அப்பா என்றால் அன்பு



மிஸ் பண்ணக்கூடாத அனுபவம்!

மனைவியை பிரசவத்துக்கு அனுப்பி விட்டு, என் பொண்டாட்டி ஊருக்குப் போயிடுச்சு’ எனத் துள்ளிக் குதிக்கிற கணவர்களை இன்றும் பார்க்கலாம். நொடிக்கொரு போன், தினசரி விசிட் எல்லாம் அடுத்தடுத்த நாட்களில் மாறும். பிரசவத்தின் போது உடனில்லாமல், குழந்தை பிறந்த செய்தி கேட்ட பிறகே பார்க்க வருகிற கணவர்களும் இருக்கிறார்கள். ஆஸ்பத்திரி வாசம் முடிந்து, மனைவி மீண்டும் பிறந்த வீடு போக, சிலபல மாதங்களுக்கு பேச்சிலர் வாழ்க்கையைக் கொண்டாடுவார்கள்.

குழந்தை முகம் பார்த்து சிரிக்க ஆரம்பித்த பிறகுதான் அப்பாவுக்கும் குழந்தைக்குமான உறவே மலரும். பெரும்பாலான ஆண்களின் பார்வையில் பிரசவமும் பிள்ளை வளர்ப்பும் பெண்களின் வேலை!இவர்களிடமிருந்து வித்தியாசப்படுகிறார் சென்னையைச் சேர்ந்த சிவகணேஷ். மனைவியின் கர்ப்ப காலம் முழுவதும் உடன் இருந்து பார்த்துக் கொண்டது மட்டுமின்றி, பிரசவ விடுப்பு எடுத்து மனைவியையும் மகனையும் தாங்கியிருக்கிறார்!

பெரிசா பேசற மாதிரி இது அவ்வளவு பெரிய விஷயமில்லீங்க...’’ - தன்னடக்கத்துடன் தயங்கிச் சொல்கிறார் சிவகணேஷ். ஆனாலும், அவரது `அன்புள்ள அப்பா’ அனுபவம் ஆண்கள் அனைவரும் அவசியம் அறிந்து கொள்ள வேண்டியது! என் மனைவி சுதாவுக்கு அம்மா-அப்பா கிடையாது. முதல் பிரசவத்தை எங்கம்மா, அப்பாதான் கோயம்புத்தூர்ல வச்சுப் பார்த்தாங்க. அப்பவே எனக்குக் கொஞ்சம் உறுத்தலாதான் இருந்தது. ‘நான் பக்கத்துல இருந்து பார்த்திருக்கலாமோ’னு யோசிக்க வச்சது.

ரெண்டாவது முறை அவங்க கர்ப்பமானதும் இந்த வாட்டி பக்கத்துல இருந்து முழுப்பொறுப்புகளையும் நானே எடுத்துக்கிறதுனு முடிவு பண்ணினேன். பொதுவா கணவர்கள், மனைவிக்குப் பிரசவம்னா, பிறந்த வீட்டுக்கு அனுப்பிடுவாங்க. டெலிவரி அன்னிக்கு சிசேரியன்னா கையெழுத்து போடறதோட அவங்க  வேலை முடிஞ்சிடும். அப்புறம் நாலு மாசமோ, ஆறு மாசமோ கழிச்சு தன் வீட்டுக்குக் கூட்டிட்டு வருவாங்க. ‘நம்ம மனைவி... நம்ம குழந்தை... நாம பக்கத்துல இருந்து பார்க்காம, அந்தப் பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறோமே’னு பலரும் யோசிக்கிறதில்லை. அந்தத் தப்பை நானும் செய்ய விரும்பலை.

முதல் பிரசவத்தின் போது, குழந்தை பிறந்த ஒரு மாசத்துலயே  சென்னைக்குக் கூட்டிட்டு வந்துட்டேன். அடுத்த முறை மனைவியை பிரசவத்துக்கு ஊருக்கு அனுப்பற ஐடியா இல்லை. எங்கம்மா வந்து பார்த்துக்கிறதா சொன்னதையும் வேண்டாம்னு சொல்லிட்டேன். சோழிங்கநல்லூர் வீட்லேருந்து மயிலாப்பூர் ஹாஸ்பிட்டல் வரைக்கும் 20 கிலோ மீட்டர். மாசாந்திர செக்கப்லேருந்து, டெலிவரி வரைக்கும் நான்தான் டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போயிட்டு  வந்திட்டிருந்தேன்.

நம்மால தனியாளா இந்த விஷயத்தைக் கையாள முடியுமானு உள்ளுக்குள்ள ஒரு பயம் இருந்ததென்னவோ உண்மைதான். ஆனாலும், இந்த அனுபவம் வாழ்க்கையில ஒருமுறைதான் கிடைக்கும். அதைத் தவறவிடக்கூடாதுங்கிற எண்ணம்தான் எனக்குத் தைரியத்தைக் கொடுத்தது. மூணாவது மாசம் ஸ்கேன் முடிஞ்சதுமே, டெலிவரிக்கு நாங்க பக்காவா தயாராயிட்டோம். ஏதாவது எமர்ஜென்சின்னா என்ன பண்ணணும்னு பேசி வச்சுக்கிட்டோம். எங்க கார்ல டிரெஸ் உள்பட பிரசவத்துக்கான எல்லா பொருட்களும் தயாரா இருக்கிற மாதிரிப் பார்த்துக்கிட்டோம். புராஜெக்ட் மேனேஜர் வேலைங்கிறதால என்னோட வேலை நேரத்தை எனக்கேத்தபடி அட்ஜஸ்ட் பண்ணிக்க முடிஞ்சது.

மனைவிக்கு பிரசவ வலி வந்தப்ப பக்கத்துல இருந்தேன். ஆஃபீஸ்ல நாலு நாள் Paternity லீவு எடுத்தேன். ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போனேன். அவங்களை லேபர் ரூமுக்குள்ள கூட்டிட்டுப் போனபோது நானும் பக்கத்துல இருக்கணும்னு நினைச்சேன். ஆனா, அதுக்கு அவங்க அனுமதிக்கலை. ரூமுக்கு வெளியில நின்னுக்கிட்டு மனைவி வலியில அழறதைக் கேட்டுக்கிட்டே இருந்தேன். திடீர்னு வீல்னு ஒரு அலறல்... அதைத் தொடர்ந்து குழந்தை கத்தற சத்தம்... குழந்தை பிறந்திடுச்சுனு தெரிஞ்சது. கிட்டத்தட்ட சினிமால பார்க்கிற மாதிரியான ஒரு சீன் அது. அதுக்கப்புறம்தான் ஆரம்பிச்சது உண்மையான சவால். டெலிவரி ஆன எல்லாப் பெண்களுக்கும் ெஹல்ப்புக்கு பக்கத்துல ஒரு லேடி அட்டெண்டர் இருந்தாங்க.

என் மனைவிக்கு நான் மட்டும்தான். ஹாஸ்பிட்டல்ல லேடி அட்டெண்டர்தான் இருக்கணும்னு என்னை வெளியில போகச் சொல்லிட்டாங்க. நான் விடறதா இல்லை. ஹாஸ்பிட்டல் மேனேஜ்மென்ட்கிட்ட பேசி, ஒருவழியா நான்தான் இருப்பேன்னு சொல்லி பர்மிஷன் வாங்கினேன். நாலு நாளும் நானும், என் மூணு வயசு மூத்த மகன் கவினும்தான் பார்த்துக்கிட்டோம். மனைவியோட எல்லா தேவைகளையும் நானே பார்த்துப் பார்த்து செய்தேன்.

ராத்திரி முழுக்க அவங்களோட இருந்துட்டு, காலையில வீட்டுக்குப் போய் சமைச்சு எடுத்துக்கிட்டு மறுபடி வருவேன். பிரசவமான ரெண்டாவது நாள் குழந்தைக்கு ஒரு ஊசி போடுவாங்க. அதுக்காக குழந்தையைத் தூக்கிட்டு வரிசையில நின்னவங்கள்ல நான் மட்டும்தான் அப்பா. எல்லாரும் என்னை பாராட்டினப்ப ரொம்பப் பெருமையா இருந்தது. கல்யாணமாகி ஒரு பொண்ணு நம்ம வீட்டுக்கு வந்துட்டா, அதுக்கப்புறம் அவளோட எல்லா தேவைகளையும் பார்த்துக்கிறது கணவனோட பொறுப்பு. பிரசவமும் அப்படித்தான். மத்த நாடுகள்ல எல்லாம் பிரசவத்தின் போது கணவர்களை பிரசவ ரூமுக்குள்ள அனுமதிக்கிறாங்க. மனைவியைப் பார்த்துக்க பிரசவ விடுப்பு கொடுக்கறாங்க. நம்மூர்லதான் எல்லாமே தலைகீழ். பிரசவத்தின் போது அம்மா தன் பக்கத்துல இருக்கறதைத்தான் பொண்ணுங்க விரும்புவாங்கனு பலரும் நினைச்சிட்டிருக்காங்க.

ஆனா, அம்மாவை விட கணவர் தன் பக்கத்துல இருந்தா அந்தப் பெண் ரொம்ப சந்தோஷப்படுவாங்கிறதுதான் உண்மை. எல்லாத்தையும்விட குழந்தை பிறந்த நொடியிலேருந்தே கூட இருக்கிற அனுபவத்தை அப்பாக்கள் மிஸ் பண்ணக்கூடாதுங்கிறது என் கருத்து. அனுபவிச்சவங்களுக்கு அந்த சிலிர்ப்பு தெரியும்...’’ - மூத்த மகன் கவினை தோளிலும், இளைய மகன் முகிலைமடியிலும் ஏந்தியபடி, அன்பில் கரைகிறார் அப்பா சிவகணேஷ்.                  

பிரசவத்தின் போது அம்மாவைவிட கணவர் தன் பக்கத்துல இருந்தா, அந்தப் பெண் ரொம்ப சந்தோஷப்படுவாங்கிறதுதான் உண்மை...

கல்யாணமாகி ஒரு பொண்ணு நம்ம வீட்டுக்கு வந்துட்டா, அதுக்கப்புறம் அவளோட எல்லா தேவைகளையும் பார்த்துக்கிறது கணவனோட  பொறுப்பு. பிரசவமும் அப்படித்தான்...