திரிகை பேட்டிக்காக சொல்ற அளவுக்கு ஸ்பெஷலா ஒண்ணுமில்லை. ஆனாலும், அவளோட சில குணங்கள் ஸ்பெஷலானவை. ஸ்ருதி ரொம்ப சென்சிட்டிவ். எந்தக் காரணத்துக்காகவும் பொய் சொல்ல மாட்டா. யார் மனசையும் நோகடிக்கமாட்டா. மனித உறவுகளைப் பத்தின அவளோட மதிநுட்பம் வியக்க வைக்கிற படி இருக்கும். என்னோட ரெண்டு மகள்களையுமே நான் இப்படித்தான் இருக்கணும்கிற மாதிரியான எந்த வரையறையும் சொல்லி வளர்க்கலை.

அவங்கவங்க விருப்பமான பாதைகளை தேர்ந்தெடுத்துக்கிட்டாங்க. எங்கப்பா கல்யாணம், அந்தக் காலத்துல‘ஜனசக்தி’னு ஒரு பத்திரிகையோட பதிப்பாளராகவும் போட்டோகிராபராகவும் இருந்தவர். அவர் வச்சிருந்த பாக்ஸ் கேமராவை வச்சு நான் கொஞ்சம் போட்டோகிராபி கத்துக்கிட்டேன். என் மகள்கள் என்னை விட அதிகமா கத்துக்கிட்டாங்க. எங்கப்பாகிட்டருந்து அந்தக் கலை அவங்களுக்கு வந்திருக்குங்கிறதுதான் நிஜம். அவங்களுக்குப் பிடிச்சதை சுதந்திரமாகவும் சிறப்பாகவும் பண்ணிட்டிருக்காங்கன்றதுல எனக்கு மகிழ்ச்சிதான்!’’